ஆம், நீங்கள் கூறியது சரிதான் இஸ்லாம் எமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தந்துள்ளது இஸ்லாம் மார்க்கம் வாழ்வு,மரணம் போன்ற எல்லா விடயங்களிலும் உள்ள நலவுகளை எமக்குத் தந்துள்ளது. ஏனெனில் இது அல்லாஹ்வுடைய மார்க்கமாகும்.
உடலுறவு என்பது வாழ்வில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மார்க்கம் அது பற்றிய தெளிவுகளை தந்து, அதற்கான சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்குகளையும் எமக்கு விதித்துள்ளது.
வெறுமனே உடலுறவை மிருகங்களைப் போன்று தனது இச்சைகளை பூர்த்தி செய்யும் ஒரு செயலாக மாத்திரம் பார்க்காமல் நல்ல எண்ணங்களுடன் அச்சந்தர்ப்பத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் மற்றும் துஆக்கள் போன்ற பல அம்சங்களினூடாக எமக்கு வழிகாட்டுகின்றது. அதன் மூலம் ஒரு முஸ்லிம் நன்மை பெறக்கூடிய வகையில் இறைவனை வணங்கி வழிபடுதல் என்ற இடத்தையும் அடைய முடிகிறது.
இது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிலும் பல தெளிவூட்டல்கள் இருக்கின்றன.
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் ஸாதுல் மஆத் என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் "உடலுறவைப் பொறுத்தவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய வழிமுறையே மிகச் சிறந்த பரிபூரணமான வழிமுறையாகும். அவ்வழிமுறை மூலம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு தனது இச்சை சந்தோசம் போன்ற உளரீதியான சந்தோசங்களும் பூர்த்தியாகின்றன. உடலுறவின் நோக்கங்களும் பூர்த்தியாகின்றன.
அந்த வகையில் உடலுறவில் ஈடுபடுதலில் மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1- சந்ததிகளை பாதுகாத்தல், அல்லாஹ் இவ்வுலகில் நிர்ணயம் செய்து வைத்திருக்கக்கூடிய சந்ததிகளின் எண்ணிக்கை பூர்த்தியாகும் விதத்தில் உடலுறவு நோக்கப்படுகிறது.
2- தடுத்து வைப்பதால் முழு உடலுக்கும் தீங்கிழைக்கக் கூடிய நீரை வெளியாக்குவதற்கான வழியாக இது அமைகிறது.
3- ஆசை மற்றும் இச்சையை பூர்த்தி செய்வதோடு வழங்கப்பட்ட நிஃமத் மூலம் இன்பத்தை அனுபவித்தல்.
குறித்த இந்த விடயம் மாத்திரம் சுவனத்திலும் அடைந்து கொள்ளலாம். அங்கே சந்ததிகள் உருவாக்கம் , மனியை தடுத்து வைப்பதன் மூலமாக ஏற்படும் விளைவு ஒன்றும் இருக்காது.
துறை சார்ந்த வைத்தியர்கள், உடலுறவு வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். ( நூல் : திப்புன்நபவி : 249 பக்கம்)
இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது திப்புன் நபவி என்ற நூலில் (பக்கம் 251 ) கூறினார்கள் "
உடலுறவு வைப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் பின்வருமாறு;
பார்வையை ஹராமான விடயங்களை விட்டும் தவிர்ந்து தாழ்த்திக்கொள்ளல், தன்னை முழுமையாக தடுத்து கட்டுப்படுத்துதல், ஹராமான விடயங்களை விட்டு தவிர்ந்து ஒழுக்கத்துடன் இருத்தல். அத்தோடு இம்மை மறுமைக்கு பயனுள்ளதாக அமையும். இது பெண்ணுக்கும் பொருந்தும். அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் விரும்பி கடைப்பிடிக்கக்கூடியவர்ளாக இருந்தார்கள். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( உங்களது உலகில் எனக்கு மிகவும் பிடித்தது பெண்கள், நறுமணம்) நூல் : முஸ்னத் அஹ்மத் (3/128) ஸுனன் நஸாஇ (7/61) இந்த செய்தியை இமாம் ஹாகிம் வலுவானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( வாலிபர்களே! உங்களில் யாராயினும் சக்தி பெற்றிருந்தால் திருமணம் செய்து கொள்ளட்டும். அதுவே பார்வையை தாழ்த்தும் மறைவிடத்தை பாதுகாக்கும். அதற்கு தகுதி இல்லையெனில் நோன்பு பிடிக்கட்டும், அது அவருக்கு கேடயமாக (பாதுகாப்பாக) அமையும்.
