Table Of Contents
ஒரு கணவன் தனது மனைவிக்கும் ஒரு மனைவி தனது கணவனுக்கும் கட்டாயமாக செய்ய வேண்டிய கடைமைகளை இஸ்லாம் தெளிவாக வழிகாட்டியுள்ளது . அவைகளில் சில இரு சாராருக்கும் பொதுவான கடமைகளும் உண்டு.
அல்லாஹுதஆலாவின் உதவியால் கணவன், மனைவி ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது என்னென்ன கடமைகள் உண்டு என்பதை குர்ஆன், நபிமொழி மற்றும் அறிஞர்களின் கருத்துகள் என்ன சொல்கின்றன என்பதை இப்பொழுது பார்ப்போம் .
முதலாவது : கணவன் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்
ஒரு கணவன் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் இரண்டு வகைப்படும்
1-பணம் / சொத்து சம்பந்தப்பட்ட கடமைகள் : விவாக நன்கொடை (மஹர்), ஜீவனாம்சம் , உறைவிடம் போன்றவகள்.
2-பணம் சம்பந்தப்படாத கடமைகள்: மனைவிமாருக்கு மத்தியில் நீதமாக நடத்தல், அழகிய குடும்ப வாழ்க்கை, மனைவிக்கு நோவினை செய்யாதிருத்தல் போன்றவை.
1-பணம் சம்பந்தப்பட்ட கடமைகள்
அ. விவாக நன்கொடை (மஹர் ): ஒப்பந்த அடிப்படையில் அல்லது உடலுறவின் மூலம் ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து சொந்தமாக்கிக்கொள்ளும் சொத்தை குறிக்கும். அது ஒவ்வொரு ஆணும் தனது மனைவிக்கு கட்டாயம் செலுத்த வேண்டும். அதனை தான் அல்லாஹுதஆலாவும் {மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள் (4/4)} என தனது திருமறையில் கூறுகிறான். இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் இந்த மஹரை வலியுறுத்துவது, அந்த திருமண ஒப்பந்தத்தின் மகத்துவத்தையும் அதன் அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இஸ்லாம் பெண்களை எந்தளவு கண்ணியப்படுத்துகிறது என்பதும் இதனூடாக புலப்படுகிறது.
இந்த விவாக நன்கொடையானது அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி திருமண ஒப்பந்தத்திற்கான நிபந்தனையோ அல்லது தூணோ கிடையாது . அது திருமண ஒப்பந்தத்தினால் ஏற்படும் ஒரு விளைவு மாத்திரமே. அதனால் தான் அதிகமான அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி இந்த நன்கொடையை குறிப்பிடாமல் விவாக ஒப்பந்தம் நடந்தாலும் அவ்வொப்பந்தம் செல்லுபடியாகும். அவர்கள் பின்வரும் திருமுறை வசனத்தை ஆதரமாகக்கொள்கிறார்கள் { (திருமணம் செய்த) பெண்களை நீங்கள் தீண்டாமலும், அல்லது (திருமணத்தின்போது) அவர்களின் மஹரை நிர்ணயம் செய்யாமலும் (அவர்களை) நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டால், உங்கள்மீது (அது) குற்றமில்லை (2/236)} உடலுறவு மற்றும் மஹரை நிர்ணயிப்பதற்கு முன் விவாகரத்து செய்வது அனுமதிக்கப்பட்டிருப்பதானது , மஹர் குறிப்பிடாமல் திருமண ஒப்பந்தம் செய்வது அனுமதிக்கப்பட்ட விடயம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒப்பந்தத்தின் போது குறிப்பிட்ட ஒரு தொகை சொல்லப்பட்டால் அதனை கொடுப்பது கணவன் மீது கடமையாகி விடும், அவ்வாறு குறிப்பிடப்படாவிட்டால் அந்தப்பெண்ணை போன்ற பெண்களுக்கு வழமையாக எவ்வளவு கொடுக்கப்படுகிறதோ அந்தளவு கொடுக்க வேண்டும் .
