0 / 0
09/சபர்/1446 , 13/ஆகஸ்ட்/2024

காபிர் தீர்ப்பு வழங்குவதற்கான வரையறைகள்

கேள்வி: 85102

ஒரு தனி நபருக்கு காபிர் என்றோ முனாபிக் என்றோ தீர்ப்பளிக்க முடியுமான வரையறைகளை விளக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அதன் மூலம் ஏராளமான பிரிவுகள் விழுந்த பித்அத்தில் விழுந்து விடாமல் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்துடன் இது விடயமாக தெளிவு பெறுவதற்கு நான் வாசிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றையும் எனக்கு சுட்டிக்காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு ஆரம்ப கட்ட (கனிஷ்ட) மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவதாக:

ஒருவரை காபிர் என்றோ, பாவி என்றோ தீர்ப்பளிப்பது எமது அதிகாரத்திற்குட்பட்ட விடயமல்ல. மாறாக அது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் அதிகாரத்தில் உள்ளதாகும்.  குர்ஆன் சுன்னாவை மையப்படுத்திய மார்க்க சட்டங்களில் உள்ளதுமாகும். எனவே அது விடயத்தில் உச்ச அளவில் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

குர்ஆன் ஸுன்னா யாரை காபிர் என்கிறதோ, யாரை பாவி என்கிறதோ அவரைத் தவிர வேறு எவரையும் காபிர் என்றோ பாவி என்றோ தீர்ப்பளிக்க முடியாது.

பொதுவாக ஒரு முஸ்லிம் விடயத்தில் வெளிப்படையாக உள்ள அடிப்படை, அவர் இஸ்லாத்தில் இருக்கிறார் என்பதும் அவர் நீதமானவர் என்பதுமாகும். மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அது அவரை விட்டும் நீங்கி விட்டதாக ஊர்ஜிதமாகும் வரை (அவரை காபிர் என்றோ பாவி என்றோ அழைக்க முடியாது).

ஒருவரை காபிர் என்றோ பாவி என்றோ தீர்ப்பளிப்பதில் பொடுபோக்குத் தனமும் அலட்சியமும் கூடாது.

அது விடயத்தில் இரண்டு பாரதூரமான விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று: அவர் அளித்த தீர்ப்பு விடயத்தில் அல்லாஹ் மீதும் தீர்ப்பளிக்கப்பட்டவர் மீதும் இட்டுக்கட்டப்படக் கூடிய அபாயம் உள்ளது.

இரண்டு: யாருக்கு தீர்ப்பளித்தாரோ அவர் அதிலிருந்து நிரபராதியாகும் பட்சத்தில் அவர் அளித்த தீர்ப்பு அவருக்கே மீண்டு அவரே அத்தீர்ப்பை சுமந்துகொள்ள வேண்டிய அபாயமும் உள்ளது.

நபி ஸல் கூறினார்கள்: 'ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து நீ காபிர் என தீர்ப்பளித்தால் அவ்விருவரில் ஒருவருக்கு அது பொருந்தி விடும்."

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி).

நூhல்: ஸஹீஹுல் புகாரி-6104, ஸஹீஹ் முஸ்லிம்-60.

மற்றுமொரு அறிவிப்பில்: 'அவர் சொன்னது உண்மையாக இருந்தால் சரி(சொன்னவர் தப்பித்துக் கொள்வார்). இல்லாவிட்டால் சொன்னவருக்கே அது திரும்பிவிடும்"

இரண்டாவதாக: இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிமுக்கு காபிர் என்றோ பாவி என்றோ தீர்ப்பளிப்பதற்கு முன் இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.

01.         குறிப்பிட்ட அந்த சொல்லோ செயலோ குப்ரை அல்லது பாவத்தை ஏற்படுத்தும் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

02.         குறிப்பிட்ட அந்த வார்த்தையை சொன்னவர் அல்லது செயலை செய்தவருக்கு அந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பதை கவனிக்க வேண்டும். அதாவது காபிர், பாவி என்று தீர்ப்பளிக்கத் தேவையான நிபந்தனைகள் பூரணமாக இருப்பதோடு அவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு தடையாக அமையும் காரணிகள் இல்லாதிருக்க வேண்டும்.