நூல்: புகாரி (9/92), முஸ்லிம் (1400)
உடலுறவின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒழுங்குகள்
1- அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தை ஏற்படுத்துதல்.
அதாவது உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் தன்னையும் தன் குடும்பத்தையும் ஹராமான விடயங்களிலிருந்து பாதுகாக்கின்றேன் என்றும் இஸ்லாமிய சமூகத்தின் சந்ததிகளை அதிகரிக்கச் செய்கின்றேன் என்றும் எண்ணம் கொள்ளல். அதன் மூலமாக சமுதாயத்தின் வகிபங்கு உயர்வு பெறும். சந்ததி அதிகரிப்பு என்பது கண்ணியமான விடயம் தான்.
அத்தோடு உடலுறவின் மூலம் இன்பங்கள் கிடைத்தாலும் அதில் ஈடுபடுவதற்கும் கூலி வழங்கப்படும் என்பதை அறிந்திருத்தல் வேண்டும்.
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நீங்கள் உங்களது மனைவிமார்களுடன் உடலுறவில் ஈடுபடுவதும் தர்மமே (நன்மையே) அதற்கு நபித்தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாரேனும் இச்சைகளை நிவர்த்தி செய்வதிலும் கூலி உண்டா? என வினவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (ஹராமான விதத்தில் உடலுறவில் ஈடுபட்டால் தீமை எழுதப்படும் என்பதை அறிவீர்களா? அதே போன்று தான் ஹலாலான விதத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கூலி வழங்கப்படும்) நூல்: முஸ்லிம் (729)
இதுதான் அல்லாஹ் சிறந்த சமுதாயத்திற்காக வழங்கிய அருட்கொடை, அந்த சமுதாயத்தில் எம்மையும் சேர்த்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
2- உடலுறவின் போது தம்பதிகள் முத்தமிட்டு, கொஞ்சி விளையாடி உடலுறவுக்கு தயாராகுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட இவ்வாறு தன் மனைவிகளோடு முத்தமிட்டு கொஞ்சி விளையாடுவார்கள்.
3- உடலுறவில் ஈடுபடும் போது ..
بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا
என்ற துஆவை சொல்லிக் கொள்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (அத்தம்பதிகளுக்கு அல்லாஹ் குழந்தையை வழங்கினால் ஒருபோதும் ஷைத்தான் தீண்டமாட்டான்) நூல் புகாரி (9/187)
4- உடலுறவின் போது தன் மனைவியின் யோனிப் பகுதியில் பின் பக்கம் அல்லது முன்பக்கம் என எத்திசையிலிருந்தும் புணரலாம். நிபந்தனை அவளது யோனிப்பகுதி (அதாவது குழந்தை வெளிவரும் பகுதி)
அல்லாஹ் இது பற்றி கூறுவதாவது (உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்;..)
(அல்குர்ஆன் : 2:223)
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரழி) அறிவிக்கிறார்கள் "யூதர்கள், மனைவியுடன் பின் புறமாக யோனிப் பகுதியில் புணர்ந்தால் குழந்தை மாறுகண் குழந்தையாக பிறக்கும் என்று கூறுவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் (உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;...) என்ற வசனம் இறங்கியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்புறமாகவோ பின்புறமாகவோ யோனிப் பகுதியில் புணர்ந்தால் (சரி) என்று கூறினார்கள். நூல்: புகாரி ( 8/154) , முஸ்லிம் (4/156)
5- எச்சந்தர்ப்பத்திலும் பின்தூவாரத்தில் புணரக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் (உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்;...) இவ்வசனத்தின் மூலம் புணரும் இடம் யோனிப் பகுதியாகும். அதன் மூலமாகவே குழந்தையும் வெளிப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( யார் தன் மனைவியருடன் பின்தூவாரத்தில் புணருகிறானோ அவன் சபிக்கப்பட்டவனாவான். நூல்: ஆதாபுஸ் ஸபாப் ஷெய்க் அல்பானி இந்த செய்தியை வலுவானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பின் துவாரத்தில் புணர்வது இயற்கைக்கு மாற்றமானதும் சீரான மானுட வாழ்வின் யதார்த்தத்திற்குப் புறம்பானதுமாகும்.