ஆ. ஜீவனாம்சம்:
ஒரு பெண் தன்னை தனது கணவனுக்கு முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில், அவன் அவளுக்கு வாழ்க்கைச்செலவு செய்வது கடமையாகும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். அவ்வாறின்றி அந்தப்பெண் கணவனுக்கு கட்டுப்படாத பட்சத்தில் அவள் அதற்கு தகுதியவற்றவளாகி விடுகிறாள்.
ஏன் இஸ்லாம் இவ்வாறு மனைவிக்கான வாழ்க்கைச்செலவை கணவன் மீது கடமையாக்கியுள்ளது?
ஒரு பெண் திருமண ஒப்பந்தத்தின் மூலமாக கணவனின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறாள், அதனால் தொழில் நிமித்தமாக இருந்தாலும் சரி அந்த ஆணின் அனுமதியின்றி வெளியே செல்ல அனுமதி கிடையாது. எனவே அவன் அவளுக்கு போதுமான அளவு செலவழிப்பது கடமையாகி விட்டது. அதேபோன்று அவள் தன்னை முழுமையாக அவனுக்கு அர்ப்பணிப்பதனாலும், அவளிடம் கணவன் அடையும் இன்பத்திற்கு பிரதியுபகரமாகவும் அந்த நன்கொடை அமையும்.
ஜீவனாம்சம் கொடுப்பது என்றால் என்ன?
தனது மனைவிக்கு தேவையான அளவு சாப்பாடு, தங்குமிடம் போன்றவைகளை நிவர்த்தியாக ஏற்படுத்தி கொடுப்பதாகும். அவள் வசதி படைத்தவளாக இருந்தாலும் சரியே, பின்வரும் குர்ஆனிய வசனங்களும் இதனையே சுட்டிக்காட்டுகின்றன :{இன்னும், (பாலூட்டும் இக்காலங்களில்) அத்தாய்மார்களுக்கு உணவும் , உடையும் முறைப்படி வழங்குவது தகப்பன்மீது கடமையாகும் (2/233) , {(பால் குடிச் செலவு விஷயத்தில்) வசதியுடையவர், தன்னுடைய வசதிக்கேற்ப (தாராளமாகச்) செலவு செய்யவும் , எவருக்கு அவருடைய வாழ்வாதாரங்கள் நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்யவும் (65/7)}
நபிமொழிகளும் இதனை தான் வலியுறுத்துகின்றன .
ஹின்து பின்து உத்பா- அபூஸுப்யானின் மனைவி- நபியவர்களிடம் தனது கணவன்-அபூஸுப்யான்- தனக்கு செலவழிப்பதில்லை என முறையிட்ட பொழுது , நபியவர்கள் சொன்னார்கள் " உங்களுக்கும் , பிள்ளைகளுக்கும் போதுமான அளவை அவருடைய பணத்தில் இருந்து நியாயமான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ஹின்த் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சரான மனிதராக இருக்கிறார். நான் அவருக்கு தெரியாமல் அவரது பணத்திலிருந்து எடுத்துக்கொண்டாலின்றி எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் போதுமான அளவு செலவை தருவதில்லை. எனவே அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என்மீது அது குற்றமாகுமா?” எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘ உங்களுக்கும் , பிள்ளைகளுக்கும் போதுமானதை நியாயமான முறையில் (வழக்கத் திலுள்ள அளவு) எடுத்துக்கொள்ளுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புஹாரி 5049 , முஸ்லிம் 1714)
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தனது இறுதிப்பேருரையில் " பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்கள் மீது அவர்களுக்குள்ள கடமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும். (முஸ்லிம் 1218)
இ. உறைவிடம்
இதுவும் ஒரு பெண்ணின் உரிமையாகும், அதாவது ஒருபெண்ணை கரம்பிடித்தவன் அவளுக்கு அவனின் சக்திக்குற்பட்ட அமைப்பில் முறையான பாதுகாப்பான ஒரு தங்குமிடவசதியை செய்து கொடுக்க வேண்டும் {உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உமது மனைவிமாரை குடியிருக்கச் செய்யுங்கள் (65/6)} என்று அல்லாஹுதஆலா கூறுகிறான் .
