ஸகாத் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் அல்லது ஸகாத் பெறத் தகுதியுடையோர் எட்டுக் கூட்டத்தினராவர்.
அல்லாஹ் அதை தெளிவாகக் குறிப்பிடுகிறான். மேலும் அது ஒரு கடமை என்றும் அறிவு மற்றும் விவேகத்தின் அடிப்படையிலேயே அது அமைந்துள்ளது என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
'நிச்சயமாக ஸகாத் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் அதற்கான பணியில் ஈடுபடுவோருக்கும் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்)கும் கடனாளிகளுக்கும் அல்லாஹ்வுடைய பாதையிலும் வழிப்போக்கனுக்கும் அல்லாஹ்விடமிருந்துள்ள கடமையாக (விநியோகிக்கப்பட வேண்டும்). அல்லாஹ் அறிந்தவனாகவும் விவேகமுள்ளவனாகவும் உள்ளான்." (தவ்பா: 60)
இந்த எட்டு வகை பிரிவினருக்கும் ஸகாத் விநியோகிக்கப்பட வேண்டும்.
முதலாவதும் இரண்டாவதும்: ஏழைகளும் வறியவர்களும்.
இத்தகையவர்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஸகாத் நிதியிலிருந்து இவர்களுக்கு விநியோகிக்கப்படும். பகீர், மிஸ்கீன் ஆகிய இரண்டு சாராருக்குமிடையிலான வித்தியாசம் என்னவெனில்: பகீர் என்பவர்| கடுமையான தேவையுள்ளவர், தனக்கும் தனது குடும்பத்துக்கும் அரை வருடத்திற்கு போதுமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள வழி இல்லாதிருப்பார். மிஸ்கீன் என்பவர்| பகீரை விட ஓரளவு நன்றாக இருப்பார். இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்காவிட்டாலும் தேவையான அளவில் அரைவாசி, அல்லது அதற்கு மேல் கிடைக்கும். இவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஸகாத் வழங்கப்படும்.
ஆனால் தேவையை எவ்வாறு நிர்ணயித்துக் கொள்வது?
அறிஞர்கள் கூறுகிறார்கள்: ஒரு வருட காலத்திற்கு அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தேவையான அளவு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு வருடம் சுற்றி வந்தால் ஸகாத் கடமையாகிறது. எனவே ஸகாத் கடமையாவதற்குரிய கால அளவை நிர்ணயிப்பதற்கு ஒரு வருடம் சுற்றிவருவது கணிக்கப்படுவதைப்போல் ஸகாத் பெறத் தகுதியானவர்களான பகீர், மிஸ்கீன்களுடைய தேவைகளுக்காக கொடுப்பதற்குரிய கால அளவும் ஒரு வருடம் சுற்றி வருவதை கால எல்லையாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதுதான் சிறந்த கருத்தாகும்.
பகீர், மிஸ்கீன் ஆகியோருக்கு அவர்களது குடும்பத்துக்கும் சேர்த்து முழுமையாக ஒரு வருடத்திற்குத் தேவையான அளவு வழங்கப்படும். உணவு, உடை ஆகியவற்றை வழங்கினாலும் சரி அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதற்காக பணமாக வழங்கினாலும் சரி அல்லது தையல்காரர், தச்சன், கொல்லன் போன்ற துறைகளில் திறமையிருந்தால் அதற்கேற்ப சுய தொழிலுக்கான ஒரு இயந்திரத்தை கூட வழங்கலாம். ஆனால் முக்கியம் என்னவென்றால் ஒரு வருடத்திற்கு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும்.
மூன்றாவது: அதற்கான பணியில் ஈடுபடுவோர். (வசூலிப்போர்)
அரசாங்கத்தினால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கும். அதனால்தான் 'ஆமிலூன அலைஹா" என்று வந்துள்ளது, 'ஆமிலூன பீஹா" என்று வரவில்லை. அவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதையே இது சுட்டிக் காட்டுகிறது. ஸகாத் வழங்குவோரிடமிருந்து அதை வசூலிப்போராகவும் பெறத் தகுதியானோருக்கு விநியோகிப்போராகவும் அதுபற்றிய பதிவு ஏற்பாடுகளை செய்வோராகவும் இருப்பர். இவர்களுக்கும் ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கப்படும்.