காபிர், பாவி என்று தீர்ப்பளிக்கத் தேவையான நிபந்தனைகளில் பிரதானமானவை:

எதை செய்தால் காபிராக, பாவியாக மாறுவார் என்பது தொடர்பாக தெளிவுள்ளவராக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: 'நேர்வழி தெளிவான பின்னரும் தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாததை பின்பற்றுபவரை அவர் செல்லும் பாதையில் விட்டு விடுவோம். நரகிலும் அவரை நுழைவிப்போம். ஒதுங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது."(அந்நிஸா: 115)

'ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்க்க வேண்டியதை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை, அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்."தவ்பா:115

இதனால்தான் அறிஞர்கள் கூறுவர்: 'கடமைகளை புறக்கணிப்பவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவராக இருந்தால் தெளிவுபடுத்தப்படும்வரை அவருக்கு காபிர் என்று தீர்ப்பளிக்கப்படக் கூடாது."

காபிர் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு தடையாக அமைபவற்றில் பிரதானமானவை:

01.         காபிராக, பாவியாக அவரை மாற்றிய சொல் அல்லது செயல், அவரது விருப்பமோ நாட்டமோ இன்றி அவரிடமிருந்து வெளிப்படல்.

இதற்கு பல வடிவங்கள் உண்டு.

ஒன்று: அதன்பால் நிர்ப்பந்திக்கப்படுதல்.

அதாவது, மன ஒப்புதல் இன்றி; நிர்ப்பந்தம் காரணமாக அதை செய்வது. இதன் போது அவரை காபிர் என கூற முடியாது. (நஹ்ல்:106)

இரண்டு: சிந்தனைக் குழப்பம்.

அதாவது, அளவு கடந்த மகிழ்ச்சி அல்லது அளவு கடந்த கவலை, பயம் போன்றன.

இதற்குரிய ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியிருக்கக்கூடிய ஹதீஸாகும். நபி (ஸல்) கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'தனது அடியான் தன்பால் தவ்பா செய்து மீள்வது கொண்டு அல்லாஹ் கடுமையாக சந்தோசமடைகிறான். அதாவது உங்களில் ஒருவர் பாலைவனத்தில் தனது வாகனத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த போது அது அவரை விட்டும் விரண்டோடிவிட்டது. அவரது உணவும் குடிபானமும் அதோடு போய்விட்டது. அவர் நம்பிக்கையிழந்தவராக ஒரு மரத்தடியில் அதன் நிழலில் வந்து தூங்கிவிட்டார். தனது வாகனம் திரும்பி வரும் என்பதில் அவர் நம்பிக்கையிழந்து விட்டார். அவ்வாறிருக்க (திடீரென) அது அங்கே நின்றிருந்தது. அப்போது அவர் அதனது மூக்கணாங் கயிறை பிடித்த வண்ணம் சந்தோச மிகுதியில் யா அல்லாஹ்! நீ எனது அடிமை நான் உனது ரப்பு என சந்தோச மிகுதி காரணமாக தவறாக கூறிவிட்டார்.

02.         மாற்று விளக்கம் கூறக்கூடியவராக இருத்தல்.

அதாவது உண்மையான ஆதாரங்கள் என்று அவர் கருதக்கூடிய சில யூகங்கள் அவரிடம் இருத்தல். அல்லது மார்க்க ஆதாரங்களை முறைப்படி விளங்க முடியாதவராக இருத்தல். எனவே வேண்டுமென்று, அறிந்து கொண்டே முரண்படுகிறார் என்பது ஊர்ஜிதமானாலே தவிர இவரை காபிராக்க முடியாது. 'தவறுதலாக செய்பவற்றுக்கு உங்கள் மீது குற்றம் இல்லை, மாறாக இதயங்களால் திட்டமிட்டு (வேண்டுமென்றே) புரிபவை (குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அளவற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்." (அஹ்ஸாப்: 5)

