அல்லாஹ்விடத்தில் எந்தவொரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு குறித்த வணக்கத்தில் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டியுள்ளது. அவையாவன :
முதலாவது : அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும், மறுமை நாளையும் நோக்காகக் கொண்டு அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செய்தல். அதனை செய்வதன் மூலம் மக்களிடத்தில் நற்பெயரை அல்லது உலகத்தில் ஒரு பயனை நோக்காகக் கொள்ளாதிருத்தல்.
இரண்டாவது : குறித்த வணக்கத்தில் சொல், செயல் ரீதியாக நபிகளார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதாயின், அவருடைய சுன்னாவை (வழிமுறையை) அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.
எனவே உம்றா, ஹஜ் அல்லது ஏதேனும் ஒரு வணக்கத்தின் மூலம் அல்லாஹ்வை வழிபட விரும்புபவர் தான் செய்யும் வணக்கம் நபி வழிகாட்டலுக்கு உட்பட்டதாக அமைந்து விடுவதன் பொருட்டு குறித்த வணக்கத்தின் விடயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைக் கற்றுக்கொள்வது கடமையாகும்.
அதனடிப்படையில் கீழ்வரும் வரிகளில் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளதற்கமைய உம்றா செய்யும் முறையை சுருக்கமாக அலசுவோம்.
உம்றா எனும் போது அதில் பிரதானமாக நான்கு அம்சங்கள் காணப்படும்.
அவையாவன : இஹ்ராம் கட்டுதல், கஃபதுல்லாஹ்வை வலம் வருதல், ஸபா, மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல் மற்றும் முடியை மழித்தல் அல்லது கட்டையாக வெட்டுதல்.
முதலாவது : இஹ்ராம்
இஹ்ராம் என்பது ஒருவர் ஹஜ், உம்றா வணக்கத்தை செய்வதற்கு ஆரம்பிப்பதாக நிய்யத் வைத்தலாகும்.
ஒருவர் இஹ்ராம் கட்டுவதற்கு விரும்பினால் அவருக்கான நபி வழிகாட்டல் யாதெனில், முதலில் அவர் தான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து, பெருந் தொடக்கிலிருந்து சுத்தமாகுவதற்காக குளிப்பதைப் போன்று குளித்து, தன்னிடம் இருக்கும் வாசனைத் திரவியங்களை தனது தலை, தாடியில் பூசிக் கொள்வதாகும். இஹ்ராம் கட்டியதன் பின்னர் அந்த வாசனை அவரது உடலில் இருப்பதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. இதனையே பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. ஆயி~h (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட விரும்பினால் தனக்குக் கிடைத்த சிறந்த வாசனை திரவியங்களைப் பூசிக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களின் தலை முடி, தாடிகளுக்கிடையில் அந்த நறுமணத்தின் பளபளப்பை நான் பார்ப்பேன்." (ஆதாரம் : புகாரி - 271, முஸ்லிம் - 1190)
இஹ்ராம் கட்டும் போது குளிப்பது மாதவிடாய் மற்றும் பிரசவப்பேறுடைய பெண்கள் உட்பட ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஸ{ன்னத்தாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், இஹ்ராம் கட்ட விரும்பிய நிலையில் பிள்ளையைப் பெற்றெடுத்த அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்களுக்கு குளித்து விட்டு, இரத்தம் கசியாதிருக்க ஒரு ஆடையை (கனமாகக்) கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டுமாறு ஏவியுள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 1209)
அவ்வாறு குளித்து, நறுமணம் பூசியதன் பின்னர் உம்றா செய்ய விரும்புபவர் இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவப் பேறுடைய பெண்கள் தவிர்த்து ஏனையவர்கள் இஹ்ராமுடைய ஆடையை அணிந்த பின்பு அது கடமையான தொழுகைக்குரிய நேரமாக இருந்தால் அத்தொழுகையும், அவ்வாறில்லாத பட்சத்தில் வுழூவுடைய ஸுன்னத்தான தொழுகை என்று நிய்யத் வைத்துக் கொண்டு இரண்டு ரக்அத்களையும் தொழுது கொள்ள வேண்டும். தொழுது முடித்ததன் பின்னர் கஃபாவை முன்னோக்கிய நிலையில் இஹ்ராம் கட்ட வேண்டும். அவர் விரும்பினால் பயணத்துக்காக தயாராகி வாகனத்தில் ஏறும் வரைக்கும் இஹ்ராம் சொல்வதைப் பிற்படுத்த முடியும். ஆனால் அவர் மீகாத் எல்லையிலிருந்து மக்காவை நோக்கி புறப்பட முன்பு இஹ்ராம் சொல்ல வேண்டியுள்ளது.
