0 / 0
06/சபர்/1446 , 10/ஆகஸ்ட்/2024

சத்திய மார்க்கத்தின் அடையாளங்கள்.

கேள்வி: 9607

சரியான மார்க்கத்தின் பண்புகள் யாவை?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

ஒவ்வொரு சமயத்தவரும் தனது சமயம் தான் உண்மையானது என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சமயத்தைப் பின்பற்றுவோரும் தங்களது சமயம்தான் நேர்த்தியானது; நேரான வழி முறையைக் கொண்டது என்று நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில், மனித கையாடல்களுக்கு உட்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்களையோ அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள மதங்களைச் சார்ந்த மக்களையோ, அவர்களின் நம்பிக்கைக்கான ஆதாரங்கள் பற்றி நீங்கள் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் முன்னோரை எந்த வழியில் கண்டார்களோ, அதே வழியில் அவர்களைப் பின்பற்றித்தான் நாங்கள் செல்கிறோம் என்ற வாதத்தை முன்வைப்பர். பின்னர் அவர்களின் நம்பிக்கை தொடர்பான பல கட்டுக்கதைகளையும் செய்திகளையும் அடிப்படைகளற்ற தகவல்களையும் கூறுவர். அவர்கள் சொல்லும் செய்திகளின் உள்ளடக்கங்கள் குறைகளோ விமர்சனங்களோ இன்றி இருப்பதில்லை. மேலும் அவர்கள் சில நூல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அதனை சொன்னவர் யார்? அதனை எழுதியவர் யார் என்பதைக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. அத்தோடு, அந்த கிரந்தங்கள் முதன் முதலாக எந்த மொழியில் எழுதப்பட்டன என்பதையும், எந்த ஊரில் அவை தோற்றம் பெற்றன என்பதையும் அவர்கள் அறிந்திருப்பதில்லை. உண்மையில், அவை வெறும் கற்பனைகள் ஆகும். அந்தத் தகவல் வந்தடைந்த வழி சம்பந்தமான எந்தவித அறிவியல் ரீதியான வரலாற்று நிரூபணங்களும் அவை பொதிந்திருக்கும் உள்ளடக்கம் சம்பந்தமான தெளிவுரைகளும் உறுதிப்படுத்தல்களும் இன்றி பரம்பரை பரம்பரையாக வந்தவை என்ற அடிப்படையிலேயே அவர்கள் அவற்றைக் கண்ணியப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த அடிப்படைகளற்ற நூல்களும் கட்டுக்கதைகளும் கண்மூடித்தனமான பின்பற்றல்களும் சமயம் மற்றும் நம்பிக்கைக் கோட்பாடுகள் என்ற விடயத்தில் ஆதாரமாகக் கொள்ளப்படுவதற்குத் தகுதியற்றவையாகும். இதன்படி, உலகில் இன்று காணப்படுகின்ற திரிபுக்குட்பட்ட சமயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களும் சரியானவையா அல்லது தவறானவையா? ….

உலகில் உள்ள அனைத்து சமயத்தவரும் சத்தியத்தில் இருப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும். ஏனென்றால், சத்தியம் என்பது ஒன்றுதான்; அது பலதாக இருக்க முடியாது. அத்தோடு இந்த திரிபுக்குட்பட்ட சமயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை ; அவை சத்தியமானவைதான் என்று சொல்வதற்கான சாத்தியமும் அற்றவையாகும். இவ்வாறு சத்தியம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்றிருக்கும் போது  பல்வேறு சமயங்கள் உலகில் காணப்பட்டாலும் அவற்றில் எது சத்தியமானது? (ஏதாவது ஒன்றுதான் சத்தியமானதாக இருக்க முடியும்). அப்படியாயின், அசத்தியமான சமயங்களில் இருந்து சத்தியமான மார்க்கத்தை அறிந்துகொள்ளத் தேவையான பண்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான், ஏதாவது ஒரு மார்க்கத்தில் சத்தியத்திற்குரிய பண்புகளை நாங்கள் கண்டால் அதனை நாங்கள் உண்மையான மார்க்கம் என்று அறிந்து கொள்ள முடியும். சத்தியத்திற்குத் தேவையான இந்த அளவுகோள்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் இருந்தாலோ அந்த சமயத்தை நாங்கள் பொய்யான அல்லது போலியான சமயமென்று அறிந்து கொள்ள முடியும்.