2-பணம் /சொத்து சம்பந்தப்படாத ஆத்மீக ரீதியான கடமைகள்/ உரிமைகள்
அ. மனைவிமார்களுக்கிடையில் நீதம்.
பல மனைவிகளையுடவர்கள் அவர்களுக்கு மத்தியில் இரவுதங்குதல், ஜீவனாம்சம், ஆடை அணிகலன்கள் என அனைத்து விடயங்களிலும் சமமான முறையில் நடந்து கொள்வது அவனின் மீது கடமையாகும்.
ஆ. குடும்ப வாழ்க்கையில் கனிவாக நடத்தல்.
ஒவ்வொரு கணவனும் தனது மனைவியுடன் நற்குணங்களுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவளின் உள்ளத்தை கவர்வதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என சிந்தித்து செயலாற்ற வேண்டும். அல்லாஹுதஆலாவும் இவ்விடயங்களை தனது திருமுறையில் வலியுறுத்திகிறான். { (குடும்ப வாழ்க்கையில்) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் (4/19)}, {ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள கடமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு (2/228)}
நபிமொழிகளிலும் இதற்கான வழிகாட்டுதல் காணப்படுகின்றது
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் சொன்னார்கள் "உங்களுக்கு பெண்களைப்பற்றிய நல்ல விடயங்களை வஸிய்யத் செய்கிறேன் " (புஹாரி 3153 , முஸ்லிம் 1468)
எமது முன்மாதிரியான நபியவர்கள் தனது மனைவிமாருடன் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ:
- ஸைனப் பின்து அபூ ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் (நபி (ஸல்) அவர்களின் துணைவி ) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன், வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். அப்பொழுது
“உனக்கு மாதவிடாய் (நிஃபாஸ்) ஏற்பட்டுவிட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்து அந்தக் கறுப்புப் போர்வைக்குள் நுழைவித்துக்கொண்டார்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடு வார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளி) பெருந்தொடக்கின் குளியலை நிறைவேற்றுவோம் . ( புஹாரி 316 , முஸ்லிம் 296)
- உர்வா இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீ வளாகத்தில் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாசலில் நின்றுகொண்டு , அவர்களின் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த என்னை யாரும் பார்த்திடாதவாறும் நான் அந்த விளையாட்டை கண்டுகளிக்கும் விதத்திலும் தனது மேலங்கியால் என்னை மறைத்துக்கொண்டிருப்பதை கண்டேன் . நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். (ஆயிஷா (ரழி) சொன்னார்கள்) கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (புஹாரி 443 ,முஸ்லிம் 892)
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்தபின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுவார்கள். அப்போது உட்கார்ந்தபடியே (இறை வசனங்களை) ஓதுவார்கள். ஓத வேண்டிய அளவில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அந்த நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉ செய்வார்கள். பின்னர் சஜ்தா செய்வார்கள்.இரண்டாம் ரக்அத்திலும் இதைப் போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள். (புஹாரி 1068)
இ. மனைவிக்கு நோவினை செய்யாதிருத்தல்
இது இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று, அதாவது பொதுவாகவே ஒரு சக மனிதனுக்கு நோவினை செய்வதை இஸ்லாம் ஹராமாக்கியிருக்கிறது. எனவே தனது வாழ்க்கை துணைவியானவள் தன்னால் நோவினைக்குள்ளாகாமல் இருப்பதற்கு மிகவும் தகுதியானவள் .
