0 / 0
04/சபர்/1446 , 08/ஆகஸ்ட்/2024

மனிதனுக்கு தேவையான அனைத்து விடயங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஆ வில் தீர்வுண்டு

கேள்வி: 301678

இஸ்லாமிய ஷரீஆ அரசியல், சமூகவியல், பொருளியல் சார்ந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்வைக் கொண்டுள்ளதா? இஸ்லாமிய ஷரீஆவில் இல்லாத ஒரு புதிய பிரச்சினை உருவானால் எங்கிருந்து தீர்வைப் பெறுவது?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது:

அல்லாஹுத்தஆலா தனது அடியார் மீது இறக்கிவைத்த 'ஷரீஆ'வானது, மனிதனுக்குத் தேவையான நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க  வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் ஆகிய அனைத்துக்குமான வழிகாட்டல்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏனென்றால் இதுதான் இறுதி மார்க்கமாகும். இந்த மார்க்கம் கொடுக்கப்பட்டு மனித சமூகத்திற்குப் பொதுவானவராக அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதித் தூதருமாவார்கள். அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார். அவரது மார்க்கத்திற்குப் பிறகு வேறெந்த மார்க்கமும் வர மாட்டாது. இறுதிக்கால கட்டத்தில் ஈஸா அலைஹிஸ்-ஸலாம் அவர்களும் கூட  இறங்கி,  இந்த ஷரீஆவைக் கொண்டே தீர்ப்பு வழங்குவார்கள்.

எனவே, யாரவது அல்-குர்ஆனை ஆய்வு செய்து, ஸுன்னாவிலும் சட்டத்துறை நூல்களிலும் நவீன கால சட்ட நூல்களிலும் அறிவாராய்ச்சி மேற்கொள்வாராயின் இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்வார்.

இந்த வகையில், அல்-குர்ஆனிலும் ஸுன்னாவிலும் தெளிவாகக் கூறப்பட்ட சட்டங்களைப் பொறுத்த வரைக்கும் அவற்றுக்குக் கீழ்தான் 'உஸூலுல்-அஹ்காம்' எனும் அடிப்படை சட்டவிதிகள் அடங்குகின்றன. ஆனாலும் அதன் கிளையம்சங்கள் தான் மக்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.

அல்-குர்ஆனும் ஸுன்னாவும் தெளிவாகக் குறிப்பிடாத சட்டங்களைப் பொறுத்தவரைக்கும், அதற்கான தீர்வுகளை ஸஹாபாக்களின் கூற்றுக்கள், தெளிவான சட்டத்தீர்ப்புக்களுடனான 'கியாஸ்' எனும் ஒப்பீட்டு நடைமுறை அல்லது 'இஸ்திஸ்ஹாப்' எனும் அடிப்படையிலேயே அனுமதிக்கப்பட்டது அல்லது தடுக்கப்பட்டது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறை, அல்லது மஸாலிஹுல்-முர்ஸலா' எனும் பொதுநலன் பேணும் நடைமுறை, அல்லது 'ஸத்துத்-தரீஆ' எனும் முன்னெச்சரிக்கை நடைமுறை போன்ற ஏனைய ஷரீஆ ஆதாரங்கள் ஊடாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சட்டவல்லுனருக்கு முடியுமாகின்றது.

இதைத்தான் அல்லாஹ்வின் திருமறை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

"அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) நாம் வேதம் கொடுத்திருப்பவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப் படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்". (06:114)

“(நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் பணிந்து கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது. (16:89)

பின்வரும் ஹதீஸும் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.

"நான் உங்களுக்கு ஏவியிருப்பதைத் தவிர வேறு எந்தவொரு அமலும் சுவனத்தின் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தமாட்டாது. நான் உங்களுக்குத் தடுத்தவற்றை விட வேறு எந்தவொரு அமலும் நரகை விட்டும் துரமாக்கமாட்டாது. மேலும் உங்களில் எவருக்கும் அவரது ரிஸ்க் - ஆகாரம் கிடைக்காமல் போகவே மாட்டாது. ஏனெனில், ஜிப்ரீல் அலைஹிஸ்-ஸலாம் அவர்கள் எனதுள்ளத்தில் 'உங்களில் எவரும் அவரது ரிஸ்க்கினை (ஆகாரத்தினை) முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் வரை இவ்வுலகை விட்டும் செல்லமாட்டார்.  எனவே, மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உழைப்பில் அழகாக நடந்து கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்கு அவரது ரிஸ்க்-ஆகாரம் சற்றுத் தாமதித்து விட்டால் அல்லாஹ்வுக்கு மாறுசெய்துகொண்டு அதனைத் தேடவேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவனுக்கு மாறுசெய்வதால் வந்துசேரமாட்டாது என்று கூறினார்".

