முதலாவதாக அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று 'அல்-ஹகீம்” எனவும், அரபு மொழி வழக்கில் 'அல்-ஹகீம்” எனும் பதமானது அல்ஹுக்ம் (சட்டம்), அல்ஹிக்மத் (நுட்பம், ஞானம்) என்ற பதங்களிலிருந்து பெறப்பட்டது எனவும் நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே சட்டமியற்றுவது, தீர்ப்பளிப்பதற்கான அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கிறது. அவன் இயற்றும் சட்டங்கள் பரிபூரணமாகவும், மிகவும் ஞானமிக்கதாகவும், திறன்படவும் அமைந்துள்ளன.
இரண்டாவதாக : எல்லாம் வல்ல இறைவன் எந்தவொரு சட்டத்தையும் அதன் பின்னால் மகத்தான காரணங்கள், நியாயங்கள் இன்றி சட்டமாக்கவில்லை. சிலவேளை அது நமக்குத் தெரியலாம். சிவலேளை அவை நமது புத்திக்கு தோன்றாமல் இருக்கலாம். சிலவேளை அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவற்றில் அதிகமானவை நமக்கு தெரியாமலேயே இருக்கின்றன.
மூன்றாவதாக: அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு நோன்பு விதியாக்கப்பட்டதன் காரணத்தை பின்வரும் வசனத்தில் கூறியிருக்கிறான். “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்." (அத்தியாயம்: அல்-பகறா - வசனம்: 183)
எனவே நோன்பு என்பது இறையச்சத்தை (தக்வாவை) ஏற்படுத்துவதற்கான ஒரு வழியாக உள்ளது. தக்வா என்பது அல்லாஹ் ஏவிய விடயங்களை செய்வதும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்து நடப்பதுமாகும்.
மேலும் நோன்பானது ஒரு நபருக்கு மார்க்கத்தின் கட்டளைகளை நிறைவேற்ற உதவும் மிகப்பெரிய வழிமுறைகளில் ஒன்றாகும்.
நோன்பு மார்க்கத்தில் அமுலாக்கப்பட்டதன் பின்னணியில் காணப்படுகின்ற காரணங்கள், நுட்பங்களில் சிலதை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை அனைத்தும் (ஒட்டுமொத்தத்தில்) இறையச்சத்தின் விளைவுகள் தான். எனினும் அவற்றைக் குறிப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் நோன்பாளி அவற்றைப் பற்றி கவனத்தில் கொண்டு. அவற்றை அடைய ஆர்வமாக இருக்க அவை உதவும். அவ்வாறான நுட்பங்கள், காரணங்கள் சில பின்வருமாறு :
01) நோன்பு அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வழியாக காணப்படுகின்றது. ஏனெனில் நோன்பு என்பது மிக உயர்ந்த, முக்கிய அருட்கொடைகளாகிய உண்ணல், குடித்தல், உடலுறவில் ஈடுபடுதல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்திருத்தலாகும். இவற்றை மனிதன் குறிப்பிட்ட ஒரு காலஅளவு தவிர்ந்திருப்பது அவனுக்கு அதன் பெறுமதியை உணர்த்தும். ஏனெனில் அருட்கொடைகள் மனிதனிடத்தில் அறியப்படாத நிலையிலேயே உள்ளன. அவைகள் இழக்கப்படும் வேளையில் தான் அவற்றின் பெறுமதி உணரப்படுகின்றன. எனவே இது மனிதனை அவற்றுக்காக நன்றி செலுத்துவதன் மூலம் தனது கடமையை நிறைவேற்ற தூண்டுகின்றது.
02) நோன்பு இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஹராமான அம்சங்களை விட்டுவிடுவதற்கு வழியாக அமைந்து விடுகின்றது. ஏனெனில் மனித மனம் தனக்கு இறைவன் ஆகுமாக்கிய அம்சங்களைக் கூட அவனது பொருத்தத்தை எதிர்பார்த்தும், தண்டனையைப் பயந்தும் தவிர்ந்திருப்பதற்கு இணங்குமாயின் அதனை விடவும் அல்லாஹ் தடுத்த அம்சங்களை விட்டும் விலகி இருப்பதற்கு இணங்குவது மிகவும் பொருத்தமானது; முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது. எனவே நோன்பு அல்லாஹ் தடுத்த அம்சங்களைத் தவிர்ந்திருப்பதற்கு ஒரு வழியாகும்.
