Table Of Contents
முதலாவதாக: மறைவான விடயங்களின் வகைகள்.
மறைவான விடயங்கள் இரண்டு வகைப்படும்:
- முழுமையான மறைவான விடயங்கள்.
இதைப் பற்றியய அறிவு அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. உதாரணமாக மறுமை நாள் நிகழும் நேரம்,மழை பொழியும் நேரம் போன்றவைகள்.
- தொடர்புடைய மறைவான விடயங்கள்.
மறைவான விடயங்களைப் பற்றி சிலர் அறியாமல் இருப்பார்கள், சிலர் அவைகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். மறைவான விடயங்களை அறியாதவர்களுடன் தொடர்பு படுத்தி பேசுவதனால் இவ்வகையை தொடர்புடைய மறைவான விடயங்கள் என அழைக்கின்றோமே தவிற அவற்றை அறிந்தவர்களுடன் தொடர்புபடுத்துவதனால் அல்ல.
இஸ்லாத்தில் மறைவான விடயங்கள் என்பது மனிதர்களுடைய புலன்களுக்கு பிடிபடாத விடயங்கள் ஆகும். இவைகள் மனிதர்கள் முற்றிலும் அறிந்து கொள்ள இயலாத, அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய மறைக்கப்பட்ட ரகசியமாக இருக்கட்டும் அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரிடமிருந்து (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) வந்த அறிவிப்பின் மூலமாக மனிதர்கள் அறிந்துக்கொள்ளக் கூடிய மறைவான விடயங்களாக இருக்கட்டும்.
மனிதர்கள் தங்களுடைய பகுத்தறிவு சிந்தனைகளின் மூலமாக அல்லது தங்களுடைய புலன்களின் சக்தியை விரிவடையச் செய்யக்கூடிய சாதனங்களின் மூலமாக, உதாரணமாக தொலைநோக்கிகள் போன்றவைகளின் மூலமாக சில மறைவான விடயங்களை அறிந்து கொள்ள இயலும். இவைகள் தொடர்புடைய மறைவான விடையங்கள் என்ற தலைப்பிற்குள் அடங்கும். இவைகளைப் பற்றி நாம் விரைவில் பார்ப்போம்.
மறைவான விடயங்களின் மீது ஈமான் கொள்வதின் முக்கியத்துவம்
மறைவான விடயங்களின் மீது ஈமான் கொள்வது என்பது எந்த உயிரினங்களுக்கும் இல்லாத மனிதனுக்கு மட்டுமே உரிய சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். ஏனெனில் விலங்குகள் சில உணர்வுகளை விளங்கிக்கொள்வதில் மனிதனுடன் ஒத்துப் போகின்றது ஆனால்,மறைவான விடயங்களைப் பொருத்தவரை அதில் நம்பிக்கை கொள்வதில் விலங்குகளுக்கு மாற்றமாக மனிதன் மட்டுமே தகுதியுடையவனாக இருக்கின்றான். ஆகையால் தான் மறைவான விடயங்களில் ஈமான் (நம்பிக்கை) கொள்வது என்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாக அல்லாஹ் இறக்கிய அனைத்து வேதங்களிலும் காணப்படுகின்றது. அல்லாஹ் அனுப்பிய பல ஷரீயத்துகளில் பல மறைவான விடயங்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது. இவைகளைப் பற்றி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வாயிலாகயின்றி மனிதனால் தெரிந்து கொள்ளவே இயலாது. உதாரணமாக, அல்லாஹ்வைப் பற்றியும், அவனுடைய குணாதிசயங்கள் மற்றும் செயல்கள், ஏழு வானங்கள் மற்றும் அதில் உள்ளவைகள், மலக்குமார்கள், நபிமார்கள், ஜின், மற்றும் ஷைத்தான்கள் மற்றும் இன்னபிற நம்பிக்கை சார்ந்த மறைவான விடயங்களையும், குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வாயிலாகயின்றி மனிதனால் புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ இயலாது.
