எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்லாஹ் கூறுகின்றான் : “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." (அத்தியாயம் : ஆலு இம்ரான், வசனம் : 19)
அதாவது செவிதாழ்த்தி, சரணடைந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல், அவனையே வணங்குதல், அவனையும், அவனது தூதர்களையும், அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தவற்றையும் நம்பிக்கை கொள்ளுதல் எனும் அடிப்படையில் அமைந்த இஸ்லாத்தைத் தவிர அவனிடத்தில் ஒப்புக் கொள்ளப்படக்கூடிய வேறெந்த மார்க்கமும் இல்லை என அல்லாஹ் இந்த வசனத்தில் அறிவுப்புச் செய்கின்றான். ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மார்க்கமும், வழிமுறையும் காணப்பட்டது. இறுதியாக அல்லாஹ் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அனைத்துலக மனிதர்களுக்கும் இறைத்தூதராக அனுப்பி தூதுத்துவத்தை முற்றுப் பெறச்செய்தான். எனவே நபிகளார் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்தையும் அல்லாஹ் யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
முந்திய நபிமார்களை பின்பற்றிய முஃமின்கள் அனைவரும் பொது அர்த்தத்தில் முஸ்லிம்களாவார்கள், அவர்கள் இஸ்லாத்தை தழுவியதன் மூலம் சுவர்க்கம் நுழைவார்கள். அவர்களில் எவரேனும் நபிகள் நாயகம் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலத்தை அடைந்திருந்தால் அவரைப் பின்பற்றுவதைத் தவிர அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கமாட்டாது.
கதாதா (ரஹ்) இந்த வசனத்தை தெளிவுபடுத்துகையில் “ இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படத் தகுதியான வேறு நாயன் இல்லை என சான்று பகர்வதும், நபிகளார் அவனிடமிருந்து கொண்டு வந்ததை ஏற்பதுமாகும். அதுவே அல்லாஹ் தனக்கென உருவாக்கிய மார்க்கமாகும். நபிமார்களையும் அதனை வழங்கியே அல்லாஹ் அனுப்பியுள்ளான். இறைநேசர்கள் அதனைத் தெளிவுபடுத்துகின்றனர். அல்லாஹ் இஸ்லாத்தையன்றி வேறெதனையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்; அதன் பிரகாரமே தவிர கூலி வழங்கவும் மாட்டான். "
அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் : “ யாதொரு இணை, துணையற்ற அல்லாஹ்வுக்கு மனத்தூய்மையுடன் வணங்கி வழிபடுவதே இஸ்லாமாகும்." எனக் கூறினார்கள். (நூல் : தப்ஸீருத் தபரி - 06ஃ275)
இப்னு கஸீர் (ரஹ்) கூறுகையில் “ “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." என்ற அல்லாஹ்வின் கூற்றானது யாரிடமிருந்தும் இஸ்லாத்தைத் தவிர தான் ஒப்புக் கொள்ளக் கூடிய மார்க்கம் கிடையாது என அல்லாஹ் அறிவுப்புச் செய்வதாகும். அது முஹம்மத் (ஸல்) அவர்களின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் வரைக்கும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் நபிமார்களுக்கு அல்லாஹ் அனுப்பிய விடயங்களில் அவர்களைப் பின்பற்றி நடப்பதாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் கொண்டு வந்த மார்க்கத்தினூடாக அல்லாது அல்லாஹ்வை நெருங்குவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டார். யாரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பியதன் பிற்பாடு அவர் காட்டித்தராத மார்க்கத்துடன் அல்லாஹ்வை சந்திக்கின்றாரோ அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் அருள்மறையில் கூறியுள்ளான் : “ இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது." (அத்தியாயம் : ஆலு இம்ரான், வசனம் : 85) மேலும் இந்த வசனத்திலேயும் தன்னிடத்தில் ஒப்புக்கொள்ளப்படும் மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் என்று கூறுகின்றான் : “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." (நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் - 02 : 25)
தஜ்ஜாஜ் (ரஹ்) கூறியதாக இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “ தீன் என்பது அல்லாஹ் தனது படைப்புக்களுக்கு வணங்கு வழிபட்டு எதிலே தொடர்ந்திருக்குமாறு ஏவினானோ அவ்வனைத்துக்குமான ஒரு பெயராகும். அதன் பிரகாரமே அவன் (தீர்ப்பு நாளில்) கூலி வழங்குவான்."
