Table Of Contents
அல்ஹம்துலில்லாஹ்
மலக்குமார்களை விசுவாசிப்பதானது ஈமானின் துண்களில் ஒன்றாகும். அவையின்றி ஈமான் இல்லை. அவற்றில் ஏதேனும் ஒன்றை யார் விசுவாசிக்கவில்லையோ அவர் பூரணமான விசுவாசியாக முடியாது.
அந்த ஆறு அம்சங்களாவன:
1.
வானவர்கள் என்போர் யார்?
வானவர்கள் என்போர் நாம் அறிந்துகொள்ள முடியாத மறைவான உலகைச் சேர்ந்தவர்கள் ஆவர். வானவர்கள் தொடர்பாக இறைவன் தன் திருமறை மற்றும் தனது தூதரின் வார்த்தை என்பவற்றின் மூலம் எமக்கு பல விடயங்களை அறிவித்துள்ளான்.
அவற்றில் உள்ள சரியான தகவல் மற்றும் நிரூபிக்கப்பட்ட செய்திகளின் ஒரு பகுதி கீழே தரப்படுகின்றன.
இந்த விடயத்தின் மகிமையையும் அவர்களைப் படைத்தவனின் மகத்துவத்தையும் அவர்கள் பற்றி தகவல்களை வழங்கிய இம்மார்க்கத்தின் பெறுமதியையும் கேள்வி கேட்ட உங்களால் உணர்ந்துகொள்ளலாம்.
வானவர்கள் எதிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர்?
வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்களாவர். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். வானவர்கள் ஒளியினாலும் ஜின்கள் நெருப்பினாலும் ஆதம் உங்களுக்கு விளக்கப்பட்டவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டுள்ளார்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:முஸ்லிம் 2996
வானவர்கள் எப்பொழுது படைக்கப்பட்டார்கள்?
வானவர்கள் படைக்கப்பட்ட காலம் தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இன்மையால் படைக்கப்பட்ட காலம் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் நம்மிடம் இல்லை .எனினும் குர்ஆனின் ஆதாரம் பிரகாரம் அவர்கள் மனித இனம் படைக்கப்பட முன்னர் படைக்கப்பட்டனர் என்பது திட்டவட்டமான செய்தியாகும்.
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியதை நினைவகூறுங்கள். (ஸூரா பகரா:30)
தான் மனித இனத்தை படைக்க இருப்பதாக வானவர்களிடத்தில் இறைவன் தெரிவித்ததாக கூறப்படுகின்றமையானது மனித இனத்திற்கு முன்னரே அவர்கள் படைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு சான்றாகும்.
வானவர்களின் தோற்ற அமைப்புகள்
நரகத்திற்கு பொறுப்பான வானவர்கள் தொடர்பாக இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.
விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக நெருப்பைவிட்டும்) காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும், அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர், அல்லாஹ்விற்கு - அவன் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள், (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள். (ஸூரா தஹ்ரீம்:6)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகளை உடையவராக கண்டார்கள். அதில் ஒவ்வொரு இறக்கையும் அடிவானத்தை மறைக்குமளவு இருந்தது. அவரது இறக்கைகளிலிருந்து பல்வேறு நிறங்களில் அல்லாஹ் மாத்திரமே அறிந்தளவு முத்து, மாணிக்கங்கள் விழுந்து கொண்டிருந்தன. ஆதாரம்:அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை வர்ணிக்கும்போது கூறுகிறார்கள்: “அவரை நான் வானம் மற்றும் பூமிக்கிடையிலான இடத்தை தனது பெருந்தோற்றத்தால் மூடியவராக வானிலிருந்து இறங்கக் கண்டேன்.”
வானவர்களின் பண்புகள்
1:அவர்களுக்கு இறக்கைகள் உண்டு .
