குல்உ என்பது கணவன் ஒரு இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு தனது மனைவியை பிரிந்து விடுதல் ஆகும். அத்தொகை அவர் கொடுத்த மஹராகவோ அல்லது அதைவிட கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
இதற்கான அடிப்படை ஆதாரம் பின்வரும் வசனமாகும்.
(மீட்டுக் கொள்ள உரிமை பெற்ற) ‘தலாக்’ இரு தடவைகளாகும். பின்னர் முறைப்படி தடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது மூன்றாவது முறையாக ‘தலாக்’ கூறி நன் முறையில் விட்டு விடலாம். அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். அல்பகறா:229
நபிமொழியிலிருந்து அதற்கு பின்வரும் ஆதாரத்தைக் கூறலாம்.
ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ குறைகூறவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “சரி! அவர் மஹ்ராகக் கொடுத்த தோட்டத்தை அவரிடமே திருப்பித் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் “ஆம்” என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து தலாக் கூறிப் பிரிந்துவிட்டார்.
(புஹாரி 5273)
இச்சம்பவத்தில் இருந்து பெண்ணால் தனது கணவனுடன் தொடர்ந்து வாழ முடியாத பட்சத்தில் ஆட்சியாளர் அல்லது நீதிபதி அவளது கணவரை அவளிடம் இருந்து பிரிந்து செல்லுமாறு வேண்டிக்கொள்வது மாத்திரமின்றி கட்டளையிடவும் முடியும் என்ற தீர்ப்பை அறிஞர்கள் பெற்றுள்ளார்கள்.
குல்உ எவ்வாறு நடைபெறும்??
கணவன் தான் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டோ அல்லது அவர்கள் இருவரும் அதற்கு ஒத்துக்கொண்டோ கணவர் மனைவியை பார்த்து நான் உன்னை பிரிந்து விட்டேன் அல்லது உன்னை செல்ல அனுமதித்து விட்டேன் என்பது போன்ற வார்த்தைகளை கூறுவார்.
தலாக் என்பது கணவனின் உரிமை அது கணவனால் நடைபெறாத பட்சத்தில் செல்லுபடி ஆகாது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக தலாக் கணவனுக்கு உரியதாகும் .
ஆதாரம் இப்னுமாஜா 2081
அதனை இமாம் அல்பானி இர்வாஉல் ஙலீல்(2041)இல் ஹஸன் (ஆதாரபூர்வமானது) என்பதாக குறிப்பிடுகிறார்.
இதன் காரணமாகவே அறிஞர்கள் யாராவது தனது மனைவியை தலாக் கூறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு அவரும் நிர்ப்பந்தம் காரணமாக தலாக் கூறினால் அந்த தலாக் செல்லுபடி ஆகாது என்பதாக கூறுகிறார்கள். அல்முங்னீ (352/10)
உலக சட்டங்களின் அடிப்படையில் பெண் தன்னைத்தானே தலாக் சொல்ல முடியும் என நீர் குறிப்பிட்டதை பொருத்தவரையில் அப்பெண் கணவனை வெறுத்து அவளுக்கு அவருடன் தொடர்ந்து வாழ முடியாது போனால், அல்லது பாவமிழைத்தல், ஹராமானவற்றில் துணிந்து ஈடுபடுகின்றமை என்பவற்றினால் ஏற்படும் மார்க்க ரீதியான வெறுப்பு போன்ற தலாக்கை வேண்டுவதை ஆகுமாக்கக்கூடிய காரணிகளினால் அப்பெண் கணவனிடம் தலாக் கூறுமாறு வேண்டுவதில் தவறில்லை, ஆனால் அவர் அவளுக்கு கொடுத்த மஹரை திருப்பிக் கொடுத்தே குல்உ என்ற முறையில்தான் அவரை விட்டும் நீங்க முடியும்.
மேற் சொன்ன விதமான காரணிகள் ஏதுமின்றி தலாக் கூறும்படி வேண்டுதல் ஆகுமாகாது. ஆனால் நீதிமன்றம் தலாக் கூறி அளிக்கும் தீர்ப்பு மார்க்க ரீதியாக செல்லுபடியாகாது. மாறாக மார்க்க ரீதியாக அவள் கணவனின் மனைவியாகவே இருப்பாள். ஆனால் இங்கு ஒரு புதிய பிரச்சினை தோன்ற அது வழிவகுக்கும், அப்பெண் மனித சட்டங்களின் அடிப்படையில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணாகவும் அவளது இத்தா தவணை முடிந்தால் அதன் பின் இன்னொருவரை திருமணம் செய்யலாம் எனும் நிலையிலும் மார்க்க ரீதியாக விவாகரத்து செய்யப்படாத கணவனின் மனைவியாகவும் இருப்பாள்.
இதுபோன்ற விடயங்களில் இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் கூறுகிறார்கள். நாம் தற்பொழுது ஒரு பிரச்சினையின் முன்னர் இருக்கிறோம். அவள் தொடர்ந்தும் தனது கணவனின் பாதுகாப்பில் இருப்பது இன்னொருவரைத் திருமணம் செய்வதற்குத் தடையாக உள்ளது. ஆனால் வெளிப்படையில் நீதிமன்றத் தீர்ப்பின் படி விவாகரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இத்தா முடிவடைந்தால் வேறு ஒருவரை திருமணம் செய்யலாம் என்ற நிலையில் இருப்பாள். இப்பிரச்சினையிலிருந்து வெளிவர, நல்லவர்கள் தலையிட்டு கணவன் மனைவிகளுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது முடியாத பட்சத்தில் மார்க்க ரீதியான குல்உவாக அது அமைவதற்காக அப்பெண் அவருக்கு இழப்பீட்டுத் தொகையை கொடுப்பது அவள் மீது கடமையாகும்.
லிகாஉல் பாபில் மப்தூஹ் இலக்கம் 58 (3/174)