1. மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள்.
இவற்றை நாம் 10680 ஆம் இலக்கக் கேள்வியின் பதிலில் விரிவாக விளக்கியுள்ளோம்.
2. பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமைகள்.
ஒரு பிள்ளை தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போல, பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சில கடமைகளையும் அல்லாஹ் வைத்துள்ளான்.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் அவர்களை “உபகாரம் புரிபவர்கள்” என்று கூறியிருப்பது, அவர்கள் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் உபகாரம் புரிவதாலேயே. உனது பெற்றோருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போல, உனது பிள்ளைகளுக்கும் நீ செய்ய வேண்டிய கடமைகள் உண்டு” (அல்அதபுல் முப்ரத் : 94)
அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகக் அறிவிக்கின்றார்கள், “நீ உனது பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு” (முஸ்லிம் : 1159)
பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில, பிள்ளை பிறப்பதற்கு முன்னர் உள்ளன.
உதாரணமாக, நல்ல தாயாக இருக்கும் நோக்கில் நல்ல மனைவியை தெரிவு செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கய் அறிவிக்கின்றார்கள், “ஒரு பெண் நான்கு காரணிகளுக்காக திருமணம் செய்துகொள்ளப்படுகின்றாள். அவளது பணத்திற்காக, அவளது வம்சத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்கத்திற்காக. மார்க்க உள்ளவளைப் பற்றிக்கொண்டு வெற்றியடைந்துகொள்.” (புகாரி : 4802, முஸ்லிம் : 1466)
ஷெய்க். அப்துல் கனி அத்தஹ்லவி அவர்கள் கூறுகின்றார்கள்: “பெண்களில் மார்க்கப்பற்றுள்ள, ஒழுக்கமான, கண்ணியமான குடும்பத்தை உடைய பெண்களைத் தெரிவுசெய்யுங்கள். பெண் விபச்சாரத்தில் பிறந்தவளாக இருக்கக் கூடாது. ஏனெனில், தீய குணம் அவளைத் தாண்டி பிள்ளைகளையும் அடைந்துவிடும். அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விபச்சாரகன் இன்னொரு விபச்சாரப் பெண்ணை அல்லது இணைவைத்த பெண்ணையே திருமணம் முடிப்பான். ஒரு விபச்சாரப் பெண் இன்னொரு விபச்சார ஆணையோ, அல்லது இணைவைப்பாளனையோ தான் திருமணம் முடிப்பான். (ஸூரா அந்நூர் : 03) அல்லாஹ் தகுதியானவர்களைத் தெரிவு செய்யுமாறு ஏவியுள்ளது, பொருத்தமாக இருப்பதற்கும், இழிவை அடைந்து கொள்ளாமல் இருப்பதற்குமே.
குழந்தை பிறந்ததின் பின்னரான கடமைகள்
2. குழந்தை பிறந்தவுடன் தஹ்னீக் (ஈத்தம்பழத்தை மென்று, அதன் சிறுபகுதியை குழந்தையின் வாயில் வைத்தல்) செய்துவிடல்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது ‘‘என் மகன் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். (அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம் மகன் இறந்த விவரத்தைக் கூறி) ‘‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள்.
விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் வளம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித் தார்கள்.
பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம்பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.
நபி (ஸல் அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘‘ஆம்; பேரீச்சம்பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள். (புகாரி : 5153, முஸ்லிம் : 2144)
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஈச்சம்பழத்தைக் கொண்டு “தஹ்னீக்” செய்வது ஸ{ன்னத்தாகும். ஈத்தம்பழம் இல்லாவிட்டால் அது போன்று இனிப்பான ஒன்றைக்கொண்டு செய்யலாம். “தஹ்னீக்” செய்பவர் அந்த ஈத்தம்பழத்தை நன்கு மென்று மென்மையாக்கிவிட்டு பின்பு குழந்தையின் வாயைத் திறந்து அதில் ஒரு பகுதியில், வாயில் செலுத்தும் விதமாக சிறிய ஒரு துண்டை வைத்துவிடுவார். (சரஹுமுஸ்லிம் : 14-122,123)
2. குழந்தைக்கு அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் போன்ற அழகான பெயர்களை வைத்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் ஆகிய பெயர்களாகும்.” (முஸ்லிம் : 2123)
பிள்ளைகளுக்கு நபிமார்களின் பெயர்களை வைப்பதும் விரும்பத்தக்கதாகும்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இன்று இரவு எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் எனது தந்தையாகிய இப்ராஹீமின் பெயரை வைத்துள்ளேன்.”