எவ்வளவு வழங்கப்படும்?
ஸகாத் நிதியத்தில் பணியாற்றுவோர்| ஊழியர்கள் என்ற வகையில் அதற்கு தகுதி பெறுகின்றனர். எனவே அவர்களது வேலைக்கு ஏற்ப வழங்கப்படும். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களது வேலைக்கு ஏற்ப ஸகாத் வழங்கப்படும். ஏனெனில் இவர்கள் தமது வேலைக்காக ஸகாத் நிதியத்திலிருந்து பெறுகிறார்களே தவிர தேவைக்காக அல்ல. அந்த ஊழியர்கள் ஏழைகள் என்று வைத்துக் கொண்டால் சேவைக்காகவும் வழங்கப்படும், ஏழ்மைக்காகவும் வழங்கப்படும். ஏனெனில் ஸகாத் பெறத் தகுதியுடையோராக அல்லாஹ் அடையாளப்படுத்தும் எட்டு பண்புகளில் இரண்டு அவரிடம் உள்ளது. ஒன்று : ஏழ்மை. இரண்டு: வேலை. எனவே ஒவ்வொரு தகைமைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படும்.
வேலைக்காக கொடுக்கப்படும் அளவு அவரது தேவையை பூர்த்தி செய்யவில்லையெனில் ஒரு வருட செலவுக்கு அவருக்கு வேறாக ஸகாத் கொடுக்கப்படும். உதாரணமாக: ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் ரியால்கள் செலவாகும் என்று வைத்துக் கொள்வோம். அதே நேரம் அவர்களது வேலைக்கான கொடுப்பனவு இரண்டாயிரம் ரியால்கள் என்று வைத்துக் கொண்டால், இரண்டாயிரம் ரியால்கள் வேலைக்கான கொடுப்பனவாகவும் எட்டாயிரம் ரியால்கள் ஏழ்மைக்கான ஸகாத்தாகவும் வழங்கப்படும்.
நான்காவது: உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்.
இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காக இவர்களுக்கு ஸகாத் வழங்கப்படும். அவர் இஸ்லாத்தைத் தழுவுவதால் பல நலன்கள் விழையும் என்று எதிர்பார்க்கப்படும் காபிராக இருக்கலாம், அல்லது ஈமான் பலவீனமான நிலையில் உள்ள புதிய முஸ்லிமாக இருக்கலாம், சில வேளை ஒரு கெட்டவராக கூட இருக்கலாம், அவரது தீங்கை விட்டும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கப்படும். எவரது நட்பும் சிநேகமும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நலன்களை ஏற்படுத்துமோ அப்படியானவர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் உள்ளடங்குவர்.
ஆனால் அவரது சிநேகிதத்தாலும் நட்பாலும் ஒரு பொது நலன் விளைய வேண்டும் என்ற வகையில் அவர் ஒரு தலைவராக அல்லது பிரமுகராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதா அல்லது தனது தனிப்பட்ட நலனுக்காக அவரை சிநேகிதனாக ஆக்குவதற்காக கொடுக்கலாமா என்பதைப் பொறுத்தவரை அதில் கருத்து வேறுபாடு உள்ளது.
உதாரணமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவரை அவரது ஈமானிய பலப்படுத்தலுக்காக அல்லது இஸ்லாத்தில் அவருக்கு சிநேகமான சூழலை உருவாக்குவதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாமா என்ற விடயத்தை பொறுத்தவரை| என்னிடத்தில் மிக ஏற்றமான கருத்தாக நான் கருதுவது: அவரது ஈமானை பலப்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தில் அவரது பாதத்தை நிலைபெறச் செய்வதற்காக ஸகாத்திலிருந்து கொடுப்பது கூடும் என்பதாகும். அவர் ஒரு பிரமுகர் என்ற காரணத்தினால் அல்லாமல் ஒரு சாதாரண தனிநபராக கருதியும் கொடுக்கலாம். ஏனெனில் 'உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்" என்று பொதுப்படையாகவே வந்துள்ளது. உடல் ரீதியிலான தேவைக்கு ஒரு ஏழைக்கு கொடுக்க முடியுமாக இருந்தால் உள ரீதியான தேவைக்கு - ஈமானை பலப்படுத்துவதற்காக கொடுப்பது முதல் தகைமையாகும். உடல் தீனியை விட ஈமானிய பலப்படுத்தல் ஒரு நபருக்கு மிக முக்கியமான அம்சமாகும்.
