உண்மையில் பெயர்கள் விவகாரம் என்பது மனித வாழ்வில் மிக முக்கிய விவகாரங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் கிடையாது. ஏனெனில் பெயர்தான் குறித்த நபரை அடையாளப்படுத்தும் அடையாளமாகும். தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அத்தியாவசியமனதாகும். அது குறித்த நபருக்கு அலங்காரமாகும். அவரைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அழைக்கப்படக்கூடிய அடையாளச் சின்னமாகும். அவர் இம்மார்க்கத்தை சேர்ந்தவர் என்பதையும் அது உணர்த்துகின்றது. மனித இயல்புகளில் அதற்கான முறைகள், அர்த்தங்கள் நிறைய உள்ளன. அது அவர்களின் ஆடை போன்றது. சிறிதாகி விட்டாலும் அசிங்கமாகிவிடும்! நீண்டுவிட்டாலும் அசிங்கமாகிவிடும்!
எந்தப் பெயர்களும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவை. ஆனால் பெயர்களைத் தெரிவு செய்யும்போது தவிர்ந்து கொள்ள வேண்டிய சில மார்க்க ரீதியான தடைகள் உள்ளன. அவையாவன,
1. அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிமையாவதை உணர்த்தும் பெயர்கள். அது ஒரு நபியாகவோ, அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்காகவோ இருக்கலாம். எந்த விதத்திலும் அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு அடிமையாவதைக் காட்டும் பெயர்களை சூட்ட முடியாது. அப்துல் ரஸுல், அப்துல் நபி என்பவை அவ்வாறான பெயர்களுக்கு சில உதாரணங்களாகும். இவை போன்றவற்றில் அல்லாஹ் அல்லாதவருக்கு தாழ்ந்து, அடிமையாவது உணர்த்தப்படுகின்றது. இவ்வாறான பெயர்களை வைத்துக் கொண்டவர்கள் அல்லது ஏனையோருக்கு சூட்டியவர்கள் அவற்றை மாற்றிவிடுவது கட்டாயமாகும். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஜாஹிலிய்யாக் காலத்தில் எனது பெயர் அப்து அம்ர் (இன்னுமொரு அறிவிப்பில் அப்துல் கஃபா) என்று காணப்பட்டது. நான் இஸ்லாத்தை ஏற்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டினார்கள்.”
2. அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்துவமான பெயர்களைக் கொண்டு பெயர் சூட்டல். உதாரணமாக الخالق (படைப்பாளன்) الرازق (வாழ்வாதாரமளிப்பவன்) الرب (ரட்சகன்) الرحمن (அளவற்ற அருளாளன்) போன்ற அல்லாஹ்வுக்கு மாத்திரமான பெயர்களைச் சூட்டல். அல்லது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பொருத்தமற்ற பெயர்களை வைத்தல். உதாரணமாக, “மலிக்குள் முலூக்” (அரசர்களுக்கெல்லாம் அரசன்) “காஹிர்” (அடக்கி ஆழ்பவன்) போன்ற பெயர்களை வைத்தல். இவ்வாறான பெயர்களை வைப்பது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் மாற்றிவிடுவது கட்டாயமாகும். “(அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?” (அல்குர்ஆன்)
3. நிராகரிப்பாளர்களுக்கு மாத்திரம் தனித்துவமான, ஏனையவர்களால் பயன்படுத்தப்படாத பெயர்களை வைத்தல். உதாரணமாக அப்துல் மஸீஹ் (ஈஸாவின் அடிமை) புத்ருஸ், ஜுர்ஜுஸ் போன்ற நிராகரிப்பு மதங்களை உணர்த்தும் பெயர்களை வைத்தல்.
4. சிலைகள் மற்றும் அல்லாஹ் அன்றியாக வணங்கப்படும் கடவுள்களின் பெயர்களை வைத்தல். உதாரணமாக, “சைத்தான்” போன்ற பெயர்களை வைத்தல்.
மேற்கூறிய எந்த விதத்திலும் பெயர் சூட்டுவது கூடாது மற்றும் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பெயர்களை யாராவது தனக்குச் சூட்டிக் கொண்டால் அல்லது வேறொருவருக்கு சூட்டிவிட்டால் மாற்றுவது கட்டாயமாகும்.
