இறைத்தூதர்கள் பற்றிய நம்பிக்கை பின்வரும் நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது :
01)
நபிமார்கள் குறித்த பின்வரும் விடயங்கள் உண்மையென உறுதியாக நம்புதல் :
ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவரை இறைத்தூதராக அல்லாஹ் அனுப்பினான்.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்றும் வேறெவரையும் அல்லது வேறெதனையும் வணங்கக் கூடாது என்றும் மக்களுக்கு இந்த இறைத்தூதர்கள் போதனை செய்தனர்.
இவர்கள் அனைவரும் உண்மை, நேர்மை, இறைப்பக்தி, நம்பிக்கை,அறிவாளுமை போன்ற பண்புகளை உடையவர்களாக இருந்தனர்.
இவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய இறைச்செய்திகளை மறைக்காமலும் திரிபுபடுத்தாமலும் கூடுதல் குறைவின்றியும் உள்ளால் உள்ளபடி அப்படியே மக்களுக்கு ஒப்புவித்தனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
فَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
எனவே (நம்
தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).
(அந் நஹ்ல் :35)
சொல், செயல்,நம்பிக்கை சார்ந்த அனைத்து விதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ்வுக்காக மாத்திரமே செய்ய வேண்டும் அவனல்லாத வேறெவரும் வணஙகப்படுவதை நிராகரிக்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையைத் தான் முதல் நபி முதற்கொண்டு இறுதி நபி வரை அனைவரும் ஏகமனதாக மக்கள் மத்தியில் போதித்தனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
(அல் அன்பியாஃ :25)
மேலும், அல்லாஹ் கூறுகிறான் :
وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رُّسُلِنَا أَجَعَلْنَا مِن دُونِ الرَّحْمَٰنِ آلِهَةً يُعْبَدُونَ
நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.
(அஸ் ஸுஹ்ருப் :45)
இது போன்ற இன்னும் பல இறைவசங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.
ஷரீஅத்தின் கிளை அம்சங்களாகக் கருதப்படும் தொழுகை நோன்பு போன்ற பர்ளான வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவகையில் ஆளுக்காள் வித்தியாசமான விதத்திலேயே நபிமார்கள் மத்தியில் கடமையாக்கப்பட்டன. ஹலால் ஹராம் என்பனவும் இவ்வாறே இவர்களுக்கு மத்தியில் கடமையாக்கப்பட்டன.
சோதிக்கும் நோக்கிலேயே அல்லாஹ் இவ்வாறு செய்ததாக பின்வரும் வசனம் கூறுகிறது :
لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ...
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக...
(அல்முல்க் : 2)
பின்வரும் வசனம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.
அல்லாஹ் கூறுகிறான் :
لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا
உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல் மாயிதா :48)
மார்க்கத்தின் வழிமுறைகள் என்பதே இதன் விளக்கம் என்று இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறுகிறார்கள்.
இதனை ஒத்த ஒரு கருத்தையே முஜாஹித்,இக்ரிமா மற்றும் தப்ஸீர் துறை அறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
நபிமார்கள் ஒரே தந்தைக்கும் பல தாய்களுக்கும் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள் ஆவர். அவர்கள் அனைவரினதும் மார்க்கம் ஒன்றுதான் என்று நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைறா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹுல் புகாரி 3443)
( முஸ்லிம் 2365)
இந்த ஹதீஸிற்கான விளக்கம் யாதெனில், அல்லாஹ் அனுப்பிய எல்லா நபிமார்களுக்கும் அவன் கொடுத்தனுப்பிய மேலும், அவன் இறக்கியருளிய அனைத்து வேதங்களும் உள்ளடக்கியதாக இருந்த அடிப்படைக்கொள்கை "ஏகத்துவக் கொள்கை"என்ற ஒரே அம்சமாகவே இருந்தது. இதில் எல்லா நபிமார்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
ஆனால் மார்க்கத்தின் கிளை அம்சங்களான ஏவல் விலக்கல்கள் மற்றும் ஹலால் ஹராம் போன்ற விடயங்களில் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன.
ஏனெனில், இவர்கள் அனைவரும் ஒரே தந்தைக்கும் பல தாய்களுக்கும் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள் ஆவர்.
இந்த நபிமார்களில் ஒருவரது இறைத் தூதை ஒருவர் நிராகரித்தால், அவர் அனைத்து நபிமார்களின் இறைத்தூதுகளையும் நிராகரித்தவர் போலாவார்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ۨالْمُرْسَلِيْنَ
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
(அஷ் ஷுஅறா :105)
நூஹ் (அலை) அவர்களை அவரது சமூகத்தினர் புறக்கணித்த வேளையில், நூஹ் (அலை) அவர்கள் மாத்திரமே அவர்களுக்கு மத்தியில் நபியாக இருந்தார்கள். இருந்த போதும், அனைத்து நபிமார்களையும்
அவர்கள் புறக்கணித்து விட்டதாகவே அல்லாஹ் இங்கு கூறுகிறான்.
இரண்டாவது :
முஹம்மத், ஈஸா, மூஸா, இப்ராஹீம், நூஹ் (அலை) என்று பெயர் குறித்து கூறப்பட்ட நபிமார்களை அவ்வாறே ஈமான் கொள்ளல் வேண்டும்.