வானங்களையும் பூமியையும் படைத்தவனும், வானவர்களைத் தூது கொண்டு செல்பவர்களாக நியமித்தவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அவ்வானவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களுக்கு இரண்டிரண்டு, மும்மூன்று, நன்நான்கு இறக்கைகள் உள்ளன. அவன் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்பில் தான் நாடுவதை அதிகப்படுத்துகின்றான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். (ஸூரா பாதிர்:1)
2:வானவர்களின் அழகு.
இறைவன் ஜிப்ரீல் (அலை)அவர்களை வர்ணிக்கும்போது "அவருக்கு (நபியவர்களுக்கு) மிக பலமுடையவர் கற்பித்தார்.அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார். (ஸூரா அந்நஜ்ம்:5;6)
இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் ذو مرة(தூ மிர்ரா) என்பது அழகிய தோற்றமுடையவர் என்றும் கத்தா (ரழி)அவர்கள் மிக உயர்ந்த தோற்றமுடையவர் என்பதைக் குறிக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.
இன்னும் மனிதர்கள் அனைவரிடத்திலும் வானவர்கள் என்போர் மிக அழகியவர்கள் என்ற எண்ணமே காணப்படுகிறது. எனவேதான் மனிதர்களில் மிக அழகானவரான யூசுப் (அலை) அவர்களை வானவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.
யூசுப் (அலை) அவர்களைக் கண்ட பெண்களின் நிலைப்பாட்டை இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
(அப்பெண்களாகிய) அவர்கள் அவரைப் பார்த்த பொழுது (அவருடைய அழகில் மயங்கி) அவரை மிக்க மேன்மையாகக் கண்டு, தங்கள் கை (விரல்)களை அறுத்துக் கொண்டனர், மேலும் “அல்லாஹ் பரிசுத்தமானவன், இவர் மனிதரல்ல!! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கே தவிர (வேறு) இல்லை” என்று கூறினார்கள்.
(யூசுப்:31)
வானவர்கள் சில சிறப்புத்தகுதிகளில் ஏற்றத்தாழ்வுடையோராக இருப்பதை போன்றே அளவிலும் தோற்றத்திலும் வெவ்வேறு அமைப்புகளில் காணப்படுவர்.
அவர்களில் மிக சிறந்தவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டோராவர்.
முத் இப்னு ரூபா இப்னு ராபின் அஸ்ஸுரகீ தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள். (அவரது தந்தை பத்து போரில் கலந்து கொண்டவராவார்)
நபி (ஸல்)அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து உங்களில் பத்ரில் கலந்து கொண்டோர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என வினவிய போது அவர்கள் முஸ்லிம்களால் மிக சிறந்தவர்கள் என்பதாக நபியவர்கள் விடையளித்தார்கள் அதற்கு ஜிப்ரீல் (அலை) அவ்வாறே வானவர்களிலும் பத்ரில் கலந்து கொண்டவர்கள் மிக சிறந்தோராவர் என கூறினார்கள்.
3:வானவர்கள் உண்ணவோ பருகவோ மாட்டார்கள்.
இறைவனின் தோழர் என கூறப்படும் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும் அவரை சந்திக்க விருந்தினர்களாக வந்த வானவர்களுக்கும் இடையே நடைபெற்ற சம்பவமே அதற்கு ஆதாரமாகும்
"எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார். அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் அவர்கள் அதைப் புசிக்க மாட்டீர்களா எனக் கூறினார்.