மறைவான விடயங்களுடைய வகைகளின் உட்பிரிவுகள்
- முழுமையான மறைவான விடையங்கள்
மனிதனால் எந்த ஒரு சாதனத்தின் மூலமாகவோ அல்லது அவனுடைய புலன்களின் மூலமாகவோ தெரிந்து கொள்ள முடியாது விடயங்கள் இதில் சேரும். இது இரண்டு வகைப்படும்.
முதல் வகை:
அல்லாஹ் தன்னுடைய வஹியின் மூலமாக தன்னுடைய தூதர்களை கொண்டு மக்களுக்கு அறிவித்த மறைவான விடயங்கள் இந்த வகையில் சேரும். உதாரணமாக ஜின் மற்றும் ஷைத்தான்களைப் பற்றி வரக்கூடிய செய்திகள். அல்லாஹ் கூறுவதாக:
(நபியே!) நீர் கூறுவீராக! “நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள், (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்; பிறகு (தங்கள் இனத்தாரிடம் சென்று,) நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான குர்ஆனை செவியுற்றோம் என்று கூறினார்கள்” என வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” “அ(ந்தக் குர் ஆனாகிற)து நேர்வழியின்பால் வழிகாட்டுகிறது; ஆகவே, அதனை நாங்கள் விசுவாசித்தோம்; (இனி) நாங்கள் எங்ளுடைய இரட்சகனுக்கு ஒருவரையும் இணையாக்கவே மாட்டோம்”-ஸூரத்துல் ஜின்னு 72: -1-2.
இரண்டாவது வகை:
எந்த மறைவான விடயங்களைப் பற்றிய அறிவை அல்லாஹ் தனக்கே உரித்தாக்கி கொண்டு அவனுடைய படைப்பினங்களில் எவருக்கும் அதைத் தெரிவிக்கவில்லையோ- அது அனுப்பப்பட்ட நபியாக இருக்கட்டும் அல்லது அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்காக இருக்கட்டும்- அப்படிப்பட்ட விடயங்கள் இந்த வகையில் சேரும். அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன, அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்..-ஸூரத்துல் அன்ஆம் 6:59
இவ்வகைக்கு உதாரணமாக, ,உலகத்தின் அழிவு நேரம், ஒருவருடைய இறப்பின் நேரம், இடம் மற்றும் அதற்கான காரணம், மற்றும் அல்லாஹ் தனக்குத்தானே அழைத்துக் கொண்ட சில பெயர்கள் மற்றும் இன்னபிற விடயங்கள்.இதைப் பற்றி அல்லாஹ் கூறுவதாக:
“நிச்சயமாக அல்லாஹ்_அவனிடம்தான் மறுமைநாள் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையையும் இறக்கிவைக்கிறான், அவனே கர்ப்பங்களில் உள்ளவைகளையும் அறிகிறான், எந்த ஆத்மாவும், நாளை அது எதைச் சம்பாதிக்கும் என அறியாது. மேலும், எந்த ஆத்மாவும் எந்தப் பூமியில் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதையும் அறியாது, நிச்சயமாக அல்லாஹ் (அவனே) நன்கறிகிறவன், (செய்திகளை) நன்குணர்பவன்”.-ஸூரத்து லுக்மான் 31:34
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய சில துஆக்களில் அல்லாஹ்வின் சில பெயர்கள் மறைவான விடயங்கள் என சுட்டிக்காட்டியள்ளார். உதாரணமாக ஓரு துஆவில்:
“யா அல்லாஹ் நிச்சயமாக நான் உன்னுடைய அனைத்து பெயர்களைக் கொண்டு (இந்த துஆவைக்) கேட்கின்றேன், அந்தப் பெயர்கள் உனக்கு நீயே வைத்துக் கொண்டதாக இருக்கட்டும் அல்லது உன்னுடைய அடியார்கள் எவரேனும் ஒருவருக்கு கற்றுக் கொடுத்ததாக இருக்கட்டும் அல்லது மறைவான விடயங்களில் ஒன்றாக அந்தப் பெயர்களை நீ உனக்கே உரித்தாக்கிக் கொண்டதாக இருக்கட்டும்”.
