அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கவ்ஸர் என்பது அரபு மொழியில் அதிகம் என்பதன் மிகைப்படுத்தலாகும். மார்க்க ரீதியாக அதற்கு இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றன.
முதலாவது கருத்து .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சுவனத்தில் உள்ள நதியாகும்.
இந்த கருத்தையே இறைவன் தன் திருமறையில் கீழ் வரும் வசனத்தில் கூறுகிறான்.
(முஹம்மதே) நிச்சயமாக உமக்கு நாம் கவ்ஸரை வழங்கினோம்.
அதே போல் நபியவர்களும் அதை தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு மத்தியில் வந்தார்கள். நானும் மற்றவர்களும் அமர்ந்திருக்கும் சபையில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அப்போது மயக்கமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து தலையை உயர்த்தி சிரித்தவர்களாக எங்கள் அனைவரையும் பார்த்தார்கள். சிரிக்கும் போது நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? ” எனக் கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் “இப்போது எனக்கொரு அத்தியாயம் அருளப்பட்டது எனக்கூறி
அந்த அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்.*
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
பொருள்: (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
பின்னர் கவ்ஸர் என்றால் என்ன என்று அறிவீர்களா? எனக் கேட்க அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என நாம் கூறினோம்.. அதற்கு அவர்கள் கவ்ஸர் என்பது எனதிறைவன் அதிக நன்மைகள் இருப்பதாக வாக்களித்துள்ள நதியாகும் .அது மறுமை நாளில் எனது சமுதாயத்தினர் வருகை தரக்கூடிய தடாகமாகும்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கவ்ஸர் என்பது கரைகள் இரண்டும் தங்கத்தாலும் அது செல்லும் பாதை முத்துக்கள் மற்றும் மாணிக்கம் என்பவற்றாலும் ஆன ஒரு நதியாகும்.
(திர்மிதி:3284)
இமாம் திர்மிதி இந்த ஹதீஸை ஹஸன் ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.இமாம் அல்பானி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் அதனை ஸஹீஹ் என்பதாக கூறியுள்ளார்கள்.
இரண்டாவது கருத்து: அது ஒரு மிகப்பெரிய நீர்த்தடாகமாகும். தடாகம் என்பது நீர் சேமித்து வைக்கப்படும் இடமாகும், மறுமை நாளில் அது மஹ்ஷர் வெளியில் வைக்கப்படும். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் வருகை தருவார்கள். இத்தடாகத்திற்கான நீரானது சுவனத்திலுள்ள கவ்ஸர் நதியிலிருந்து வருவதால் இதற்கு கவ்ஸர் நீர்த்தடாகம் என கூறப்படுகிறது. ”சுவனத்தில் உள்ள இரண்டு குழாய்கள் மூலம் அதற்கு நீர் ஊற்றப்படுகின்றது” என்ற அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் .(முஸ்லிம் 4255) நபிமொழி இதற்கு ஆதாரமாகும். இந்த ஹதீஸின் வெளிரங்கமான கருத்து இத்தடாகம் சுவனத்திற்குள்ளே ஓடும் நதியிலிருந்து நீர்ப்பாயும் விதத்தில் அதற்கு அருகாமையில் உள்ளது என்பதாகும். இதனை இப்னு ஹஜர் ரஹ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பத்ஹுல் பாரி (11/466)
இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானதா இல்லையா?
கவ்ஸர் நதி நபியவர்களைத் தவிர வேறு யாருக்கும் இருப்பதாக எங்கும் அறிவிப்புக்கள் இல்லை. அதனையே இறைவன் கவ்ஸர் எனும் அத்தியாயத்தில் அவருக்குச் செய்தாக அருளாக குறிப்பிட்டுள்ளான். எனவே அது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது என்பது தூரமான ஒன்றல்ல.
கவ்ஸர் நீர் தடாகத்தை பொறுத்தவரை அது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது என்ற கருத்தே அறிஞர்களிடத்தில் பிரபல்யமான கருத்தாகும். அவ்வாறே இமாம் குர்துபி அவர்களும் அதனை தனது முப்ஹிம் என்ற நூலில் தெளிவாகவே கூறியுள்ளார்கள்.