இதனை இப்னு அபீ ஷைபா அல்-முஸன்னப் கிரந்தத்திலும் (34332) இமாம் ஹாக்கிம் அவர்கள் முஸ்தத்ரக் கிரந்தத்திலும் (5/2) குறிப்பிட்டுள்ளனர். இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஸஹீஹுத்-தர்ங்கீப் வத்-த்தர்ஹீப் (1700) கிரந்தத்தில் ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் அவர்கள் இது பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

"ஷரீஆ சட்டங்கள் இரண்டு வகைகளாகப் பிரிகின்றன:

அதன் ஒரு வகையானது, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக தெளிவாகக் குறித்துச் சொல்லப்பட்ட சட்டங்களாகும். எடுத்துக்காட்டாகப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களைக் குறிக்கலாம் "(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவையும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப் பல்லும், வீர நகமுமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன".(05:03)

"... மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது...." (4:24)

இதுபோன்ற எடுத்துக்காட்டுக்கள் அல்-குர்ஆனில் அதிகம் உள்ளன.

மற்றய வகையானது,  தெளிவாகச் சொல்லப்படாத  சட்டங்களாகும்.  எனினும் அவை தொடர்பாக, ஷரீஆ சட்டத்திலுள்ள பொது விதிகளிலும் பொதுவான ஆதாரங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஷரீஆவானது அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு சட்டம் சொல்வது முடியாத காரியமாகும். ஏனெனில், அவ்வாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சட்டம் சொல்வதாயின் (அவற்றைத் தொகுப்பதற்குப்) பல ஒட்டகங்களும் வாகனங்களும் சுமக்க முடியாதளவு ஏடுகள் தேவைப்பட்டிருக்கும்.

ஆனாலும், தன் அடியார்களில் அல்லாஹ் நாடியோருக்கு அவன் அருள்பாலித்துள்ள பொதுவிதிகள் காணப்படுகின்றன. இந்தப் பொது விதிகளைக் கொண்டு கிளை விடயங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ள அவர்களுக்கு முடியுமாகின்றது. உதாரணமாக, "தீங்குக்குள்ளாகவும் வேண்டாம்; தீங்கிழைக்கவும் வேண்டாம்" என்ற ஹதீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஹதீஸானது, நம்பகத் தன்மையில் ஆய்வுக்குட்படுத்த வேண்டியதாக இருந்தாலும், ஷரீஆவின் விதிகள் அதற்கு வலுச்சேர்க்கும் சான்றாயுள்ளன. இந்தப் பொதுவிதிக்குள் அல்-குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நேரடியாகக் குறிப்பிடப்படாத, தீங்கிருக்கும் ஆயிரக் கணக்கான விவகாரங்களும் தீங்கைப் பின்விளைவாகத் தோற்றுவிக்கும் ஆயிரக் கணக்கான விவகாரங்களும் அடங்க முடியும். 

