நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்கள் மீது பேரிச்சம் பழத்தில் இருந்து அல்லது கோதுமையிலிருந்து ஒரு ‘ஸாஉ’ அளவை ‘ஸகாத்துல்-ஃபித்ர்’ (நோன்பு முடிவதற்கான ஸக்காத்) ஆகக் கடமையாக்கியுள்ளார்கள். மக்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்வதற்கு முன்னர் அது நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள். இது பற்றி அபூஸஈதுல் குத்ரி ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்ற செய்தி புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
« நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு ‘ஸாஉ’ அளவு உணவையோ அல்லது, ஒரு ‘ஸாஉ’ அளவான பேரிச்சம் பழத்தையோ அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவான கோதுமையையோ அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவான உலர்ந்த திராட்சையையோ கொடுத்து வந்தோம் ».
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘உணவு’ என்ற சொல்லானது கோதுமையையே குறிக்கிறது என அறிஞர்களில் ஒரு பகுதியினர் கூறுகின்றனர். சில அறிஞர்கள் உணவு என்பதன் மூலம் ஒவ்வொரு நாட்டவரும் தங்களின் நாட்டில் உண்ணுகின்ற பிரதான உணவையே குறிக்கிறது எனக் கூறுகின்றனர். அது கோதுமையாகவோ அல்லது தானியங்களாகவோ அல்லது அதே போன்ற வேறு எந்த அன்றாட உணவாகவோ இருக்கலாம். இதுவே சரியான கருத்தாகும். ஏனெனில், இந்த ‘ஸகாத்’ ஆனது, செல்வந்தர்களையும் ஏழைகளையும் சமப்படுத்தும் ஒன்றாகும். எனவே, ஒரு முஸ்லிம் அந்த நாட்டு மக்களுடைய பிரதான உணவல்லாத வேறு ஒன்றின் மூலமாக அதனைச் செய்வது கடமையாகமாட்டாது. இந்தவகையில் மக்கா, மதீனா பிரதேசத்தில் அரிசி பிரதான உணவு என்பதிலும் அது சிறந்ததும் விலை கூடியதுமான உணவு என்பதிலும் சந்தேகமில்லை. இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘கோதுமை’யை விட சிறப்பான உணவாக அரிசி காணப்படுகிறது. இதன்படி, ‘ஸகாத்துல்-ஃபித்ர்’ (நோன்பு முடிவதற்கான ஸக்காத்) ஆக அரிசி கொடுக்கப்படுவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்பது அறியப்பட்டுள்ளது.
இதன்போது, எந்தவகையான பொருளாக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளந்து கொடுத்த ‘ஸாஉ’ அளவு கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கடமையாகும். அதாவது, காமூஸ் போன்ற அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒரு ‘ஸாஉ’ என்பது, சாதாரண அல்லது நடுத்தரமான கைகளை உடைய ஒருவரின் இரண்டு கைகளையும் சேர்த்த நிறைவான நான்கு அள்ளுகளைக் குறிக்கிறது. அதன் நிறுவை அளவானது கிட்டத்தட்ட மூன்று கிலோகிராம் ஆகும். இதன்படி ஒரு முஸ்லிம் அரிசியோ அல்லது அது அல்லாத தனது நாட்டில் பிரதான உணவாகக் கொள்ளப்படுகின்ற ஏதாவது ஒன்றை ஃபித்ராவுக்கான (நோன்பு முடிவதற்கான) ஸகாத் ஆகக் கொடுத்தால் அது நிறைவேறி விடும். அவ்வாறு கொடுக்கப்படும் அந்த பொருள், மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ்களில் குறிப்பிடப்படாதவையாக இருந்தாலும் சரியே. இதுவே உலமாக்களின் கருத்துக்களில் மிகவும் சரியானதாகும். அவ்வாறு கொடுக்கப்படும் பொருட்களின் அளவு ‘நிறை’ அடிப்படையில் கிட்டத்தட்ட மூன்று கிலோகிராம் ஆக இருப்பதில் தவறில்லை.
ஃபித்ராவுக்கான (நோன்பு முடிவதற்கான) ஸகாத் ஆனது, சிறியவர், பெரியோர், ஆண்கள், பெண்கள், சுதந்திரமானவர், அடிமைகள் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்காகக் கொடுப்பது அவசியம் கிடையாது. எனினும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கொடுத்ததற்கிணங்க கொடுப்பது விரும்பத்தக்கது.
மேலும், பெருநாள் தொழுகைக்கு முன்னரே அதனைக் கொடுத்து விடுவதுதான் கடமையாகும். பெருநாள் தொழுகை முடியும் வரைக்கும் அதனைப் பிற்படுத்துவது கூடாது. அத்தோடு அதனை பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொடுப்பது தடுக்கப்படவில்லை. இதன்படி, அறிஞர்களின் மிகச்சரியான கருத்தாக இதனைக் கொடுப்பதற்கான ஆரம்ப நேரமாக இருபத்தெட்டாம் (28) இரவு கருதப்படுகிறது. ஏனெனில், ஒரு மாதம் என்பது, இருபத்தொன்பது (29) நாட்களாகவும் இருக்கும். முப்பது (30) நாட்களாகவும் இருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களும் இதனை (பெருநாளுக்கு) ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொடுத்து வரக் கூடியவர்களாக இருந்தனர்.