(அவர்கள் அதை புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். (ஸூரா தாரியாத் 26,27,28)
11:70. அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்ராஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
(ஸூரா ஹூத்:70)
4:அல்லாஹ்வை வாங்குவதிலும் நினைவு கூர்வதிலும் அவர்கள் ஒரு போதும் சடைவடையமாட்டார்கள்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
அவர்கள் இரவிலும், பகலிலும் துதி செய்கின்றனர், (ஆனால் அதில்) அவர்கள் தளர்ச்சியடையமாட்டார்கள். ஸூரா அல்அன்பியா:20
நபியே!) பின்னும், இவர்கள் பெருமையடித்துக் (கொண்டு அல்லாஹ்வை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், அப்போது உமதிரட்சகனிடத்தில் உள்ளவர் (களாகிய மலக்கு)கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதிசெய்து (புகழ்ந்து) கொண்டேயிருக்கின்றனர், அவர்கள் (அதில்) சோர்வடையவும் மாட்டார்கள். (ஸூரா புஸ்ஸிலத் :38)
*வானவர்களின் எண்ணிக்கை
வானவர்கள் அதிக எண்ணிக்கையிலான படைப்பினர் ஆவர். அவர்களின் எண்ணிக்கையை இறைவனைத் தவிர்த்து வேறு யாரும் அறிய மாட்டார்கள். நபியவர்கள் தான் மிஃராஜ் (விண்ணுலகப் பயணம் சென்ற போது ஏழாவது வானில் கண்ட பைதுல் மஃமூரைப் பற்றி வர்ணிக்கும்போது பின்வருமாறு கூறினார்கள்.
எனக்கு பைத்துல் மஃமூர் காண்பிக்கப்பட்டது. அது பற்றி நான் ஜிப்ரீலிடம் வினவிய போது அவர்கள் கூறினார்கள் இது பைத்துல் மஃமூர் ஆகும். இதில் தினமும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றனர். இதிலிருந்து அவர்கள் வெளியேறினால் மீண்டும் அவர்கள் அங்கு வர முடியாது. ஆதாரம்:புகாரி
நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும். ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 2842)
*அவர்களது பெயர்கள்
வானவர்களுக்கென பெயர்கள் உண்டெனினும் அவற்றில் சிலதையே நாம் அறிந்துள்ளோம். அப்பெயர்களில் ஆதாரபூர்வமாக குறிப்பிடப்படும் பெயர்களை நாம் விரிவாகவும் பெயர்கள் குறிப்பிடப்படாத பட்சத்தில் சுருக்கமாக ஈமான் கொள்வது அடியான் வானவர்களை விசுவாசித்தல் என்ற பொதுக்கருத்தில் உள்ளடங்கிவிடும்.
வானவர்களின் பெயர்கள்
1-ஜிப்ரீல்,மீகாஈல்
உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவராக இருக்கிறாரோ (அத்தகைய) நிராகரிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ் பகைவனாக இருக்கிறான். பகரா:98
2-இஸ்ராபீல்
அபூஸலமா இப்னு அப்துல் ரஹ்மான் இப்னு அவுப் (ரழி) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் நபியவர்கள் தனது இரவுத் தொழுகையை எதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என வினவிய போது நபியவர்கள்
இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (இறைவா) கருத்து வேறுபாடுடைய விசயங்களில் சத்தியத்தின் பக்கம் உன் நாட்டப்படி எனக்கு வழிகாட்டுவாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்! என்ற இந்த துஆவைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என ஆஇஷா(ரழி)அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 270)
3-மாலிக் (அலை)
அவர் நகரத்தின் காவலாளியாவார். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
நரகத்தின் பொறுப்பாளரிடம்) “மாலிக்கே! உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்” என்று சப்தமிடுவார்கள், அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில், மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். (ஸுக்ருப்:77)
5/6-முன்கர்,நகீர்
உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள்.
அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.
அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ), நூல்: திர்மிதி
7/8-ஹாரூத்,மாரூத்
இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்)…. பகரா 102
வானவர்களில் பெயர் கூறப்படாத இன்னும் பலர் உண்டு.
"அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. முத்தஸ்ஸிர்:31
*வானவர்களின் ஆற்றல்கள்*
வானவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள பல மகத்தான ஆற்றல்கள் உண்டு.
1-உருமாற்றம் அடையும் ஆற்றல்.
இறைவன் வானவர்களுக்கு தங்களது தோற்றத்திலிருந்து வேறு தோற்றத்திற்கு மாறக்கூடிய வல்லமையை கொடுத்துள்ளான். இறைவன் ஜிப்ரீல் அலை) அவர்களை மர்யம் (அலை) அவர்களிடம் மனித உருவில் அனுப்பி வைத்தான்.
(அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். (மர்யம்:17)
இன்னும் இப்றாஹீம் (அலை) அவர்களிடத்தில் வந்த வானவர்கள் தாம் வானவர்கள்தான் என்பதை கூறும் வரை அவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. அவ்வாறே லூத் (அலை) அவர்களிடத்தில் அழகிய முகங்களை உடைய இளைஞர்களாக வானவர்கள் வந்த போது அவர்களும் அதை அறிந்து கொள்ளவில்லை. இன்னும் ஜிப்ரீல் அலை) அவர்கள் நபியவர்களிடத்தில் பல்வேறு தோற்றங்களில் வருகை தந்துள்ளார். ஒரு முறை திஹ்யத்துல் கல்பி எனும் அழகிய தோற்றமுடைய தோழர் ஒருவரின் உருவமைப்பிலும் மற்றொரு முறை நாடோடி அரபி ஒருவரின் தோற்றத்திலும் வந்துள்ளார். அவ்வாறு மனித தோற்றத்தில் ஜிப்ரீல் அலை)அவர்கள் வருகை தந்த போது நபித்தோழர்களும் அவர்களை கண்ணுற்றார்கள்.
உமர் (ரலி) கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும் இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார். ஸஹீஹ் முஸ்லிம் 08.
இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் வானவர்கள் மனித உருவில் வருகை தரக் கூடியவர்கள் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.
வானவர்களின் வேகம்
இன்று மனிதர்கள் ஒளியை அதி வேகமாக பயணிக்க கூடியது என கூறுகிறார்கள் .ஆனால் அதை விட வேகமாக வானவர்கள் பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எந்தளவிற்கெனில் நபியவர்களிடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கின்ற நபர் அக் கேள்வியை கேட்டு முடிக்க முன்னர் அதற்கான விடையுடன் இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) நபியவர்களிடத்தில் வந்து சேர்ந்திருப்பார்.
வானவர்களின் பொறுப்புகள்
1:இறைவனிடமிருந்து அவனது தூதர்களுக்கு வஹியை கொண்டு வருவதற்க்கு பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஆவார்.
"(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி" என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் இறக்கிவைத்தார். (பகரா:97)
ஆச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் (ஒருவராக) நீர் ஆவதற்காக உமது இதயத்தின் மீது (கூடுதல் குறைவின்றி இதைக் கொண்டு இறங்கினார். (அஷ்ஷுஅராஉ:194)
2:மழைக்கு பொறுப்பான வானவர் மீகாஈல்(அலை) ஆவார். அவருக்கு இறைவன் கட்டளையிடப்பட்டவற்றை செய்து முடிப்பதற்கு உதவியாளர்களும் உண்டு. இன்னும் அவர் காற்று,மேகம் என்பவற்றையும் நிர்வகிப்பவர் ஆவார்.
3:ஸூர் ஊதுவதற்கு பொறுப்பான வானவர் இஸ்ராபீல் (அலை) ஆவார்.
ஸூர் மறுமை நாளின் போது இஸ்ராபீல் அலை அவர்கள் ஊதும் புல்லாங்குழல் போன்ற ஒன்றாகும்.
4: உயிர்களைக் கைப்பற்றுவதற்கு பொறுப்பானவர்கள் மலக்குல் மௌதும் அவரது உதவியாளர்களும் ஆவர்.
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் "மலக்குல் மவ்த்து" (என்ற மலக்குத்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்." 32:11.
எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸிலும் அவரது பெயர் இஸ்ராயீல் என்பதாக குறிப்பிடப்படவில்லை.
5: மனிதன் உள்ளூரில் இருக்கும் போதும் அவனது பயணங்களிலும், விழிப்பு மற்றும் உறக்கத்திலும், அவனுடைய எல்லா நிலைகளிலும் பாதுகாப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.) ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள்...... (ஸூரா அர்ரஃது:10,11)
6: அடியானது நன்மை மற்றும் தீமையான செயல்களை கண்காணிப்பதற்காகவும் அவற்றை பதிவு செய்வதற்காகவும் இறைவனால் சில வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்தான் அடியானது செயல்களை எழுதும் சங்கையான எழுத்தாளர்கள் பயப்படுகின்றனர்.இறைவன் இவர்கள் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறான்.
