1:
ஸகாத்: இஸ்லாம் குறிப்பிட்ட சில பொருட்களில் ஸகாத்தை கடமையாக்கியுள்ளது. அவையாவன: தங்கம், வெள்ளி, தானியங்கள், பழங்கள், வியாபாரப் பொருட்கள் ,ஒட்டகம் ஆடு, மாடு போன்ற கால்நடைகள்.
ஸதகா: குறிப்பிட்ட ஒரு பொருளில் கடமையாக்கப்படவில்லை குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் மனிதன் விரும்புபவற்றில் வழங்க முடியும்.
2: ஸகாதுக்கு பொருளுக்கு ஒரு வருடப் பூர்த்தி, குறிப்பிட்ட அளவையும் அடைந்திருந்தல் போன்ற நிபந்தனைகள் உண்டு. குறிப்பிட்டளவு சொத்தையே வழங்க வேண்டும்.
ஸதகா: இதற்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை எந்நேரத்திலும் எவ்வளவு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.
3:
ஸகாத்: இதனை குறிப்பிட்ட சில கூட்டத்தாருக்கு கொடுக்க வேண்டும் என இறைவன் விதித்துள்ளான் அது அல்லாத வேறு யாருக்கும் அது கொடுக்கப்பட முடியாது.
தர்மங்கள் எல்லாம் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அதற்காக (வசூல் செய்வது கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், (புதிதாக இஸ்லாத்தை தழுவியயோரில்) எவர்களின் இதயங்கள் அன்பு செலுத்தப்பட வேண்டுமோ அத்தகையோருக்கும் இன்னும் (அடிமைகளின்) பிடரிகளை விடுதலை செய்வதற்கும் ,கட னில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதிலும், வழிப்போக்கருக்கும் உரித்தானதாகும். இது அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும் .மேலும் அல்லாஹ் நன்கு அறிகிறவன் தீர்க்கமான அறிவுடையவன். (தவ்பா:60)
ஸதகா: மேற்கூறிய வசனத்தில் குறிப்பிடப்பட்டோருக்கும் ஏனையோருக்கும் கொடுக்கலாம்.
4:
ஸகாத்: ஸகாத் கடமையான நிலையில் அதனை கொடுக்காமல் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவருடைய வாரிசுகள் செல்வத்திலிருந்து அதனை கட்டாயம் கொடுக்க வேண்டும் கடன், உயில், வாரிசு சொத்துகளை பங்கிடுதல் ஆகியவற்றை விட ஸகாத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறான எந்த கட்டாயமும் சதகாவில் இல்லை.
5: ஸகாத்: ஸகாத் கொடுக்காமல் தடுத்துக் கொள்பவருக்கான வேதனை பற்றிய ஹதீஸில் வந்துள்ளதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப்பாளங்களாக மாற்றி,அவருடைய விலாப்புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங்களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறி,குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்தவையும் இருக்காது;கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை,அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 987
ஸதகா: அதனை விட்டவர் வேதனை செய்யப்பட மாட்டார்.
6: ஸகாத்:
தந்தை ,பாட்டனார் ,தாய், பாட்டி ,மகன் மகனின் குழந்தைகள், மகள், மகளின் குழந்தைகள் ஆகியோருக்கு ஸகாத் கொடுக்கப்படக் கூடாது என்பது நான்கு மத்ஹபுகளையும் சேர்ந்த அறிஞர்களின் கருத்தாகும்.
ஸதகா:
மூத்த தலைமுறையினருக்கோ இளைய தலைமுறைக்கோ கொடுக்கலாம்.
7: ஸகாத்:
செல்வந்தருக்கோ சம்பாதிக்க பலமுடையவருக்கோ ஸகாத் வழங்கப்பட முடியாது.
உபைதுல்லாஹ் இப்னு அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரண்டு மனிதர்கள் நபியவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவில் ஜகாத்தை பங்கிட்டு கொண்டிருக்கும் நிலையில் வந்து நபியவர்களிடம் ஜகாத் பொருளிலிருந்து கேட்டார்கள். நபியவர்கள் அவர்கள் இருவரையும் பார்வையை உயர்த்திப் பார்த்து, பின் தாழ்த்திக் கொண்டு இரு தோல்பைகளை கொடுத்து, “நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்கு கொடுக்கிறேன், இதில் செல்வந்தர்களுக்கோ சம்பாதிக்கும் பலமுடையவர்களுக்கோ பங்கில்லை” எனக் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத்:1633/நஸாஈ:2598
இமாம் அஹ்மத் இன்னும் ஏனையோர் இதனை ஸஹீஹ் என்பதாக கூறுகிறார்கள்.
பார்க்க: தல்ஹீஸுல் கபீர்108/3
ஸதகா: செல்வந்தர் சம்பாதிக்க பலமுடையவர்கள் அனைவருக்கும் கொடுக்க முடியும்.
8:
ஸகாத்: நாட்டிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுவது ஸகாத்தில் மிகச் சிறந்தது ஆனாலும் ஸகாத் கொடுக்கும் பகுதியில் இருப்பவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தால் இன்னொரு பிரதேசத்திற்கு அங்குள்ளவர்களின் நன்மைக்காக ஸகாத்தை நகர்த்தலாம்.
ஸதகா: அருகில் இருப்போர் தூரத்தில் இருப்பவர் என யாருக்கும் விநியோகிக்கலாம்.
9: ஸகாத்:
இணைவைப்பாளர்கள் நிராகரிப்பவர்கள் என்பவருக்கு கொடுக்கப்பட முடியாது.
ஸதகா: இணைவைப்பாளர்கள் நிராகரிப்பாளர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம்.
மேலும் அல்லாஹுவாகிய அவன் மீது உள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். (அல்இன்ஸான்:8)
இமாம் குர்துபி கூறுகிறார்கள்: இஸ்லாத்தில் சிறைப்பட்டவர் இணைவைப்பாளராகவே இருப்பார்.
10:. ஸகாத்: ஒரு முஸ்லிம் தனது மனைவிக்கு ஸகாத் கொடுக்க முடியாது. இப்னுல் முன்திர் அது இஜ்மா என குறிப்பிடுகிறார்.
சதகா :மனைவிக்கு சதக்கா கொடுக்க முடியும்.
இவை ஸகாத் மற்றும் சதக்காவுக்கிடையிலான சில வேறுபாடுகள் ஆகும்.
அனைத்து நற்செயல்களுக்கும் சதகா என சொல்லப்படுகிறது.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அனைத்து நற்செயல்களும் தர்மமாகும். புஹாரி.
இப்னு பத்தால் கூறுகிறார்: ஒரு மனிதன் செய்கின்ற சொல்கின்ற அனைத்து நல்லவையும் தர்மமாக அவருக்கு பதியப்படுகிறது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். இமாம் நவவி கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அனைத்து நற்செயல்களும் தர்மமாகும். அதாவது அவற்றிற்கு சதகாவிற்கான கூலி வழங்கப்படும்.
அல்லாஹ்வே அறிந்தவன்.