ஏழாம்நாள் பெயர் வைப்பது விரும்பத்தக்கது. மேற்குறிய ஹதீஸை ஆதாரமாக வைத்து பிறந்த நாளிலும் பெயர் வைக்கலாம்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீக்காவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஏழாம் நாளன்று அது அறுக்கப்படும். (அந்நாளில் குழந்தையின்) முடி சிறைக்கப்படும். பெயர் வைக்கப்படும்” (அபூ தாவூத் : (2838)
இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், “பெயர் வைத்தலுடைய நோக்கம், குறித்த நபரை அறிமுகப்படுத்துவது தான். எனவே பெயர் அறியப்படாத ஒருவராக இருந்தால் அவரை அறிமுகப்படுத்தும் ஒன்றும் இருக்காது. எனவே, பிள்ளை பிறக்கும் நாளிலும் பெயர் வைக்கலாம். மேலும் மூன்றாவது தினம் வரையோ, அகீகா தினம் வரையோ அதை பிற்படுத்தவும் முடியும். அதற்கு முன்னரும் முடியும். பின்னரும் முடியும். அதில் விசாலத்தன்மை உண்டு. (துஹ்பதுல் மவ்லூத் : 111)
3. ஏழாம் தினம் குழந்தையின் முடியை சிறைத்து, அதன் பாரத்தின் அளவு வெள்ளியை தர்மம் கொடுத்தல்.
அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கூறுகின்றார்கள், “நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸனுக்கு ஒரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். பின்பு, பாதிமா ரலியல்லாஹுஅன்ஹா அவர்களிடம் “பாத்திமாவே! குழந்தையுடைய முடியை சிறைத்து விட்டு, அதன் பாரத்தின் அளவு வெள்ளியை தர்மமாக கொடுங்கள்” எனக் கூறினார்கள். அதை நிறுத்துப் பார்த்தபோது, ஒரு திர்ஹமின் அளவு அல்லது அதைவிடக் குறைவாக இருந்தது”
4. தந்தை அகீகா கொடுப்பது ஸுன்னத் ஆகும். “ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீக்காவுடன் பிணைக்கப்பட்டுள்ளது.” என்ற மேற்கூறிய ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்.
ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அறுக்கப்படும்.
ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள், ஆண் குழந்தைக்கு ஒத்த வயதுடைய இரு ஆடுகளையும், பெண் குழந்தைக்கு ஒரு ஆட்டையும் அகீகா கொடுக்குமாறு ஏவினார்கள்” (திர்மிதி : 1513, ஸஹீஹ{த் திர்மிதி : 1221, அபூ தாவூத் : 2834, நஸாஈ : 4212, இப்னு மாஜஹ் : 3163)
5. கத்னா செய்தல்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூஹ{ரைரா ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஐந்து விடயங்கள் இயற்கையாகும். அல்லது ஐந்து விடயங்கள் இயற்கையில் உள்ளவையாகும். கத்னா செய்தல், மர்மஸ்தான முடிகளை நீக்குதல், அக்குள் முடிகளைப் பிடுங்குதல், நகம் வெட்டுதல், மீசையை கத்தரித்தல்” (புகாரி : 5550, முஸ்லிம் : 27)
வளர்ப்பு சம்பந்தமான கடமைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி, மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.” (புகாரி : 2416, முஸ்லிம் : 1829)
மார்க்க கடமைகளிலும் மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் ஏனைய நல்ல அம்சங்களிலும், பிள்ளைகளின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உலக விவகாரங்களிலும் அவர்களுக்கு வழிகாட்டுவது பெற்றோரின் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளை வளர்ப்பை மிக முக்கியமானதை கொண்டு ஆரம்பிப்பார். ஆரம்பமாக, இணைவைப்பு, நூதனங்கள் அற்ற சரியான நம்பிக்கைக் கோட்பாட்டை வழங்குவார். பின்பு வணக்கங்களை, குறிப்பாக, தொழுகையைக் கற்றுக் கொடுப்பார். பின்பு அவர்களுக்கு நற்குணங்களையும், நல்ல பண்பாடுகளையும், மற்ற எல்லா நல்ல விடயங்களையும் கற்றுக் கொடுப்பார்.
அல்லாஹ் கூறுகின்றான் “லுக்மான் தன் மகனுக்கு உபதேசம் செய்தவராக, “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிடாதே! இணைவைப்பு மிகப்பெரிய அநியாயம்” என்று கூறியதை (நினைவு கூர்வீராக)(ஸ_ரா லுக்மான் : 13)
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸபுரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “சிறு பிள்ளைகளுக்கு 7 வயதில் தொழக் கற்றுக் கொடுங்கள். 10 வயதில் அதற்காக அடியுங்கள்.” (திர்மிதி : 407, ஆபூ தாவூத் : 494)
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்;, எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (புகாரி : 1859, முஸ்லிம் : 1136)
ஸாஇப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், “நான் ஏழு வயதில் இருக்கும் போது என்னை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.” (புகாரி : 1759)
நற்குணங்களுக்கும் நல்ல பண்பாடுகளுக்கும் பயிற்றுவித்தல்.