உப்பாதா இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாரும் பிறருக்கு தெரிந்தோ , தெரியாமலோ ஆரம்பமாகவோ, பதிலுக்குப்பதிலாகவோ அநியாயம் செய்யக்கூடாது " என தீர்ப்பு செய்தார்கள். ( இப்னு மாஜா 2340) ( அஹ்மத், அல்ஹாகிம், இப்னுஸ்ஸலாஹ் இன்னும் பிற ஹதீஸ்துறை அறிஞர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என தீர்ப்பளித்திருக்கிறார்கள்)
பார்க்கவும் : குலாஸது பத்ரில் முனீர் (2/438)
இந்த (நோவினை செய்யக்கூடாது என்ற) விடயத்தில் முக்கியமான ஒரு விடயத்தை நபியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் , அதுதான் ( தேவைப்பட்டால்) காயம் வராமல் (மனைவியை) அடிப்பது ஆகுமாக்கப்பட்டது என்பதாகும். அதைத்தான் பின்வரும் நபிமொழியும் சொல்கிறது.
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தனது இறுதிப்பேருரையில் " பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும். (முஸ்லிம் 1218)
இரண்டாவது: மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
ஒரு பெண் தனது கணவனுக்கு செய்ய வேண்டியவை மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்தளவுக்கெனில் ஒரு கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை விட ஒரு மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மிகவும் முக்கியமானவையாகும். அதனால் தான் அல்லாஹுதஆலா கூறுகிறான் {ஒரு கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளைப்போன்றே பெண்களும் ஆண்களுக்கு(செய்ய வேண்டிய கடமைகள்) இருக்கின்றன ஆண்களுக்கு (செய்ய வேண்டிய கடமைகள் ) அவர்(பெண்களுக்கு செய்ய வேண்டிய கடமை)களை விட ஒருபடி உயர்வானது } (2/228)
குர்ஆன் விரிவுரையாளர் இமாம் ஜஸ்ஸாஸ் கூறுகிறார்கள்: அல்லாஹுதஆலா இவ்வசனத்தில் , கணவன், மனைவி இருவர் மீதும் அடுத்தவர் மீது சில கடமைகள் உள்ளன என்றும் பெண் கணவனுக்கு செய்ய வேண்டிய கணுவனுக்கே உரித்தான சில கடமைகளும் இருக்கின்றன என்பதையும் சொல்லித்தருகிறான் .
இமாம் இப்னுல் அரபி சொல்கிறார்: இவ்வசனம் கணவன் திருமண விடயங்களில் பெண்ணை விட முற்படுத்தப்பட வேண்டியவனும் அவளை விட சிறந்தவன் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும்.
ஒரு பெண் தனது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் :
1. கணவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாத்தில் கடமையாகும்.: அல்லாஹுதஆலா ஆண்களுக்கு அறிவு, உடம்பு ரீதியாக சில விஷேட தன்மைகளை கொடுத்திருக்கிறான் . அதேபோன்று அவன் மீது சில பணரீதியான கடமைகளையும் விதித்திருக்கிறான். அதனால் தான் ஆட்சியாளர்கள் எவ்வாறு தனது மக்களை நிர்வகிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்களோ , அந்த ஆண்களையும் தனது மனைவிமாரை நெறிப்படுத்தி வழிகாட்டி நிர்வகிக்கக்கூடியவர்களாக ஆக்கியிருக்கிறான் {ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாவர், ஏனெனில், அவர்களில் சிலரைக்காண (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலுமாகும்} (4/34)
இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்: இப்னு அப்பாஸ் அறிவித்ததாக அலி இப்னு அபீ தல்ஹா அறிவிக்கிறார்கள்: ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள் என்பதன் பொருள் ' பெண்களின் தலைவர்களாக இருக்கிறார்கள்' அதாவது எந்தெந்த விடயங்களில் அல்லாஹுதஆலா கணவனுக்கு கட்டுப்பட்ட வேண்டும் என்று ஏவியிருக்கிறானோ அந்த விடயங்களில் அவனுக்கு கட்டுப்படுதல் அவசியம். கணவனுக்கு கட்டுப்படுதல் என்பது அவனின் குடும்பத்தினருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல், அவனுடைய சொத்துக்களை பாதுகாத்தல் போன்றவற்றை குறிக்கும் .
