சகோதரியே, இதோ நீங்கள் கேட்ட நேர்ச்சை தொடர்பான அடிப்படை சட்டங்கள் மற்றும் வகைகளை உமக்கு தருகிறோம் இன்ஷா அல்லாஹ் இத்தெளிவு உமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக அமையும்.
அல் அஸ்பஹானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் "நேர்ச்சை என்பது உனக்கு கடமை இல்லாத ஒன்றை, குறித்த ஒரு விடயம் நிகழ்வதை முன்னிட்டு உனக்கு நீயே கடமையாக்கி கொள்வதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்.
(அல்குர்ஆன் : 19:26)
நூல்: முப்ரதாது அல்பாழில் குர்ஆன் : ப (797)
எனவே நேர்ச்சை என்பது ஒரு அடியான் தன் மீது கடமை இல்லாத ஒரு விடயத்தை உடனடியாகவோ அல்லது ஒன்றுடன் தொடர்பு படுத்தியோ கட்டாயமாக்குவதாகும்.
நேர்ச்சையைப் பொறுத்தவரை குர்ஆனில் பாராட்டப்படும் வகையில் இடம்பெற்று இருப்பதை அவதானிக்கலாம். அல்லாஹ் தன் முஃமினான அடியார்களைப் பற்றிக் கூறும் போது : "நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்"
(அல்குர்ஆன் : 76:5)
(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 76:6)
"அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்"
(அல்குர்ஆன் : 76:7) இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.
அதாவது அல்லாஹ் கியாம நாள் அமளி துமளிகளின் காரணமாக ஏற்படும் அந்த முஃமின்களின் பயத்தையும் நேர்ச்சைகளை நிறைவேற்றுவதையும் அவர்களின் வெற்றி மற்றும் சுவனம் செல்வதற்கான காரணிகளில் ஆக்கி இருக்கின்றான்.
நேர்ச்சையின் சட்டம் : அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையை நிறைவேற்றுவது கட்டாயமாகும். அதற்கு ஆதாரமாக பின்வரும் குர்ஆனிய வசனம் இடம் பெற்றுள்ளது.
"பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை "தவாஃபும்" செய்ய வேண்டும்"
(அல்குர்ஆன் : 22:29)
இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் "இந்த குர்ஆனிய வசனத்தில் இடம் பெற்றிருக்கும் கட்டளை கடமையைக் குறிக்கிறது.
மேலும் நேர்ச்சை வைக்கக் கூடாது அது வெறுக்கத்தக்க செயல் என்ற வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் பல ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் பின்வரும் ஹதீஸ்களைக் குறிப்பிடலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் ஏனெனில் நேர்ச்சை விதியில் எதையும் மாற்றாது அதேபோல நேர்ச்சை கஞ்சனிடமிருந்து தான் வெளியே கொண்டுவரப்படுகிறது.
நூல் : முஸ்லிம் (3096)
நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர்( ரழி),
நூல் : புகாரி, முஸ்லிம்
அது எவ்வாறு நேர்ச்சையை நிறைவேற்றுபவர்களுக்கு புகழாரமும் நேர்ச்சையே வைக்க கூடாது என்று தடையும் வந்திருக்கிறது என்பதாக ஒருவர் கேள்வி முன் வைத்தால்! அதற்குரிய பதில் : புகழுக்குரிய (அனுமதிக்கப்பட்ட) நேர்ச்சை வெறுமனே வழிபாட்டை நோக்கமாகக் கொண்டு வைக்கப்படும் நேர்ச்சையாகும் அதேபோன்று எந்த ஒரு நிகழ்வுடனும் தொடர்பு படுத்தி வழிபாட்டை காட்டிலும் கஷ்டத்தை உண்டு பண்ணக் கூடிய விதத்தில் அமையாதது. மேலும் பொடுபோக்கு மற்றும் சோம்பேறி தன்மையை தடுக்கும் வகையிலும் அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் வகையிலும் அமைந்திருப்பதும் ஆகும்.
தடுக்கப்பட்ட நேர்ச்சையைப் பொறுத்தவரையில் பல வகைகள் இருக்கின்றன.
அவைகளுள் ஒன்று
பிரதிபலன் எதிர்பார்த்து வைக்கும் நேர்ச்சை. அதாவது நேர்ச்சை வைக்கக் கூடியவர் ஒரு வழிபாட்டை அவர் விரும்பும் குறித்த ஒரு விடயம் நடைபெறுவதில் அல்லது அவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தை தடுப்பதில் நிபந்தனை இடுவது போல் சம்பந்தப் படுத்துவதாகும். அவர் நினைத்தது நடக்காத சந்தர்ப்பத்தில் குறித்த வழிபாட்டை செய்யவும் மாட்டார். இதுவே தடை செய்யப்பட்ட நேர்ச்சையாகும்.
