0 / 0
19/முகர்ரம்/1446 , 25/ஜூலை/2024

'அல்-இஸ்திவா அலல்-அர்ஷ்' (الاستواء على العرش) என்பதற்கு 'அர்ஷின் மீது உட்கார்தல்' (الجلوس) அல்லது 'அமர்தல்' (القعود) என விளக்கமளித்தல் சரியாகுமா?

கேள்வி: 258981

அல்லாஹ் அர்ஷின் மீது உட்கார்ந்திருக்கிறான் என்று சொல்வது ஒரு முஸ்லிமுக்கு ஆகுமா? மேலும், அல்லாஹ் அர்ஷுக்கு மேலால் அமர்ந்துகொண்டு தனது இன்னின்ன காரியங்களை மேற்கொள்கிறான் என்று நாம் சொல்ல முடியுமா? இந்த வார்த்தைகளை ஒருவர் அல்லாஹ்வை ஏளனம் செய்யும் எண்ணமின்றி சொல்கிறார்; என்றாலும் 'உட்கார்ந்திருத்தல்' (الجلوس) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டால் அவர், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் மட்டும் போதுமா? இதன் பிறகு இன்னொரு தடவை இவ்வாறு செய்வதில்லை என்று உறுதியெடுத்துக் கொண்டால் போதுமா? என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றேன். இது பற்றிக் கேட்பதற்கான கரணம் என்னெவென்றால், அல்லாஹ்வின் விடயத்தில் பொருத்தமற்ற விதத்தில் பேசுவதன் பாரதூரம் பற்றி நான் நன்கறிவேன். சில வேளைகளில் இது மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடக் கூடியது எனவும் நான் அறிவேன். நான் சுட்டிக்காட்டியுள்ள இந்த விடயம் இது போன்ற ஒரு சூழ்நிலைக்குள்ளாகுமா ?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது:

அல்லாஹ்வின் விடயத்தில், அவன் தனது மகிமைக்கும் அந்தஸ்த்துக்கும் பூரணத்துவத்துக்கும் பொருத்தமான விதத்தில் 'அவன் அர்ஷின் மேலானான்' (استواؤه على العرش)  என்பது மிகத் தெளிவான விடயமாகும்.

இது தொடர்பாக, அல்-குர்ஆனில் ஏழு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பின்வரும் வசனம் சிறந்த எடுத்துக்காட்டு: "உங்கள் இரட்சகனான அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, பின்னர் அர்ஷின் மேலானான்" (அல்-அஃராஃப் /54)

இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள 'அல்-இஸ்திவா' (الاستواء) என்ற வார்த்தைக்கான மிகவும் பிரபல்யமான 'தஃப்ஸீர்' விளக்கமானது, 'உயர்தல்' (العلو ), 'மேலாதல்' (الارتفاع) என்பனவாகும்.

இமாம் புகாரி அவர்கள் தனது ஸஹீஹ் கிரந்தத்தில், "அவனது அர்ஷ் நீருக்கு மேலாலுள்ளது", "அவன்தான் மகத்தான அர்ஷின் அதிபதியாவான்" என்ற தலைப்பில் எடுத்துக்காட்டியுள்ள பின்வரும் கருத்துக்களும் நோக்கத்தக்கது.

அபுல்-ஆலியா அவர்கள்: ‘இஸ்தவா இலஸ்-ஸமாஇ’ (استوى إلى السماء) என்பதன் அர்த்தமானது, ‘உயர்ந்தான்’(ارتفع) என்பதாகும் எனவும்,  இமாம் முஜாஹித் அவர்கள்: இஸ்தவா (استوى) என்பது ‘அர்ஷுக்கு மேலால் உயர்ந்தான்’ (علا على العرش) என்பதாகும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் பஙவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும்: (ثم استوى إلى السماء) "பின்பு அவன் வானத்துக்கு மேலானான்" என்பதன் கருத்தானது, இப்னு அப்பாஸினதும் இன்னும் பல ஸலப்ஃ முபஃஸ்ஸிர்களான குர்ஆன் விரிவுரையாளர்களினதும் கருத்துப்படி, (ارتفع إلى السماء) 'வானத்துக்கு மேலால் உயர்ந்தான்' என்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (தப்ஸீர் அல்பஙவீ -78/1). இக்கருத்தையே அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் 'பத்ஹுல்-பாரீ(417/13) கிரந்தத்தில் எடுத்துக்காட்டியுள்ளதோடு, "அபூ உபைதா மற்றும் அல்-பஃர்ரா  ஆகியோரும் அவர்களல்லாதோரும் இது போன்றே கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

'உட்கார்தல்' (الجلوس) என்ற வார்த்தையானது, ஆதாரபூர்வமற்ற சில ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது.