‘அல்-ஃபுகராஉ’ எனும் ஏழைகளுக்கும் ‘மிஸ்கீன்’ என்னும் எளியோருக்கும் தான் இது கொடுக்கப்பட வேண்டும். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி பின்வருமாறு அமைந்துள்ளது. «அல்லாஹுத்தஆவின் தூதர் அவர்கள் ஃபித்ராவுக்கான (நோன்பு முடிவதற்கான) ஸகாத்தை நோன்பாளிக்கான மோசமான மற்றும் கெட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட குற்றம் குறைகளிலிருந்து தூய்மையாகவும், ஏழைகளுக்கான உணவாகவும் கடமையாக்கினார்கள். யாராவது அதனைத் தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றிவிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஸகாத்’ ஆக அமைகிறது. யாராவது அதனைத் தொழுகைக்குப் பின்னால் நிறைவேற்றினால் அது அவரது ‘ஸதகா’வாக அமைகின்றது ». (அபூதாவூத். இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹ் அபூதாவூதில் ஹஸன் என்று குறிப்பிடுகிறார்கள்.
இதற்கான பணப் பெறுமதியை வழங்குவது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்துப்படி அனுமதிக்கப்படவில்லை. இதுதான் மிகவும் நம்பகத்தன்மையான ஆதாரமாகும். ஆகவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களான ஸஹாபாக்களும் செய்தது போல் இதனை உணவாகக் கொடுப்பதே கடமையாகும். இதனால் தான் முஸ்லிம் உம்மத்தின் பெரும்பாலான அறிஞர்களும் இதனைக் குறிப்பிடுகிறார்கள். எனவே, எமக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்த மார்க்கத்தில் விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், அதில் உறுதியாக இருப்பதற்கும் எம் உள்ளங்களையும் செயற்பாடுகளையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும் அல்லாஹ்வே போதுமானவனவன். நிச்சயமாக அவன்தான் கிருபையாளனாகவும் சிறந்த கொடைவள்ளலாகவும் இருக்கின்றான். (மஜ்மூஉ ஃபத்தாவா இப்னு பாஸ்-14 /200)
ஃபித்ராவுக்கான கிலோ கிராம் அளவுத்திட்டமானது, அஷ்ஷைக் இப்னு பாஸ் அவர்களின் கணிப்பீடு ஆகும்.
இவ்வாறுதான் ‘அல்-லஜ்னது அத்-தாஇமா’வும் (9/371) கணிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஸகாத்துல் ஃபித்ராவுக்கான அரிசியின் நிறையாக 2100 கிராம் என்று அளவீடு செய்கிறார்கள். (ஃபத்தாவா அஸ்-ஸக்காத் பக்: 274-276)
இந்த வேறுபாட்டுக்கான காரணம் என்னவெனில், ‘ஸாஉ’ என்பது நேரடியாக நிறையைக் குறிக்காமல் கொள்ளளவைக் குறிக்கும் அளவீடாக இருப்பதாகும்.
அறிஞர் பெருமக்கள் இதனை ‘நிறை’க் கணக்கில் நிர்ணயிப்பதற்கான காரணம் என்னவெனில், அக்கடமையை மிகச்சரியாக நிறைவேற்றுவதற்கு இலகுவாகவும் நெருக்கமாகவும் அமைவதற்காகவாகும். தானியங்களின் நிறுவயைப் பொறுத்த வரைக்கும், அவற்றிடையே வேறுபாடு உள்ளது என்பது அறிந்தது. அவற்றில் கனதி குறைந்தவையும் கனதி கூடியவையும் நடுநிலையான கனதி கொண்டவையும் உள்ளன. அந்த வகையில், அந்த தானியங்களை ‘ஸாஉ’ அளவில் எடுத்து, நிறுக்கும்போது அவற்றுக்கிடையே நிறுவையளவு வேறுபடக் கூடியதாக உள்ளது. எனவேதான். பழைய முறையில் அல்லாமல் புதிய முறையில் நிறுவை அளவு கணக்கெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில், ஒரு மனிதன் கடமையை நிறைவேற்றுவதில் ஏதும் குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று விரும்பினால் கொஞ்சம் அதிகமாக கொடுப்பது சிறந்ததும் பாதுகாப்பானதுமாகும்.
பார்க்க : அல் முஃங்னி. 4/168). விவசாய பொருட்களுக்கான ஸகாத்தின் ‘நிஸாப்’ எனும் குறைந்தபட்ச அளவினை நிறுவயின் அடிப்படையில் தீர்மானிப்பதில் அல்லது நிர்ணயிப்பதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.