இதற்கான எடுத்துக்காட்டாக, உமர் இப்னுல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்தில் இரண்டு மனிதர்களுக்கிடையில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. அவர்களில் ஒருவருக்கு இரண்டு காணித்துண்டுகள் இருந்தன. அந்த இரண்டு காணிகளுக்குமிடையே இன்னொருவருக்கும் ஒரு காணித்துண்டு இருந்தது. அந்த இரண்டு காணிகளை உடையவர் தனது ஒரு காணியிலிருந்து மற்றக் காணிக்குத் தேவையான நீரை நடுவிலுள்ள மற்றவரின் காணியை ஊடறுத்துப் பாய்ச்ச விரும்பினார்.  ஆனால், அந்த நடுக்காணிக்காரர் அதற்கு மறுப்புத் தெரிவித்து, எனது காணியை ஊடறுத்து நீர் பாய்ச்ச வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்த விவகாரம் அமீருல்-முஃமினீன் உமர் இப்னுல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அவர்கள், பலாத்காரமாக நீர் பாய்ச்சப்படுவதற்கு கட்டளை இட்டார்கள். அத்தோடு, 'உனது வயிற்றுக்கு அல்லது முதுகுக்கு மேலாலாவது நான் அதனை நிறைவேற்றுவேன்' என்றார்கள். ஏனெனில், தனது காணியை ஊடறுத்து   நீர் பாய்ச்ச வேண்டாம் என்று சொன்ன அந்த அயலவர் தனது தோழருக்குத் தீங்கிழைக்கவே விரும்புகிறார். இல்லையென்றால் அவருக்கும் அதில் பயன் உண்டு. அதாவது, தனது காணியை ஊடறுத்துச் செல்லும் நீரைப் பயன்படுத்தி அவரும் ஏதாவது பயிரிட்டால் இரு தரப்பாருக்கும் அதில் நன்மை உண்டு" (لقاء الباب المفتوح (122/ 18))

நாங்கள் ஏற்கனவே கூறிய அல்-குர்ஆன் வசனங்களிலிருந்து, அல்-குர்ஆனில் தான் மனிதனுக்குத் தேவையான அனைத்துக்கும் விளக்கம் உள்ளது எனப் புரிந்து கொள்ளப்படுகின்றது. இது தொடர்பாக கல்வியலாளர்களிடம் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்று: ‘ஸுன்னா’, ‘இஜ்மா’, மற்றும் ‘கியாஸ்’ ஆகியவற்றையும் ஆதாரங்களுக்கான மூலாதாரமாக அல்-குர்ஆன் உள்ளடக்கியுள்ளது. ஆகவே, இவற்றின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வுகளையும் அல்-குர்ஆனின் தீர்வாகவே தெரிவிப்பது கூடுமானது.

இரண்டாவது: அல்-குர்ஆன் ஏதாவதொரு சட்ட முறையியலில் எல்லாவற்றுக்குமான தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது. சில விவகாரங்களுக்கு (البراءة الأصلية) எனும் ‘அடிப்படையிலான சட்ட விடுவிப்பு’ முறையியலின் ஊடாகவும் தீர்வுகளை  முன்வைத்துள்ளது.

இந்த இடத்தில் அல்-குர்ஆன் அனைத்துக்குமான சட்டத் தீர்வுகளை நேரடியாகவே உள்ளடக்கி இருக்கிறது என்று சொல்வதை விட, மார்க்கமானது ஏலவே எடுத்துக்காட்டப்பட்ட மூலாதாரங்களினூடாக சட்டத் தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை விளங்கிக்கொள்வதே முக்கியமாகும். எனினும்,  முதல் வகைதான் பெரும்பான்மையான சட்டத்துறை இமாம்களின் கூற்று என இமாம் அர்-ராஸீ அவர்கள் குறிப்பிட்டதன் பிறகும் ஒரு அறிதலுக்காக, இரண்டாவது வகை தொடர்பாகவும் அவர் முன்வைத்த கருத்துக்களை இங்கு நாம் எடுத்துக்காட்ட விழைகின்றோம்.

அர்-ராஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குற்றிப்பிட்டுள்ளார்கள்:

இந்த இறைவேதமானது எல்லாக் கலைகளினதும் அடிப்படைகளையும் உபரிகளையும் கொண்டதல்ல என்று கூறுவோரின் வாதத்திற்கு நாம் கூறும் பதில் என்னவெனில்,

அடிப்படைவிதிகளுக்கான கலைகள் அனைத்தும் அல்-குர்ஆனில் முழுமையாகவே இடம்பெற்றுள்ளன. ஏனெனில், எல்லாவற்றுக்குமான அடிப்படையான ஆதாரங்கள் அதி உச்ச அளவில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், மத்ஹப்களின் அறிவிப்புக்கள் மற்றும் கூற்றுக்களுக்கான விளக்கங்களைப் பொறுத்தவரைக்கும் அவை அல்-குர்ஆனில் இடம்பெற வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனால், கிளை விடயங்கள் தொடர்பான அறிவியல் விளக்கங்களைப் பொறுத்தவரை, அறிஞர்களிடையே இரு கூற்றுக்கள் உள்ளன.