எனினும், இமாம் காரிஜா இப்னு முஸ்அப் அல்-ழப்ஈ அவர்கள் வழியாக அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அவர்கள் 'அஸ்-ஸுன்னா' (1/105) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது போல சில 'ஸலப்ஃ' இமாம்கள் 'இஸ்திவா' (استواء) என்பதற்கான விளக்கமாக இக்கருத்தைக் கூறியுள்ளனர்.

அல்-ஹாபிழ் அத்-தாரகுத்னி அவர்களும், 'அமர்தல்' (القعود) என்ற வார்த்தையைத் தனது பிரபல்யமான கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஒரு வாதத்திற்கு, இந்த வார்த்தைப் பிரயோகப் பயன்பாட்டை சரிகண்டாலும், التشبيه எனும் ஒப்புவமை செய்யாது நம்புவது கடமையாகின்றது.

ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் இதுபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "மலக்குகள் பற்றியும், மனித ஆன்மாக்கள் பற்றியும் விபரிக்கப்படுகின்ற 'அசைதல்', 'ஏறுதல்', 'இறங்குதல்' வகைத் தொழிற்பாடுகள், இவ்வுலகில் கண்களுக்குப் புலப்படுகின்ற மனித உடல்கள் மற்றும் ஏனைய பொருட்களினதும் அசைவுகளுக்கு ஒத்தவையல்ல என்பதும், மனித உடல்ககளில் சாத்தியமாகாதவை கூட அவற்றில் சாத்தியமாகின்றன என்பதும் விளங்கிக்கொள்ளப்படுமானால், இறைவன் பற்றி விபரிக்கப்படுபவற்றிலும் அந்த வேறுபாடு மிக அதிகமாக இருக்க முடியும் என்பதையும், மனித உடல்கள் இறங்குவதற்கு ஒப்பாகுவதிலிருந்து அவை மிகத் தூரமானவை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

அது மாத்திரமின்றி, வானவர்கள் இறங்குவது மற்றும் மனிதர்களின் ஆன்மாக்கள் இறங்குவது கூட அவர்களின் உடம்புகள் இறங்குவதற்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ் இறங்குவது மலக்குகள் மற்றும் மனிதர்களின் ஆன்மாக்கள் இறங்குவதற்குக் கூட ஒப்பாகமாட்டாது.

மண்ணறையில் (விசாரணைக்காக எழுப்பப்படும்) சடலத்தின் அமர்வு கூட ஒரு சாதாரண உடலின் அமர்வுக்கு ஒத்தது கிடையாது என்றிருக்கும் போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் பற்றிக்  கூறியதாக,  'அமர்தல்', 'உட்கார்தல்' ஆகிய (القعود والجلوس) வார்த்தைகளை உள்ளடக்கி ஜஃபர் இப்னு அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் இப்னுல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் இன்னும் பல அறிவிப்புக்களிலும் வந்துள்ள செய்திகளைப் பொறுத்த வரை, மனித உடல்களின் பண்புகளோடு அது ஒப்புவமை செய்யப்படக்கூடாது". [மஜ்மூஉல்-பதாவா (5/527)]

இந்த வார்த்தையானது, அல்-குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ ஸஹாபாக்களின் வார்த்தைகளிலோ இடம்பெறவில்லையென்பதால் இந்த வார்த்தைப் பிரயோகத்தில் மறுப்பும் ஏற்பும் அற்ற 'தவக்குப்ஃ' எனும் நிலைப்பட்டைக் கைக்கொள்வதே சத்தியத்திற்கு மிக நெருக்கமானதாகும்.