அன்ஆம்:16
ஸுக்ருப்:80
காப் 17-18
இன்பிதார் 11
7: மண்ணறை விசாரணைக்கு பொறுப்பான வானவர்கள் முன்கர் மற்றும் நகீர் ஆவர்.
உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள்...... என்று தொடர்ந்து வரக் கூடிய முன்னர் கூறப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.
8:சுவனத்திற்கு பொறுப்பான வானவர்கள்.
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்). ஸுமர் :73
9:நரகத்திற்கு பொறுப்பான வானவர்கள்.
அவர்கள் ஸபானியாக்கள் எனப்படுவர்.அவர்களில் தலைமை பொறுப்பில் 19 பேர் இருப்பர். அவர்களில் முதன்மையானவர் மாலிக் ஆவார்.
39:71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. ஸுமர்: 71
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். அலக்:17/18
“ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?, அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும். அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும். முத்தஸ்ஸிர் 27-31
(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) "மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)" என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார். ஸுக்ருப் 27
10:கருவறையில் கருவிற்கு பொறுப்பான வானவர்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்)என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) புஹாரி : 3208 முஸ்லிம் 2643
11: அர்ஷை சுமப்பதற்குப் பொறுப்பான வானவர்கள்.
அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! காغபிர்:7
12. உலகில் இறைவனை நினைவு கூர்வதில் ஈடுபடுபவர்களை தேடி சுற்றி வரும் வானவர்கள்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனவான் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள். இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான். புஹாரி :6408 அபூ ஹுரைரா (ரலி).
12: மழைக்குப் பொறுப்பான வானவர்கள்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். 35 அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். 36 ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை.37 எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கன வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து என் மீது சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன். புகாரி 3231
13: பைத்துல் மஃமூரைத் தரிசிப்பவர்கள்
எனக்கு பைத்துல் மஃமூர் காண்பிக்கப்பட்டது. அது பற்றி நான் ஜிப்ரீலிடம் வினவிய போது அவர்கள் கூறினார்கள் இது பைத்துல் மஃமூர் ஆகும். இதில் தினமும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றனர். இதிலிருந்து அவர்கள் வெளியேறினால் மீண்டும் அவர்கள் அங்கு வர முடியாது. ஆதாரம்:புகாரி
14: களைப்படையாமல் அணிஅணியாக நிற்போர், அமராமல் நிலையில் நின்றுகொண்டிருப்போர் நிமிராமல் ருகூவிலும் சுஜூதிலுமே இருந்தவர்களாக தொடர்ச்சியாக வணக்கத்தில் ஈடுபடும் வானவர்கள்.
நபியவர்கள் கூறியதாக அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நீங்கள் கண்டிராதவற்றையெல்லாம் நான் கண்டுள்ளேன். நீங்கள் செவிமடுக்காதவற்றையெல்லாம் நான் செவிமடுத்துள்ளேன். வானம் சப்தமிட்டது. அவ்வாறு சப்தமிடுவது அதற்குத் தகுதியுள்ளது. வானில் ஒவ்வொரு நான்கு விரல் இடைவெளிகளிலும் ஒரு வானவர் தனது நெற்றியை சுஜூதில் வைத்தவர்களை இருப்பர். நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்தீர்களானால் குறைவாகவே சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள். படுக்கைகளில் பெண்களை அனுபவித்துக் கொண்டிருக்கமாட்டீர்கள். இறைவனிடம் மன்றாடியவர்களாக வீதிகளுக்கு வந்துவிடுவீர்கள். திர்மிதி 2312
இது சங்கையான வானவர்கள் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்பாகும். அவர்களை விசுவாசம் கொண்டவர்களாகவும் நேசிப்பவர்களாகவும் இறைவன் நம்மை ஆக்கியருள்வானாக.