அலி இப்னு உபைதில்லாஹ் (ரஹ்) கூறுகையில் “ தீன் என்பது அடியான் அல்லாஹ்வுக்காக கட்டுப்பாட்டுடன் பின்பற்றி நடத்தலாகும்." என்றார்கள்.
இப்னு குதைபா (ரஹ்) கூறுகையில் “ இஸ்லாம் என்பதன் அர்த்தம் யாதெனில் (அடிபணிதல், சரணடைதல் என்ற அர்த்தத்தைக் கொண்ட) 'ஸில்ம்” இல் நுழைதல் என்பதாகும் . இஸ்திஸ்லாம் என்பதும் இதே அர்த்தத்தைக் கொண்ட பதமாகும்." என்றார்கள். (நூல் : ஜாதுல் மஸீர் - 1ஃ267)
மேலும் ஸஃதி (ரஹ்) பின்வருமாறு விளக்குகின்றார் : “ அல்லாஹ் கூறுகின்றான் : “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மார்க்கமாகிறது..." அதாவது : அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே மார்க்கமாகிறது இஸ்லாம் ஆகும். அதுவே அல்லாஹ் தனது தூதுவர்களை அனுப்பி அறிமுகப்படுத்தி வைத்த அம்சங்களை எடுத்து நடப்பதன் மூலம் உள ரீதியாகவும், வெளிப்படையாகவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் கீழ்ப்படிவதாகும். அல்லாஹ் அருளுகின்றான் : “ இஸ்லாமையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்." எனவே யார் இஸ்லாமல்லாது வேறு மார்க்கத்துக்கு வழிபடுகிறாரோ யதார்த்தத்தில் அவர் அல்லாஹ்வுக்கு வழிபடவில்லை. ஏனெனில் அவர் இறைத்தூதர்களை அனுப்பி அல்லாஹ் வழிகாட்டியுள்ள பாதையில் அவர் நுழையவில்லை. ( நூல் : தப்ஸீருஸ் ஸஃதி, பக்கம் : 964)
இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : “ பொதுவான அர்தத்தத்தில் இஸ்லாம் என்பது அல்லாஹ் நபிமார்களை அனுப்பியது முதல் மறுமைநாள் உண்டாகும் வரைக்கும் மார்க்கமாக்கியுள்ளவற்றின் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும். இதனையே அல்லாஹ் தஆலா அதிகமான வசனங்களில் குறிப்பிட்டுள்ளான். அவை முன்சென்ற நபிமார்களுக்கு அருளப்பட்ட வாழ்க்கைநெறிகள் யாவும் அல்லாஹ்வுக்கு அடிபணந்த விதத்திலேயே அமைந்துள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றன. அல்லாஹ் கூறுகிறான் : “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக் எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக."
குறுகிய அர்தத்தத்தில் இஸ்லாம் என்பது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழக்கைநெறிக்கென குறிப்பானதாகும். ஏனெனில் நபிகளாருக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை நெறியானது முன்சென்ற அனைத்து வாழ்க்கைநெறிகளையும் மாற்றி (இரத்துச்செய்து) விட்டது. ஆதலால் நபிகளாரைப் பின்பற்றியவர் முஸ்லிமாகவும், அவருக்கு மாறுசெய்தவர் முஸ்லிமல்லாதவராகவும் ஆகிவிட்டார். ஒவ்வொரு நபியையும் பின்பற்றியோர் அந்நபியின் காலப்பகுதியில் முஸ்லிம்களாவார்கள். யஹூதிகள் மூஸா (அலை) அவர்களது காலத்திலும், கிறிஸ்துவர்கள் ஈஸா (அலை) அவர்களது காலத்திலும் முஸ்லிம்களாவார்கள். ஆனால் நபிகளார் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட வேளை அவர்கள் நபிகளாரை நிராகரித்ததால் அவர்கள் முஸ்லிம்களல்லர்.
