வேதங்களை நம்புவதானது பின்வரும் நான்கு விடயங்களை உள்ளடக்கி உள்ளது :
முதலாவது
வேதங்கள் குறித்த பின்வரும் விடயங்கள் உண்மையென உறுதியாக நம்புதல் :
வேதங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டன. அவை உண்மையில் அல்லாஹ்வுடைய பேச்சுக்களாகும். மலக்கு எனும் தூதரின் துணையின்றி திரைக்குப் பின்னால் அவற்றுச் சில அருளப்பட்டன. இன்னும் சில மலக்கு எனும் தூதரின் மூலம் மனித இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டன. மற்றும் சில அல்லாஹ் தனது கையினால் எழுதி வழங்கி வைத்ததாகும்.
இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
(அஷ் ஷூரா :51)
மேலும், அல்லாஹ் கூறுகிறான் :
وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا
இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
(அந் நிஸாஃ : 164)
தௌராத்தைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّـكُلِّ شَىْءٍ
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி கொடுத்தோம்.
(அல் அஃராப் :145)
இரண்டாவது
குர்ஆன், தௌராத், இன்ஜீல்,ஸபூர்,(இப்ராஹீம் மற்றும் மூஸா ஆகியோரின்) ஸுஹுபுகள் என்று விரிவாக கூறப்பட்ட வேதங்களைப் பற்றி அவ்வாறே விரிவாக நம்ப வேண்டும்.
பொதுவாக் கூறப்பட்ட வேதங்களை பொதுவாகவே நம்ப வேண்டும்.
இவை பற்றி அல்லாஹ் நபியவர்களுக்கு ஏவிய விடயங்களையே நாமும் கூறுவோம்.
وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ
இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன் என்று கூறுவீராக.
(அஷ் ஷூரா :15)
மூன்றாவது
அல் குர்ஆனின் செய்திகள் மற்றும் திரிவுபடுத்தப்படாத முன்னைய வேதங்களில் உள்ள நம்பகமான செய்திகள் போன்றவற்றை உண்மையென நம்ப வேண்டும்.
நான்காவது
முன்னைய வேதங்களை உண்மைப்படுத்தும் விதமாகவும் அவைகளிலுள்ள சட்டங்களை மாற்றும் வகையிலுமே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியருளினான் என்று நம்புதல்.
இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது.
(அல் மாயிதா :48)
இந்த வசனத்திலுள்ள مهيمنا என்ற சொல் முன்னைய வேதங்களுக்கு சான்றாக அல்குர்ஆன் உள்ளது என்ற கருத்தை வழங்கும் அதே சமயத்தில் مصدقا என்ற பதம் முன்னைய வேதங்களில் காணப்படும் நம்பகமான விடயங்களை உண்மைப்படுத்துவதாக வும் அவைகளில் உள்ள மாற்றப்பட்ட திரிவுபடுத்தலுக்குள்ளான செய்திகளை மறுதளிக்கும் வகையிலுமே அல்குர்ஆன் இருக்கிறது என்ற கருத்தை கொடுக்கிறது.
மேலும் முன்னைய வேதங்களில் உள்ள சட்டதிட்டங்களை மாற்றி புதிய சட்டங்களை அங்கீகரிப்பதாக அல்குர்ஆன் இருக்கிறது என்று தப்ஸீர் துறை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
எனவே, முன்னைய வேதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் அல்குர்ஆனையும் ஏற்று அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ
وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ
இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
(அல் கஸஸ் : 23-53)
அல்குர்ஆனை பின்பற்றுவதும் அதன் படி வாழ்வதும் அதற்கான கடமைகளை நிறைவேற்றுவதும் முழு சமூகத்தினதும் கடமையாகும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
(நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
(அல்குர்ஆன் : 6:114)
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ
(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
(அல் அன்ஆம் :155)
அல்குர்னில் ஹலால் எனக் கூறப்படும் விடயங்களை ஹலாலெனவும் ஹராமெனக் கூறப்படுபவைகளை ஹராமெனவும் எடுத்துக் கொள்ளல், அதன் ஏவல்களை ஏற்றும் விலக்கல்களை தவிர்ந்தும் வாழுதல், அதிலுள்ள உதாரணங்கள் மற்றும் கதைகளை பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் எடுத்துக் கொள்ளல், இலகுவாக புரிய முடியுமான முஹ்கமான வசனங்களை புரிந்து கொள்ளல், பல கருத்துக்களை உள்ளக்கிய முதஷாபிஹான வசனங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளல், அதன் வரையறைகளைப் பேணுதல், (பாராயணம் செய்தல், மனனமிடல், அதன் கருத்துக்களை சிந்தித்தல், இரவு பகலாக அதனை எடுத்து நடத்தல், தெளிவான ஞானத்தோடு அதன் கருத்துக்களை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தல் போன்றவற்றின் மூலம்) அல்குர்ஆனை பாதுகாத்தல் போன்ற விடயங்களைத் தான் குர்ஆன் படி வாழுதல் அதன் கடமைகளை நிறைவேற்றுதல் என்ற சொற்பிரயோகங்கள் குறிக்கின்றன.
வேதங்கள் குறித்த இந்நம்பிக்கை மனிதனில் நல்ல பல விளைவுகளை ஏற்படுத்தும்.
அவற்றுள் மிக முக்கியமான விடயங்கள் வருமாறு :
01-
ஒவ்வொரு சமூகத்தினதும் நேர்வழிக்காக வேதங்களை அல்லாஹ் இறக்கியருளியதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டிருக்கும் கரிசனை குறித்து அறிந்து கொள்ள முடியும்.
02-
ஒவ்வொரு சமூகத்திற்கு ம் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப ஷரீஆ சட்ட வழிகாட்டல்களை அல்லாஹ் வழங்கியதனூடாக அவனின் பரந்த அறிவு ஞானம் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல் மாயிதா :48)
03-
இந்த உன்னதமான அருளை வழங்கியமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
04-
அல் குர்ஆனை ஓதுவது,அது பற்றி சிந்திப்பது, அதன் அர்த்தங்களை புரிந்து கொள்வது, அதனைச் செயற்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் அல் குர்ஆன் குறித்த கரிசனையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
பார்க்க :
அஃலாமுஸ் ஸுன்னா அல் மன்ஸூரஹ் 90 -93
ஷர்ஹு உஸீலிஸ் ஸலாஸா - அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் (றஹ்)
91-92