ஒவ்வொரு பெற்றாரும் தமது ஆண், பெண் பிள்ளைகளுக்கு நற்குணங்களையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அதனுள் அல்லாஹ்வுடன் பேணவேண்டிய ஒழுக்கங்கள், அவனது நபியுடன் பேணவேண்டிய ஒழுக்கங்கள், அல்குர்ஆனுடன் மற்றும் முஸ்லிம் உம்மாவுடன் பேண வேண்டிய ஒழுக்கங்கள், அவர்கள் அறிந்த, அவர்களுக்கு உபகாரம் புரிந்து மனிதர்களும் உள்ளடங்குவர். எனவே, ஒன்றாக இருப்பவர்கள், அண்டை வீட்டார்கள், நண்பர்கள் போன்றவர்களைச் சேர்ந்து நடப்பதில் அவர்கள் தவறிழைக்காமல் இருக்கவேண்டும்.
இமாம் நவவிp அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், “ஒரு தந்தை தன் பிள்ளைக்கு ஒழுக்கமூட்டுவதும், தேவையான மார்க்க விடயங்களை கற்றுக் கொடுப்பதும் கட்டாயமாகும். பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தை பருவ வயதை அடைய முன் இவ்வாறு கற்றுக்கொடுப்பது தந்தையுடைய மற்றும் ஏனைய பொறுப்புதாரிகளுடைய கடமையாகும். இமாம் ~hபியும் அவரது மதுஹபு உலமாக்களும் அதைக் குறிப்பாகக் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் இவ்வாறு கூறுகின்றார்கள் “தந்தை இல்லாவிட்டால் தாய்மார் மீது கற்பித்தல் கடமையாகும். ஏனெனில் இதுவும் பிள்ளை வளர்ப்பில் உள்ளது, எனவே அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. இவ்வாறு கற்பிப்பதற்கான செலவினம் பிள்ளையின் பணத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். அவ்வாறு பிள்ளையிடம் பணம் இல்லாவிட்டால் பிள்ளைக்கு செலவழிக்கும் பொறுப்பு உள்ளவர் மீது கடமையாகும். ஏனெனில் இது மிக மிக அவசியமான ஒன்று. அல்லாஹ்வே அறிந்தவன்.” ஷர்ஹுந் நவவி : 8-44)
உண்ணுதல், பருகுதல், ஆடை அணிதல், உறங்குதல், வீட்டிலிருந்து வெளியேறுதல், வீட்டில் நுழைதல், வாகனங்களில் ஏறுதல் போன்ற அனைத்து விடயங்களிலும் அவர்களைப் பண்படுத்துவது தந்தையின் கடமையாகும். அவர்களிடம் அர்ப்பணிப்பு, மற்றவர்களை முற்படுத்ல், நேசித்தல், உதவுதல், பெருந்தன்மை, கொடை போன்ற நல்ல பண்புகளை விதைப்பதுடன், கோழைத்தனம், கஞ்சத்தனம், கௌரவக் குறைவாக நடந்துகொள்ளல் நற்கருமங்களை விட்டும் பின்வாங்குதல் போன்ற மோசமான குணங்களை விட்டும் தூரமாக்குவதும் தந்தையின் கடமையாகும்.
முனாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், ‘நீ உன் பொற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போன்று, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. அதாவது, நிறைய கடமைகள் உள்ளன. கடமைகளை கற்றுக் கொடுப்பது, மார்க்க ஒழுக்கங்களை ஊட்டுவது, அன்பளிப்பு, நன்கொடை, வக்பு அல்லது வேறு ஏதாவது கொடுத்தாலும் நீதமாக நடந்து கொள்வது என்பவையும் அவற்றில் உள்ளடங்கும். நியாயமான காரணம் இன்றி பிள்ளைக்குக் கொடுப்பவற்றில் ஏற்றத்தாழ்வு காட்டினால், சில அறிஞர்கள் அது செல்லுபடியாகாது என்றும் வேறு சிலர் வெறுக்கத்தக்கது என்றும் கூறியுள்ளனர்.” (பைழுல் கதீர் : 2-574)
பிள்ளைகளை நரகத்திற்கு நெருக்கமாக்கி வைக்கும் அனைத்தும் அம்சங்களையும் விட்டு அவர்களை பாதுகாப்பது தந்தையின் கடமை ஆகும். “முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.” (ஸ_ரா அத்தஹ்ரீம் : 06)
இமாம் குர்துபீ இவ்வாறு கூறுகின்றார்கள், “இவ்வசனத்தை விளக்கும்போது, ஹஸன் பஸரீ அவர்கள் “அவர்களுக்கு ஏவுவார், மேலும் அவர்களைத் தடுப்பார்” என்று கூறினார்கள்.