2.தொடர்புடைய வரையறுக்கப்பட்ட மறைவான விடயங்கள்:
இவைகளைப்பற்றி சிலருக்கு தெரியாமல் இருக்கும், உதாரணமாக வரலாற்றுச் சம்பவங்கள். இவைகளைப் பற்றி அறியாதவருடன் தொடர்பு படுத்தி கூறுவதுனால், இவ்வகை, இவ்வாறு அழைக்கப்படுகின்றது. ஆகையால்தான், அல்லாஹு தஆலா தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இம்ரான் குடும்பத்தார்களுடைய கதையை கூறிய பிறகு இவ்வாறு கூறுகின்றான்:
“(நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்) நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை”-ஸூரத்துல்ஆல இம்ரான் 3:44
3. தொடர்பில்லாத வரையறுக்கப்பட்ட மறைவான விடயங்கள்:
காலம்(எதிர்காலம்), இடம் போன்றவைகள் மனிதனுக்கு இடைவெளிகளாக அமைந்து அவனை உணர முடியாமல் செய்கின்ற விடயங்கள் இதில் சேரும்.அந்த இடைவெளிகள் விலகும் பொழுது அவைகளை உணர முடியும். அல்லாஹ் இதை பின்வருமாறு தன்னுடைய திருமறையில் குறிப்பிடுகின்றான்.
அவர்மீது நாம் மரணத்தை விதியாக்கிய பொழுது, அவருடைய மரணத்தைப் பற்றி (அவர் சாய்ந்திருந்த) அவருடைய தடியை அரித்துவிட்ட கறையானைத் தவிர, (வேறெதுவும்) அ(ந்த ஜின் இனத்த)வர்களுக்கு அறிவிக்கவில்லை, பின்னர், அவர் கீழே விழவே, “மறைவானதை அறியக்கூடியவர்களாக தாங்கள் இருந்திருந்தால் இழிவான வேதனையில் தாங்கள் தரிப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்று ஜின்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டன.-ஸூரத்துஸ் ஸபா 34:14
இந்த வசனம் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மவுத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது.
மறைவான விடயங்களுடய உதாரணங்களில் சிலவை:
- ஆன்மா: அல்லாஹ் தஆலா இதைப்பற்றி கூறுவதாக:
(நபியே!) ரூஹை! ஆன்மாவை)ப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், (அதற்கு) நீர் “ரூஹு எனது இரட்சகனின் கட்டளையில் உள்ளதாகும், (அதைப் பற்றிய) அறிவிலிருந்து வெகு சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை, (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)” என்று கூறுவீராக!--ஸூரத்துல் இஸ்ரா 17: 85
- கியாமத் நாளின் சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள்:
இதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நடந்த உரையாடலில் தெளிவாக அறிவித்துள்ளார்: “ஒரு அடிமைப்பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பதும், காலில் செருப்பு இல்லாத அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆற்றிடியர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான கட்டிடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பது ஆகும்”
நபியவர்கள் அறிவித்த கியாமத் நாளின் பல சிறிய அறிகுறிகளில், மேலே கூறியது நடந்து விட்டது.அவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறிவித்த பெரிய அறிகுறிகளான தஜ்ஜால் மற்றும் கொடிய விலங்கின் வருகைகள் இறுதி நாளுக்கு அருகாமையில் நிகழும்.-( பார்க்க நூல் "அல் அகீதா", விசாரத்துல் அவ்காஃப் அஷ்ஷூன்அல் இஸ்லாமிய்யாஹ் வெளியீடு, ஷாமிலாஹ் பிரதி)