முதலாவது: ‘இஜ்மா’, ‘ஆஹாதான ஹதீஸ்கள்’, ‘கியாஸ்’ என்பனவும் ஷரீஆவில் மூலாதாரங்களாக உள்ளன என அல்-குர்ஆன் அறிவித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த மூன்று அடிப்படைகளில் ஏதேனும் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்ற தீர்வுகள் அனைத்துமே உண்மையில் அல்-குர்ஆனில் உள்ளதாகவே கணிக்கப்படும்  எனக் கூறுகின்றனர்.

இந்தக் கருத்துக்கு சார்பாக, இமாம் அல்-வாஹிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மூன்று உதாரணங்களைக் குறிப்பிடுகின்றார்கள்:

முதலாவது உதாரணம்: இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்,  ‘அல்லாஹ் தனது வேதத்தில் சபித்தவர்களை நானும் சபிக்காமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துள்ளது? அதாவது, பச்சை குத்திக்கொள்ளும் பெண்களும் பச்சை குத்துமாறு கேட்கும் பெண்களும், பொய் முடி போட்டுக்கொள்ளும் பெண்களும் பொய் முடி போடுமாறு கேட்கும் பெண்களும் தான் என்று  சொல்பவராக இருந்தார்’ என அறிவிக்கப்படுகிறது. இதைக்கேட்ட ஒரு பெண் அல்-குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து விட்டு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, உம்மு அப்தின் மகனாரே! நேற்றிரவு அல்-குர்ஆன் முழுவதையும் ஓதினேன். ஆனால், பொய் முடி போட்டுக்கொள்கின்ற, போடுமாறு கேட்கின்ற பெண்கள் பற்றிய சாபத்தை நான் அதில் காணவில்லையே? என்று கூறினாள். அதற்கவர்கள்: நீங்கள் மீண்டும் ஓதினால் "இந்த இறைத்தூதர் உங்களுக்குத் தந்தவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்" (அல்-ஹஷ்ர்:7) என்ற  வசனத்தைக் காண்பீர்கள். இதன்படி நமக்கு இறைத்தூதர் தந்தவற்றில் உள்ளதுதான் "பச்சை குத்துபவளையும் பச்சை குத்தக் கேட்பவளையும் அல்லாஹ் சபிப்பானாக!" என நபியவர்கள் சொன்னார்கள் என்ற ஹதீஸாகும்.

இந்த இடத்தில் நான் கூற வருவது என்னவெனில், இந்தக் கருத்தானது இதைவிட மிகத்  தெளிவான வழியினூடாக அல்-குர்ஆனில் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். அதாவது, ஸூரா அந்-நிஸாவில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். "துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை. அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான்." (4:117.118) இந்த வசனத்தில் ஷைத்தான் மீது சாபத்தைத் தீர்ப்பளித்ததன் பின்னர் அவனது செயற்பாடுகளின் அசிங்கங்களை அல்லாஹ் பட்டியலிடுகின்றான். அந்த வரிசையில் இந்த விடயம் பற்றியும் அல்லாஹ் பொதுப்படையாக எடுத்தியம்புகின்றான். "...அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்.. '' (4:119). இந்த வசனத்திலிருந்து அல்லாஹ்வின் படைப்புக் கோலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது சாபத்தைக் கொண்டுவர வல்லது என்பது தெளிவாகின்றது.