அதன் பின்னர் “லப்பைக்கல்லா{ஹம்ம பிஉம்ரதின்" என்று கூற வேண்டும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த விதமாக அதிகமாக தல்பியா சொல்ல வேண்டும். “ லப்பைக்கல்லா{ஹம்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக" எனும் வார்த்தையே நபிகளார் (ஸல்) கற்றுத்தந்ததாகும். மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் “லப்பைக்க இலாஹல் ஹக்" என்றும் தல்பியா சொல்லியுள்ளதை அறிய முடிகின்றது. இப்னு உமர் (ரழி) அவர்கள் “லப்பைக்க வஸஃதைக்க, வல்கைரு பியதைக், வர்ரக்பாஉ இலைக்க வல்அமல்" என்ற வார்த்தைகளையும் மேலதிகமாக் கூறியிருக்கின்றார்கள். தல்பியா சொல்லும் போது சத்தத்தை உயர்த்துவது நபி வழிகாட்டலாகும். ஒரு தடவை நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து என்னுடைய தோழர்களையும், என்னுடன் இருப்பவர்களையும் சத்தத்தை உயர்த்தித் தல்பா சொல்வதற்கு பணிக்குமாறு ஏவினார்கள்." (ஆதாரம் : அபூ தாவூத் - 1599, இந்நபிமொழி ஆதாரபூர்வமானது என அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.) இதற்கு மேலும் ஆதாரமாக “ஹஜ்ஜில் சிறந்தது சத்தமிட்டு தல்பியா சொல்வதும், அறுப்புப் பிராணிகளின் இரத்தம் வழிந்தோடுவதுமாகும்." என்ற நபிகளாரின் கூற்றைக் குறிப்பிடலாம். (ஸஹீஹுல் ஜாமிஃ - 1112 எனும் இலக்கத்தில் இடம்பெற்றுள்ள இந்நபிமொழியை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளார்கள்.)
பெண்ணைப் பொருத்தமட்டில் அவள் தனக்கு அருகாமையிலிருப்பவர் கேட்கின்ற அளவுக்கு சத்தத்தை உயர்த்திச் சொல்வது போதுமானது. என்றாலும் அவளுக்கு அருகாமையில் அஜ்னபியான (மணம் முடிக்க முடியுமான) ஒரு ஆண் இருக்கும் பட்சத்தில் அவள் சத்தத்தை உயர்த்தாது இரகசியமாகவே தல்பியா சொல்ல வேண்டும்.
இஹ்ராம் கட்ட விரும்புபவர் தனக்கு குறித்த ஹஜ், உம்றாவை பூரணமாக செய்து முடிப்பதற்கு நோய், எதிரிகளின் பிரச்சினை, முற்றுகை அல்லது அது போன்ற ஏதேனும் தடைகள் ஏற்படலாம் எனும் அஞ்சும் பட்சத்தில் அவர் இஹ்ராம் கூறுகின்ற போது “எனக்கு ஏதாவது தடைகள் ஏற்படின் (இறைவா!) நீ எங்கு தடை ஏற்படுத்தினாயோ அது நான் இஹ்ராமிலிருந்து களையும் இடமாகும்." என்று நிபந்தனையாகக் கூற வேண்டும். ஏனெனில் நபிகளார் (ஸல்) அவர்கள், நோயுடன் இஹ்ராம் தரிக்க விரும்பிய ளுபாஆ பின்த் முன்திர் எனும் பெண்ணுக்கு “உம் இறைவனிடமிருந்து (ஏற்கனவே) நீர் விதிவிலக்காக்கிக் கொண்டது உமக்குண்டு." என்று கூறி அவ்வாறு நிபந்தனையிடுமாறு பணித்தார்கள். (ஆதாரம் : புகாரி - 5089, முஸ்லிம் - 1207)
அவ்வாறு யாராவது ஒருவர் நிபந்தனையிட்டு அவருக்கு அவரது ஹஜ், உம்றாவைப் பூரணமாக செய்து முடிப்பதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அவருக்கு இஹ்ராமைக் களைந்து விட முடியும். அதற்காக அவருக்கு எந்தக் குற்றமும் கிடையாது.
