0 / 0
03/சபர்/1446 , 07/ஆகஸ்ட்/2024

உளூவின்போது காலுறை மீது நீரைத் தடவுவதற்கான (மஸ்ஹு செய்வதற்கான) நிபந்தனைகள்.

கேள்வி: 9640

காலுறைகள் மீது வுழூவின் போது (மஸ்ஹு செய்வதன் மூலம்) நீரை தடவுவதற்கான நிபந்தனைகள் யாவை  என்பதை ஆதாரங்களுடன் தர முடியுமா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

காலுறைகள் மீது நீரைத் தடவுவதற்கான நிபந்தனைகளாக நான்கு விடயங்கள் காணப்படுகின்றன :

முதலாவது நிபந்தனை :

அவற்றை அணிபவர்  வுழூவுடன் இருக்க வேண்டும். முங்கீரத் இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் வார்த்தை இதற்கு ஆதாரமாக உள்ளது. « அந்த இரண்டையும் (காலுறைகளையும்) விட்டுவிடுவீராக. ஏனெனில், அவை இரண்டையும் நான் வுழூவுடன் இருக்கும் போதே அணிந்து கொண்டேன். »

இரண்டாவது நிபந்தனை :

அணியப்படுகின்ற காலுறையாகட்டும் அல்லது போடப்படுகின்ற மருந்துக் கட்டாக இருக்கட்டும் அது சுத்தமானதாக இருக்கவேண்டும். அது அசுத்தமாக இருக்குமாயின் அதன் மீது தடவுவது (மஸ்ஹு செய்வது) கூடாது. இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் செயல் ஆதாரமாக உள்ளது. « ஒரு நாள் நபியவர்கள் தனது தோழர்களோடு (தொழுகையில்) இருக்கும் பொழுது பாதணி அணிந்திருந்தார்கள். தொழுது கொண்டு இருக்கும் போதே அவர்கள் அவற்றைக் கழற்றினார்கள். பிறகு அது பற்றி பின்வருமாறு அறிவித்தார்கள். தான் அணிந்திருந்த பாதணிகளில் ஏதோ ஒரு அழுக்கு இருந்ததாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தனக்கு அறிவித்ததாகச் சொன்னார்கள் ». அபூ ஸயீதுல் குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது முஸ்னத் என்ற கிரந்தத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த செய்தி காலணிகளில் அசுத்தம் இருக்குமாயின் அந்தத் தொழுகை சேராது என்பதைக் காட்டுகிறது. ஆதலால் அசுத்தமான ஒன்றின் மீது ஒருவர் தடவும் போது அவர் அந்த அசுத்தத்தில் அழைந்தவராக மாறுகிறார். அதனால் சுத்தமாக வேண்டியவராக இருப்பதால் மஸ்ஹு செய்வது சேராது.

மூன்றாவது நிபந்தனை :

காலுறைகள் மீது (மஸ்ஹு செய்து) நீரைத் தடவுதலானது சிறிய தொடக்கின் போது மட்டுமே செய்யமுடியும். அது பெருந்தொடக்கின் போதோ அல்லது குளிப்புக் கடமையான நிலையில் இருக்கும் போதோ மஸ்ஹு செய்ய முடியாது. இதற்கான ஆதாரமாக ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் செய்தி காணப்படுகிறது :

« நாங்கள் ஒரு பயணத்தில் இருக்கும்போது, குளிப்புக் கடமையாகாத நிலையில் மலசலம் மற்றும் தூக்கம் போன்ற காரணங்களுக்காக வுழூ செய்ய மூன்று பல்களுக்கும் மூன்று இரவுகளுக்கும் எங்களது காலுறைகளைக் கழற்றக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்குக் கட்டளையிட்டார்கள் ».

இந்த செய்தியை ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது முஸ்னத் என்ற கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதன்படி நீரைத் தடவுதல் என்பது சிறுதொடக்கின் போதுதான் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாறாக, ஹதீஸின் அடிப்படையில் பெருந்தொடக்கின் போது மஸ்ஹு செய்வது (நீரைத் தடவுவது) கூடாது.