----------------------------------------------------------------
இம்மூன்று தரப்பாருக்கும் சொந்தமாகவே ஸகாத் கொடுக்கப்பட்டு விடும். இடை நடுவில் ஸகாத் பெறுவதற்கான அவர்களது தகைமை நீங்கி விட்டாலும் அவர்கள் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டியதில்லை. அது அவர்களது ஹலாலான உடமையாகும். ஏனெனில் ஸகாத் பெறத் தேவையான தகைமையை கூறும்போது 'லி - அவர்களுக்கு" எனும் பிரயோகத்தை அல்லாஹ் பாவித்திருக்கிறான். எனவே சொந்தமானது என்பதை குறிக்கும் 'லாம்" எனும் எழுத்தின் பயன்பாடு| இடையில் அவர்கள் அந்தப் பண்பை இழந்தாலும் திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றனது.
உதாரணமாக: ஒரு வருடத்திற்குப் போதுமான பத்தாயிரம் ரியால்களை அவரது ஏழ்மை நிலைக்காக வழங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர் அவரது உழைப்பின் மூலம் அவர் பணக்காரராக மாறிவிட்டால், அல்லது உறவினர் ஒருவரின் மரணத்தின் மூலம் அனந்தரச் சொத்துக்களுக்கு சொந்தக்காரனாகிவிட்டால் அவர் ஸகாத்திலிருந்து பெற்ற தொகையில் மீதியை திரும்ப ஒப்படைக்க வேண்டியதில்லை.
-----------------------------------------------------------------
ஐந்தாவது: அடிமை உரிமையிடல்.
அறிஞர்கள் இதற்கு மூன்று விதமான விளக்கங்களை அளித்துள்ளனர்.
1. உரிமைச் சீட்டு எழுதிக் கொண்டவர்: அதாவது பின்னர் தனக்குரிய பணத்தொகையை ஒப்படைத்துவிடுவதாகக் கூறி தன்னைத்தானே தனது எஜமானனிடமிருந்து விடுவித்து உரிமைச்சீட்டு எழுதிக் கொண்டவர்| தனது எஜமானனுக்கு கொடுக்க வேண்டியதை செலுத்துவதற்காக ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கலாம்.
2. எஜமானனின் சொத்தாக கருதப்படும் அடிமை: இவரை உரிமையிடுவதற்காக ஸகாத் பணத்தை பயன்படுத்தி அவரை வாங்க முடியும்.
3. காபிர்களினால் சிறைப் பிடிக்கப்பட்ட முஸ்லிம்: இவரை விடுவிப்பதற்காக ஸகாத் பணத்தைப் பயன்படுத்தலாம்.
கடத்தப்பட்டவரை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஒரு காபிர் அல்லது முஸ்லிம் ஒரு முஸ்லிம் சகோதரரை கடத்தி கப்பம் கேட்டால் அவரை விடுவிப்பதற்காக ஸகாத் பணத்திலிருந்து கொடுக்க முடியும். ஏனெனில் காரணி ஒன்றுதான். அதாவது விடுவித்தல், உரிமையிடல் என்பது.
ஆறாவது: கடனாளிகள்.
அறிஞர்கள் கடனை இரண்டாகப் பிரித்து நோக்குகின்றனர்.
1) இருதரப்பினருக்கிடையில் சுமுகம் காண்பதற்காக ஏற்பட்ட கடன்.
2) தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக ஏற்பட்ட கடன்.