ஆனால் யாருக்கெல்லாம் அவ்வாறு தடைகள் ஏற்படும் என அச்சமில்லையோ அத்தகையவர்கள் மேலே கூறியவாறு நிபந்தனையிடக் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு நிபந்தனையிடவுமில்லை. அனைவருக்கும் அவ்வாறு பணிக்கவுமில்லை. ளுபாஆ பின்த் முன்திர் (ரழி) அவர்களுக்கு நபிகளார் அவ்வாறு ஏவியதற்கான காரணம் அப்பெண்மணி நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததினாலாகும்.
இஹ்ராம் கட்டியவர் அதிகதிகமாக தல்பியா சொல்வது அவசியமாகும். குறிப்பாக தாழ்ந்த பிரசேதத்திலிருந்து மலைப்பகுதிக்கு ஏறுதல், மலைப்பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்குதல் போன்ற நிலைமைகள் அல்லது அதிகாலை வெளுத்தல், அந்தி சாய்தல் என காலநேரங்கள் மாறுபடும் போது அதிகமாக தல்பியா சொல்வது நபி வழியாகும். தல்பியா சொன்னதன் பின்னர் அல்லாஹ்விடம் அவனது பொருத்தத்தையும், சுவனத்தையும் வேண்டுவதோடு, அவனது அருளைக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாக்குமாறும் இறைஞ்ச வேண்டும்.
உம்றாவுடைய சந்தர்ப்பத்தில் தல்பியா சொல்வதானது இஹ்ராம் கட்டியதிலிருந்து கஃபதுல்லாஹ்வை வலம் வருவதற்கு ஆரம்பிக்கும் வரையிலாகும். அவ்வாறு கஃபதுல்லாஹ்வை வலம் வர ஆரம்பித்ததும் தல்பியா கூறுவதை நிறுத்தி விட வேண்டும்.
மக்காவில் நுழைவதற்காக குளித்தல்
உம்றா செய்ய விரும்புபவர் மக்காவுக்கு சமீபமாகின்ற போது அவருக்கு முடியுமாக இருந்தால் குளித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு நுழைகின்ற சமயம் குளித்திருக்கின்றார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 1259)
இரண்டாவது : கஃபதுல்லாஹ்வை வலம் வருதல்
உம்றா செய்பவர் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் நுழையும் போது முதலில் வலது காலை வைத்து “பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸ_லில்லாஹ், அல்லா{ஹம்மக்பிர்லீ துனூபீ வப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வபிஸ{ல்தானிஹில் கதீம் மின~; i~தானிர் ரஜீம்" எனும் துஆவை ஓதியவண்ணம் நுழைய வேண்டும். பின்னர் தவாபை (வலம் வருவதை) ஆரம்பிப்பதற்காக ஹஜருல் அஸ்வத் எனும் கல் நடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் சென்று அக்கல்லை தனது வலக்கரத்தால் தொட்டு முத்தமிட்டுக் கொள்வார். அவருக்கு முத்தமிட முடியாவிடின் தனது கரத்தை அக்கல்லின் மீது தடவி தனது கரத்தையே முத்தமிட்டுக் கொள்வார். அதுவும் முடியாத போது அக்கல்லை நோக்கி தனது கரத்தால் சுட்டிக்காட்டி விட்டு தக்பீர் சொல்லிக் கொள்வார். அப்போது அவரது கரத்தை முத்தமிட வேண்டியதில்லை.