இமாம் இப்னு தைமிய்யா கூறும்போது: 'அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கருதும் ஜஹ்மிய்யாக்களின் கருத்தினால் கவரப்பட்ட மற்றும் அக்கருத்துக்கு ஆதரவளித்த கலீபாக்கள் மீது இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ரஹிம{ஹல்லா (அவருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்) என்று பிரார்த்திப்பார்கள், அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள். ஏனெனில் தூதரை அவர்கள் பொய்ப்படுத்தியதாகவோ, அவர் கொண்டு வந்த செய்திகளை மறுத்ததாகவோ அவர்கள் விளங்கவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர்கள் மாற்று விளக்கம் கொடுத்து தவறிழைத்தனர், அந்த வழிகெட்ட கருத்தை கூறியோரை கண்மூடித்தனமாக பின்பற்றினர்". (மஜ்மூஉல் பதாவா: 23ஃ349)

மேலும் இமாம் இப்னு தைமிய்யா மஜ்மூஉ பதாவாவில் கூறும் போது: " காபிர் தீர்ப்பளிப்பதை பொறுத்தவரை அதில் சரியான வழி என்னவென்றால், முஹம்மது நபியவர்களது உம்மத்தில் யார் சத்தியத்தை அடையும் நோக்கில் இஜ்திஹாத் (முயற்சித்து) செய்து பின்னர் அதில் தவறிவிடுகிறாரோ அவர் காபிர் என தீர்ப்பளிக்க முடியாது. மாறாக அவரது தவறு மன்னிக்கப்படும் ஆனால் யார் தூதரின் செய்தி தெளிவாக விளங்கி, நேர்வழி தெளிவாக விளங்கியதன் பின்னரும் தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாததை பின்பற்றுகிறாரோ அவர் காபிராகவே இருப்பார். யார் மனோ இச்சையை பின்பற்றி சத்தியத்தை தேடி அடைவதில் அலட்சியம் பண்ணுகிறாரோ மேலும் அறிவின்றி பேசுகிறாரோ அவர் மாறு செய்பவர், பாவம் புரிந்தவர். பின்னர் அவர் பாவியாக இருக்கலாம்... சில வேளை அவரு பாவத்தை மிகைத்து இல்லாமலாக்கி விடும் நல்லறங்கள் அவருக்கு இருக்கலாம். (12ஃ180)

மேலும் தொடர்ந்து அவர் பேசும்போது: 'எந்த தூதுத்துவ ஆதாரங்களுக்கு மாறு செய்யும்போது சில வேளை காபிராகவும் சில வேளை பாவியாகவும் சில வேளை மாறுபாடு செய்பவராகவும் ஒருவர் மாறுவாரோ அந்த தூதுத்துவ ஆதாரங்களின் படி  ஊர்ஜிதமாக அன்றி யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒருவரை காபிர் என்றோ பாவி என்றோ தீர்ப்பளிப்பதை கடுமையாக எதிர்ப்பவர்களில் எப்போதும் நானும் ஒருவன். என்னோடு மஜ்லிஸில் அமர்வோர் இதை நன்கறிவர். மேலும் நான் உறுதிபடக் கூறுகிறேன் இந்த உம்மத்தின் தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டான். அது செய்தி சார்ந்த விடயங்களாக இருக்கலாம், அல்லது இபாதத் சார்ந்த விடயங்களாக இருக்கலாம். இவ்வாறான ஏராளமான விடயங்களில் முன்சென்ற நல்லறிஞர்கள் முரண்பட்டுக் கொண்டனர். ஆனால் அவர்களில் யாரும் யாரையும் காபிர் என்றோ பாவி என்றோ மாறுபாடு செய்பவர் என்றோ தீர்ப்பளிக்கவில்லை...." (3ஃ229)

சில உதாரணங்களைக் கூறிவிட்டு பின்னர் கூறினார்: 'முன்சென்ற நல்லறிஞர்கள் மற்றும் இமாம்களிடமிருந்து வந்த செய்தி என்னவென்றால் இவ்வாறு இவ்வாறு சொல்பவர் காபிர் என பொதுவாக தீர்ப்பளிப்பது என்று நான் விளக்கியிருந்தேன் ... அதுவும் சரிதான். ஆனால் பொதுவாக காபிர் என தீர்ப்பளிப்பதற்கும் குறிப்பிட்ட சிலருக்கு தீர்ப்பளிப்பதற்குமிடையில் பிரித்து நோக்குவது அவசியமாகும்..... காபிர் என தீர்ப்பளிப்பது எச்சரிப்பதில் உள்ள அம்சமாகும். நபியவர்கள் சொன்னதை பொய்ப்படுத்துவதாக ஒருவரது கூற்று அமைந்தாலும் சில வேளை அதை சொன்னவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவராக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவு எட்டாத தூரத்து பட்டிக்காட்டில் அவர் வளர்ந்திருக்கலாம். இப்படியானவர் ஊர்ஜிதமான ஆதாரம் அமையும் வரை அவர் ஒரு மார்க்க விடயத்தை மறுப்பது கொண்டு காபிர் தீர்ப்பு வழங்கப்படக் கூடாது.