அத்துடன் பெண்ணிற்கான இன்பமும் இல்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமின்றி பின்துவாரம் கழிவுகள் வெளியேறும் இடமும் கூட. பின்துவாரத்தில் புணருவது தடுக்கப்பட்டது என்பதை நியாயப்படுத்த இவ்வாறு பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக மேலும் தகவல்கள் (1103) கேள்வி இலக்கத்தைப் பார்க்கவும்.
6- ஒருவர் தன் மனைவியோடு உடலுறவில் ஈடுபட்ட பிறகு மீண்டும் ஈடுபட விரும்பினால் அவர் வுழு செய்து கொள்ளட்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( உங்களில் யாராவது தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு மீண்டும் ஈடுபட விரும்பினால் அவர் வுழு செய்து கொள்ளட்டும். அவ்வாறு செய்வது புத்துணர்ச்சியை வழங்கும்.)
நூல்: முஸ்லிம் (1/171) இவ்வொழுங்கு விரும்பத்தக்கதே தவிர கட்டாயம் இல்லை.
இரண்டு உடலுறவுக்கு இடையில் குளிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தால் குளிப்பது சிறப்பு.
அபூ ராபிஃ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் தனது மனைவிமார்களிடம் சென்றார்கள். இந்த மனைவியிடத்திலும் குளித்தார்கள் அந்த மனைவியிடத்திலும் குளித்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே ஒரே குளிப்பாக அமைத்துக் கொண்டால் என்ன என்று வினவினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்( இவ்வாறு செய்வதே மிகத் தூய்மையான மணமான சுத்தமான முறை ) என்று கூறினார்கள். நூல்: ஸுனன் அபீதாவுத் (1/71)
7- கணவன் மனைவி இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு ஜனாபத்தின் மூலம் குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்கள் பின்வருமாறு :
* கத்னா செய்யப்பட்ட இரு இடங்களிலும் (ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு) சந்தித்தால்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (ஆணுறுப்பு பெண்ணுறுப்பை தாண்டிவிட்டால் மற்றுமொரு அறிவிப்பில் (இரு உறுப்புகளும் தொட்டுக் கொண்டால்) குளிப்பு கடமையாகிவிடும்.) நூல் அஹ்மத், முஸ்லிம் (526)
இந்திரியம் வெளியாகினாலும் இல்லை என்றாலும் குளிப்பு கடமையாகும். இரு உறுப்புகளும் சந்தித்தல் என்பது வெறுமனே தொடுவது என்பதல்ல மாறாக ஆணுறுப்பு முன்பகுதி பெண்ணுறுப்பில் நுழைவதாகும்.
* இந்திரியம் வெளிப்படுதல் (இரு உறுப்புகளும் சந்திக்கவில்லை என்றாலும் சரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (குளிப்பு இந்திரியம் வெளிப்பட்டால் கடமையாகிவிடும்.) நூல்: முஸ்லிம் (1/296)
இமாம் பகவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் "ஜனாபத்தின் குளிப்பு அது கடமையாகி விடுவது இரு விடயங்களில் ஒன்றின் மூலமாகும்.
ஒன்று ஆணுறுப்பு முன்பகுதி பெண்ணுறுப்பில் நுழைவதன் மூலம்.
இன்னுமொன்று இச்சையுடன் கூடிய நீர் ஆணிடமிருந்தோ பெண்ணிடமிருந்தோ வெளியேறுதல்.
குளிப்பதன் ஒழுங்கு விதிகளை அறிய (415) கேள்வி இலக்கத்தைப் பார்க்கவும்.
மேலும் தம்பதிகள் இருவரும் ஒரே இடத்தில் குளிப்பதற்கு அனுமதி இருக்கிறது. இருவரும் அவரவர் உடல்களைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதே.
