தவஸ்ஸுல் எனும் அரபுப்பதத்திற்கான மொழிரீதியான கருத்து "ஒருவரிடம் நெருங்குதல்" என்பதாகும் . அல்லாஹ் கூறுகிறான் {அவர்களே(கூட) தம் இறைவனின் நெருக்கத்தை (வஸீலாவை) தேடிக் கொண்டிருக்கிறார்கள்(17/57)}. இந்த உதவிவேண்டுதல் என்பது அனுமதிக்கப்பட்டது , தடைசெய்யப்பட்டது என இரண்டு வகைப்படும்.
மார்க்கம் அனுமதித்த வேண்டுதல்:
சொல், செயல், நம்பிக்கை கோட்பாடு சார்ந்த கடமையான மற்றும் உபரியான அல்லாஹ் விரும்பக் கூடிய, பொருந்திக் கொள்ளக்கூடிய வணக்கவழிபாடுகள் மூலம் அவனிடம் உதவி வேண்டுதல் . இது பலவகைப்படும்:
1. அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் அழகிய பண்புகளைக் கொண்டு அல்லாஹ்விடம் வேண்டுதல். அல்லாஹுதஆலா சொல்கிறான்: {அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன, அவைகளைக் கொண்டு அவனை அழையுங்கள் அல்லாஹ்வுடைய பெயர்களில் திரிபு ஏற்படுத்துவர்களை விட்டு விடுங்கள்: அவர்கள் செய்தவற்றுக்கு (மறுமையில்)கூலி கொடுக்கப்படுவார்கள (7/180)} ,எனவே ஒரு அடியான் பிரார்த்தனை செய்தால் அவன் எதனை கேட்க விரும்புகிறானோ அதற்கு பொருத்தமான அல்லாஹ்வின் பெயரை சொல்லி கேட்க வேண்டும்.அதாவது ஒருவர் அருளை (ரஹ்மத்தை) கேட்கிறார் என்றால் அதற்கு முன்னால் அல்லாஹ்வின் அருளாளன் (ரஹ்மான்) என்ற பெயரை வைத்து பிரார்த்திக்க வேண்டும் , அல்லது ஒருவர் பாவமன்னிப்பு தேடுகிறார் என்றால் பாவங்களை மன்னிக்கக் கூடியவனே (கபூர்)என்ற அல்லாஹ்வின் பெயரை வைத்து கேட்க வேண்டும்.
2. இறை நம்பிக்கை , ஏகத்துவம் போன்றவைகளை கொண்டு அல்லாஹ்விடம் வேண்டுதல் அல்லாஹுதஆலா கூறுகிறான்: (எங்களுடைய இறைவனே நீ இறக்கிய (வேதத்)தை விசுவாசம் கொண்டோம், (உன்னுடைய) தூதரையும் பின்பற்றினோம், எனவே சத்தியத்தின் சாட்சியாளர்களுடன் எங்களையும் ஆக்கி விடுவாயாக(3/53)}.
3. நல்லமல்கள் மூலம் அல்லாஹ்விடம் வேண்டுதல்: அதாவது ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மற்றும் தூய்மையான தொழுகை , நோன்பு , குர்ஆன் ஓதுதல், ஹராமானவற்றை விட்டும் பேணுதலாக இருத்தல் போன்ற நல்ல அமல்களை வைத்து அல்லாஹ்விடம் வேண்டுதல். அதனைத்தான் புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் பதிவான, குகைக்குள் சிக்குண்ட அந்த மூன்று நபர்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது அந்த மூன்று பேரும் அவர்களுடைய நல்லமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவற்றை கொண்டு அல்லாஹ்விடம் உதவி வேண்டினார்கள்.
அதேபோன்றுதான் அடியான் தன்னுடைய இயலாமையை அல்லாஹ்விடம் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அதனை தான் அல்லாஹுதஆலா தன்னுடைய நபியான அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை பற்றி சொல்லும் பொழுது {இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”} (21/83)} என பிரார்த்தனை செய்தார் என்று கூறுகிறான் . அல்லது தான் தனக்கு அநியாயம் செய்து கொண்டதாக வருந்தி தான் அல்லாஹ்வின் பால் தேவையுடையவன் என உணர்ந்து பிரார்த்திக்க வேண்டும் . நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறு தான் பிரார்த்தனை செய்தார் என்பதை அல்லாஹுதஆலா திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் {எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்(21/87)}.
அனுமதிக்கப்பட்ட இந்த வேண்டுதலானது, அதனுடைய ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சட்டங்கள் இருக்கின்றன. உதாரணமாக அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது ஏகத்துவத்தை கொண்டு உதவி வேண்டுதல் வாஜிபாகவும் , அதல்லாத பிற நல்லமல்களை கொண்டு உதவி வேண்டுதல் விரும்பத்தக்க விடயமாகவும் இருக்கின்றது.