இரண்டாவது உதாரணம்: இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள், மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தடவை உட்கார்ந்திருந்த போது "நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் அல்லாஹ்வின் வேதத்திலிருந்துதான் பதிலளிக்கின்றேன்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், இஹ்ராம் கட்டியவர் ஒரு குளவியைக் கொள்வது பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு இமாமவர்கள், "அவர் மீது எக்குற்றமும் இல்லை" என்றார்கள். உடனே அம்மனிதர், 'இது அல்-குர்ஆனில் எங்குள்ளது' எனக்கேட்டார். அதற்கு இமாமவர்கள், "இந்தத் தூதர் உங்களுக்குக் கொடுத்தவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என அல்லாஹ் கூறுகின்றான் எனக் கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்குமான இஸ்னாதைச் சொல்லி, "எனது ஸுன்னாவையும் எனக்குப் பின்னர் குலபாஉர்-ராஷிதூன்களது ஸுன்னாவையும் உங்களுக்கு நான் ஏவுகின்றேன்" என நபியவர்கள் கூறியதாகச் சொல்லிவிட்டு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வரையான இஸ்னாதைக் குறிப்பிட்டு, "இஹ்ராமுடனிருப்பவருக்கு குளவியைக் கொல்வது ஆகுமானது" என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் எனவும்  எடுத்துச் சொன்னார்கள்.

இந்தச் சம்பவம் பற்றி இமாம் அல்-வாஹிதீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். அதாவது, மூன்று படித்தரங்களிலான ஆதாரங்களைக் கையாள்வதன் மூலம் அல்-குர்ஆனிலிருந்தே இமாமவர்கள் அந்த மனிதருக்கு பதிலளித்துள்ளார்கள்.

இந்த இடத்தில் நான் கூறுவதாவது, இதை விடவும் நெருக்கமான இன்னொரு வழியொன்றும் இங்கு உள்ளது. அதாவது, முஸ்லிம்களின் சொத்துக்கள் தொடர்பான அடிப்படை என்னவெனில் அது பாதுகாப்புப் பெற்றவையாகும். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் "... அவை சம்பாதித்துக் கொண்டவை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்டவை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்)." (2:286).  மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: "... உங்கள் பொருள்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவில்லை. (நன்மைக்காகவே கேட்கிறான்.)" (முஹம்மத்:36).  இன்னொரு இடத்தில் அல்லாஹ் "நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். " (4:29) எனக் குறிப்பிடுகின்றான். எனவே, வியாபாரத்தின் மூலமல்லாத வழிகளில் மனிதர்களின் சொத்துக்களைச் சாப்பிடுவது தடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக சந்தர்ப்பம் இல்லாத போது ஒருவரின் சொத்துக்களை மற்றவர் கையாள்வது தடுக்கப்பட்ட நிலையே தொடரும். இந்தப் பொது விதிகள்தான் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் ஒருவர் குளவியைக் கொன்றுவிட்டால் அவர் மீது எந்தக் கடமையும் சுமத்தப்படமாட்டாது என்பதைச்  சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில், இந்தப் பொதுவிதிககளைக் கையாள்வதால்தான்  தீர்வு ஒரே படித்தரத்தில் பெறப்படுகின்றது.

மூன்றாவது உதாரணம்: இமாம் அல்-வாஹிதீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: விபச்சாரம் செய்த கூலித்தொழிலாளி தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில், அவனின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'எங்களுக்கிடையில் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீர்களா எனக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக உங்கள் இருவருக்குமிடையில் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு நான் தீர்ப்பளிக்கின்றேன்" எனக் கூறினார்கள். பின்னர் கூலித்தொழிலாளிக்கு கசையடியும் நாடுகடத்தலும் தண்டனையாகும் என்றும் அப்பெண்மணிக்கு, அவள் ஏற்றுக்கொண்டால், கல்லெறிந்து கொல்தல் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.

இமாம் அல்-வாஹிதீ அவர்கள், கசையடியையும் நாடு கடத்தலையும் நேரடியாகக் குறிப்பிடக்கூடிய ஒரு வசனம் கூட அல்-குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் இந்த அறிவிப்பின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த அனைத்துத் தீர்ப்புக்களும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளவை யாகவே திகழ்கின்றன எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இடத்தில் நான் சொல்ல வருவது, இந்த எடுத்துக் காட்டு நியாயமானதுதான். ஏனெனில், அல்லாஹுத்தஆலா அல்-குர்ஆனில் "அவர்களுக்கு இறக்கப்பட்டதை மக்களுக்கு நீர் விளக்குவதற்காக" (16:44) என்ற வசனத்தின் படி, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கிய அனைத்துமே இந்த வசனத்தின் கீழ் வந்துவிடும் என்பதையே காட்டுகின்றது. 

