0 / 0
11/முகர்ரம்/1446 , 17/ஜூலை/2024

கழா-கத்ர் பற்றிய அஹ்லுஸ்-ஸுன்னா வினரின் நம்பிக்கையின் சுருக்கம்.

கேள்வி: 49004

‘அல்- கழாஉ வல்-கத்ர்’ பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடு பற்றி விளக்க முடியுமா ? இந்த விடயம் தொடர்பான நம்பிக்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை யாவை ?

Answer

இஸ்லாத்தின் ‘கழா-கத்ர்’ கோட்பாடு பற்றிய விடயம் சற்று நீளமானது. பிரயோசனத்தைக் கருத்திற்கொண்டு அது தொடர்பான முக்கிய பகுதியைச் சுருக்கமாக முன்வைத்து விட்டுப் பின்னர் சில மேலதிக விளக்கங்களை முன்வைக்கிறோம். இதன் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை அங்கீகரித்து  நற்பயனைத் தருவானாக !

விதியை நம்புவதன் யதார்த்தம்

அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும், ‘அல்-கழாஉ’ பற்றிய நம்பிக்கையானது, இந்தப் பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்துமே அல்லாஹ்வின் திட்டத்தின் படியே நிகழ்கின்றன என உறுதியாக நம்புவதாகும்.

அடுத்து, ‘அல்-கத்ர்’ பற்றிய நம்பிக்கையானது, ஈமானின் கடமைகளில் ஆறாவது ஆகும். எனவே, இது பற்றிய நம்பிக்கை இல்லாவிடின் ஈமான் பூரணமடையாது. ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெற்றுள்ள இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தி வருமாறு : சிலர் ‘கத்ர்’ பற்றிய நம்பிக்கையை மறுப்பதாகக் கேள்விப்பட்டார்கள். அப்போது அவர்கள் : « அவர்களைச் சந்தித்தால் அவர்களை விட்டும் நான் நீங்கிக் கொண்டதாகவும் அவர்களும் என்னை விட்டு நீங்கி விட்டதாகவும் அறிவித்து விடுங்கள் ». மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : « அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களில் யாருக்காவது உஹத் மலையளவு தங்கம் இருந்து அதனை அவர் தர்மம்  செய்தாலும் அதனை அல்லாஹ் கத்ரை ஈமான் கொள்ளும் வரை ஏற்றுக் கொள்ள மாட்டான் »

‘கத்ர்’ பற்றிய நம்பிக்கையானது நான்கு படித்தரங்களைக் கொண்டுள்ளது. அந்த நான்கையும் ஈமான் கொள்ளும் வரை ஈமான் பூரணமடையாது. அவை பின்வருமாறு :

  1. அல்லாஹுத்தஆலா அனைத்தையும் பொதுவாகவும் தெளிவாகவும் ஆரம்பம் முதல் கடைசி வரை முழுமையாக அறிந்து வைத்துள்ளான். அவனது அறிவிலிருந்து வானத்திலும் பூமியிலும் எந்த ஒன்றும் கிஞ்சிற்றும் மறையாது என நம்புவதாகும்.
  2. அல்லாஹுத்தஆலா ‘லவ்ஹுல்-மஹ்பூழ்’ எனும் தாய்ப் பதிவேட்டில் வானங்களும் பூமியும் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே அனைத்தையும் பதிந்து விட்டான் என நம்ப வேண்டும்.
  3. அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் நாட்டமும் சக்தியும் காரணமாகின்றது என்றும் இப்பிரபஞ்சத்தில் நல்லது கெட்டது எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்றும் நம்ப வேண்டும்..
  4. இப்பிரபஞ்சங்களில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் படைப்புக்களாகும். அவன்தான் படைப்புக்களின் படைப்பாளனும் அவற்றின் பண்புகளினதும் செயற்பாடுகளினதும் படைப்பாளனும் ஆவான் எனவும் நம்புவதாகும்.
  • இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன்.» 6 :102