எனினும் இமாம் திர்மிதீ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக சமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
நிச்சயமாக ஒவ்வொரு நபிக்கும் ஒரு நீர்த் தடாகம் உண்டு, அதில் அவர்களில் யாரிடம் அதிகமானவர்கள் வருவார்கள் என்பதில் அவர்கள் பெருமை கொள்வார்கள். அவர்களின் அதிகம் வருகை தரக்கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளும் பலவீனமானவையாகும், எனினும் சில அறிஞர்கள் இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹ் ஸஹீஹாவில் செய்தது போன்று இதற்கான அறிவிப்பாளர் தொடர்கள் அதிகமானவை என்பதனால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம் எனவும், சிலர் இந்த ஹதீஸை பலவீனமானது எனவும் தீர்ப்பு கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸ் உறுதியானதாக இருக்குமாயின் கவ்ஸர் நதி மாத்திரமே நபியவர்களுக்கு பிரத்தியேகமானது தடாகமல்ல என்றும் உறுதியற்றதாக இருந்தால் கவ்ஸர் தடாகமும் நபியவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது என்பதையும் புரியலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.
சுவனத்தில் உள்ள கவ்ஸர் நதியினதும் மஹ்ஷர் மைதானத்தில் உள்ள தடாகத்தினதும் பண்புகள் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளன.
சுவனத்தில் உள்ள கவ்ஸர் நதியின் பண்புகளாவன:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் (வானவர்) ஜிப்ரீலே! இது என்ன? என்று கேட்டேன். அவர் இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர் என்றார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணமிக்க கஸ்தூரியாகும்”
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (புகாரி 6581)
முஸ்னதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கவ்ஸர் எனக்கு வழங்கப்பட்டுள்ளது, அது பூமியின் மேற்பரப்பில் ஓடும் ஒரு நதியாகவும் அதன் இரு கரைகளிலும் முத்தாளான மாடங்கள் உண்டு, அது கூரையிடப்படாததாகும். எனது கையினால் அதன் மண்ணை அடித்துப் பார்த்த போது அதன் மண் நறுமணம் கமழும் கஸ்தூரியாகவும் அதன் கூலாங்கற்கள் முத்தாகவும் காணப்பட்டன.
அல்பானி ஸஹீஹாவில் (2513) இதனை ஆதாரபூர்வமானது எனத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
முஸ்னதிலுள்ள அனஸ் ரழி அவர்களின் மற்றுமோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கவ்ஸரைப் பற்றி வினவப்பட்டது, அதற்கு நபியவர்கள் அது இறைவன் எனக்கு சுவனத்தில் அளித்துள்ள ஒரு நதியாகும், அது பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனை விட மதுரமானதாகவும் இருக்கும், அங்கு காணப்படும் பறவைகளின் கழுத்துகள் ஒட்டகங்களின் கழுத்துகளை போன்று இருக்கும் எனக் கூறினார்கள்.அதற்கு உமர் ரழ அவர்கள் அப்படியானால் அவைகள் நன்கு மென்மையானவையான பறவைகளாக இருக்குமே என்றார்கள். அதற்கு நபியவர்கள் ”உமரே! அதனை உண்பவர்கள் அவற்றை விட மென்மையானவர்கள்” எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் தர்ஙீப் வத்தர்ஹீப் நூலில் 3740 இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதனை ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.
மஹ்ஷர் மைதானத்தில் உள்ள தடாகத்தின் பண்புகள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் குவளைகள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்”
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி: 6579) (முஸ்லிம்:4244)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஅனஸ் ரழி அறிவிக்கிறார்கள்: அங்கு வானத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை அளவு தங்கம் மற்றும் வெள்ளியிலான கூஜாக்கள் காணப்படும்.(முஸ்லிம் 4261) மற்றும் ஒரு அறிவிப்பில் வானத்தில் உள்ள விண்மீன்களை எண்ணிக்கை விட அதிகமானது என்று வந்துள்ளது.
ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதனது நீர் பற்றி வினவப்பட்ட போது, அது பாலை விட மிக வெண்மையானதும் தேனை விட மிக மதுரமானதுமாகும், அதன் நீர் சுவனத்தில் உள்ள இரண்டு குழாய்கள் மூலம் ஊற்றப்படுகின்றன அதில் ஒன்று தங்கத்தினாலும் மற்றொன்று வெள்ளியினாலும் ஆனதாகும். (முஸ்லிம் 4256)
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களின் மூலம் தடாகம் பற்றிய ஹதீஸ்கள் முதவாதிர் ஆனவை என்பதில் அறிஞர்களிடத்தில் எந்த சந்தேகமும் இல்லை. நபியவர்களை தொட்டும் ஐம்பதுக்கும் அதிகமான நபித்தோழர்கள் அதனை அறிவித்துள்ளார்கள். இப்னு ஹஜர் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் அந்த ஹதீஸை அறிவித்த நபித் தோழர்களின் பெயர்களை பத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
முஸ்லிம் கிரந்தத்தின் விரிவுரையான முப்ஹிம் நூலில் இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: அல்லாஹ் தனது நபியான முஹம்மதை, திட்டவட்டமான அறிவைத் தருமளவுக்கு பிரபலமான ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் பெயரும் பண்புகளும் பானமும் தெளிவாக வர்ணித்து கூறப்பட்ட நீர்த்தடாகத்தை கொடுத்து அல்லாஹ் முஹம்மத் நபியை தனித்துவப்படுத்தியுள்ளான் என்பதை அறிந்து அதை நம்புவது ஒவ்வொரு அடியான் மீதும் கட்டாயமாகும் என கூறியுள்ளார்கள்.
மஹ்ஷர் மைதானத்தில் நீர்த்தடாகம் அமைந்துள்ள இடம். இவ்விடயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்கள் சிலர் அது ஸிராத் எனும் பாலத்திற்கு அடுத்து என்பதாகவும் இன்னும் சிலர் அது ஸிராத் எனும் பாலத்திற்கு முன்னதாக உள்ளதாகவும் கூறுகிறார்கள். அதுவே அதிகம் ஏற்றமான கருத்து என்பதாகவும் கூறுகிறார்கள். அல்லாஹ்வே அறிந்தவன், ஏனெனில் நீர் தடாகத்திற்கு வரும் சிலர் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர், அவ்வாறெனில் சிராத்திற்கு பின்னர் இது இருக்குமாயின் சிராத் பாலத்தில் செல்லும் போது நரகிற்கு செல்வோர் நரகில் விழுந்து விடுவர், அதன் பின்னர் அவர்கள் தடாகத்திற்கு வருவது முடியாத ஒன்றாகும்.
இந்த ஆய்வின் இறுதிப் பகுதியில் சில முக்கிய விடயங்களை தெளிவுபடுத்துவது அது தொடர்பாக விழிப்புணர்வூடுவது அவசியம்.
முதலாவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் இந்த நீர் தடாகத்தில் நபி அவர்களின் கரங்கள் மூலம் குடிப்பதற்கான பாக்கியத்தை பெறுவதில்லை. இந்த சமுதாய மனிதர்களில் நீர் தடாகத்தை விட்டு கடுமையாக தடுக்கப்பட்டு விரட்டப்படுவோரும் உண்டு என்பதாக ஹதீஸ்கள் தெளிவாக கூறுகின்றன அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக.
யாரெல்லாம் அதிலிருந்து நீர் அருந்துவார்கள் யாரெல்லாம் அதிலிருந்து தடுக்கப்பட்டு விரட்டப்படுவார்கள்?
இதற்கான பதிலை நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தந்துள்ளார்கள்
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்’ (மண்ணறையிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடும்போது நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறிவிட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகில்) காண விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் காண விரும்பியது) இதுவரை (பூமியில் பிறந்து) வந்திராத நம் சகோதரர்களை” என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்து, அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா? கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாக (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்-கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் ‘வாருங்கள்’ என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்’ என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;அப்புறப்படுத்துவானாக!” என்று கூறுவேன்.
