முதலாவதாக:
கட்டாயமாக செய்ய வேண்டும் என்று அல்லாஹ் ஏவிய விடயங்களைத் தான் வாஜிப் என்று அழைப்பார்கள். உதாரணமாக ஐவேளை தொழுகைகள்,ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, ஸகாத் கொடுப்பதற்கு தகுதியானவர்கள் அதை வழங்குவது, ஹஜ் செய்வதற்கு தகுதியுடையவர்கள் அதை நிவர்த்தி செய்வது போன்றவைகள் இதில் அடங்கும். வாஜிபை பர்ளு, ஃபரீளாஹ், ஹத்ம்,லாஜிம் என்றெல்லாம் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து வாஜிபை செய்தவருக்கு அதற்கான நற்கூலிகளும் அதை செய்யாமல் விட்டவர் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்.
இரண்டாவதாக:
கட்டாயம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிடாமல், செய்தால் சிறப்பு என்று பரிந்துரைக்கப்பட்ட விடயங்களைத் தான் முஸ்தஹப் என்றும் மந்தூப்,சுன்னாஹ்,நஃபில், மஸ்னூன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உதாரணமாக கடைசி இரவில் தொழக்கூடிய தஹஜ்ஜுத் தொழுகை, ஐவேளை கட்டாயத் தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் தொழக்கூடிய தொழுகைகள், ஐவேளை கட்டாயத் தொழுகைகள் அல்லாது தொழும் இதர தொழுகைகள், மாதம் தோறும் பிடிக்கும் மூன்று நோன்புகள், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஏழைகளுக்கு தர்மம் செய்வது, குறிப்பிட்ட நேரங்களில் சொல்லக்கூடிய அல்லாஹ்வின் நினைவூட்டல்களும் மற்றும் இதர நினைவூட்டல்களும் முஸ்தஹப்பில் அடங்கும். இவைகளை விரும்பி செய்தவருக்கு நற்கூலிகள் வழங்கப்படும் ஆனால் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது.
மூன்றாவதாக:
கட்டாயமாக செய்யவே கூடாது என்று அல்லாஹ் ஆணையிட்ட விடயங்களை ஹராம்,மம்நூஉ, மஹ்தூர் என்று அழைப்பார்கள். உதாரணமாக விபச்சாரம் புரிதல், வட்டி கொடுக்கல் மற்றும் வாங்கல்,பெற்றோர்களுக்கு மாறு செய்வது, தாடியை மழிப்பது,ஒரு பெண் தன் அழகு மற்றும் உடை அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிக்காட்டுவது மற்றும் இன்ன பிற விடயங்கள் ஹராமில் அடங்கும். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து இதை செய்யாமல் இருப்பவருக்கு நற்கூலிகள் வழங்கப்படும். செய்பவர் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்.
நான்காவதாக:
கட்டாயமாக செய்யக்கூடாது என்று அல்லாஹ் ஆணையிடாமல் செய்யாதிருத்தல் விரும்பத்தக்கது என்பவையாக வரும் விடயங்களை மக்ரூஹ் என்று அழைப்பார்கள். உதாரணமாக இடது கையில் கொடுப்பது வாங்குவது, ஜனாஸாவை பெண்கள் பின் தொடர்ந்து செல்வது, இஷா தொழுகைக்கு பிறகு உரையாடுவது, தோள்களை மறைக்காமல் ஒற்றை ஆடையில் தொழுவது, ஃப்ஜர் தொழுதபின் சூரியன் உதிக்கும்வரையிலுள்ள நேரத்திலும் மற்றும் அஸர் தொழுதபின் சூரியன் மறையும் வரையிலுள்ள நேரத்திலும் நஃபில் தொழுகையை தொழுவது மற்றும் இன்ன பிற விடயங்கள் மக்ரூஹில் அடங்கும். மக்ரூஹான விடையங்களை செய்தால் தண்டனை வழங்கப்பட மாட்டாது. இவைகள் அல்லாஹ்வுக்கு பிடிக்காது என்ற காரணத்தினால் செய்யாமல் விட்டவருக்கு நற்கூலிகள் வழங்கப்படும்.
ஐந்தாவதாக:
செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது போன்ற உத்தரவுகள் பொதுவாக இல்லாமல் இருந்தால் அவ்விடத்தை முபாஹ்,ஜாய்ஸ், ஹலால் என்றெல்லாம் அழைக்கப்படும். உதாரணமாக உண்ணுதல்,பருகுதல்,வாங்கல் மற்றும் விற்றல், உல்லாசத்திற்காகவும் மற்றும் வாழ்வாதாரத்திற்காகவும் பயணம் மேற்கொள்ளுதல், ரமலான் மாத இரவில் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது மற்றும் இன்னும் பல விடையங்கள் ஹலாலில் அடங்கும்.
"பொதுவாக இல்லாமல் இருந்தால்" என்று நாம் மேலே
குறிப்பிட்டதின் நோக்கம் என்னவென்றால் சில சூழல்களில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள் அனுமதிக்கப்படாதவைகளாகவும் மற்றும் கட்டாயக் காரியமாகவும் மாற நேரிடும். உதாரணமாக குடிநீர் விலைக்கு வாங்குதல் பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது.பர்ளு தொழுகையை நிறைவேற்ற உளூ செய்வதற்கு தண்ணீர் இல்லாத பட்சத்தில் அதை வாங்குவது கட்டாய கடமையாக மாறிவிடுகிறது (வாஜிப்). வாஜிபை நிறைவேற்ற ஒரு விடயம் தேவைப்படும் பட்சத்தில் அந்த விடயத்தை செய்வது கூட வாஜிபே. சுற்றுலா பயணம் மேற்கொள்வது கூடுமானதுதான் ஆனால் தீங்குகளும்,கேடுகளும், அநாகரிகங்களும் பரவலாக காணப்படும் இறை மறுப்பாளர்களின் நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது ஹராமானதாக மாறிவிடும்.
மேலும் இதைப் பற்றி விரிவாக அறிந்துக்கொள்ள இப்னு குதாமாவின் "ரவ்ததுந் நாதிர் வஜன்னதுல் மநாதிர்" (1/பக் 150-210), ஜர்கஷியின் "அல்பஹ்ருல் முஹீத்" (1/பக் 140-240) மற்றும் இப்னு உஸைமீனின் "ஷர்ஹுல் உஸூல் மின் இல்மில் உஸூல்" (பக் 46-68) புத்தகங்களை பார்க்கவும்.
அல்லாஹ் நன்கறிந்தவன்.