0 / 0
22/முகர்ரம்/1446 , 28/ஜூலை/2024

உழ்ஹிய்யா வரைவிலக்கணமும் அதன் சட்டமும்

கேள்வி: 36432

உழ்ஹிய்யா என்றால் என்ன? அது “வாஜிப்” தரத்திலான கடமையா அல்லது ஸுன்னத்தா ?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

உழ்ஹிய்யா : ‘ஈதுல்-அழ்ஹா’ எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் அல்லாஹ்வின் நெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு, (அனுமதிக்கப்பட்ட) கால்நடைகளை அறுத்துப் பலியிடல் இப்பெயரால் அழைக்கப்படுகின்றது.

இது அல்-குர்ஆன் , ஸுன்னா, இஜ்மாஉல்-முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஏகோபிப்பு) ஆகியவற்றால் கடமையாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் வழிபாடுகளில் ஒன்றாகும்.

அல்குர் ஆன் ஆதாரம்:

1) " உமது இரட்சகனைத் தொழுது, அவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக!"

2) ‘‘ (நபியே!) நிச்சயமாக என் தொழுகையும், என் (அறுத்துப்பலியிடல் போன்ற மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை என்றும் மேலும் அவனுக்கு எந்தவொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன் ஆவேன் '' என்றும் கூறுவீராக!

3) "குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக." (22:34)

ஸுன்னா ஆதாரம்:

1) புகாரி (5558) மற்றும் முஸ்லிம் (1966) கிரந்தங்களில் அனஸ் (t) அவர்கள் அறிவிப்பதாவது:

நபி (r) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்துப்பலியிட்டார்கள்.

2) அதுல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் தங்கியிருந்த காலத்தில் உழ்ஹிய்யா கொடுத்துவந்தார்கள்." அஹ்மத் (4935), திர்மிதி (1507), மிஷ்காத்துல் மஸாபீஹ் (1475) கிரந்தத்தில் இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் ஹஸன் தரம் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

3) உக்பத் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கிடையே உழ்ஹிய்யாவுக்கான அறுப்புப் பிராணிகளைப் பிரித்துக்கொடுத்தார்கள்.  அதில் உக்பாவுக்கு (ஆறு மாதம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட) வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. அப்போது அவர்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது” என்று கூறினார். அதற்கு நபி (r) அவர்கள்: ‘‘அதையே நீங்கள் அறுத்துப் பலியிட்டு) குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள். (புகாரி 5547)

4) அல்-பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ‘‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் யார் (குர்பானிக்காக) அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு நிறைவேறிவிடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவரும் ஆவார்” என்று சொன்னார்கள். (புகாரி 5545).

எனவே, இந்த தகவல்களின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள். அத்தோடு ஸஹாபாக்களும் உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள். மேலும் உழ்ஹிய்யா கொடுப்பதானது முஸ்லிம்களின் வழிமுறை எனவும் அறிவித்துள்ளார்கள்.

இதன்படிதான் முஸ்லிம்களும் இது கடமை என்பதில் ஒருமித்த முடிவைக் கொண்டுள்ளனர்.

என்றாலும், இது ஒரு வலியுறுத்தப்பட்ட ‘ஸுன்னா-முஅக்கதா’ வகை வணக்கமா அல்லது விடுவது ஆகுமாக்கப்படாத ‘வாஜிப்’ தரத்திலான கடமையா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன:

அறிஞர்களில் பெரும்பகுதியினர் இது வலியுறுத்தப்பட்ட ‘ஸுன்னா-முஅக்கதா’ வகை எனக் குறிப்பிடுகின்றனர். இதுதான் ஷாஃபிஈ மத்ஹபின் கருத்தாகும். அத்தோடு இமாம் மாலிக், மற்றும் அஹ்மத் ஆகியோரும் இக்கருத்துடையவர்கள் என்பது பிரபல்யம்.

மற்ற இமாம்கள் இது வாஜிப் தரத்திலானது எனக் குறிப்பிடுகின்றனர். இமாம் அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தும் இதுதான். அஹ்மத் அவர்களின் இரண்டு அறிவுப்புக்களில் ஒன்றாகவும் இக்கருத்து காணப்படுகின்றது. ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இக்கருத்தையே தெரிவுசெய்துள்ளார்கள். அது பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: இது மாலிக் மத்ஹபின் இரு கருத்துக்களில் ஒன்றாகும். அல்லது இது மாலிக் மத்ஹபின் வெளிப்படையான கருத்தாகும்" (ரிஸாலத்து அஹ்காமில்-அழ்ஹிய்யா வத்-தகாத், இப்னு உதைமீன் )

அஷ்-ஷெய்க்ஹ் இப்னு உதைமீன் குறிப்பிடுகின்றார்கள்: "உழ்ஹிய்யா சக்தி உள்ளவர் மீது ஸுன்னா-முஅக்கதா எனும் வலியுறுத்தப்பட்ட ஸுன்னா ஆகும். அதன்படி ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவும் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற வேண்டும்". (பத்தாவா இப்னு உதைமீன் 2/661)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
உழ்ஹிய்யா வரைவிலக்கணமும் அதன் சட்டமும் - Islam Question & Answer