(முஸ்லிம் 367)
அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்,
“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! என்று (இரண்டு முறை) கூறுவேன்” (புகாரி 6584)
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் கூறினார்கள் எனது (தன்னுடைய குளத்தில் நீர் அருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை குளத்தின் உரிமையாளர் குளத்தில் இருந்து விரட்டுவது போன்று மறுமை நாளில் எனக்கு சிறப்பு பரிசாக கிடைக்க இருக்கும் தடாகத்தை விட்டும் சில மனிதர்களை நீரருந்த விடாமல் நான் விரட்டுவேன் (புகாரி) (முஸ்லிம்)
குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: இறைவன் எமது அறிஞர்களுக்கு அருள் பாலிக்கட்டும். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மதம் மாறும் அல்லது அல்லாஹ் பொருந்திக் கொள்ளாதவற்றை மார்க்கத்தில் புதிதாக உருவாக்கும் அனைவரும் இந்த ஹவ்ழ் எனும் தடாகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் இன்னும் அதை விட்டும் மிக தூரமாக விரட்டப்படுவார்கள்.
அவர்களில் மிகவும் கடுமையாக விரட்டப்படுபவர்கள்.
முஸ்லிம் சமுதாயத்தினருடன் முரண்பட்டு அவர்களை விட்டும் பிரிந்து சென்ற பல பிரிவுகளை உடைய ஹவாரிஜ்கள் மற்றும் தெளிவான வழிகேடர்களான ராபிழாக்கள் தத்தம் விருப்பங்களுக்கேற்ப மனோ இச்சையை பின்பற்றி நடந்து கொள்ளும் முஃதஸிலாக்கள் இன்னும் அவர்கள் வழியில் செல்லக் கூடியவர்கள் அநியாயம் அடக்குமுறை என்றவற்றில் வரம்பு மீறி உன்னை அழித்து சத்தியவான்களை கொன்று அவமதிக்கக்கூடிய அநியாயக்காரர்கள் இன்னும் பெரும்பாவங்களை வெளிப்படையாக செய்யக்கூடிய பாவச் செயல்களை குறைத்து மதிப்பிடக்கூடிய வழி பிறந்த மனோ இச்சையை பின்பற்றக்கூடிய இன்னும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கக்கூடிய அனைவரும் நீர்தடாகத்தை விட்டும் மிகக் கடுமையாக விரட்டப்படுவர் (குர்துபி).
எல்லா அடியார்களும் தான் இந்த அருள் பொருந்திய நீர்த்தடாகத்தில் இருந்தும் நீர் அருந்தும் பாக்கியத்தை இறைவன் தனக்கு தர வேண்டும் என்று எதிர்பார்த்து ஆசை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாக பின்பற்றுவதும் அவர்களுக்கு மாறு செய்யாது இருப்பதும் அனைத்து அடியார்கள் மீதும் கடுமையாகும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் நபியவர்களால் இத்த தடாகத்தில் இருந்து நீர் அருந்துவதை விட்டும் தடுக்கப்படுவதை விட மிகக்கேவலமான இழிவான கைசேதத்திற்குரிய விடயம் வேறொன்றுமில்லை.
இன்னும் அவர்களுக்கு தாங்க முடியாத தாகம் ஏற்படும் அப்பொழுது அந்த சிறந்த குளிர்ந்த நீரை குடிப்பதை விட்டும் தடுக்கப்படுவர் பின்னர் நபி அவர்களின் கட்டளைக்கிணங்க வேதனை நஷ்டம் மற்றும் இழிவு என்பன அதிகரிக்கப்படும்.
அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
இதன் கற்பனையே இவ்வாறு இருக்கும் எனில் அதனை முகங்கொடுப்பது எவ்வாறு இருக்கும்?
சுன்னாவை பின்பற்றுவதற்கும் பித்அத் பாவங்கள் என்பவற்றிலிருந்து தவிர்ந்து இருப்பதற்கும் அல்லாஹ் எனக்கும் எனது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அருள் புரியட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
^1 | முஸ்லிம் 670 |
---|