இந்த வசனத்துக்கு முகாதில், அஸ்ஸுத்தி, அழ்ழஹ்ஹாக் போன்ற இமாம்களும் இதே போன்ற விளக்கத்தையே கூறியுள்ளனர் (இப்னு கஸீர் 1/492).
2. கணவனின் இன்பத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தல்: கணவன் இன்பம் அனுபவிப்பதற்காக தன்னை தயார்படுத்திக்கொடுப்பது மனைவிமாரின் கடமையாகும். திருமணம் முடித்த ஒரு பெண் உடலுறவில் ஈடுபட முடியுமானவளாக இருந்தால் அவள் கணவனுக்கு தேவைப்படும் பொழுது தன்னை பூரணமாக அர்ப்பணிப்பது அவளின் மீது கடமையாகும். அந்த ஆண் விவாக நன்கொடையில் உடனடியாக கொடுக்க வேண்டியதை செலுத்த வேண்டும். அந்த பெண் தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக நேரம் கேட்டால் வழமையில் உள்ளது போன்று இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும். அது சாதாரணமாக வழமையில் உள்ள விடயமே.
அவ்வாறு கணவன் அழைத்தும் ஒரு பெண் தவிர்ந்துகொள்வதானது பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படும். ஆனால் மாதவிடாய், கடமையான நோன்பு, நோய் போன்ற மார்க்க ரீதியான காரணங்களுக்காக தவிர்த்துக்கொண்டால் அவள் மீது குற்றமில்லை.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் "ஒரு ஆண் தனது மனைவியை படுக்கைக்கு (உடலுறவுக்காக) அழைத்து , அவள் மறுத்ததனால் அவள் மீது கோபமடைந்தவராக இரவைக்கழிப்பாரேயானால், காலை வரை வானவர்கள் அவள் மீது சாபமிட்டுக்கொண்டே இருப்பார்கள்" என நபியவர்கள் கூறினார்கள் . ( புஹாரி 3065, முஸ்லிம் 1436)
3. கணவன் வெறுப்பவர்களை அவனின் வீட்டிற்குள் அனுமதிக்காதிருத்தல் ஒரு பெண் தனது கணவனுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் ஒன்றாகும்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் " ஒரு பெண் தனது கணவன் வீட்டிலிருக்கும் சமயம் அவனின் அனுமதியின்றி (நபிலான)நோன்பு நோற்கவோ, அவனின் அனுமதியின்றி யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவோ கூடாது " என நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி 4899 , முஸ்லிம் 1026)
சுலைமான் இப்னு அம்ரு இப்னுல் அஹ்வஸ் தனது தந்தை தன்னிடம் சொன்னதாக அறிவிக்கிறார்: தான் நபியவர்களின் இறுதி ஹஜ்ஜுப்பேருரையில் கலந்து கொண்டேன் நபியவர்கள் அல்லாஹுதஆலாவை புகழ்ந்து துதித்துவிட்டு ஞாபகமூட்டி உபதேசம் செய்தார் பின்பு: உங்களுக்கு மத்தியில் பெண்களைப்பற்றி நல்ல விடயங்களையே உபதேசிக்கிறேன் அவர்கள் உங்களிடம் தஞ்சமடைந்திருக்கிறார்கள் அவ்வாறு நல்ல முறையில் அவர்களுடன் நடப்பதை தவிர வேறெந்த அதிகாரமும் உங்களுக்கு கிடையாது . எனினும் ஏதாவது தெளிவான பெரிய பாவங்களில் ஈடுபட்டால் முதற்கட்டமாக அவளை படுக்கையறையில் புறக்கணியுங்கள், அதற்கும் கட்டுப்படாத பட்சத்தில் லேசாக காயமேற்படாத வகையில் அடியுங்கள், அவள் அடிபணிந்து விட்டால் அதற்கப்பால் எந்த அநியாயமும் இழைக்க வேண்டாம் உங்கள் மனைவிகள் உங்களுக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. நீங்களும் உங்கள் மனைவியருக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. உங்கள் மனைவியர் உங்களுக்கு செய்ய வேண்டியது நீங்கள் விரும்பாதவர்களை உங்களுடைய படுக்கைகளிலோ, வீட்டிலோ அனுமதிக்க கூடாது அதே போன்று அவர்களுக்கு போதுமான அளவு உணவும் ஆடையும் கொடுத்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல் உங்களுக்கு அவர்கள் மீதுள்ள கடமையாகும். ( திர்மிதீ 1163 , இப்னு மாஜா 1851) [திர்மிதி இமாம் இந்த ஹதீஸ் " ஹஸன் ஸஹீஹ்" என சொல்லியிருக்கிருறார்கள் ]
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தனது இறுதிப்பேருரையில் " பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும். (முஸ்லிம் 1218)
4. கணவனின் அனுமதியின்றி வீட்டிலிருந்து வெளியே செல்லாமலிருப்பதும் ஒரு பெண் தனது கணவனுக்கு செய்யும் கடமைகளில் ஒன்றாகும்.