அவ்வாறு ஒரு மனிதன் தனது கரத்தை அக்கல்லின் மீது தடவுவதில் பாரியதொரு சிறப்புள்ளதை அவதானிக்க முடிகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் மறுமை நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். அது உண்மையாக தன் மீது கரத்தைத் தடவியவர்களுக்காக சாட்சியமளிக்கும்." (ஆதாரம் : ஸஹீஹுத் தர்கீபி வத்தர்ஹீப் - 1144, இந்நபிமொழி ஆதாரபூர்வமானது என அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.)
ஆனால் அதற்காக வேண்டி மக்களை முட்டி மோதிக் கொண்டு அவர்களையும் நோவித்து, தானும் நொந்து கொண்டு அக்கல்லை நோக்கிச் செல்லாமலிருப்பது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களைப் பார்த்து ஒரு தடவை கூறினார்கள் : “உமரே! நீர் ஒரு பலசாலியான மனிதர். நீர் ஹஜருல் அஸ்வதை அடைவதற்காக மக்களை நெருக்கிச் செல்லாதீர். அதனால் பலவீனமார்கள் நோவினை அடையலாம். அவ்விடம் காலியாக இருப்பதைக் கண்டால் தொட்டு முத்தமிடுவீராக. அப்படி இல்லாத போது (நீர் இருந்த இடத்தில் இருந்து கொண்டு) அதனை முன்னோக்கியவாறு தக்பீர் சொல்லுவீராக." (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் : 191, இதனை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது 'ரிஸாலதுன் பீ மனாஸிகில் ஹஜ்ஜி வல்உம்றா' எனும் நூலில் 21 ஆம் பக்கத்தில் உறுதியான நபிமொழி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பின்னர் வலப்புறம் திரும்பி, அவரது இடப்புறம் கஃபதுல்லாஹ் இருக்கும் நிலையில் வலம்வருவதை ஆரம்பிக்க வேண்டும். அவர் ருக்னுல் யமானியை (ஹஜருல் அஸ்வத் போன்று அதுவும் கஃபா ஆலயத்தின் ஒரு மூலையாகும்.) அடைந்ததும் அதனை முத்தமிடாமலும், தக்பீர் கூறாமலும் தனது கையால் மாத்திரம் அதனைத் தடவிக் கொள்வார். அவருக்கு அவ்வாறு தடவ முடியாவிடின் அந்த இடத்தைத் தாண்டிச் சென்று விடுவார். அதற்காக மக்களை நெருக்கிக் கொள்ளக் கூடாது. மேலும் ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையிலுள்ள பகுதியில் “ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனஹ், வபில்ஆகிரதி ஹஸனஹ், வகினா அதாபன் னார். (பொருள் : “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!)" என்று கூறிக் கொள்வார். (ஆதாரம் : அபூதாவூத் - 1666, இந்நபிமொழியினை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் 'ஸஹீஹ் அபூதாவூத்' எனும் கிரந்தத்தில் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர் ஹஜருல் அஸ்வதுக்கு அருகாமையால் செல்லும் ஒவ்வொரு தடவையும் அதனைத் தடவுவதோடு தக்பீர் சொல்லிக் கொள்வார். தவாபின் எஞ்சிய பகுதிகளில் அவருக்கு விருப்பமானவாறு அல்லாஹ்வை திக்ர் செய்தல், பிராத்தித்தல், அல்குர்ஆன் ஓதுதல் போன்ற அமற்களை செய்வார். ஏனெனில் கஃபதுல்லாஹ்வை வலம் வரும் வழிபாடு மார்க்கமாக்கப்பட்டுள்ளதே அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காகும்.
இந்த தவாபின் போது ஒவ்வொரு மனிதனும் இரண்டு விடயங்களை செய்ய வேண்டியுள்ளது.
ஒன்று : தவாப் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரைக்கும் இழ்திபாஃ செய்வதாகும். இழ்திபாஃ என்றால் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜம் திறந்திருக்கும் விதத்தில் மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போடுவதாகும். அவ்வாறு இழ்திபாஃ செய்த ஒருவர் தவாப் செய்து முடித்ததும் தனது மேலங்கியை, அது தவாபைத் தொடங்குவதற்கு முன்பு எவ்வாறிருந்ததோ அந்த முறைக்கு மாற்றிக் கொள்வார். ஏனெனில் இழ்திபாஃ முறையைப் பேணவேண்டியது தவாபின் போது மாத்திரமாகும்.
