செயலேடுகள் வழங்கப்படல்.
அடியார்களின் செயல்களுக்கு விசாரணை நிறைவு பெற்றதும், அவரவருக்கு அவர்களின் அனைத்து செயல்களும் உள்ளடக்கிய ஏடுகள் வழங்கப்படும்.
முஃமினைப் பொருத்தவரை, கெளரவமாக அவனது வலக்கரத்தில் வழங்கப்படும்.
அவன்தான் அந்த மறுமை நாளில் வெற்றியடைந்த பாக்கியவானாவான். இது தொடர்பாக அல்லாஹ் கூறுகிறான் .
(ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.)
(அல்குர்ஆன் : 84: 7,8,9)
(ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
(அல்குர்ஆன் : 69: 19,20,21,22,23,24)
காபிர் (நிராகரிபாபாளன்), நயவஞ்சகன், மற்றும் வழிதவறியவர்களைப் பொருத்தவரை, அவர்களின் ஏடுகள் முதுகும் புறமாக அவர்களின் இடக்கரங்களில் வழங்கப்படும். இது தொடர்பாக அல்லாஹ் கூறுகிறான்
(ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
(அல்குர்ஆன் : 69:25,26,27,28,29,30,31,32)
அடியார்களுக்கு ஏடுகள் வழங்கப்பட்டதும்
(“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 45:29)
(“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
(அல்குர்ஆன் : 17:14)
இவ்வாறு கூறப்படும்
(அமல்கள்) நிறுவை, மீஸான் தராசு.
அடியார்களின் செயல்களுக்கேற்றவாறு நிறுவை (தராசு) வைக்கப்படும். இமாம் குர்துபி ( ரஹ்) இதுபற்றி கூறியதாவது
(விசாரணை நிறைவுற்றதன் பிற்பாடு, அமல்கள் நிறுக்கப்படும், ஏனெனில் நிறுவை கூலி வழங்குவதற்கானது, ஆக விசாரணைக்கு பின்னர் நிறுவை அமையவேண்டும். விசாரணை, அமல்களை நிர்ணயம் செய்வதற்கான முறை, நிறுவை, அவ்வமல்களின் அளவுகளை (பெறுமானம்) வெளிப்படுத்தி அதன் அடிப்படையில் கூலி வழங்குவதற்கான முறை)
மீஸான் தராசின் அமைப்பு பற்றிய இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள், அதற்கு இரு தட்டுகள் இருக்கின்றன அதன் மூலமாக அடியார்களின் அமல்கள் நிறுக்இப்படும் என்று கூறுகின்றன. மேலும் அது பிரமாண்டமானது, அதன் அளவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் நிர்ணயம் செய்யமுடியாது.
தராசைப் பொருத்தவரை, அது ஒன்றா, அல்லது அவரவருக்கு, அவர்களின் அமல்களை நிறுப்பதற்கு பல தராசுகள் இருக்கின்றனவா, என்ற கருத்து வேறுபாடு அறிஞர்களிடம் காணப்படுகிறது.
பல தாராசுகள் இருக்கின்றன, என்று கருதும் அறிஞர்கள், சில குர்ஆனின் வசனங்களில் (தராசுகள்) என பன்மை வடிவில் வந்துள்ளதை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு
(இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.(
(அல்குர்ஆன் : 21:47)
தராசு ஒன்றுதான் இருக்கிறது என்று கருதும் அறிஞர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் கொள்கின்றனர். (மறுமையில் நாளில் தராசு வைக்கப்படும், வானங்கள் மற்றும் பூமியை அதில் நிறுத்தால்கூட அதில் மேலதிகமாக இடம் இருக்கும், வானவர்கள், இறைவா இது யாரை நிறுக்கப்போகிறது ? என்று கேட்க , அதற்கு அல்லாஹ், எனது படைப்புகளிலிருந்து நான் நாடியவற்றை என்று பதில் கூறுவான்....)
( நூல்: அல்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா : 941)
அத்துடன் பன்மை வடிவில் வந்த குர்ஆனிய வசனங்களுக்கு "அது தராசு பற்றி கூறவில்லை மாறாக (அடியார்களின்) செயல்கள், சொற்கள்,ஏடுகள் மற்றும் அடியார்கள் என அதில் நிறுக்கப்படுபவை பற்றி கூறுகிறது என்று விளக்கமளிக்கின்றனர். அதாவது அதில் நிறுக்கப்படுபவை பன்மை வடிவில் வந்துள்ளது என்று கூறுகின்றனர்.
சொற்களும் நிறுக்கப்படும் என்பதை கூறும் வகையில் பின்வரும் நபிமொழி இடம்பெற்றுள்ளது .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். நன்மை தீமை நிறுக்கப் படும் தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியதிற்குரியவையுமாகும்.