உரிய விதத்தில் விதியை நம்புவதற்கு அவசியமானவை

  • கத்ர்’ பற்றிய ஈமான் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குப் பின்வரும் விடயங்கள் அவசியமாகின்றன :
  • மனிதனுக்கு சுயவிருப்பு மற்றும் சுயதேர்வு என்பன வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமே அவனது செயற்பாடுகள் நடந்தேறுகின்றன. இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் விபரிக்கின்றன.
  • உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).»            (81 :28)
  • அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. »             (02 :286)
  • மனிதனின் நாட்டமும் சக்தியும் அல்லாஹ்வின் சக்திக்கும் நாட்டத்திற்கும் அப்பாற்பட்டது கிடையாது. அவன்தான் மனிதனுக்கு அவற்றை வழங்கி அதனைத் தெரிவு செய்து கொள்ளவும் பிரித்தறிந்து கொள்ளவும் தேவையான சக்தியையும் வழங்கியுள்ளான்.  இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் விபரிக்கின்றன.
  • எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள். » (81 :29)
  • ‘கத்ர்’ ஆனது அல்லாஹ் தனது படைப்புக்களில் மறைத்து வைத்திருக்கும் இரகசியமாகும். அதன் படி அவன் நமக்குத் தெளிவுபடுத்தியவற்றை நாம் அறிந்து, அவற்றை ஈமான் கொள்ள வேண்டும். எமக்கு மறைவாக வைக்கப்பட்டவற்றுக்கு நாம் கட்டுப்படுவதோடு, அவற்றையும் ஈமான் கொள்ள வேண்டும். அத்துடன் அல்லாஹ்வின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள்  தொடர்பாக எமது சின்ன மூளையைக் கொண்டும், பலவீனமான விளக்கத்தைக் கொண்டும் அல்லாஹ்வுடன் முரண்படக்கூடாது. மாறாக, அல்லாஹ்வின் பூரணத்துவமான நீதியையும் அவனது பரிபூரண ஞானத்தையும் ஈமான் கொள்ள வேண்டும்.

இதுதான் இப் பாரிய விடயத்தில் ‘ஸலபுஸ்-ஸாலிஹ்’ இனரின் நம்பிக்கைக் கோட்பாட்டின் சுருக்கமாகும். முன்னர் விளக்கிய விடயங்கள் தொடர்பாக அல்லாஹ்வின் உதவியை நாடியவர்களாக பின்வரும் விளக்கத்தை முன்வைக்கின்றோம்.

கழா மற்றும் கத்ர்என்பதன் கருத்தும் அவ்விரண்டுக்கும் மத்தியிலான வேறுபாடும்

மொழி அடிப்படையில்,  ‘கழா, கத்ர்என்பதன் கருத்து.

‘அல்-கழாஉ’ என்பதன் கருத்தானது ஒரு விடயத்தின் இறுதி முடிவாகும். ‘அல்-கத்ர்’ என்பதன் கருத்தானது திட்டமிடுதல் /நிர்ணயித்தல் என்பதாகும்.

ஷரீஆ அடிப்படையில் அல்-கழாஉ வல்கத்ர்என்பதன் கருத்து :

‘அல்-கத்ர்’ என்பது, ஏலவே  விடயங்களை அல்லாஹ் நிர்ணயித்து விடுவதும் குறிப்பிட்ட ஒரு விடயம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நிகழும் என்பதை அல்லாஹ் அறிந்து, அதனைப் பதிவதும் அதற்காக நாடுவதும் ஆகும். அத்தோடு, அவன் நிர்ணயித்த விதத்தில் அது நிகழ்வதும் அதற்காக அதனைப் படைப்பதுமாகும்.

கழா மற்றும்  கத்ர் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு

அறிஞர்களில் அவற்றுக்கிடையே வேறுபாடுள்ளததாகக் கூறுவோர் இருந்தாலும், அவற்றுக்கு இடையில் கருத்தியலில் எவ்வித வேறுபாடு கிடையாது ; கருத்தினடிப்படையில் அவையிரண்டும் ஒன்றையொன்று பிணைந்திருக்கின்றது. அவை இரண்டுக்கும் இடையே வேறுபாடிருப்பதாக அறிவிக்கும் எந்தவொரு ஆதாரத்தையும் அல்-குர்ஆனிலோ ஹதீஸிலோ காணமுடியாது. ஆனால், அவையிரண்டும் ஒன்றையொன்று குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஏகோபித்த கருத்து நிலவுகிறது. இந்தக் கடமையை ஈமான் கொள்ளுமாறு வலியுறுத்தும் குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ‘கத்ர்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. அல்லாஹ் தான் மிக அறிந்தவன்.