ஹன்பலி மற்றும் ஷாபியீ மத்ஹப்களின் கருத்துப்படி ஒரு பெண் கணவனின் அனுமதியின்றி தனது தந்தையை நோய்விசாரிக்கச்செல்வது கூட அனுமதிக்கப்பட்டதல்ல, கணவனுக்கு அவனது மனைவியை தடுப்பதற்கு அனுமதியுண்டு , ஏனெனில் கணவனுக்கு வழிப்படுதல் கட்டாயக் கடமையாகும். மார்க்கத்தில் கட்டாயமில்லாத விடயத்திற்காக மார்க்கத்தில் கடமையான ஒரு அம்சத்தை விடுவது அனுமதிக்கப்பட்டதல்ல.
5. ஒழுக்கப்படுத்தல்: ஒரு பெண் தனது கணவன் நல்ல விடயத்தை ஏவும் பொழுது அவனுக்கு மாறுசெய்தால் அவனுக்கு அவளை ஒழுக்கப்படுத்தலாம். அல்லாஹுதஆலாவும் பெண்கள் கணவனுக்கு கட்டுப்படாத பட்சத்தில் அவர்களை புறக்கணித்தல், அடித்தல் போன்ற விடயங்களால் நெறிப்படுத்துமாறு தனது திருமுறையில் ஏவியிருக்கிறான்.
பின்வரும் நான்கு சந்தர்ப்பங்களில் மனைவியை சீர்படுத்துவதற்காக கணவன் அடிக்கலாம் என ஹனபி மத்ஹப் கூறுகிறது:
1. கணவன் மனைவி அழகாக இருக்க வேண்டும் என வேண்டும் பொழுது தன்னை அழகுபடுத்திக்கொள்ளாதிருத்தல்
2. அவள் (மாதவிடாயிலிருந்து) சுத்தமாக இருக்கும் நேரத்தில் அவளை உடலுறவுக்கு அழைத்தும் அவள் மறுத்துவிடுதல்
3. தொழுகையை விடுதல்
4. கணவனின் அனுமதியின்றி வீட்டிலிருந்து வெளியே செல்லல்.
இவ்வாறான நிலைமைகளில் ஒரு கணவன் தனது மனைவியை ஒழுக்க படுத்துவதற்காக தண்டிக்கலாம் என்பதை பின்வரும் திருமறை வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.:
அல்லாஹுதஆலா கூறுகிறான் {எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள்.(4/34)}
இன்னோர் இடத்தில் பின்வருமாறு கூறுகிறான் { இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் (66/6) }.
இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது தப்ஸீரில் இமாம் கதாதா அவர்கள் இந்த வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் சொன்னதாக கூறுகிறார்கள் " நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு அல்லாஹுதஆலாவை வழிப்படுமாறு ஏவுங்கள் , அவனுக்கு மாறுசெய்வதை விட்டும் தடுங்கள், அல்லாஹுதஆலாவை கட்டளைப்படி அவர்களை நிர்வகியுங்கள் அவர்களையும் அதன் பால் ஏவுங்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு உதவுங்கள், அவர்கள் ஏதாவது பாவங்களில் ஈடுபடுவதை கண்டால் அவர்களை அதனை விட்டும் தடுத்து எச்சரிக்கை செய்யுங்கள்.
இமாம் அழ்ழஹ்ஹாக் மற்றும் முகாதில் போன்றவர்களும் இதைப்போன்றே கூறியிருக்கிறார்கள் " தனது குடும்ப உறவினர்கள் அடிமைகள் என அனைவருக்கும் அல்லாஹுதஆலா கடமையாகியிருப்பவற்றையும் அவன் தடைசெய்திருப்பவற்றையும் சொல்லித்தருவது ஒரு முஸ்லிமின் (குடும்பத்தலைவனின்) மீது கடமையாகும். (தப்ஸீர் இப்னு கஸீர் :4/392)
6. கணவனுக்கு பணிவிடை செய்தல்: பல திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் இந்த விடயத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் சிலதை நாம் முன்னால் பார்த்தோம்
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்கள்: ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனுக்கு அழகிய முறையில் பணிவிடை செய்வது கட்டாயக்கடமையாகும். அது ஒவ்வொருவரினதும் நிலைமைகளை பொறுத்து மாறுபடும். ஒரு கிராமப்புறத்து பெண்ணின் பணிவிடை நகரப்புறத்து பெண்ணை போன்றோ, ஒரு ஆரோக்கியமான பெண்ணின் பணிவிடை பலம்குன்றிய ஒரு பெண்ணை போன்றோ இருக்காது. (அல்பதாவா அல்குப்ரா 4/561)
6. கணவனுக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்தல்: ஒரு திருமண ஒப்பந்தம் பூரணமான நிபந்தனைகளுடன் சரியான முறையில் நடந்துவிட்டால், அப்போதிலிருந்து அந்த பெண் தன்னை தனது கணவனுக்கு முழுமையாக ஒப்படைத்து அவன் இன்பமடைவதற்கான இயலுமான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒப்பந்தம் மூலம் ஒரு பெண் அவளுக்கான மணநன்கொடையை சொந்தமாக்கிக் கொள்வதை போன்று அந்தக்கணவன் அதற்கான பதிலீடாக அவள் மூலம் இன்பமனுபவிப்பதை தனது உரிமையாக்கிக்கொள்கிறான்.
7. குடும்ப வாழ்க்கையில் அழகிய முறையில் நடந்து கொள்ளல்.
அல்லாஹுதஆலா தனது திருமறையில் " { அவர்கள் மீது இருக்கும் கடமைகள் போன்று உங்கள் மீதும் அவர்களுக்கு முறையாக செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன} (2/228).
இமாம் அல்குர்துபி சொன்னார்கள்:
இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள் : எவ்வாறு மனைவிமார் தனது கணவனுக்கு வழிப்படுவது கடமையாக்கப்பட்டுள்ளதோ, அதேபோன்று அந்த கணவன்மாரும் தனது மனைவிகளுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது கடமையாகும்.
"பெண்கள் தனது கணவன்மாருக்கோ, கணவன் மார் தனது மனைவிமாருக்கோ நோவினை செய்வதும் கூடாது"
இப்னு ஸைத் கூறுகிறார்கள் " கணவன் மார் தனது மனைவிமாரின் விடயத்திலும், மனைவிமார் தனது கணவன்மாரின் விடயத்திலும் அல்லாஹுதஆலாவை பயந்து கொள்ளுங்கள்".
இவ்வசனத்திற்கு மேற்கூறப்பட்ட அனைத்து விளக்கங்களும் பொருந்தும், அந்த வசனம் குடும்ப வாழ்க்கை சார்ந்த அனைத்து கடமைகளையும் உள்வாங்குகிறது .
தப்ஸீருல் குர்துபி (3/123,124)
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.