இந்த இஸ்லாமிய மார்க்கமானது இதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதும், அதனைத் தழுவியவருக்குப் பலனளிக்கக் கூடியதுமாகும். அல்லாஹ் அருளுகின்றான் : “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." “இஸ்லாமையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்."
இந்த இஸ்லாமிய மார்க்கமானது இதுவே முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவரது சமுதாயத்துக்கும் அல்லாஹ்வின் புறத்தால் கொடையாக வழங்கப்பட்டதாகும். அல்லாஹ் கூறுகின்றான். “இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்."
(நூல் : ஷர்ஹு ஸலாஸதில் உஸூல், பக்கம் : 20)
ஸாலிஹ் அல்பௌஸான் (ரஹ்) கூறினார்கள் : நபிமார்களது மார்க்க அனுஷ்டானங்கள் பலதரப்பட்டதாயினும் அவர்கள் அனைவரினதும் மார்க்கம் ஒன்றே. அல்லாஹ் கூறுகின்றான் : “ நூ{ஹக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே. "
மேலும் கூறுகின்றான் : “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்."
நபிகளார் நவின்றார்கள் : “நிச்சயமாக நபிமார்களாகிய எங்களது மார்க்கம் ஒன்றே. மேலும் நபிமார்கள் ஒரே தந்தையின் பிள்ளைகளாவர். "
நபிமார்களது மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாகும். அதனையன்றி வேறெதனையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதுவே அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தி அவனுக்கு சரணடைந்து, வணக்க வழிபாட்டின் மூலம் அவனுக்குக் கட்டுப்பட்டு, இணைவைப்பையும், அதில் ஈடுபடுவோரை விட்டும் நீங்கியிருப்பதுமாகும்.
அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களைப் பற்றி “நான் முஸ்லிம்களில் இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்." என்றும், இப்றாஹீம் (அலை) அவர்களைப் பற்றி “ அவருடைய இறைவன், “நீர் ‘முஸ்லிமாகி விடுவீராக’ என அவரிடம் கூறினான். அதற்கு அவர் (உடனே) பதில் கூறினார்: “அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் (கீழ்ப் படிந்த) முஸ்லிமாகிவிட்டேன்." என்றும், மூஸா (அலை) அவர்களைப் பற்றி " மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்." என்றும், ஈஸா (அலை) அவர்களைப் பற்றி “ “என்னையும், என் தூதரையும் நீங்கள் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்." என்றும் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
முன்சென்ற நபிமார்கள் மற்றும் தவ்றாத்தைப் பற்றி அல்லாஹ் “ (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்." என்று கூறுகின்றான்.
மேலும் ஸபஃ நாட்டு இளவரசியைப் பற்றித் தெரிவிக்கையில் “ (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸ{லைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்." என அல்லாஹ் திருமறையில் எடுத்துரைக்கின்றான்.
எனவே இஸ்லாம் என்பது அனைத்து நபிமார்களினதும் மார்க்கம் ஆகும். அதுவே அல்லாஹ்வுக்கு மாத்திரம் சரணடைவதாகும். யார் அல்லாஹ்வுக்கும், பிறருக்கும் சரணடைகிறாரோ அவர் இணைவைப்பாளராக ஆகிவிட்டார். யார் அவனுக்கு சரணடையவில்லையோ அவர் அகங்காரம் கொண்டவராக மாறிவிட்டார். இணைவைப்பாளர், அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் அகங்காரம் கொள்பவர் அனைவருமே இறைநிராகரிப்பாளர்கள் ஆவர்.
அல்லாஹ்வுக்கு சரணடைதல் என்றால் அவனை மாத்திரம் வணங்கி வழிபடுதல் எனும் அர்த்தமாகும். அதாவது அந்தந்த நேரத்தில் அவன் எதனை செய்யுமாறு ஏவினானோ அதனை செய்வதன் மூலம் அவனுக்கு வழிபடுவதாகும். அல்லாஹ் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது பைத்துல் மக்திஸை முன்னோக்குமாறு கட்டளையிட்டு, அதன் பிற்பாடு கஃபாவை முன்னோக்குமாறு கட்டளையிட்டுள்ள போது அவ்விரண்டு செயலையும் அவன் கட்டளையிட்ட பிரகாரம் அந்தந்த நேரத்தில் புரிவது இஸ்லாத்தில் உள்ளதாகும். ஏனெனில் மார்க்கம் என்றாலே வணங்கி வழிபடுவதாகும். அவ்விரண்டு செயல்களுமே அல்லாஹ்வை வணங்குவதாகும். அந்நேரத்தில் பலவிதப்படுவது தொழுகையாளி முன்னோக்கும் விதங்களே..