முதலாவது வகை: இரு தரப்பாருக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதற்கு உதாரணமாக இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிப்பிடலாம். இப்படியான நிலையில் ஆளுமையும் செல்வாக்கும் உள்ள ஒரு நலன்விரும்பி தனது பொறுப்பில் செலவுகளை ஏற்று இரு தரப்பாருக்குமிடையில் இணக்கமும் சமாதானமும் செய்து வைத்தால் அவருக்கு ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கலாம்.
முஃமின்களுக்கிடையில் குரோதத்தையும் வன்மத்தையும் நீக்கி, இரத்தம் சிந்தாமல் பாதுகாத்த உத்தம செயலுக்கு உபகாரமாக இவ்வாறு வழங்கலாம். இதை செய்தவர் ஏழையா? பணக்காரனா? என்று பார்க்கப்படக் கூடாது. ஏனெனில் அவரது தேவையை பூர்த்தி செய்வதற்காக இங்கு ஸகாத் வழங்கப்படவில்லை. மாறாக பொது நலனுக்காக அவரது வகிபாகத்துக்காகவே வழங்கப்படுகிறது.
இரண்டாவது வகை: தனது தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக, அல்லது தேவைப்பட்ட ஒன்றை வாங்குவதற்காக கடன்பட்ட ஒருவருக்கு ஸக்காத் கொடுக்கலாம். ஆனால் அதை நிறைவேற்றும் அளவு அவரிடம் பணம் இல்லாதிருக்க வேண்டும்.
இங்கு ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். கடன்பட்டவரிடம் தொகையை ஒப்படைத்து கடனை அடைக்கச் செய்வது சிறந்ததா? அல்லது நாங்களாகவே கடன் கொடுத்தவரிடம் சென்று கடனை ஒப்படைப்பதா?
குறித்த மனிதர்| தான் பட்ட கடனை அடைப்பதில் முயற்சி எடுக்கக்கூடியவராகவும் தனது தலையில் இருக்கும் கடன் சுமையை இறக்கி வைப்பதில் தேவையுள்ளவராகவும் இருந்தால் அவரிடமே கடன் தொகையை ஒப்படைக்கலாம். ஏனெனில் கடன் கொடுத்தவரிடம் கடன் பெற்றவர் வெட்கப்பட வேண்டிய சூழலை இல்லாமலாக்கி அவரது விடயத்தை மறைத்துக் கொள்ள இது சிறந்ததாகும்.
ஆனால் குறித்த மனிதர் வீணராகவும் ஊதாரியாகவும் இருந்தால் அவரிடம் பணத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் வீணானவற்றையும் தேவையற்றவைகளையும் வாங்கி செலவுபண்ணிவிடுவார் என்ற நிலை இருக்கிறது. எனவே அவர் சார்பாக ஸகாத் குழுவிலிருந்து நேரடியாக கடனை அடைப்பது பொருத்தமானது.
ஏழாவது: அல்லாஹ்வின் பாதையில் …
இங்கு அல்லாஹ்வின் பாதையில் என்பது இஸ்லாமிய அரசின் ஆயுதப் படையால் மேற்கொள்ளப்படும் அறப்போராட்டமாகும். வேறு விளக்கங்கள் இதற்கில்லை. அனைத்து பொதுநலத்திட்டங்களையும் இதில் உள்ளடக்க முடியாது. ஏனெனில் ஏனைய நலத்தி;ட்டங்களையும் இது குறிக்கிறது என்று விளக்கமளித்தால் முன்னர் சொல்லப்பட்;ட ஏழு கூட்டத்தாரையும் இந்த வசனத்தில் (தவ்பா: 60) விபரிக்க வேண்டிய தேவையில்லை. அவை அனைத்தும் பொதுநலச் சேவையில் உள்ளடங்குகிறதல்லவா?
எனவே 'பீ ஸபீலில்லாஹ்" என்பது அரசாங்கத்தின் ஆயுதம் தரித்த படை வீரர்கள் யுத்தம் செய்வதையே குறிக்கும். அதன்படி அரச படை வீரராக பணியாற்றும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றவருக்கு ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கப்படும். அல்லாஹ்வின் வார்த்தை உயர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர் போராடுவார். தமது செலவுகள் மற்றும் ஆயுதத் தேவைகளுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் போதுமானளவு கொடுக்கப்படும். அவர்கள் போராடுவதற்காக அவர்களுக்கு ஆயுதங்கள் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் போராடுபவர் அல்லாஹ்வுக்காக போராடுபவராக இருக்க வேண்டும்.