நான்காவது நிபந்தனை :

(மஸ்ஹு செய்து காலுறைகள் மீது) நீரைத் தடவுதல் ஆனது, மார்க்கத்தின் படி குறிப்பிட்ட கால எல்லையில் இடம்பெற வேண்டும். அதாவது, ஊரில் தங்கி இருப்பவருக்கு ஒரு இரவும் ஒரு பகலும், பிரயாணிக்கு மூன்று இரவுகளும் மூன்று பகல்களுமாகும். இதற்கு ஆதாரமாக, அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும். பின்வரும் செய்தி காணப்படுகிறது. «  நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊரில் தங்கியவருக்கு ஒரு இரவையும் ஒரு பகலையும், பிரயாணிக்கு மூன்று இரவுகளையும், மூன்று பகல்களையும் காலுறைகள் மீது நீரைத் தடவுவதற்கான கால எல்லையாக ஆக்கினார்கள் ».  முஸ்லிம்.

இந்தக் கால எல்லையானது, ஒருவர் தொடக்கிலிருந்து சுத்தமாகும் பொழுது ஆரம்பித்து 24 மணித்தியாலங்களின் பின்னர் ஊரில் இருப்பவருக்கு முடிவடைகிறது. பிரயாணிக்கு 72 மணித்தியாலங்களின் பின்னர் முடிவடைகிறது.

உதாரணமாக, ஒரு மனிதர் செவ்வாய்க்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்காக வுழூ செய்துகொண்டு, புதன் கிழமை இரவு இஷா தொழுகை வரைக்கும் அதே வுழூவில் இருந்த நிலையில் தூங்கி, பின்னர் புதன் கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து, காலை 5:00 மணிக்கு அவர் மஸ்ஹு செய்து கொண்டால் அவருடைய நேர ஆரம்பம் புதன்கிழமை காலை 5 மணி ஆகும். அது வியாழக்கிழமை காலை 5:00 மணி வரை நீடிக்கும். ஒருவேளை அவர், வியாழக்கிழமை காலை 5:00 மணி ஆவதற்கு முன்னர் மஸ்ஹு செய்து கொண்டார் என்று வைத்துக்கொண்டால், அவருக்கு வியாழக்கிழமை காலை ஃபஜ்ர் தொழுகையை தொழுவதற்கான அனுமதி உண்டு. அத்தோடு, அந்த வுழூ முறியும் வரைக்கும் அவர் விரும்பியவற்றை தொழுவதற்கும் அனுமதி உண்டு. ஏனென்றால், அறிஞர்களின் மிகச்சரியான கருத்தின்படி, காலத்தின் அடிப்படையில் வுழூ செல்லுபடியற்றதாக மாறமாட்டாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூவுக்கான நேரமாகவன்றி 'மஸ்ஹு' செய்வதற்கான நேரமாகவே குறிப்பிட்டுள்ளார்கள். காலஎல்லை முடிந்து விட்டால் மஸ்ஹு செய்ய முடியாது என்றாலும் அவர் கால எல்லை முடியும் வேளை அவர் வுழூவுடனே இருப்பாரானால் அந்த வுழூ செல்லுபடியானதாகவே கணக்கில் எடுக்கப்படும். ஏனென்றால், இந்த வுழூவானது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டதாகும். அதன்படி மார்க்க ஆதாரத்தின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் மார்க்க ஆதாரத்தின் ஊடாக மாத்திரமே நீக்கப்பட வேண்டும். 'மஸ்ஹு'வுக்காக  நிர்ணயிக்கப்பட்ட காலஎல்லை  நிறைவோடு உழூவும்  முறிந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. எனவேதான், வுழூ முறிந்துவிட்டமை தெளிவாகின்ற வரைக்கும் ஏற்கனவே செய்துகொண்ட வுழூவில் இருக்கும்  நிலை அப்படியே தொடரும்.

இதுவரை சுட்டிக்காட்டிய நிபந்தனைகள் அனைத்தும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஆகும். இவைதவிர இன்னும் சில நிபந்தனைகளும் காணப்படுகின்றன. அவற்றை சில அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டும் உள்ளார்கள். என்றாலும், அவை தொடர்பான மாற்று கருத்துகள் நிலவுகின்றன.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
உளூவின்போது காலுறை மீது நீரைத் தடவுவதற்கான (மஸ்ஹு செய்வதற்கான) நிபந்தனைகள். - Islam Question & Answer