உண்மையான மார்க்கத்தையும் போலியான சமயத்தையும் பிரித்தறிந்து கொள்வதற்குரிய பண்புகள் :

அவையாவன :

முதலாவது : மார்க்கமானது அல்லாஹ்விடமிருந்து மலக்கின் மூலமாக அவனது இறைத் தூதர்களில் ஒருவர் மீது அடியார்களுக்கு எத்தி வைப்பதற்காக இறக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சத்திய மார்க்கமானது அல்லாஹ்வின் மார்க்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சத்திய மார்க்கமானது அல்லாஹ்வுடையதாகும். அவன் தான் மார்க்க நெறிகளை உருவாக்குகிறான். அதற்காக வேண்டி மறுமையில் படைப்புகளை விசாரிக்க இருக்கிறான். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

« (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஸபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.» (04:163) மேலும் அல்லாஹ் கூறுகின்றான். « உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தவொரு இறைத்தூதருக்கும் என்னைத்தவிர வேறு இறைவன் யாரும் கிடையாது. ஆகவே, என்னையே வணங்குங்கள் என்று வஹீ அறிவிக்காமல் இல்லை. » இதன்படி, எந்த ஒரு மார்க்கமானாலும் அதனைக் கொண்டு வருகின்ற நபர் அல்லாஹ்வுடன் அதனை சேர்க்காது, தனக்குரியதாகப் பிரகடனம் செய்தால் அது போலியான மார்க்கம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

இரண்டாவது: அந்த மார்க்கம் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று அழைப்பு விடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ஷிர்க்கை ஹராம் ஆக்க வேண்டும். அத்தோடு அதற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால், ஓரிறைக்கொள்கை (தவ்ஹீதின்) பக்கமான அழைப்பானது, இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களினதும் நபிமார்களினதும் அழைப்புப்பணியின் அடிநாதமாக இருந்தது.  இதைத்தான் ஒவ்வொரு நபியும் தனது சமூகத்திற்கு ஏவியதாக அல்-குர்ஆன் எடுத்துரைக்கிறது. «அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனல்லாத வேறு எந்த ஊரு. இறைவனும் வணங்குவதற்குத் தகுதியாக உங்களுக்கு கிடையாது». (07:73) ஆகவே, எந்த ஒரு சமயமானாலும் அது ஷிர்க்கை உள்ளடக்கியிருந்தாலும் அத்தோடு, அவனல்லாத நபியையோ மலக்கையோ அல்லது ஒரு இறைநேசரையோ அவனுக்கு இணையாக ஆக்குமாயின் அது நிச்சயமாக பிழையான சமயமாகவே காணப்படும். அதைச் சார்ந்தவர்கள் தங்களை இறைத்தூதர்களோடு இணைத்துக் கொண்டாலும் சரியே.

மூன்றாவது: சத்திய மார்க்கமானது இறைத்தூதர்கள் அழைப்புவிடுத்த அடிப்படைகளில் உள்ளடங்கியுள்ள அல்லாஹ்வை மாத்திரமே வணங்கி வழிபட வேண்டும் அவனது வழியின் பக்கமே அழைப்பு விடுக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். அத்தோடு இணைவைப்பு, பெற்றோரை நோவினை செய்தல், உயிர்களை நியாயமான காரணமின்றி கொலை செய்தல் போன்றவற்றைத் தடைசெய்வதோடு மானக்கேடான விஷயங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தடைசெய்யவும் வேண்டும். இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். « உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  அறிவிக்காமலில்லை » (21 :25)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

« (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான் ». (06:151)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்.

« (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களைப் பற்றி நீர் கேட்பீராக, ‘‘ரஹ்மானையன்றி வணங்கப்படுகின்ற வேறு கடவுள்களை நாம் ஏற்படுத்தினோமா?' ».   (43 : 45)

நான்காவது : சன்மார்க்கத்தில் உள்ள விடயங்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக அல்லது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஒரு விடயத்தை ஏவி விட்டு, பின்னர் அதற்கு எதிர் முரணான இன்னொரு விடயத்தையும் ஏவி இருக்கக்கூடாது. மேலும் ஒரு விடயத்தைத் தடைசெய்துவிட்டு பின்னர் எக்காரணமும் இல்லாமல் அதே போன்றதொரு விடயத்தை ஆகுமாக்கி இருக்கக் கூடாது. ஒரு சமூகத்தாருக்கு ஒரு விடயத்தை ஏவிவிட்டோ அல்லது ஆகுமாக்கிவிட்டதன் பின்னரோ இன்னொரு சமூகத்தாருக்கு அதனை ஹராமாக்கி தடுத்திருக்கக் கூடாது. இது பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

« இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள் ».                                                                                                                                                                 (04:82)

ஐந்தாவது : உண்மையான மார்க்கமானது மனித சமூகத்திதிற்கான மார்க்கமாக இருக்க வேண்டும். அதாவது, அவர்களின் மானம், சொத்து, உயிர், பரம்பரை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். அதன் ஏவல்களாலும் விலக்கல்களாலும் எச்சரிக்கைகளாலும் பண்பாட்டு விழுமியங்களாலும்  இந்த ஐந்து பிரதான அடிப்படைகளையும் பாதுகாக்கக் கூடியதாகவும்  இருக்க வேண்டும்.