எனவே, உங்கள் நண்பர் செய்த செய்கையானது முழுமையான மறைவான விடயங்களில் சேராது எனவும், அது "தொடர்புடைய மறைவான விடயங்கள்"ளில் தான் சேரும் என்பது உங்களுக்கு இப்பொழுது விளங்கியிருக்கும். இந்த அலாரம் போன்ற உணரக்கூடிய மற்றும் தொட்டு அறிந்து கொள்ளக்கூடிய விடயங்களை அவர் தெரிந்து வைத்திருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எத்தனையோ இது போன்ற விடயங்கள் இவ்வாறு நடக்கும் என சொல்லியவர்களின் கூற்றும் அதைப்பற்றி அறிந்தவர்களின் கூற்றும் அவர்கள் கூறியதற்கு மாற்றமாக தாமதமாக நடந்திருக்கின்றது என்பதை ஒரு புத்திசாலி மறந்துவிடமாட்டான். எத்தனை நபர்கள் ரயில் மற்றும் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் என்று கணித்து அது தாமதமாகியிருக்கிறது. எத்தனையோயோ நபர்கள் சாதனங்களின் மூலம் சிசுவைப்பற்றி கணித்தும் அது முழுமை பெறாமல் களைந்து போயிருக்கின்றது. நீங்களும் சில நேரங்களில் உங்களுடைய கடிகாரத்தை, அது ஒலிப்பதற்கு முன்பாகவே நிறுத்த முயற்சி செய்து அது நடைபெறாமல் போயிருக்கின்றது அல்லது சில நேரங்களில் பேட்டரி காலியாகி அலாரம் அடிக்காமல் போயிருக்கின்றது மற்றும் இன்னபிற விடயங்கள். இது போன்ற தெளிவில்லாத விஷயங்கள் நீடிக்க இயலாத பலகீனமானவைகள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் சுலபம். இவை அனைத்தும் காலியாகவுள்ள மனதில் யதார்த்தமற்ற விடயங்களை புகுத்துவதனால் ஏற்பட்டதாகும். தேவையற்ற விடயங்களை அதிகமாக சிந்திக்காமல் இருந்திருந்தால் மற்றும் ஷைத்தான் ஆதமின் பிள்ளைகளை கவனத்தை திசைதிருப்பாமல் இருந்திருந்தால் இவற்றுக்கு எப்பெறுமதியும் இல்லை.
இரண்டாவதாக: விதி எழுதப்பட்டுள்ளது என்பது விதியின் மீது நம்பிக்கை கொள்ளுதலின் நிலைகளில் ஒன்றாகும்.
அல்கழா வல்கதர் என அழைக்கப்படும் விதியின் மீது நம்பிக்கை கொள்ளுதல் பல நிலைகளை உடையது அதில் ஒரு நிலைதான் அவற்றை அல்லாஹ் எழுதியது என ஈமான் கொள்ளுதல். அல்லாஹ் எழுதிய விதிக்கும் மேலே கேள்வியில் இடம்பெற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விதியைப் பற்றிய கேள்வியில் கடிகார அலாரம் உதாரணத்தைக் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வியப்புக்குள்ளானோம்.
அலாரம் அடிக்கவே அடிக்காது என ஒருவேளை அல்லாஹ் தன்னுடைய புத்தகத்தில் நமக்கு அறிவித்திருந்து பிறகு அது அடிக்குமானால் மேலே கேட்ட கேள்வி சரியாக அமைந்திருக்கும் ஏனெனில் அல்லாஹ் கூறியதற்கு மாற்றமாக இன்னொன்று நடந்துள்ளது.
ஒரு அடியான் நடந்து முடிந்த விடயத்தையோ அல்லது நிகழ்கின்ற அல்லது நடக்காத எதிர்கால விடயத்தைப் பற்றியோ தெரிந்து வைத்திருக்கிறான் என்றால், அவன் அவைகளைப் பற்றி அறியக்கூடிய வழிமுறைகளில் அறிந்துவைத்துள்ளான். ஆக இதற்கும், கியாமத்து நாள் வரைக்கும் நடக்கவிருக்கும் அனைத்தையும் அல்லாஹ் லவ்ஹுல் மஹ்பூள் என்ற பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியதற்கும் ஏதாவது பிரச்சினை உள்ளதா என்ன?