சில வேளை அம்மனிதர் குறித்த குர்ஆன் வசனத்தையோ நபிமொழியையோ செவியேற்காதிருக்கலாம். அல்லது செவியேற்றிருந்தாலும் அவரிடம் அது ஊர்ஜிதமாகாதிருந்திருக்கலாம். அல்லது மாற்றுக்கருத்தொன்று தோன்றி - அதில் அவர் தவறிழைத்தாலும் - மாற்று விளக்கம் கூறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கலாம்.

எப்போதும் நான் ஒரு நபிமொழியை நினைவூட்டுவேன். புகாரி முஸ்லிமில் வந்த அச்செய்தியில் ஒரு மனிதர் பின்வருமாறு கூறுவார்: "நான் மரணித்தால் என்னை எரித்து விடுங்கள், பின்னர் மாவாக அரைத்து கடலிலே தூவுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை அவன் பிடித்து விட்டால் உலகத்தாரில் எவரையும் தண்டிக்காத அளவு என்னை தண்டித்து விடுவான். (அவ்வளவு பாவம் செய்திருக்கிறேன்) அவர்களும் அவ்வாறே செய்தனர். (நாளை மறுமையில் அல்லாஹ் அவரை எழுப்பி) உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? என்று விசாரிப்பான். உன்னை நான் அஞ்சியதால்தான் (அவ்வாறு செய்தேன் ரப்பே) என்று கூறுவார். அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

இம்மனிதர் (மரணித்து எரித்து சாம்பலாக்கப்பட்டு கடலிலே) தூவப்பட்டவரை எழுப்புவதிலும், தூவப்பட்டவரை மீண்டும் உருவாக்குவதிலும் அல்லாஹ்வின் ஆற்றலை சந்தேகப்பட்டார். அவர் மீட்டெடுக்கப்படமாட்டார் என்று உறுதியாக நம்பினார். முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி இது குப்ராகும். ஆனால் அறியாத மடமை கொண்டவராக அவர் இருந்தார். அதே நேரத்தில் அல்லாஹ் தன்னை தண்டிப்பான் என்று அவனை அஞ்சும் முஃமினாக இருந்தார். அதன் மூலம் அவர் மன்னிக்கப்பட்டார்.

நபியவர்களை பின்பற்றுவதில் ஆர்வம் கொண்ட, சத்தியத்தை கண்டறிவதில் முயற்சி எடுக்கும் முஜ்தஹிதுகளில் மாற்று விளக்கம் கூறுவோர்  இத்தகையோரை விட மன்னிக்கப்படுவதில் முதற்தகைமை கொண்வர்களாவர். "

(ஷெய்க் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்கவாஇதுல் முஸ்லா முடிவுரையிலிருந்து பயன்களாகப் பெற்ற தொகுப்பு, சில மேலதிக குறிப்புக்களுடன் சேர்த்து)

காபிர் தீர்ப்பளிக்கும் விடயம் இந்தளவு நுணக்கமாகவும் தெளிவுடனும் கையாளப்பட வேண்டி இருக்கின்ற போது அதில் உள்ள அபாயங்களும் தவறுகளும் மிகக் கடுமையானது.

எனவே மாணவர்கள்; குறிப்பாக ஆரம்ப கட்ட மாணவர்கள் இது விடயத்தில் மிதமிஞ்சி மூழ்கிப்போவதிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் தனது இம்மை மறுமையுடைய விடயங்கள் சீர் பெற பயனுள்ள கல்வியை பெறுவதில் ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியமும் உள்ளது.

