0 / 0
04/ரபி/1446 , 07/செப்டம்பர்/2024

ருகூஉ, ஸுஜூது செய்ய முடியாத கர்ப்பிணி

கேள்வி: 36738

நான் ஒரு கர்ப்பிணித் தாய். என்னால் சரியான முறையில் ஸுஜூது செய்ய முடியவில்லை. ஏனெனில் அந்த நிலை கஷ்டமாக உள்ளது. எனவே தொழுகையின் பெரும்பகுதியில் நின்று தொழ முடியுமான நான் அமர்ந்து தொழ முடியுமா?

அமர்ந்து தொழும் சந்தர்ப்பங்களில் நிலத்தில் அமர்வது சிறந்ததா? கதிரையில் அமர்வது சிறந்ததா? நிலையின் போது நின்ற நிலையிலும் ஸுஜூது மற்றும் குணிகின்ற சந்தர்ப்பங்களில் கதிரையில் அமர்வதற்கும் அனுமதியுண்டா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

நோயாளி தொழுகை நிறைவேற்றுவதன் சட்டம் என்னவென்றால், தொழுகையின் அர்கான்கள் (தூண்கள்), வாஜிபாத்துகள் (கடமைகள்) ஆகியவற்றை முடிந்த அளவில் செய்ய வேண்டும். அவரால் முடியாதவை அவரை விட்டும் நீங்கிவிடும். ஏராளமான குர்ஆன், ஸுன்னா ஆதாரங்கள் இதை சுட்டிக்காட்டுகின்றன.

'உங்களால் முடிந்த மட்டும் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள்". (தகாபுன்: 16)

'எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேற்பட்டு அல்லாஹ் சுமத்துவதில்லை". (பகரா: 286)

நபி(ஸல்)  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களுக்கு நான் ஏதேனும் கடமைகளை விதித்தால் முடிந்தளவு அதை எடுத்து நடவுங்கள்". (புகாரி: 7288, முஸ்லிம்: 1337)

இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு மூல வியாதி இருந்தது. எனவே (அதனோடு) தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு 'நின்ற நிலையில் தொழுவீராக! உன்னால் முடியாது விட்டால் இருந்த நிலையில் (தொழுது கொள்!) (அதற்கும்) உன்னால் முடியாது போனால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையிலாவது (தொழுது கொள்). என்று பதிலளித்தார்" (புகாரி: 1066)

இந்த அடிப்படையில் நின்று தொழுவதற்கு உங்களால் முடியுமாக இருந்தால் நின்று தொழுவது வாஜிபாகும். பின்னர் எழுந்து நிற்பதற்கு முடியாது போனால் அல்லது கடுமையான கஷ்ட நிலை ஏற்பட்டால் உங்களால் அமர்ந்துகொள்ள முடியும்.

உங்களது தேவைக்கு ஏற்ப நிலத்திலோ அல்லது கதிரையிலோ அமர்ந்து கொள்வதில் குற்றமில்லை. ஆனால் நிலத்தில் அமர்வது ஏற்றமானது. ஏனெனில் நிலை மற்றும் ருகூவுடைய இடங்களில் சம்மணம் போட்டு உற்காருவதே சுன்னாவாகும். கதிரையில் அமரும்போது அது சிரமமாகும்.

இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்: 'எழுந்து நிற்க முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார். நிலை மற்றும் ருகூஉடைய இடங்களில் சம்மணம் போட்டு உற்காருவதே சிறப்பாகும். (பார்க்க: நோயாளியின் சுத்தமும் தொழுகையும்)

சம்மணமிட்டு உற்காருவது கட்டாயமானதல்ல. அவர் விரும்பியவாறு அமரலாம். ஏனெனில் நபி (ஸல்)  அவர்கள்;: 'முடியாதுவிட்டால் அமர்ந்து தொழட்டும்" என்று பொதுவாகவே கூறியுள்ளார்கள். எவ்வாறு அமர வேண்டும் என்று குறிப்பிடவில்லை. (ஷரஹுல் மும்திஃ: 4ஃ 462)

ருகூஉ, ஸுஜூது செய்வது சிரமமாக இருந்தால் (குனிவதன் மூலம்) சைக்கினை செய்வது போதுமானது, அதாவது முதுகை சற்று குனிந்தால் போதுமானது. ருகூஉவை விட ஸுஜூதின் போது அதிகம் குனிய வேண்டும். எழுந்து நிற்பதற்கு உங்களுக்கு முடியுமாக இருந்தால் ருகூஉவின் போது நின்ற நிலையிலும் ஸுஜூதின் போது அமர்ந்த நிலையிலும் சைக்கினை செய்ய வேண்டும். ஏனெனில் எழுந்து நிற்றல், அமர்ந்திருப்பதை விட ருகூவிற்கு நெருக்கமான நிலையாகும்,  அமர்ந்திருப்பது எழுந்து நிற்றலை விட ஸுஜூதிற்கு நெருக்கமான நிலையாகும்.

இமாம் இப்னு பாஸ் (ரஹ்) கூறும்போது : 'ருகூஉ, ஸுஜூது செய்வதற்கு முடியாமலும் அதே நேரம் எழுந்து நிற்க முடியுமாகவும் இருந்தால் அவரை விட்டும் எழுந்து நிற்றல் எனும் கடமை நீங்காது. அவர் எழுந்து நின்று தொழுவார், ருகூஉவின் போது (குனிவதன் மூலம்) சைக்கினை செய்வார், பின்னர் அமர்ந்து ஸுஜூதின் போதும் (குனிவதன் மூலம்) சைக்கினை செய்வார். ருகூஉவின் குனிவை விட ஸுஜூதின் குனிவு அதிகம் தாழ்ந்ததாக இருக்கும்…"

தொழுது கொண்டிருக்கும்போது தன்னால் செய்ய முடியாதிருந்த| நிலை, அமர்தல், ருகூஉ, ஸுஜூது போன்றவற்றை திரும்ப சரியாக செய்வார்.  (பார்க்க: நோயாளியின் சுத்தம் மற்றும் தொழுகையின் சட்டங்கள்)

இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்: 'ருகூஉ செய்ய முடியாதவர், நின்ற நிலையில் குனிந்து அதற்காக சைக்கினை செய்வார், ஸுஜூது செய்ய முடியாதவர் அமர்ந்த நிலையில் குனிந்து  அதற்காக சைக்கினை செய்வார்.  (ஷரஹுல் மும்திஃ: 4ஃ 475)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
ருகூஉ, ஸுஜூது செய்ய முடியாத கர்ப்பிணி - Islam Question & Answer