மார்க்கத்தில் கத்ர் பற்றிய நம்பிக்கையின் முக்கியத்துவம் :

‘கத்ர்’ பற்றிய நம்பிக்கையானது, ஈமானின் ஆறு கடமைகளில் ஒன்றாகும். ஜிப்ரீல் அலைஹிஸ்-ஸலாம் அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபியவர்கள் பதிலுரைக்கும் பின்வரும் ஹதீஸில் ‘கத்ர்’ இடம்பெற்றுள்ளது. « அல்லாஹ்வையும் மலக்கு மார்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் மறுமை நாளையும் நல்லது கெட்டது எல்லாமே அல்லாஹ்வின் ‘கத்ர்’ இன் படியே நிகழ்கின்றன என நம்புவதே ஈமான் ஆகும் » (முஸ்லிம்).

‘கத்ர்’ என்ற வார்த்தை அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில் இடம்பெற்றுள்ளது.

« நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கிறோம். »                    (54 :49)

« அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. »               (33 :38)

விதியை நம்புவதன் படித்தரங்கள்

அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக. பின்வரும் நான்கு படித்தரங்களையும் கத்ர் விடயத்தில் ஈமான் கொள்ளும் வரை அது பற்றிய ஈமான் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவையாவன :

  • அறிவு :
  • , வானத்திலும் பூமியிலும் உள்ள ஒரு அணுப்பிரமாண அளவைக் கொண்ட விடயமாகினும் அது அவற்றைச் சூழ்ந்திருக்கும் அல்லாஹ்வின் அறிவை விட்டும் விலகிட முடியாது என ஈமான் கொள்தல் வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் அவற்றைப் படைக்க முன்னரே அறிந்து விட்டான் எனவும் அவற்றின் செயல்கள் அனைத்தையும் தனது ஆதியான அறிவின் மூலம் அவன் அறிந்து விட்டான் எனவும் ஈமான் கொள்ள வேண்டும். இவற்றை அல்குர்ஆனின் பல வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
  •  அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். » (59 :22)
  • நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான். » (65 :12)
  • பதிவு செய்தல் :
  • , அல்லாஹுத்தஆலா அனைத்துப் படைப்பினங்கள் பற்றிய நிர்ணயங்களை ‘லவ்ஹுல்-மஹ்பூழ்’ எனும் ஏட்டில் பதிவு செய்து விட்டான் என ஈமான் கொள்தல்.
  • பின்வரும் அல்குர்ஆன் வசனம் விபரிக்கின்றது :
  • (நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே! » (22 :70)
  • நபிமொழியும் இது பற்றி விளங்குகிறது :
  • அல்லாஹுத்தஆலா படைப்பினங்களின் நிர்ணயங்களை வானமும் பூமியும் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே பதிந்து விட்டான் » என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                                                                         (முஸ்லிம் – 2653)
  • விருப்பமும் நாட்டமும் :
  • பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்துமே அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்று நம்புதல் வேண்டும்.  அல்லாஹ் நாடியவை மட்டுமே நடக்கும் ; நாடாதவை எதுவுமே இடம் பெறாது. அத்தோடு அவனது நாட்டத்தில் அடங்காத எதுவுமே இருக்காது எனவும் ஈமான் கொள்ளவேண்டும்.
  • பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விபரிக்கின்றன :
  • (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர். ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக…. »            (18 :23,24)
  • எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள். »     (81 :29)
  • படைத்தல் :
  • அனைத்தினதும் படைப்பாளனாவான். மனித செயற்பாடுகளைப் படைத்தவனும் அவனே. இதன் படி இப்பிரபஞ்சத்தில் எந்த ஒரு செயலும் அவன் படைக்காமல் இடம்பெறமாட்டாது என ஈமான் கொள்தல் வேண்டும்.
  • பற்றிப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் விபரிக்கின்றன.
  • அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன் »                   (39 :62)
  • உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார். »     (37 :96)
  • நபிமொழியும் இது பற்றி விளங்குகிறது :
  • அல்லாஹ்தான் அனைத்து செயல்களையும் அவற்றைச் செய்பவர்களையும் படைக்கின்றான். » என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இமாம் புகாரி அவர்கள் மனித செயற்பாடுகள் என்ற தலைப்பிலும்(25), இமாம் இப்னு ஆஸிம் அவர்கள் அஸ்-ஸுன்னா விலும் (257, 358), இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹ் கிரந்தத்தில் (1637) ஸஹீஹ் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் இப்னு ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

« அல்லாஹ்தான் மனிதனைப் படைத்தான். அவர்கள் தமது சக்தியாலும் விருப்பத்தாலும் செய்பவற்றையும் அவனே படைத்தான். பின்னர் வழிபாடு, மாறு செய்தல் போன்ற பல்வேறு செயல்களையும்  அல்லாஹ் படைத்த நாட்டம் விருப்பம் என்பவற்றின் ஊடாகவே மனிதர்கள் செய்கின்றனர். »

           (அத்துர்ரதுல் பஹிய்யா ஷரஹுல் கஸீதா அத்தாஇய்யா – பக் :18).