இந்த உதாரண எடுத்துக்காட்டல்களின் மூலம் உறுதியாவது என்னவெனில்,  ‘இஜ்மா’, ‘ஆஹாத் வகை ஹதீஸ்’கள், மற்றும் ‘கியாஸ்’ என்பவற்றை அல்-குர்ஆன் சட்டமூலாதாரங்களாக அறிவித்திருப்பதனால், இந்த மூன்று முறையியலில் ஏதாவதொரு வழியினூடாக பெறப்பட்ட சகல சட்டத் தீர்வுகளும் நிஜமாகவே அல்-குர்ஆனிலிருந்து பெறப்பட்டதாகவே உள்ளன. இந்த இடத்தில்தான்  "இந்த வேதத்தில் நாம் எந்தவொன்றையும் குறிப்பிடாமல் தவற விடவில்லை" என்ற இறை வாக்கு உண்மையாகின்றது.

இதுதான் இக்கூற்றின் முடிவாகும். பெரும்பான்மையான சட்ட வல்லுனர்களும் இதையே ஆதரித்துள்ளார்கள்... .

இந்த அல்-குர் ஆன் வசனத்தின் விளக்கவுரை தொடர்பான இரண்டாவது கூற்று: அல்-குர்ஆன் எல்லா சட்டங்களுக்கான விளக்கங்களால் நிறைந்துள்ளது என்ற கருத்தாகும் .

இதன் முடிவு என்னவெனில், அனைத்துக் கடமைகளிலும், 'பொறுப்புத் துறப்பு' / 'பொறுப்பு நீக்கம்' (براءة الذمة) என்பதே அடிப்படை விதியாகும். ஒரு விடயத்திற்கான  'பொறுப்புக் கூறல்' (شغل الذمة) கடமையாவதற்கு, அதை வலியுறுத்துவதற்கான தெளிவான ஆதாரம் இருப்பது அவசியமாகும். ஆகவேதான், கடமையாக்கப்படாத உப பிரிவுகள் ஒவ்வொன்றுக்குமான நேரடி வசனங்கள் (அல்-குர்ஆனில்) தவிர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில், கடமையாக்கப்படாத உப பிரிவுகள் எண்ணிலடங்காதவையாகும். முடிவே இல்லாத இவ்வாறான விடயங்களுக்கு நேரடி வசனங்கள் கொண்டுவருவது சாத்தியமற்ற விடயமாகும். ஆனால், எல்லைக்குட்பட்டுள்ள அடிப்படை விடயங்களுக்கு நேரடி வசனங்கள் கொண்டு வருவது சாத்தியமானதே.

உதாரணமாக, அல்லாஹுதஆலா அடியார்கள் மீது ஆயிரம் கடமைகளை விதித்துள்ளதாகவும் அவற்றை அல்-குர்ஆனிலும் பிரகடனம் செய்துள்ளதாகவும் அந்த ஆயிரம் கடமைகளையும் மக்களுக்கு ஏவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பணித்துவிட்டதாகவும் வைத்துக்கொள்வோம்.

பின்பு அல்லாஹுத்தஆலா, "இந்த வேதத்தில் எந்தவொன்றையும் நாம் தவறவிடவில்லை" என்றும்  சொல்லி விட்டான். ஆகவே, அந்த ஆயிரம் விடயங்களுக்கப்பால் படைப்பினங்களுக்கு விதியாக்க அல்லாஹ்வுக்கு வேறு கடமை எதுவும் கிடையாது என்பது அர்த்தமாகிறது. பின்பு "இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டேன்" (5:3) எனும் வசனத்தின் மூலமும் "பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை" (6:59) எனும் வசனத்தின் மூலமும் ஏலவே சுட்டிக்காட்டிய வசனத்தை உறுதிப்படுத்தியுமுள்ளான். இதுதான் அவர்களது முடிவாகும். இதில் ஆய்வு மேற்கொள்வதானது 'உஸூலுல்-பிக்ஹ்' கலையோடு தொடர்புறுகின்றது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். (தஃப்ஸீர் அர்-ராஸீ - 12/527,528)

குறிப்பு:

"இந்த வேதத்தில் எந்தவொன்றையும் நாம் தவறவிடவில்லை" (6:38) என்ற அல்-குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள (அல்-கிதாப்) வேதம் என்ற வார்த்தையின் மூலம் கருதப்படும் சரியான கருத்து யாதெனில், 'லவ்ஹுல்-மஹ்பூழ்' ஆகும். அதில்தான் அல்லாஹுத்தஆலா படைப்புக்களின் திட்டங்களான விதியைப் பதிந்து வைத்துள்ளான். இக்கருத்தானது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் இந்த வசனத்துக்கான விளக்கவுரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த இடத்தில், "நாம் உம் மீது அனைத்துக்குமான விளக்கமாக இந்த வேதத்தை இறக்கிவைத்துள்ளோம்" (16:89) என்ற அல்-குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்வது போதுமானது.

பார்க்க: (தஃப்ஸீர் இப்னு ஜரீர் 9/234), தஃப்ஸீர் இப்னு கதீர் (3/253), தஃப்ஸீர் அஸ்-ஸஃதீ (பக்:255) .

இரண்டாவது:

எடுத்துக்காட்டாக வைத்தியம், பொருளாதாரம் போன்ற துறைகளிலும் அதேபோல செயற்கைக்  கருவூட்டல், மரபணுப் பொறியியல் மற்றும் மின்னணு நாணயக்  கையாள்கை  போன்ற புதிய துறைகளில் ஏதாவதொரு விவகாரம் நிகழ்ந்து, அதற்கு அல்-குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நேரடி ஆதாரம் கூறப்படவில்லையாயின் அது தொடர்பாக கல்வியியலாளர்கள்  'கியாஸ்' எனும் ஒப்பீட்டு முறைமையைக் கையாண்டு, 'இஸ்தின்பாத்' எனும் ஆதார எடுகோள்கள்கள் மேற்கொண்டு, ‘கவாஇதுல்-ஆம்மா’  எனும் பொது விதிகளைப் பயன்படுத்தி, 'மகாஸிதுஷ்-ஷரிஆவின் நோக்கங்களைக் கடைப்பிடித்து  குறித்த விவகாரத்திற்கான சட்டத் தீர்வைப் பெற்றுக்கொள்ள இஜ்திஹாத் நடைமுறை ஊடாக முயல்வர்.

எந்தவகையான பிரச்சனையாக இருந்தாலும் அது தொடர்பான எந்தவித நேரடிப் பயன்பாட்டு ஆதாரமும் இல்லாத போதும், ‘அடிப்படையிலேயே அனுமதிக்கப்பட்டது அல்லது தடுக்கப்பட்டது’ என்பதைத் தீர்மானிக்கும் 'இஸ்திஸ்ஹாப்' கோட்பாட்டைப் பயன்படுத்தி  கல்வியியலாளர்களுக்கு அதற்கான ஷரீஆ ரீதியான  தீர்வை  அடைந்துகொள்ள முடியுமாகின்றது. ஏனெனில், இஸ்லாமிய சட்டத்தில் தீர்ப்பே இல்லாத எந்தவொரு விவகாரமும் இருக்க முடியாது.

(அறிதலுக்காக: தஃப்ஸீர் ஆழ்வாஉல்-பயான், அஷ்-ஷின்கீதி, அவர்களின்: "இந்தக் குர்ஆன் நேரான பாதையை மட்டுமே காட்டுகிறது" (17:09) என்ற வசனத்துக்கான விளக்கவுரையைப் பார்வையிடுக.

முடிவாக,

இஸ்லாமிய ஷரீஆவானது, மனிதர்களுக்குத் தேவையான அவர்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வை முன்வைத்திருக்கிறது. ஏனெனில், அதுதான்  இறுதி மார்க்கமாகும். அது முழுமை பெற்ற பூரண மார்க்கமாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனத்திலும்  அல்லாஹ் பிரகடனம் செய்கின்றான்.  "இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக பொருந்திக்கொண்டேன் (அங்கீகரித்துக் கொண்டேன்)." (05:03)

அல்லாஹ்தான் மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மனிதனுக்கு தேவையான அனைத்து விடயங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஆ வில் தீர்வுண்டு - Islam Question & Answer