மூன்றாவதாக: சில புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் கற்பதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் உதவியை எப்போதும் நாடிக் கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறோம். அதுதான் மிக எளிதானதும் அதிக பாதுகாப்புடையதுமான பாதையாகும். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் யாரிடம் கல்வியைப் பெறுகிறீர்களோ அவர்கள் தமது அறிவிலும் மார்க்கத்திலும் நம்பகமானவர்களாகவும், ஸுன்னாவை பின்பற்றக் கூடியவர்களாகவும், மனோ இச்சை மற்றும் பித்அத்துகளிலிருந்து தூரமானவராகவும் இருக்க வேண்டும்.

இமாம் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: 'நிச்சயமாக இந்த அறிவு மார்க்கமாகும். எனவே யாரிடமிருந்து உங்களது மார்க்கத்தை எடுக்கிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள்." (ஸஹீஹ் முஸ்லிமின் முன்னுரை)

உனது இடத்தில் மார்க்க அறிஞர்களின் வகுப்புகளில் கலந்து கொள்வது உனக்கு சிரமமாக இருந்தால் அவர்களது வகுப்புகள் அடங்கிய இறுவட்டுகள் மூலமாவது படிக்கலாம். மிக இலகுவாக இஸ்லாமிய இணையத்தளங்கள் மற்றும் இறுவட்டுகள் மூலமாக அவர்களது பாடங்களை பெற்றுக் கொள்ள முடியும். அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்கம் கற்பதிலும் ஸுன்னாவைப் பின்பற்றுவதிலும்  ஆர்வத்துடன் ஈடுபடும், சில அறிஞர்கள் மூலமாகவும் பயனடைய முடியும். அவர்கள் இல்லாத இடங்கள் மிக அரிது.

நான்காவதாக: சேகரித்து வைத்துக் கொள்வதிலும் வாசிப்பதிலும் கவனம் எடுக்க வேண்டிய சில இஸ்லாமிய புத்தகங்கள்:

1. தப்ஸீர் - அல்குர்ஆன் விரிவுரை : தப்ஸீருஷ் ஷெய்க் இப்னு ஸஃதி, தப்ஸீர் இப்னு கஸீர்.

2. ஹதீஸ்: அல் அர்பஊன் அந்நவவிய்யா. (அதன் விரிவுரைகள் ஒன்றுடன்) இமாம் இப்னு ரஜப் அவர்களின் ஜாமிஉல் உலூம் வல் ஹிகம் நூலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்., ரியாளுஸ் ஸாலிஹீன் நூலுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு ஷெய்க் இப்னு உஸைமீனின் விரிவுரையை உதவியாக எடுத்துக் கொள்ளலாம்.

3. அகீதா: ஷெய்க் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களது கிதாபுத் தவ்ஹீத் நூலை அதன் இலகுநடையில் உள்ள விரிவுரை ஒன்றுடன் சேர்த்து முக்கியமாக படிக்க வேண்டும். ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களது அல் அகீதா அல் வாஸிதிய்யா. அதேபோல் இப்னு ரஜப் அவர்களின் தஹ்கீக் கலிமதுல் இக்லாஸ், இப்னு தைமிய்யா அவர்களது அத்துஹ்பதுல் இராகிய்யா பில் அஃமால் அல் கல்பிய்யா, இப்னுல் கைய்யிம் அவர்களது ஸாதுல் மஆத் மேலும் அல்வாபிலுஸ் ஸய்யிப், அத்தாஉ வத்தவாஉ போன்ற அவர்களது ஏராளமான புத்தகங்கள். இவை போன்ற பாடத்துடன் தொடர்பான அநேக நூற்கள் உண்டு.

இவை ஆரம்ப கட்டத்துக்கான ஒரு நூல் தொகுதியாகும். இவற்றை வாசிப்பதுடன் குறிப்பாக இவற்றை வாசிப்பதற்கும் விளங்குவதற்கும் உதவியாக யாராவது கிடைத்தால் பயனுள்ள மற்றும் உனக்கு முக்கியமான புத்தகங்கள் பற்றிய உனது அறிவு சிறிது சிறிதாக வளரும் இன்ஷாஅல்லாஹ்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
காபிர் தீர்ப்பு வழங்குவதற்கான வரையறைகள் - Islam Question & Answer