விதி விடயத்தில் பகுத்தறிவைப் பிரயோகிப்பதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல் :

‘கத்ர்’ பற்றிய நம்பிக்கைதான் அல்லாஹ் மீதான மிகச் சரியான நம்பிக்கையின் அச்சாணியாக உள்ளது. மனிதன் தனது றப்பை தெளிவாக அறிந்து கொள்வதற்கான பலமான சோதனையாக இந்நம்பிக்கை காணப்படுகின்றது. இந்த அறிவின் மூலமாக அல்லாஹ் மீதான உண்மையும் உறுதியும் ஏற்படுகின்றது. அத்தோடு, அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் பூரணத்துவம் என்பன பற்றியும் அறிந்து கொள்கின்றான். ஏனெனில், ‘அல்-கத்ர்’ விடயத்தில் எல்லைப் படுத்தப்பட்ட பகுத்தறிவுக்கு இடம்கொடுத்தோருக்குப் பல கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. இதனால் ‘கத்ர்’ விடயத்தில் பல்வேறு கருத்துமுரண்பாடுகளும் எழுந்துள்ளன. இது பற்றி வந்துள்ள அல்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றுவிளக்கம் அளிப்பதும் அது தொடர்பாக வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து விட்டன. அத்தோடு ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாத்தின் விரோதிகள் ‘கத்ர்’ பற்றிய விவாதங்களினூடாக முஸ்லிம்களின் ‘அகீதா’ வில் சலசலப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். அது பற்றிய சந்தேகங்களைக் கிளறி விடுகின்றனர். இதனால்  அல்லாஹ்வை அவனது ‘அஸ்மாஉல்-ஹுஸ்னா’ எனும் அழகிய திருநாமங்கள் மூலமாகவும் ‘அஸ்-ஸிபாத்துல் உலா’ எனும் உயரிய பண்புகள் மூலமாகவும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக, உள்ளம் அமைதியடைந்தோராக, தனது ரப்பை உறுதியாக நம்பியவராக அறிந்து கொண்டவர்களைத் தவிர மற்றவர்களால் தெளிவானதும் உறுதியானதுமான ஈமானைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,  இது பற்றிச் சரியாக அறிந்துகொண்டவனின் உள்ளத்தில் எந்த வகையிலும் சந்தேகங்கள் தோன்றமாட்டாது. அந்தவகையில், ஈமானின் ஏனைய கடமைகளில் இந்நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் ஒரு ஆதாரமாக இது விளங்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பகுத்தறிவானது கத்ரை அறிந்து கொள்வதற்கான வழியாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல.. ஏனெனில், ‘கத்ர்’ ஆனது படைப்புக்களில் மறைந்திருக்கும் இரகசியமாகும். அவற்றில் அல்லாஹ் தனது வேதத்திலும் நபியவர்கள் மூலமும் வெளிப்படுத்திய வற்றை நாம் அறிந்து, உண்மைப்படுத்தி, ஈமான் கொள்ள வேண்டும். அத்தோடு எமது ரப்பு அமைதி காத்த விடயத்தில் அவனது பூரண நீதியையும் அவனது பரிபூரண ஞானத்தையும் ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவனது செயற்பாடுகள் பற்றி விசாரணைக்குட்படுத்தப்பட முடியாதவன். ஆனால் மனிதர்கள்தான் விசாரணைக்குட்படுத்தப்படுவர்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பார்க்க : (அஃலாமுஸ்-ஸுன்னா அல்-மன்ஷூரா 147), (அல்-கழாஉ வல்-கத்ரு பீ ழவ்இல்-கிதாபி வஸ்-ஸுன்னா, கலாநிதி அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் அல்-மஹ்மூத்) , (அல்-ஈமானு பில்-கழாஇ  வல்-கத்ரி, அஷ்-ஷெய்க்ஹ் முஹம்மதுல் ஹம்த்).

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
கழா-கத்ர் பற்றிய அஹ்லுஸ்-ஸுன்னா வினரின் நம்பிக்கையின் சுருக்கம். - Islam Question & Answer