5. மனிதர்கள் வெறுக்கும் அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைப்பது வெறுக்கத்தக்கது. ஏனெனில், அவை ஒன்றில் அருவருப்பான அர்த்தமாகவோ அல்லது ஏளனத்தைத் தரும் அர்த்தமாகவோ இருக்கும். அதேபோன்று, அழகான பெயர்களை வைத்தல் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழிமுறைக்கும் அது முரணானதாகும். உதாரணமாக “ஹர்ப்” (யுத்தம்), ரஷாஷ், ஹியாம் (ஒட்டகத்துக்கு ஏற்படும் ஒரு விதமான நோயின் பெயர்) போன்ற அழகற்ற அருவருப்பான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ள பெயர்கள்.
6. இச்சையை தூண்டும் மெல்லினமான பெயர்களை வைப்பதும் வெறுக்கப்படும். பெண் பிள்ளைகளின் பெயர்களில் இது அதிகம் உள்ளது. உதாரணமாக, ஆபாசமான, இச்சையைத் தூண்டும் அர்த்தங்களை உள்ளடக்கிய பெயர்களைப் போல.
7. பாடகர்கள், பாடகிகள், நடிகர்கள், நடிகைகள் போன்ற கெட்டவர்களின் பெயர்களை நாடி வைப்பது வெறுக்கத்தக்கதாகும். அவர்களது பெயர்கள் அழகானவையாக இருந்தால் அப்பெயர்களை சூட்டலாம். ஆனால் அது அவற்றின் அழகான அர்த்தங்களுக்காகவே அன்றி அவர்களுக்கு ஒப்பாக்கும் நோக்கிலோ பின்பற்றும் நோக்கிலோ இருக்கக் கூடாது.
8. “ஸாரிக்” (திருடன்) “ழாலிம்” (அநியாயக்காரன்) போன்ற பாவமான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ள பெயர்களை வைப்பது, அல்லது பிர்அவ்ன், ஹாமான், காரூன்” போன்ற பாவிகள் மற்றும் கொடுங்கோளர்களின் பெயர்களை வைப்பது என்பவையும் வெறுக்கப்படும்
9.“ஹிமார்” (கழுதை), “கல்பு” (நாய்) “கிர்து” (குரங்கு) போன்ற இழிவான குணங்களால் அறியப்பட்ட மிருகங்களின் பெயர்களை வைப்பதும் வெறுக்கப்படும்.
10. “தீன்” “இஸ்லாம்” ஆகியவற்றுடன் இணைத்து வைக்கப்படும் பெயர்கள் வெறுக்கப்படும். உதாரணமாக, நூருத் தீன், சம்சுதீன், நூருல் இஸ்லாம், சம்ஸுல் இஸ்லாம் போன்ற பெயர்கள். இப்பெயர்கள் மூலம் குறித்த நபருக்கு அவரது தகுதியை விட அதிக கௌரவம் வழங்கப்படுவது அதன் காரணமாகும். எமது முன் சென்ற அறிஞர்கள் தமக்கு இவ்வாறான பட்டப் பெயர்கள் சூட்டப்படுவதை வெறுத்தார்கள். இமாம் நவவி அவர்கள் தமக்கு முஹ்யித் தீன் எனும் பட்டப்பெயர் சூட்டப்படுவதை வெறுத்தார்கள். இப்னு தைமிய்யா அவர்கள் தமக்கு தகிய்யுத்தீன் எனப்படுவதை வெறுத்தார்கள். தன் குடும்பத்தினர் அவ்வாறு தமக்கு வைத்ததாகவும் அது அவ்வாறே பிரபல்யமாகிவிட்டதாகவும் அவர்கள் கூறுவார்கள்.
11. அப்துல்லா என்ற பெயரைத் தவிர, ஹஸ்புல்லாஹ், ரஹ்மத்துல்லாஹ் போன்று அல்லாஹ் என்று சொல்லுடன் இணைத்துக் கூறப்படும் பெயர்கள் வெறுக்கப்படும். அவ்வாறே ரசூல் என்ற வார்த்தையோடு இணைத்துக் கூறப்படும் பெயர்களும் வெறுக்கப்படும்.
12. மலக்குமார்களின் பெயர்களை, மற்றும் “தாஹா, யாஸீன்” போன்ற அல்குர்ஆனின் சூராக்களின் பெயர்களை வைப்பது வெறுக்கப்படும். அவை தனித்தனி எழுத்துக்களால் அமைந்தவையே தவிர நபிமார்களின் பெயர்கள் அல்ல. (பார்க்க: இமாம் இப்னுல் கையிம் அவர்களின் துஹ்பதுல் மவ்லூத் எனும் நூல்)
இந்த வெறுக்கப்பட்ட பெயர்களை வைப்பது வெறுக்கப்படும். ஆனால் யாருக்காவது அவரது பெற்றோர்கள் இது போன்ற பெயர்களை வைத்து, பின்னர் அம்மனிதர் வளர்ந்து அதை மாற்றுவது சிரமமாக இருந்தால், அப்போது மாற்றுவது கட்டாயமாகமாட்டாது.