அஷ்-ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் இது பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "அல்லாஹ் தனது அர்ஷின் மேலானான்" என்பதன் அர்த்தமானது, அதன் மேலால் அவன் நிலைபெற்றுள்ளான் என்பதாகும். இதுதான் ‘ஸலப்ஃ’களிடம் மிகப் பிரபல்யமான கருத்தாகவுமுள்ளது. இதனை இப்னுல்-கையிம் அவர்கள் அன்-நூனிய்யாவிலும் வேறு கிரந்தங்களிலும் குறிப்பிட்டுள்ளார்கள். 'உட்கார்தல்' மற்றும் 'அமர்தல்' என்ற வார்த்தைகளை சிலர் குறிப்பிட்டிருந்தாலும் அது தொடர்பில் என் உள்ளத்தில் ஒரு நெருடல் உள்ளது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்".  [மஜ்மூஉ பத்தாவா இப்னு உதைமீன் (1/196)]

அஷ்-ஷெய்க் அல்-பர்ராக் (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "சில செய்திகளில் 'உட்கார்தல்' என்ற பண்பு அல்லாஹ்வுக்கு உண்டு, அவன் தனது 'குர்ஸீ'யில், தான் நாடிய விதத்தில் அமர்கிறான் என இடம்பெற்றுள்ளது. சிலவேளைகளில் ஒரு சில இமாம்களும்  இவ்வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். இமாம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் வார்த்தைப் பிரயோகமும் கூட, 'அல்-இஸ்திவா'  என்பது 'அமர்தல்' என்ற பண்பை உள்ளடக்கியுள்ளது என்பதை உணர்த்துவதாகவே தெரிகின்றது. எனினும் இவ்வார்த்தைப் பயன்பாட்டைப் பொறுத்தவரைக்கும் அது ஆதாரபூர்வமாக இடம்பெறாத வரை 'தவக்குப்ஃ' எனும் 'ஏற்போ மறுப்போ அற்ற காத்திருப்பு' நிலைப்பாட்டைக் கைக்கொள்வதே சிறந்ததாகும்". (ஷரஹுர்-ரிஸாலா அத்-த-தம்முரிய்யா- பக்:188)

இதுவரை குறிப்பிட்ட விடயங்களை வைத்து நோக்கும்போது, 'உட்கார்தல்' என்ற வார்த்தைப் பயன்பாட்டை எம்மால் காணமுடியவில்லை. ஆயினும், (استوى على العرش) 'அர்ஷின் மேலானான்' என்றே கூற வேண்டும். அதனை 'மேலாதல்', 'உயர்தல்' என்று விளக்க முடியும். யாராவது, ஒரு சில ஸலப்ஃகள்  மூலமாக வந்தவற்றைப் பயன்படுத்தினால் அவரைத் தடுக்க முடியாது.

என்றாலும், இது பாமர மக்களிடையே சொல்லப் பொருத்தமற்றது என அவருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஏனெனில், சில வேளை அது அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். சிலவேளை அது அவர்களை படைப்பினங்களோடு அல்லாஹ்வை ஒப்பீடு செய்யும் நிலைக்குத் தள்ளிவிடக்கூடும்.

இதன்முலம் விளங்குவது யாதெனில், இவ்வார்த்தைப் பிரயோகமானது 'குஃப்ர்' எனும் நிராகரிப்பை ஏற்படுத்த மாட்டாது. எனினும் அது 'அல்-இஸ்திவா' (الاستواء) எனும்  'மேலாதல்' எனும் 'ஸிபத்' இற்கான கருத்து வேறுபாடுள்ளதொரு விளக்கமாகவே அமைகின்றது. 

முடிவாக, இப்பதப் பயன்பாட்டில் ஏற்பும் மறுப்பும் அற்ற 'தவக்குப்ஃ' எனும் காத்திருத்தல் என்ற நிலைப்பாடே தெளிவானது என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
'அல்-இஸ்திவா அலல்-அர்ஷ்' (الاستواء على العرش) என்பதற்கு 'அர்ஷின் மீது உட்கார்தல்' (الجلوس) அல்லது 'அமர்தல்' (القعود) என விளக்கமளித்தல் சரியாகுமா? - Islam Question & Answer