ஆறாவது : உண்மை மார்க்கமானது படைப்பினங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்வதையும் அத்தோடு தனக்குத்தானே அநியாயம் செய்து கொள்வதை விட்டும் பாதுகாக்கக் கூடிய அருளாகவும்  இருக்க வேண்டும். அந்த அநியாயங்கள் உரிமைகளைப் பறிப்பதாகவோ அல்லது நன்மைகளை அழிப்பதாகவோ இருக்கலாம். அல்லது சிறியோருக்கு  பெரியோர் அநியாயம் இழைப்பதாகவும் இருக்கலாம். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்த ‘தவ்ராத்’ வேதத்தில் பொதிந்திருக்கின்ற அன்பு, கருணை பற்றி அல்லாஹ் பின்வருமாறு விவரிக்கிறான்.

« அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான். » (19:21)

ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றியும் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு அறிவிக்கிறான்.

« நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை. » (17 :82 )

ஏழாவது : நேர்வழி என்பது அல்லாஹ்வின் சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் மனிதனிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை அறிவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மனிதன் எங்கிருந்து வந்தான்? எங்கே அவன் செல்ல இருக்கிறான் என்பது பற்றியும் அது அறிவிக்க வேண்டும். 'தவ்ராத்’ வேதம்  பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு கூறுவது நோக்கத்தக்கது.

«‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! »  (05 :44)

இன்ஜீல் வேதம் பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

« ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான் ». (05:46)

அல்குர்ஆன் பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

« அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான். » (9 :33)

இதன்படி உண்மையான மார்க்கமானது என்பது அல்லாஹ்வின் சட்டத்தின் பக்கம் வழிகாட்டக்கூடியதாகவும் ஆன்மாக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதாவது, எல்லாவகையான சந்தேகங்கள், சஞ்சலங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்து, மனித மனங்களில் எழுகின்ற கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்கக்கூடியதாகவும் திகழும் அதேவேளை, மனித வாழ்வில் உருவாகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

எட்டாவது : சன்மார்க்கமானது  உண்மை, நேர்மை, நீதி, வெட்கம், பக்குவம், தயாளம் போன்ற நற்பண்புகளின் பக்கம் அழைப்பு விடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் பெற்றோரை நோவினை செய்தல், உயிர்களைக் கொலை செய்தல் என்பவற்றைத் தடுப்பதோடு, மானக்கேடானவற்றையும் பொய், அநியாயம், விபச்சாரம், கஞ்சத்தனம், பாவங்கள் என்பவற்றையும் தடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஒன்பதாவது : அந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவருக்கு மகிழ்ச்சியை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அல்லாஹுத்தஆலா  பின்வருமாறு கூறுகின்றான்.

« (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை. » (20:02)

அத்தோடு, சீரான மனித இயல்புக்கு ஒத்ததாகவும் இருக்க வேண்டும். « (நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். » (30 :30) சீரான சிந்தனைக்கு ஒன்றித்து இருக்க வேண்டும். ஏனென்றால், சரியான மார்க்கம் என்பது அது அல்லாஹ்வின் சட்டமாகும். சீரான சிந்தனை என்பது அது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே, அல்லாஹ்வின் சட்டமும் அவனது படைப்பும் முரண்பட்டுக் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.

பத்தாவது : சத்தியத்தைத் தெளிவுபடுத்தி, அசத்தியத்தை எச்சரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் நேர்வழிக்கு அழைத்துச் சென்று, வழிகேட்டில் இருந்து விரட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தோடு எந்தவித கோணல்மானலோ, குறையோ இல்லாது நேரான பாதையின் பக்கம் அது மக்களை அழைத்துச்செல்ல வேண்டும். அல்-குர்ஆனை செவிமடுத்த ஜின்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது பற்றி அல்லாஹ் பின்வருமாறு அறிவிக்கிறான். « (அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது. » (46:30)

அதே நேரம், மக்களை வழி கொடுக்கின்ற விடயங்களின் பக்கம் அது அழைத்துச் செல்லக்கூடாது. « (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை ».  (20:1-2)

மேலும், மனிதர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவக்கூடாது. « நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான். »  (4 :29)

அத்தோடு, அதனைப் பின்பற்றுகின்றவர்களுக்கு மத்தியில் பிறப்பின் அடிப்படையிலோ அல்லது நிறத்தின் அடிப்படையிலோ அல்லது கோத்திரத்தின் அடிப்படையிலோ பாகுபாடுகளை ஏற்படுத்தக்கூடாது. இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். « மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான். » (49:13) எனவேதான், சத்தியமார்க்கத்தில் சிறப்புரிமைக்காக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய அடிப்படையாக ‘இறையச்சம்’ என்ற அம்சம் விளங்குகிறது.

மூலம்

நூல்: இஸ்லாத்தின் அடிப்படைகள். ஆசிரியர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அஸ்ஸுஹைம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
சத்திய மார்க்கத்தின் அடையாளங்கள். - Islam Question & Answer