விதி எழுதப்பட்டுள்ளது என்பது விதியின் மீது நம்பிக்கை கொள்ளுதலின் நிலைகளில் ஒன்றாகும். அதாவது அல்லாஹ் இந்த வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு 500 வருடத்திற்கு முன்பாகவே அனைத்தையும் லவ்ஹுல் மஹ்பூள் என்ற பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதி விட்டான் என்று நம்புவது.
விதியின் மீதுள்ள நம்பிக்கை ஆரோக்கியமானதாக இருப்பதற்கு தேவையானவைகள்:
- ஒரு அடியான் தன்னுடைய செயல்கள் அனைத்தையும் தன்னுடைய தேர்விற்கும் மற்றும் நாட்டத்திற்கும் ஏற்பவே செய்கிறான் என நம்புவது.
- ஒரு அடியானின் நாட்டமும் சக்தியும் அல்லாஹ்வின் சக்திக்கும் மற்றும் நாட்டத்திற்கும் உட்பட்டே நடக்கின்றது என நம்புவது. ஏனெனில் அவன் தான் தன்னுடைய அடியானுக்கு தேர்வு செய்யும் மற்றும் பகுத்தறிய செய்யும் ஆற்றலை வழங்கியுள்ளான். அல்லாஹ் கூறுவதாக: இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.-ஸூரத்துத் தக்வீர் 81:29
மேலும் விவரங்களுக்கு பின்வரும் கேள்வி பதிலை பார்க்கவும்:(49004)
மேலும் நீங்கள் அந்த அலாரத்தை இயக்குவதும் அது அடிக்கும் என நீங்கள் அறிந்திருப்பதும் அந்த அலாரம் அடிப்பதும் இவை அனைத்தையும் அல்லாஹ் நாடி உள்ளான் மற்றும் அவ்வாறே அதை படைத்துள்ளான். ஒருவேளை ஏதாவது காரணத்தினால் அது இயங்காமலும் இருக்கலாம். இதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடக்கின்றது. இவை ஒவ்வொன்றயும் அல்லாஹ் ஏற்கனவே எழுதி வைத்துள்ளான் மற்றும் கணக்கிட்டுள்ளான்.
அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் எழுதிய விதி இரண்டு வகைப்படும் ஒன்று திருத்தவும் மாற்றவும் இயலாதது. இவைதான் லவ்ஹுல் மஹ்பூள் என்ற பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மற்றொன்று மாற்றவும் திருத்தவும் இயலும். இவை மலக்குமார்கள் கையில் உள்ளது. எந்த விடயம் இவர்கள் கைக்கு இறுதியாக சென்றடையும் என்பது கூட லவ்ஹுல் மஹ்புல் என்ற கிதாபில் எழுதப்பட்ட விடயமே. இதனுடைய ஒரு பொருளை பின்வரும் இறைவசனத்தில் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
(அப்பதிவேட்டில்) அல்லாஹ் அவன் நாடியதை அழித்துவிடுவான், (அவன் நாடியதை) நிலைப்படுத்தியும் விடுவான், இன்னும், (அனைத்திற்கும்) மூலப்பதிவேடு அவனிடத்தில் உள்ளது.-ஸூரத்துர் ரஃது 13:39
மேலும் நாம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பார்த்தோமேயானால் உறவுகளைப் பேணுவது ஒருவரின் ஆயுளையோ அல்லது வாழ்வாதரத்தையோ அதிகரிக்கும் அல்லது ஒருவரின் துஆனாது விதியை திருப்பியனுப்பிவிடும். அல்லாஹ்வுக்கு தன் அடியான் உறவுகளை பேணுவான் என்பதையும் மற்றும் அவன் தன்னிடம் துஆ கேட்பான் என்பதையும் அறிவான் ஆகையால்தான் லவ்ஹுல் மஹ்பூளில் அவனுக்கு அதிகமான வாழ்வாதாரத்தையும் ஆயுளையும் முன்பே எழுதிவைத்துவிட்டான்.
அல்லாஹ் நன்கறிந்தவன்.