இனவெறியில் (துவேசத்துக்காக) போராடுபவர், வீரத்தைக் காட்ட போராடுபவர், பிரபல்யமாகப் போராடுபவர் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது: 'அல்லாஹ்வின் வார்த்தை உயர்வடைவதற்கு யார் போராடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவராவார்" என்று பதிலளித்தார்.
மண்ணுக்காக வெறியோடு போர் செய்பவராக இருந்தாலும் அல்லது வேறு துவேஷத்துக்காக போராடுபவராக இருந்தாலும் அது அல்லாஹ்வின் பாதையில் போராடுவதாக இருக்காது. அல்லாஹ்வின் வார்த்தைக்காக போராடுபவருக்கு கிடைக்கும் வெகுமதிகளும் கூலிகளும் இம்மையிலும் கிடைக்காது, மறுமையிலும் அவருக்குக் கிடைக்காது.
தனது உடல் பலம் மற்றும் வீரத்துக்காக ஒருவர் யுத்தத்தை விரும்பலாம் அந்த அடிப்படையில் யுத்தம் செய்பவரும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்பவராக மாட்டார். அதேபோல்தான் முகஸ்துதிக்காகவும், பேருக்கும் புகழுக்கும் யுத்தத்தில் கலந்துகொள்பவர் அல்லாஹ்வின் பாதையில் போராடியவராக மாட்டார். எனவே இத்தகையவர்களுக்கு ஸகாத்தில் பங்கில்லை.
அறிஞர்கள் கூறுகின்றனர்: மார்க்கக் கல்வியை பெறுவதற்காக தன்னை அர்ப்பணித்தவரும் பீ ஸபீலில்லாஹ் என்ற அறப்போராட்டத்தில் கணிக்கப்படுவர். எனவே தனது செலவு, உடை, உணவு, உறைவிடம் தனக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் எழுத்து உபகரணங்கள் ஆகியவற்றுக்காக ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கப்படும். ஏனெனில் மார்க்கக் கல்வி ஒரு வகையான அறப்போராட்டமே.
இமாம் அஹ்மத் (ரஹ்) கூறும்போது: 'தூய எண்ணத்துடன் அறிவைத் தேடுவதற்கு நிகராக எதுவும் கிடையாது." அனைத்து மார்க்க விடயங்களுக்கும் அடிப்படை அறிவாகும். அறிவில்லாமல் மார்க்கம் இல்லை. மக்கள் நீதியாக வாழ்வதற்கும் தமது மார்க்க சட்டதிட்டங்களை அறிந்துகொள்ளவும் சொல், செயல் ரீதியான நம்பிக்கைக் கோட்பாட்டை அறிந்து தெளியவுமே அல்லாஹ் வேதத்தை இறக்கியருளினான்.
அல்லாஹ்வின் பாதையில் அறப்போராட்டத்தில் ஈடுபடுவது புனிய காரியமாகும், இஸ்லாத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். அதன் சிறப்பில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் அறிவுத் தேடலுக்கும் இஸ்லாத்தில் பாரிய இடமுண்டு. எனவே அறப்போராட்டத்தின் அந்தஸ்தில் அறிவு வைத்துப் பார்க்கப்படுவது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத தெளிவான விடயமாகும்.
எட்டாவது: நிர்க்கதியான வழிப்போக்கன்.
தனது பயணத்தைத் தொடர்வதற்கான வழிவகைகள் அறுந்த நிலையில் உள்ள பயணி 'இப்னு ஸபீல்" என்று அழைக்கப்படுவார். அவர் போய்ச் சேருமிடத்திற்கு போய்ச் சேர்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதி மற்றும் உணவு போன்ற ஏனைய தேவைகளுக்காக ஸகாத் நிதியத்திலிருந்து வழங்க வேண்டும். அவரது ஊரில் அவர் செல்வந்தராக இருந்தாலும் இக்கட்டான இந்நிலையில் அவர் தேவையுள்ள ஒருவர் என்ற வகையில் ஸகாத்திலிருந்து செலவழிக்கலாம்.