அவை சுப்ஹானல்லாஹில் அழீம் , சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
நூல்: புகாரி : 6406
செயல்கள் நிறுக்கப்படும் என்பதை கூறும் வகையில் பின்வரும் நபிமொழி இடம்பெற்றுள்ளது.
அபூ தர்தா ( ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் (மீஸான் தராசில் நிறுக்கப்படுபவைகளில் மிக் கனமானது நற்குணமாகும், நற்குணம் கொண்டவர் அக்குணம் மூலம் நோண்பு பிடித்து தொழுபவரின் அந்தஸ்தை அடைவார் " ) (நூல் திர்மிதீ : 1629)
செயலேடுகள் நிறுக்கப்படும் என்பதை கூறும் வகையில் பின்வரும் நபிமொழி இடம்பெற்றுள்ளது.
அம்ர் பின் ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (மறுமை நாளில் மனிதர்களில் என் சமுதாயத்தில் இருந்து ஒரு அடியானை அல்லாஹ் தேர்வு செய்து அவனது தொண்ணூற்று ஒன்பது செயலேடுகளை விரித்துக் காட்டுவான், ஒவ்வொன்றும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலான அளவு (நீண்டு காணப்படும்) பின்னர் அல்லாஹ் இவற்றில் ஏதாவது ஒன்றை மறுக்கிறாயா? எனது பாதுகாத்து எழுதும் எழுத்தாளர்கள் (வானவர்கள்) இதில் அநீதி இழைத்து விட்டனரா!? என்று கேட்பான். அதற்கு அந்த அடியான் இல்லை இறைவா என்று கூறுவான்.
மீண்டும் அல்லாஹ், உனக்கு ஏதாவது தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்பான். அதற்கும் அவன் இல்லை இறைவா என்று பதில் கூற அல்லாஹ், பொறு எங்களிடம் உனக்கு ஓர் நன்மை உள்ளது. இன்று உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படமாட்டாது என்று கூறுவான். உடனே ஒரு சிறிய ஏடு வெளிப்படும் அதில் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மத் அவனது அடியார் மற்றும் தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன் என்று இருக்கும்.
பின்னர் அல்லாஹ், உன் நிறுவைக்கான எடையைக் கொண்டுவா என்று கூற அந்த அடியான் யா அல்லாஹ் இது என்ன இது, இவ்வளவு ஏடுகளுடன் இந்த சின்ன ஏடா..? எனாறு வினவுவான். அதற்கு அல்லாஹ், நீ அநீதி இழைக்கப்படமாட்டாய் என்று கூறுவான். பின்னர் இந்த அனைத்து ஏடுகளும் ஒரு தட்டில் மற்ற சின்ன ஏடு ஒரு தட்டில் வைத்து நிறுக்கப்பட, பல ஏடுகள் தட்டு எடை குறைந்து சிறிய ஏடு கனத்தால் கூடிவிடும். அல்லாஹ்வின் பெயரோடு எந்த ஒன்றும் கனத்தால் கூடிவிடமாட்டாது )
நூல் : திர்மிதி (2127)
மனிதர்களும் நிறுக்கப்படுவார்கள் என்பதை கூறும் வகையில் பின்வரும் நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (மறுமை நாளில் கொழுத்த பெரிய மனிதன் வருவான், அவன் அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கைகும் பெறுமதியா கமாட்டான், அவனைப் பார்த்து அல்லாஹ்
(மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.)
என்ற வசனத்தை ஒதிக்காண்பிக்குமாறு (வானவர்களைப்) பணிப்பான் .
நூல்: புகாரி (4729)
அத்தோடு மற்றுமோர் நபிமொழியும் இடம்பெற்றுள்ளது.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் உகா (அராக்) மரத்தில் மிஸ்வாக் (பல் துலக்கும்) கிளை உடைத்துக்கொண்டு இருந்தார்கள், அவர் மெல்லிய கெண்டைக்கால்கள் உடையவர். காற்று அவரைத் தள்ள அங்கிருந்த சிலர் சிரித்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஏன் சிரிக்கிறீர்கள்) என்று வினவ அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரே அவரது மெல்லிய கெண்டைக்கால்களைப் பார்த்துதான் என்று கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக இந்த இரண்டும் (கெண்டைக்கால்கள்) மீஸான் தராசில் உஹுத் மழையை விட கனமானதாக இருக்கும்.) என்று கூறினார்கள்.
நூல்: ஷர்ஹுத் தாஹாவியா (பக்கம் 418 ஹதீஸ் இல் 571) ஷெய்க் அல்பானி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை "ஹசன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்லாஹ் எமது அமல்களை மீஸான் தராசில் கனப்படுத்துவானாக...!
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.