03) நோன்பது மனிதனது ஆசைகளை, இச்சைகளை கட்டுப்படுத்தி, அவற்றை வெல்வதற்கு வழிவகுக்கின்றது. ஏனெனில் மனித மனம் பசியாறுகின்ற போது ஆசைகளை, இச்சைகளை அடைய விரும்புகிறது, அது பசியாக இருந்தால் தனது ஆசைகளை எல்லாம் விட்டு விலகியிருக்கும். இதனால் தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ இளைஞர்களே! திருமணச் செலவுகளுக்கு சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும். "
04) நோன்பு வறியவர்களின் மீது கருணை காட்டுவதற்கு வழிவகுக்கின்றது. ஏனெனில் ஒரு நோன்பாளி பசித்திருப்பதன் வலியை அவனது வாழ்க்கையில் சில நேரங்களிலாவது அனுபவித்தால் அவனுக்கு முழுநேரமும் பசித்திருப்போரின் நிலையை பற்றி எண்ணிப்பார்க்க முடிகின்றது. அப்போது அவனுக்குள் இரக்க சுபாவமும், மென்மையும் விரைந்து குடிகொண்டு விடும். எனவே இதன் மூலமாக நோன்பு ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
05) நோன்பின் மூலமாக சைத்தானை அடக்கி, அவனை பலவீனப்படுத்த முடிவதனால் அவனது ஊசலாட்டங்களும் பலவீனமுற்று விடும். இதன் மூலமாக மனிதனிடத்தில் பாவகாரியங்கள் குறைவடைந்து விடும். ஏனெனில் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மனிதனின் இரத்தம் சென்றடையும் இடங்களில் எல்லாம் i~த்தானும் சென்றடைகிறான்." எனவே நோன்பின் மூலம் சைத்தானின் ஓட்டங்கள் குறுகிப்போவதுடன், மனிதனிடத்தில் அவனது செல்வாக்கும் குறைந்து விடுகின்றது.
அறிஞர் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் : “உணவு மற்றும் பானத்திலிருந்தே இரத்தம் உருவாகிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே ஒரு மனிதர் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ i~த்தான்கள் ஓடக்கூடிய அவரது இரத்தநாளங்கள் விரிவடைகின்றன. அவர் நோன்பு இருந்தால் அவை குறுகிவிடுகின்றன. இதனூடாக நற்காரியங்களை செய்வதற்கும், வெறுக்கத்தக்க காரியங்களை விட்டுவிடுவதற்கும் உள்ளங்கள் தூண்டப்படுகின்றன." (மஜ்மூஉல் பதாவா : 25-246)
06) நோன்பாளி அல்லாஹ் தன்னை எல்லா நிலைகளிலும் கவனித்துக் கொண்டிருக்கிறான் எனும் சிந்தனைக்கு தன்னையே பயிற்றுவித்துக் கொள்கின்றான். அதன் காரணமாக தனது மனம் விரும்பும் விடயங்களை தனக்கு செய்ய முடியுமாக இருந்தும் கூட அல்லாஹ் கவனித்துக் கொண்டிருப்பதற்காக விட்டுவிடுகின்றான்.
07) நோன்பு இந்த உலகத்திலிருந்தும் அதன் ஆசைகளிலிருந்தும் விலகி, அவற்றில் பற்றுக் கொள்ளாது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்விடம் இருப்பதை அடைந்து கொள்வதில் பற்றுக் கொள்வதற்கு மனிதனை ஊக்குவிக்கின்றது.
08) நோன்பு ஒரு முஃமினை வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவதற்கு பழக்குகின்றது. ஏனெனில் நோன்பாளி நோன்பிருக்கும் நிலையில் அவற்றை அதிகம் செய்வதனால் காலப்போக்கில் அதனையே பழக்கமாக்கிக் கொள்கின்றார்.
இவைகள் தான் நோன்பு மார்க்கமாக்கப்பட்டதற்கான சில காரணங்களும், நுட்பங்களுமாகும். நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவற்றை அடைந்து கொள்வதற்கு கிருபை செய்யுமாறும், அவனுக்கு அழகிய முறையில் வணக்கம் புரிய உதவி செய்யுமாறும் வேண்டுகிறோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(பார்க்க: தப்ஸீருஸ் ஸஃதி- பக்கம்: 116, ஹாஷியது இப்னி காஸிம் அலர் ரவ்ழில் முர்பிஃ - 3ஃ344, அல்மவ்ஸுஅதுல் பிக்ஹிய்யா – 28(