இந்த நிலையில் அவரைப் பார்த்து நீங்கள் கடன் பெற்று உங்களது Nவைகளை முடித்து விட்டு கடனை திரும்ப ஒப்படையுங்கள் என்று கூற முடியாது. ஏனெனில் இந்த நிலையில் ஸகாத் பெறுவதற்கான உரிமையை மார்க்கம் அவருக்கு வழங்கியுள்ளது. ஆனால் அவராக விரும்பி ஸகாத் எனக்குத் தேவையில்லை, அதை நான் திரும்ப ஒப்படைத்துவிடுகிறேன் என்று சொன்னால் அது அவரது சுதந்திரமாகும்.
உதாரணமாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணிக்கக்கூடிய ஒருவர் இடையில் தனது பணப்பையை தொலைத்துவிடுகிறார். அவர் ஊரில் பெரும் செல்வந்தராக இருந்தும் தற்போது அவர் நிர்க்கதியான நிலையில் உள்ளார். இப்போது அவர் மதீனாவை சென்றடைவதற்குத் தேவையானளவு பணத்தை மட்டும் அவருக்கு கொடுக்க வேண்டும். மேலதிகமாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை.
-----------------------------------------------------------------
ஸகாத் பெறத் தகுதியானவர்களை அடையாளம் கண்டுவிட்டால் இவை தவிர உள்ள பொதுநலச் சேவைகள் அல்லது தனிப்பட்ட தேவைகள் என்பன ஸகாத் நிதியத்திலிருந்து விநியோகிக்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே மஸ்ஜித் நிர்மாணப் பணி, பாதை சீர்திருத்தம், அலுவலகங்கள் கட்டுதல் போன்றவற்றுக்காக ஸகாத் நிதியத்திலிருந்து வழங்கப்பட முடியாது. ஏனெனில் எட்டுக் கூட்டத்தாரையும் குறிப்பிட்ட அல்லாஹ் 'இது அல்லாஹ்விடமிருந்து கடமையான பங்குவைத்தலாகும்" என்று குறிப்பிடுகிறான்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இவ்வெட்டுக் கூட்டங்களுக்கும் ஸகாத் கொடுத்தே ஆகவேண்டுமா? ஏனெனில் இங்கு ஒவ்வொரு பிரிவினருக்குமிடையில் 'வாவ்" பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 'மேலும்" என்று அர்த்தமாகும். வாவ் எழுத்தின் பிரயோகம்| இவரும், இவரும், இவரும், … என்று அனைவரையும் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அவ்வாறு எட்டுக் கூட்டத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று கடமையில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பியபோது: 'அல்லாஹ் அவர்களது செல்வங்களில் ஸகாத்தை விதியாக்கியுள்ளான்| அவர்களது செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக." என்று கூறிய போது எட்டுக் கூட்டத்தாரில் ஒரு கூட்டமாகிய ஏழைகளை மட்டுமே குறிப்பிட்டார்கள். ஏனவே அல்லாஹ் பட்டியலிட்டது ஸகாத் பெறத் தகைமை உள்ளவர் யார் என்பதைத்தானே தவிர| அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் என்ற நோக்கில் அல்ல.
எட்டுக் கூட்டத்தில் முதலாவது தகுதி பெற்ற கூட்டம் எது என்று கேட்டால் ?
எவரது தேவை கடுமையாக உள்ளதோ அவர்களைத்தான் முற்படுத்த வேண்டும். பெரும்பாலும் ஏழைகளும் வறியவர்களும்தான் முற்படுத்தப்பட வேண்டிய நிலையிலுள்ளோர். அதனால்தான் எட்டுக் கூட்டத்தாரையும் பட்டியலிடும்போது ஏழைகளையே அல்லாஹ் முதலாவது குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
மஜ்மூஉ பத்தாவா இப்னு உஸைமீன் (18ஃ 331 – 339)