பெயர் கூறப்படாத நபிமார்களை பொறுத்தவகையில்,பொதுவாகவே அவர்கள் அனைவரையும் மொத்தமாக ஈமான் கொள்ளல் வேண்டும்.
இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِه لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ
(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை.
(அல்பகரா :285)
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَؕ
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்.
(அல் ஙாபிர :78)
முஹம்மத் (ஸல்)அவர்கள் இறுதி நபியாவார் அவருக்குப் பின்னர் எந்தவொரு நபியும் வருவதில்லை என்றும் நாம் நம்ப வேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல் அஹ்ஸாப் :40)
நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது அலி (றழி) அவர்களை மதீனாவிற்கான தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலி (றழி) அவர்கள் "என்னை இங்குள்ள சிறுவர்களுக்கும் பெண்களுக்குமா பொறுப்பாளராக ஆக்கி விட்டுச் செல்கிறீர்கள் ?"
என்று நபியவர்களைப் பார்த்து கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் பின்வருமாறு பதிலுரைத்தார்கள் :
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை தரிசிக்க சென்ற வேளை அவரின் பிரதிநிதியாக ஹாரூன் (அலை) அவர்களை விட்டுச் சென்றிருந்தார்கள். அவ்வாறானதொரு தரத்தில் நீங்களும் எனது பிரதிநிதியாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா ? என்று கூறினார்கள் என்பதாக ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(புகாரி :4416)
(முஸ்லிம் :2404)
வேறு நபிமார்களுக்கு வழங்கப்படாத மிக உன்னதமான தனித்துவப் பண்புகளின் மூலம் நபியவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான்.
அவற்றுச் சில வருமாறு :
01-
முன்னைய நபிமார்கள் அனைவரும் குறித்ததொரு சமூகத்திற்கு மாத்திரமே நபியாக அனுப்பப்பட்ட வேளையில், முஹம்பத் (ஸல்) அவர்கள் மனித இனம் மற்றும் ஜின் இனம் ஆகிய அனைவருக்குமான நபியாக அனுப்பப்பட்டமை.
02-
ஒரு மாத கால நடைதூரத்தூரத்திற்கு அப்பாலுள்ள எதிரிகளின் உள்ளங்களில் கூட நபியவர்கள் பற்றிய ஒரு வித அச்ச உணர்வை அல்லாஹ் ஏற்படுத்தி இருந்தமை.
03-
பூமியை அல்லாஹ் அவருக்கு சுத்தமானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கிக் கொடுத்தமை.
04-
முன்னைய சமூகங்களுக்கு ஹராமாக்கப்பட்டிருந்த யுத்தகள கொள்ளைப் பொருட்கள் (கனீமத்) நபியவர்களுக்கு ஹலாலாக்கப்பட்டமை.
05-
நரகம் செல்லவிருக்கும் தனது சமூகத்தினருக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்கான "அஷ்ஷபாஅதுல் உழ்மா" எனும் மிக உயரிய
வாய்ப்பு நபியவர்களுக்கு வழங்கப்படுகின்றமை.
இவை போன்ற இன்னும் பல தனிச்சிறப்புகள் இவருக்கு உண்டு.
மூன்றாவது :
நபிமார்கள் குறித்து அவர்கள் கூறிய நம்பகமான செய்திகளை உண்மையென நம்புதல்.
நான்காவது :
மனித குலம் அனைத்திற்கும் இறைத்தூதரான இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலை அமுல்படுத்தல்.
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
(அந் நிஸாஃ :65)
நபிமார்கள் குறித்த நம்பிக்கை பின்வருவன போன்ற சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் :
01-
அடியார்கள் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் அன்பினை புரிந்து கொள்ள முடியும்.
மனித அறிவின் மூலம் பெற முடியாத நேர்வழி இறைவழிகாட்டல் என்பவற்றை இறைத்தூதர்களை அனுப்பி வைத்து அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கி நேர்வழிகாட்டியதோடு அவனை எப்படி வணங்க வேண்டும் என்பதையும் அவர்கள் மூலம் தெளிவுபடுத்தவும் செய்தான்.
02-
இப்பெரும் அருளை வழங்கியமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வை பெற முடியும்.
03-
நபிமார்களை நேசித்தல், மதித்தல், அவர்களின் தகுதிக்குத்தக்கவாறு அவர்களை புகழுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
இவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வுக்கு வணங்கி வழிபடும் நிலையை இப்பூமியில் நிலை நிறுத்தியவர்கள்.
இறைத்தூதை மக்களுக்கு மத்தியில் போதித்து அவர்களை வழிப்படுத்தியவர்கள்.
இந்த வகையில் இவர்கள் மக்களால் நேசிக்கவும் புகழவும் மதிக்கவும் படுவர்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
பார்க்க :-
அஃலாமுஸ் ஸுன்னா அல் மன்ஷூரா 97- 102
ஷர்ஹு உஸீலிஸ் ஸலாஸா -அஷ்ஷெய்க் உதைமீன் ( றஹ்) 95-96