சில அறிஞர்கள் கூறுகின்றார்கள் “அல்லாஹ் “உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியதில் பிள்ளைகளும் உள்ளடங்குவார்கள். ஏனெனில் பிள்ளை என்பது அவரது ஒரு பகுதியே. “உங்கள் வீடுகளில் சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்ற வசனத்திலும் இவ்வாறு தான் அவர்கள் உள்ளடங்குகின்றார்கள். அதனாலேயே ஏனைய உறவுகளைத் தனித்தனியாக கூறியது போன்று பிள்ளைகளைக் கூறவில்லை. எனவே பிள்ளைகளுக்கு ஹலாலையும் ஹராமையும் கற்றுக் கொடுத்து, பாவங்களை தவிர்க்கச் செய்வார். அவ்வாறாக ஏனைய சட்டங்களையும் கற்றுக் கொடுப்பார். (தப்ஸீரல் குர்துபீ : 18-194,195)
செலவழித்தல்
இதுவும் தந்தை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று. எனவே அதில் கவனயீனமாக இருப்பதோ அல்லது அதைப் பாழ்படுத்துவதோ கூடாது. மாறாக, அதை முழுமையான விதத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதன் தான் கட்டாயம் உணவளிக்கவேண்டியவர்களைக் கவனியாமல் விட்டுவிடுவது மாத்திரமே அவனுக்குப் பாவத்தைக் கொண்டுவந்துதரப் போதுமானது.” (அபூ தாவூத் : 1692)
அதேபோன்று பெண் பிள்ளைகளை நன்கு கவனித்து, அழகாக வளர்த்தெடுப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நற்கருமத்துக்கு அதிக ஆர்வம் ஊட்டி உள்ளார்கள்.
நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களது மனைவி ஆயி~h ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் என்னிடம் வந்து ஏதாவது தருமாறு கேட்டாள். என்னிடம் ஒரே ஒரு ஈத்தம் பலம் மாத்திரமே இருந்தது. அதை அவரிடம் கொடுக்க, அவள் அதை இரண்டு தன்னிரு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டு எழுந்து சென்று விட்டார். பின்பு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்த போது இச்சம்பவத்தை கூறினேன். அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் “இப்படியான பெண் பிள்ளைகளினால் யாராவது சோதிக்கப்பட்டு, அவர்களை நல்ல முறையில் வளர்த்தால் நரகை விட்டும் அவரைப் பாதுகாப்பவர்களாக அப்பிள்ளைகள் இருப்பார்கள்” என்று கூறினார்கள். (புகாரி : 5649, முஸ்லிம் : 2629)
பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில், கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்று, அவர்களுக்கு மத்தியில் நீதம் செலுத்துவது ஆகும்.
நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இதனை இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளார்கள் “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் நீதம் செலுத்துங்கள். (புகாரி : 2447, முஸ்லிம் : 1623)
ஆண் பிள்ளையை விட பெண் பிள்ளைகளை முற்படுத்துவதோ, பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளை முற்படுத்துவதோ கூடாது. ஒரு தந்தை இவ்விடயத்தில் தவறிழைத்து பிள்ளைகளுக்கு மத்தியில் நீதம் செலுத்தாமல் ஏற்றத்தாழ்வு காட்டினால், அது பல மோசமான விளைவுகளுக்கு காரணமாக அமையும்.
உதாரணமாக அதன் பாதிப்பு தந்தைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அவரால் புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகள் அவரை வெறுக்கவும், குரோதம் பாராட்டவும் செய்வார்கள். முஸ்லிம் கிரந்தத்தில் (1623) பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் இதை சுட்டிக்காட்டி உள்ளார்கள். நுஃமான் (ரலி) அவர்களின் தந்தையிடம் நபி ஸல்லல்லாஹுஅலைஹிஸ்ஸலாம் அவர்கள் “உமது பிள்ளைகள் உமக்கு பணிவிடை செய்வதில் சமனாக இருக்க விரும்புகின்றீர்களா? என கேட்க, அவர் “ஆம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் “பணிவிடை செய்வதில் சமனாக இருப்பதை நீங்கள் விரும்பினால், அன்பளிப்புகளில் அவர்களோடு நீதமாக நடந்து கொள்ளுங்கள்”
அதேபோன்று பிள்ளைகள் ஒருவரையொருவர் வெறுக்கவும், அவர்களுக்கு மத்தியில் வெறுப்பும் குரோதம் பாராட்டவும் அவர்கள் ஆரம்பிப்பார்கள்.
அல்லாஹ்வே அறிந்தவன்.