ஆயிஷா ரழி (அவர்கள்) அறிவிக்கிறார்கள் நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். எங்களது கைகள் (நீரை அள்ளுவதற்கு பாத்திரத்தில்) சந்தித்துக் கொள்ளும். நபி அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் நானும் எனக்கு (அள்ள) விடுங்கள், எனக்கு விடுங்கள் என்று கூறுவேன். ஆயிஷா ரழி: (இருவரும் குளிப்பு கடமையானவர்களாக இருந்தோம்) என்று கூறினார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்.
8- மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் (
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
(அல்குர்ஆன் : 2:222)
அந்தவகையில் யார் மாதவிடாய் காலங்களில் தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டானோ அவன் ஒரு தீனார் அல்லது அரைவாசி தர்மமாக வழங்க வேண்டும். இது பற்றிய செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுனன் நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஷெய்க் அல்பானி அவர்கள் இது வலுவான செய்தி என தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆதாபுஸ் ஸபாப் ( பக்கம் 122 )
இருந்தாலும் மாதவிடாய் காலங்களில் யோனிப் பகுதியைத் தவிர வேறு பகுதிகளில் இன்பம் காண அனுமதியுண்டு.
ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் எங்களில் யாருக்காவது மாதவிடாய் ஏற்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேட்டியை (துணி) கட்டிக் கொள்ளும் படி வேண்டுவார்கள். பின்னர் அவளது கணவன் அவளுடன் இன்பம் காணுவார்) நூல் புகாரி, முஸ்லிம்
10- தற்காலிகமாக குழந்தை தேவையில்லாத நிலையில் கணவனுக்கு இந்திரியம் உள்ளே செல்லாத விதத்தில் வெளியேற்றலாம்.
அவ்வாறு பாதுகாப்பு உரைகளையும் உபயோகிக்கலாம். இவை அனைத்தும் மனைவியின் அனுமதியுடன் அமைய வேண்டும். அவளுக்கும் இன்பம் மற்றும் குழந்தை உரிமைகள் இருக்கின்றன.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் "நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இந்திரியத்தை உள்ளே செலுத்தாமல் வெளியேற்றினோம். அந்த செய்தி நபியவர்களுக்கு சென்ற போதும் எங்களை செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை." நூல் : புகாரி (9/250) , முஸ்லிம் (4/169)
என்றாலும் இவ்வாறு செய்வதைத் தவிர்ப்பது சிறந்ததாகும். ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம் பெண்ணின் இன்பம் முழுமை அடையாமல் போகும். திருமணத்தின் பிரதான நோக்கம் தவறிப் போகும், அதுதான் ஏற்கனவே மேல் குறிப்பிட்டதை போல சந்ததிகளை அதிகரிக்கச் செய்தல்.
11- தம்பதிகள் இருவருக்கும் தங்களது உடலுறவு சார்ந்த இரகசியங்களை பிறரிடம் கூறுவது ஹராமாகும். அதுமட்டுமின்றி அது மிகப் பெரிய பாவமுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (மறுமையில் அல்லாஹ்விடம் மக்களில் மிகக் கேவலமானவன் தன் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டு அது சார்ந்த இரகசியங்களை கூறித் திரிபவன்) நூல்: முஸ்லிம் (4/157)
அஸ்மா பின்த் ஸைத் ரழி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தார்கள் அப்போது ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (யாராவது ஒருவன் தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டதை பிறரிடம் விவரிப்பானா? கணவனுடன் ஈடுபட்டதை ஒரு பெண் பிறரிடம் விவரிப்பாளா? சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே பெண்களும் செய்கின்றனர் ஆண்களும் செய்கின்றனர் என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அவ்வாறு செய்ய வேண்டாம். அது ஒரு ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தானை வீதியில் சந்தித்து தேவையை பூர்த்தி செய்து கொள்வதை மக்கள் பார்ப்பது போன்றாகும்)
நூல் : ஸுனன் அபூ தாவூத் (1/339) ஷெய்க் அல்பானி இந்த செய்தியை வலுவானது என்று கூறினார்கள். ஆதாபுஸ் ஸபாப் (பக்கம் 143)
உடலுறவின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளில் இதுவே எம்மால் முடிந்த சில வழிகாட்டல்கள். பல அழகிய வழிமுறைகளைக் கொண்ட இந்தப் புனித மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.