பெயர்கள் நான்கு படித்தரங்களில் உள்ளன:
1. அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் ஆகிய பெயர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள் அப்துல்லாஹ்வும் அப்துர் ரஹ்மானும் ஆகும்”
2. அல்லாஹ்விடம் அடிமையாதல் எனும் அர்த்தத்தைத் தரும் ஏனைய பெயர்கள். உதாரணமாக, “அப்துல் அஸீஸ், அப்துல் ரஹீம், அப்துல் மலிக், அப்துல் ஸலாம் போன்ற பெயர்கள்.
3. நபிமார்கள் மற்றும் இறைத்தூதர்களின் பெயர்கள். சந்தேகமின்றி, அவர்களில் சிறந்தவர் மற்றும் அவர்களின் தலைவர் முஹம்மத் (ஸல்) ஆகும். அஹ்மத் என்பதும் அவரது ஒரு பெயராகும். பின்பு, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய “உலுல் அஸ்ம்” தூதர்களின் பெயர்களும், பின்பு ஏனைய நபிமார்களின் பெயர்களும் வரும்.
4. அல்லாஹ்வின் நல்லடியார்களின் பெயர்கள். அவர்களில் மிக முக்கியமாக நபித்தோழர்களின் பெயர்கள். அவர்களைப் பின்பற்றும் நோக்கிலும், அந்தஸ்துக்களை உயர்த்திக் கொள்வதை எதிர்பார்த்தும் அவர்களது அழகான பெயர்களை வைப்பது விரும்பத்தக்கது.
5. அழகான, சரியான அர்த்தமுள்ள அனைத்து நல்ல பெயர்களும்.
பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது சில விடயங்களைக் கருத்தில் கொள்வது அவசியம்.
1. இப்பெயர்தான், பிள்ளையுடன் வாழ்நாள் முழுதும் இருக்கப் போகின்றது என்பதை அறிந்திருத்தல். எனவே சில போது அப்பெயர் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் தன் தந்தையையோ அல்லது தாயையோ அல்லது இப்பெயரை தனக்கு வைத்தவரையோ அவர் வெறுக்க வாய்ப்புள்ளது.
2. பல விதங்களில் அதைப் பார்ப்பது கட்டாயமாகும். குறித்த அப்பெயரைப் பார்ப்பது, அப்பெயர் வைக்கப்படுபவர் ஒரு சிறுவனாக இருந்து பின்னர் வாலிபனாக பின்னர் வயோதிபராக, தந்தையாக இருக்கப் போவதை கருத்தில் கொள்ளல் தனது புனைப்பெயரில் இணைத்துக் கொள்ளப் பொருத்தமானதா? என்பதைப் பார்த்தல், தந்தையின் பெயருடன் இணைத்து கூற பொருத்தமாக உள்ளதா? என்பதையும் பார்த்தல்.
3. பெயர் வைத்தல் என்பது தந்தையின் உரிமையாகும். ஏனெனில் அவருடனே குழந்தை இணைக்கப்படப் போகின்றது. ஆனாலும், நல்ல பெயர்களைத் தெரிவு செய்வதில் தாயையும் இணைத்து, நல்லதாக இருந்தால் அவளது கருத்துக்களையும் எடுத்து அவளையும் திருப்தியடையச் செய்வது விரும்பத்தக்கதாகும்.
4. பிள்ளையைத் தந்தையுடன் இணைத்துக் கூறுவது கட்டாயமாகும். அவர் மரணித்தவராகவோ அல்லது விவாகரத்து செய்தவராகவோ இருக்கலாம். அவர் பிள்ளையை வளர்க்காவிட்டாலும் அல்லது மொத்தமாகவே காணாவிட்டாலும் சரியே! பொதுவாக பிள்ளையைத் தந்தை அல்லாதவருடன் இணைத்துக் கூறுவது ஹராமாகும். ஒரு சந்தர்ப்பத்தை தவிர, அதாவது ஒரு பிள்ளை விபச்சாரத்தினால் பிறந்து வந்தவனாக இருந்தால் - அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் - அப்போது அக்குழந்தை தாயோடு இணைத்து கூறப்படுமே தவிர, தந்தையோடு அல்ல.
அல்லாஹ்வே அறிந்தவன்.