அவ்வாறே இறைத்தூதர்களது மார்க்கம் ஒன்றாகும். அவர்களது மார்க்க அனுஷ்டானங்கள், வழிபாடுகள், வழிபாட்டு முறைகள் என்பன பலவிதமாக அமைந்திருந்தது மார்க்கம் ஒன்றாக இருப்பதற்கு தடையாக அமையவில்லை. ஒரே நபியின் வாழ்க்கைநெறியிலேயே வழிபாட்டு முறை பலதாக அமைந்திருக்கிறது. நாம் அதற்கு உதாரணமாக நபிகளார் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை நெறியில் ஆரம்பமாக பைதுல் மக்திஸையும், பின்னர் கஃபாவையும் முன்னோக்குமாறு வழிகாட்டப்பட்டதைக் குறிப்பிட்டோம்.
நபிமார்களது மார்க்க அனுஷ்டானங்கள் பலதாக அமைந்தாலும் அவர்களது மார்க்கம் ஒன்றே. அல்லாஹ் ஏதோ ஒரு நுட்பத்திற்காக ஒரு நேரத்தில் ஒரு விடயத்தை அமுலாக்குவான்; பின்னர் வேறொரு நேரத்தில் (அதற்கு மாற்றமாக) ஒரு நுட்பத்திற்காக மற்றொரு விடயத்தை அமலாக்குவான். மாற்றப்பட்ட அம்சத்தை மாற்றப்படுவதற்கு முன்னர் செய்வது அல்லாஹ்வுக்கு வழிபடுவதாகும். மாற்றப்பட்டதன் பின்னர் புதிதாக சட்டமாக்கப்பட்டதை செய்வது கடமையாகும். யாராவது மாற்றப்பட்ட விடயத்தை பின்பற்றி, புதிதாக வந்த விடயத்தை விட்டுவிடுவாரானால் அவர் இஸ்லாமிய மார்க்கத்திலுமில்லை; எந்தவொரு நபியின் வழிமுறையைப் பின்பற்றியவரோ அல்ல. இதனால் தான் யஹ_திகளும், கிறிஸ்தவர்களும் இறை நிராகரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் மாற்றப்பட்ட வாழ்க்கைநெறியை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அந்த நேரத்தில், அந்த நிலைமையில் அச்சமுதாயத்திற்கு எது பொருந்துமோ அதனை அமுலாக்குகின்றான். அவ்வாறு அமுலாக்கப்பட்டது அச்சமுதாயத்தை சீர்படுத்தக் கூடியதாகவும், அதற்கான பலாபலன்களைக் கொண்டதாகவும் காணப்படும். பின்பு அவற்றில் சிலவற்றை அதற்கான காலம் முடிவுற்றதால் மாற்றுவான்.இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் பூமியிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் மறுமைநாள் வரைக்குமான நபியாக அனுப்பப்படும் வரைக்கும் நிலைமை இவ்வாறே காணப்பட்டது. அல்லாஹ் தஆலா நபியவர்களுக்கு எல்லாக் காலத்துக்கும், இடத்துக்கும் பொருத்தமான ஒரு வாழ்க்கை முறையை வழங்கியுள்ளான். அது மாற்றப்பட மாட்டாது. எனவே பூமியிலுள்ள அனைவரும் அவரையே விசுவாங்கொண்டு, பின்பற்றியாக வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : “ மக்களே! நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன்." என்று நபியே! நீர் கூறுவீராக." (நூல் : அல்இர்ஷாத் இலா ஸஹீஹில் இஃதிகாத் - பக்கம் : 194)
மேலதிகப் பார்வைக்கு கேள்வி இலக்கம் 172775 இனைப் பார்வையிடலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.