மற்றையது : முதல் மூன்று சுற்றுக்களிலும் ரமல் செய்வதாகும். ரமல் என்றால் கால் எட்டுக்களை அவசரமாக வைத்து விரைந்து நடத்தலாகும். இந்த முறையானது முதல் மூன்று சுற்றுக்களில் மாத்திரமேயாகும். எஞ்சிய நான்கு சுற்றுக்களிலும் ரமல் முறை கிடையாது. அவைகளில் வழமை போன்றே நடக்க வேண்டும்.
7 சுற்றுக்கள் கஃபதுல்லாஹ்வை வலம் வந்து முடித்ததும் வலது பக்க தோல் புஜத்தை மறைத்துக் கொண்டு மகாமு இப்றாஹீம் எனும் இடத்துக்குப் போய் “வத்தகிதூ மிம் மகாமி இப்றாஹீம முஸல்லா" எனும் திருமறை வசனத்தை ஓதியவாறு மகாமுக்கு நேர்பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவார். அதில் பாதிஹா அத்தியாயத்தை ஓதியதன் பின் முதல் ரக்அத்தில் அல்-காபிரூன் அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் அல்-இக்லாஸ் அத்தியாயத்தையும் ஓதுவார். தொழுது முடித்ததும் அவருக்கு முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சென்று அதனை தொட்டு முத்தமிட்டுக் கொள்வார். இந்த சந்தர்ப்பத்தில் அதனை தொட்டு முத்தமிடுவதே மார்க்கத்தில் காட்டப்பட்டுள்ளது. தொட்டு முத்தமிட முடியாத வேளையில் கையினால் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. அவர் திரும்பிச் சென்று விட வேண்டும்.
மூன்றாவது : தொங்கோட்டம் ஓடுதல்
பின்பு உம்றா செய்பவர் தொங்கோட்டம் இடம்பெறும் இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அவர் ஸபா மலையடிவாரத்தை நெருங்கியதும் “இன்னஸ் ஸபா வல்மர்வத மின ஷஆஇரில்லாஹ் (பொருள் : நிச்சயமாக ஸபா, மர்வா மலையடிவாரங்கள் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களிலுள்ளதாகும்.) " எனும் திருமறை வசனத்தை ஓதிவிட்டு “அல்லாஹ் எதன் மூலம் ஆரம்பித்தானோ அதைக் கொண்டே நாமும் ஆரம்பிக்கின்றோம்." என்று கூறியவாறு ஸபா மலைக்கு ஏற வேண்டும். அதில் ஏறியதும் கஃபதுல்லாஹ்வை பார்த்து அதனை முன்னோக்கி, தனது இரு கரங்களையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழுவதோடு தான் விரும்பியவற்றின் மூலம் பிராத்தனை செய்ய வேண்டும். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ_ லாஷரீகலஹ் ல{ஹல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்." என்று பிராத்தித்துள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 1218)
இதனை மூன்று முறைகள் திருப்பித் திருப்பிச் செய்ய வேண்டும். அதாவது மேற்கூறப்பட்ட திக்ரை ஓதிவிட்டு பிராத்திக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே திக்ரை ஓதிவிட்டு பிராத்திக்க வேண்டும். பின்னர் மூன்றாவது தடவையாகவும் அதனை ஓதிவிட்டு பிராத்திக்க வேண்டும். மூன்றாவது தடவையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைக் காண அதிகரிக்கக் கூடாது. அதன் பின்னால் ஸபாவிலிருந்து கீழிறங்கி மர்வா மலையடிவாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் தங்களால் முடியுமான அளவு விரைந்து செல்ல வேண்டும். ஆனால் அதற்காக யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒரு தடவை நபிகளார் (ஸல்) அவர்கள் ஸபா, மர்வாவுக்கிடையில் “அப்தஹ் எனும் இடத்தை ஓடிய நிலையிலேயே தாண்ட வேண்டும்." என்று கூறியவாறு தொங்கோட்டம் ஓடியுள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா - 2419, இந்நபிமொழியை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் இப்னு மாஜாவில் ஆதாரபூர்வமானது என குறிப்பிட்டுள்ளார்கள். மேற்கண்ட நபிமொழியில் 'அப்தஹ்" எனப்படுவது இன்று ஸபா, மர்வாவுக்கிடையில் பச்சை விளக்குகளுக்கு மத்தியிலுள்ள இடமாகும்.
அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவாகச் செல்வதை நிறுத்தி வழமை போன்று நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி ஸபாவில் முன்னர் ஓதிய துஆவை ஓதிவிட்டு மர்வாவிலிருந்து இறங்கி ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது நடக்க வேண்டிய இடத்தில் நடக்க வேண்டும். விரைந்து செல்ல வேண்டிய இடத்தில் விரைந்து செல்ல வேண்டும். ஸபாவை வந்தடைந்ததும் முதல் தடவை செய்தவாறே செய்ய வேண்டும். மர்வாவிலும் அப்படித்தான். இவ்வாறு 7 சுற்றுக்கள் தொங்கோட்டம் ஓடி முடிக்க வேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு செல்வது ஒரு சுற்றாகவும், மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது ஒரு சுற்றாகவும் கருதப்படும். தொங்கோட்டம் ஓடும் நேரத்தில் அல்லாஹ்வை திக்ர் செய்தல், அல்குர்ஆன் ஓதுதல், பிராத்தித்தல் போன்ற அவருக்கு விருப்பமான அமல்களைச் செய்யலாம்.
குறிப்பு : மேலே கூறப்பட்ட “இன்னஸ் ஸபா வல்மர்வத மின் ஷஆஇரில்லாஹ்" எனும் வசனமானது அதனை முதல் சுற்றில் ஸபா மலைக்கு அருகாமையில் மாத்திரமே ஓத வேண்டும். மாறாக இன்று மக்கள் செய்வதைப் போல ஸபா, மர்வாவுக்கு சமீபாகும் ஒவ்வொரு தடவையும் ஓதுவது வரவேற்கத்தக்கல்ல.
நான்காவது : தலையை மழித்தல் அல்லது முடியைக் குறைத்தல்
மேற்கூறப்பட்டவாறு 7 சுற்றுக்கள் தொங்கோட்டம் ஓடி முடித்ததும் ஆண்கள் தலையை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது முடியைக் குறைத்து வெட்டிக் கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் தலையின் முழுப்பகுதியிலும் அதனை செய்ய வேண்டும். ஆயினும் தலையை முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தலையை மழிப்பவர்களுக்காக மூன்று தடவைகளும், முடியை குறைத்து வெட்டிக் கொள்பவர்களுக்காக ஒரு தடவையும் அருள் வேண்டிப் பிராத்தித்துள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 1303)
பெண்களைப் பொருத்தமட்டில் விரல் நுனியளவிற்கு தங்களது முடியிலுருந்து குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அமல்களோடு உம்றா முடிவுறுகிறது. எனவே உம்றா என்பது இஹ்ராம் கட்டுதல், கஃபதுல்லாஹ்வை வலம் வருதல், ஸபா மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல் மற்றும் முடியை மழித்தல் அல்லது கட்டையாக வெட்டுதல் என்பனவாகும்.
நாங்கள் அல்லாஹ்விடம் நல்லமல்கள் புரிவதற்கு அனுகூலம் புரியாமறும் (தவ்பீக் செய்யுமாறும்) எங்களது அமல்களை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். நிச்சியமாக அவன் சமீபமானவன்; பதிலளிப்பவன்.
மேலதிகப் பார்வைக்கு :
மனாஸிகுல் ஹஜ்ஜி வல்உம்றா - அல்பானி (ரஹ்)
ஸிபதுல் ஹஜ்ஜி வல்உம்றா, அல்மன்ஹஜ் லிமுரீதில் உம்றதி வல்ஹஜ் - இப்னு உஸைமீன் (ரஹ்)