நூதனமாக உருவாக்கப்பட்ட மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட வேண்டுதல் : அதுதான் அல்லாஹுதஆலா விரும்பாத அவன் பொருந்திக்கொள்ளாத சொல் , செயல் மற்றும் நம்பிக்கை கோட்பாடுகள் மூலமாக அல்லாஹ்விடம் நெருங்க முயற்சித்தல். மரணித்தவர்கள் அல்லது தம் கண்களுக்கு புலப்படாதவர்களிடம் பிரார்த்தனை செய்வது அல்லது அவர்களிடம் உதவி தேடுவது மூலம் அல்லாஹ்வை நெருங்க முயற்சிப்பது போன்றவைகள் இந்த வகையையே சாரும். இவ்வாறான செயற்பாடுகள் ஏகத்துவத்துக்கு முரணான, அடியானை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேற்றக் கூடிய பெரும் இணைவைப்பைச்சாரும் . ஒரு நலவை வேண்டி அல்லது ஒரு ஆபத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ள கேட்கப்படும் பிரார்த்தனையோ அல்லது அல்லாஹ்விடம் அடிபணிந்து மனமுருகி கேட்கப்படும் வணக்க ரீதியான பிரார்த்தனையோ எதுவாயினும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அவற்றை செய்வது பிரார்த்தனையில் இணைவைத்தலாக கருதப்படும். {இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் நுழைவார்கள்(40/60)} . இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா , அவன் அல்லாதவரை பிரார்த்திப்பவர்கள் அல்லது பிறரை பிரார்த்திக்காவிட்டாலும் முழுமையாகவோ அல்லது சில விடயங்களில் அவனை பிரார்த்திக்காமல் பெருமையடிப்பவர்களுக்கான கூலி என்னவென்பதை தெளிவுபடுத்தியுள்ளான். {ஆகவே, விசுவாசிகளே!) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும் , ரகசியமாகவும் நீங்கள் அழையுங்கள்(7/55)}. அல்லாஹுதஆலா தன்னை மாத்திரமே அழைத்து பிரார்த்திக்குமாறு தனது திருமறையில் பல இடங்களில் கட்டளையிடுகிறான்.
அல்லாஹ் நரகவாசிகள் பற்றி சொல்லும் பொழுது {அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.” உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானவர்களாக ஆக்கி வைத்தோமே(26/97,98)} என தாம் வணங்கியவைகளிடம் கூறுவார்கள் என்று கூறுகிறான். வணக்க வழிபாடுகளில் எவையெல்லாம் அல்லாஹ்வுக்கு சமமாக்கப்படுகிறதோ அவையனைத்துமே இணைவைப்புதான் . அதனை தான் பின்வரும் திருமறை வசனம் சுட்டிக்காட்டுகிறது {மேலும், அல்லாஹ்வை விடுத்து, மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனைவிட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ, இவர்களுடைய அழைப்பைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர். மேலும், மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால், (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் வணங்கியவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர்.(46/5,6)} , இன்னுமொரு வசனத்தில், அல்லாஹுத்தஆலா தன்னை அல்லாது பிறரை பிரார்த்திப்பவர்களை தன்னை விடுத்து இன்னொரு இறைவனை எடுத்துக் கொண்டவராக சித்தரிக்கிறான் {(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதொரு அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள்(23/117)}.
இன்னொரு திருமறை வசனம் இவ்வாறு எச்சரிக்கிறது{உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடயதே! இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அவர்களுக்கு சொந்தமில்லை..அவைகளை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறாது. (அவ்வாறு ஒரு வேளை) செவியுற்றபோதிலும் அவைகளால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது. மறுமை நாளிலோ (அல்லாஹ்வுக்கு) இணைவைத்து அவைகளை நீங்கள் வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உங்களுக்கு அறிவிக்கமாட்டார்(35/13,14)}. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹுதஆலா தான் மாத்திரமே பிரார்த்தனை செய்யப்படுவதற்கு தகுதியானவன், ஏனெனில் தானே அனைத்துக்கும் சொந்தக்காரன் அனைத்தும் தன் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன, தன்னை தவிர்த்து வணங்கப்படுபவை எந்தவொன்றுக்கும் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பது ஒருபுறமிருக்க யாருடைய பிரார்த்தனையையும் செவியுறக்கூட முடியாது, ஒருவேளை அவ்வாறு செவியுற முடியுமென்று வைத்துக்கொண்டாலும்,அவைகளால் அந்த பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியாது ஏனெனில் அவைகளால் எந்த நலவோ தீங்கோ யாருக்கும் செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறான்.
நபியவர்கள் அனுப்பப்பட்ட அந்த அரேபிய சமூகம் பிரார்த்தனையில் அல்லாஹ்வுடன் பிறரை கூட்டுச்சேர்த்ததன் காரணமாக தான் இரைநிராகரிப்பாளர்களாக கருதப்பட்டனர். ஏனெனில் அவர்கள் கஷ்டத்தில் இருக்கும் நிலைமையில் அல்லாஹ்வை மாத்திரம் அழைக்கக்கூடியவர்களாகவும் , நல்ல செழிப்பாக , வசதியாக இருக்கும் நிலைமையில் அல்லாஹ்வுடன் சேர்த்து பிறரையும் பிரார்த்திக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர் . அவர்களின் இந்த செயலைத் தான் பின்வரும் திருமறை வசனங்கள் சொல்லிக்காட்டுகின்றன: {(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்(29/65)} , {இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள்(17/67)} , {நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை செலுத்துகிறான். நீங்கள் கப்பலில் இருக்கும் பொழுது, அதில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று தூய மனதுடன் அல்லாஹ்வை வழிபட்டு பிரார்த்திக்கிறார்கள்(10/22)}.
ஆனால் இன்றைய சில மக்களின் இணைவைப்பானது முன்னோர்களின் இணைவைப்பை விட மோசமாகியிருக்கிறது. ஏனெனில் இவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது கூட சிலசமயம் பிரார்த்தனை செய்தல்,உதவிதேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை பிறருக்கு செய்கின்றனர்.
கேள்விக்கான விடையின் சாரம்சம்: மரணித்தவர்களிடம் உதவி தேடுவது , அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் செய்ய முடியாத விடயங்களில் உயிருடன் இருப்பவர்களிடம் உதவிவேண்டுதல் இரண்டுமே தெளிவான இணைவைப்பாகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் நன்கறிந்தவன்.