தடை செய்யப்பட்டதற்கான காரணம்,
ஒன்று நேர்ச்சை வைத்தவர் அவருக்கு குறித்த வழிபாடு கட்டாயமாக கடமையாக மாறிய சந்தர்ப்பத்தில் தனக்கு பாரமான ஒரு வழிபாட்டை செய்ய முயல்கிறார்.
மற்றது நேர்ச்சை வைத்தவர் அவர் நாடியது நடக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒரு வழிபாட்டை செய்ய முயலுகிறார் அந்த நேர்ச்சை பிரதிபலன் எதிர்பார்த்து செய்யும் நேர்ச்சையாக மாறிவிடுகிறது இவ்வாறு மாறும்பொழுது அந்த அடியாரின் நிய்யத்தில் குறை ஏற்படும் விதத்தில் அமைந்து விடுகிறது.
உதாரணமாக நேர்ச்சை வைத்தவருடைய சொந்தக்காரரின் நோய் குணமாகவில்லை என்றால் அவர் வைத்த சதக்கா செய்வேன் என்ற நேர்ச்சையை செயல்படுத்த மாட்டார். இந்த நிலைதான் கஞ்சனின் நிலையாகும். அதாவது தன் பணத்திலிருந்து ஏதாவது தொகையை கொடுக்க வேண்டும் என்றால் உடனடி பிரதிபலனை எதிர்பார்த்து அதுவும் பெரும்பாலும் அத்தொகையை விட அதிகமாக பிரதிபலன் இருந்தால்தான் கொடுக்கிறார்.
அதேபோன்று சிலரிடம் நேர்ச்சை என்பது எதற்காக வைக்கிறார்களோ அந்த நோக்கம் கட்டாயம் நிறைவேறும் அல்லது அல்லாஹ் நேர்ச்சை வைத்தவருக்கு குறித்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுப்பான் என்ற அறியாமை நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மற்றும் சிலரிடம் நேர்ச்சை என்பது விதியை மாற்றும் அல்லது அவர்கள் விரும்பும் பலனை உடனடியாகக் கொண்டு வரும் அவர்களுக்கு ஏற்படும் தீயவற்றை உடனடியாக நீக்கிவிடும் என்ற நம்பிக்கைகள் இருக்கின்றன.
இதனாலேயே இவ்வாறு நேர்ச்சை வைப்பது தடுக்கப்பட்டிருக்கிறது.
கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்திருக்கும் நேர்ச்சைகள்
1- கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய நேர்ச்சை வழிபாட்டை நோக்கமாக வைத்து நேர்ச்சை வைத்தல். அதாவது அல்லாஹ்வுக்கு வழிபடுகிறேன் என்று பொதுவாக வைக்கும் நேர்ச்சை. உதாரணமாக தொழுகை,நோன்பு, உம்ரா, ஹஜ், குடும்ப உறவைப் பேணுதல், இஃதிகாப் இருத்தல், போர் புரிதல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற வழிபாடுகளை செய்கிறேன் என்று நினைத்து வைப்பது.
அதாவது அல்லாஹ்வுக்காக நான் நோன்பு நோற்கிறேன் சதக்கா செய்கிறேன் என்று சொல்வதைப் போல. அல்லது அல்லாஹ்வுக்காக நான் இந்த வருடம் ஹஜ் செய்வேன் அல்லது மக்கா ஹரத்தில் என் நோயை குணமாக்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவேன் என்று சொல்லுவதைப் போல. அல்லது ஏதாவது ஒரு விடயத்தோடு சம்பந்தப்படுத்தி விரும்பியது நடந்தால் இவ்வாறு செய்வேன் என நேர்ச்சை வைப்பது
உதாரணமாக என்னை விட்டுச் சென்றவர் என்னிடம் வந்தால் அல்லது என் எதிரியால் ஏற்படும் பாதிப்புகளை அல்லாஹ் தடுத்துவிட்டால் என் மீது நோன்பை கடமையாக்கி அல்லாஹ்வுக்காக நோற்பேன் அல்லது சதக்கா கொடுப்பேன் என்று சொல்வதைப் போல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6202)
மேலும் ஒருவர் வழிபாட்டை நோக்கமாக வைத்து நேர்ச்சை வைத்து பின்பு இடையில் துரதிஷ்டவசமாக ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும் பொழுது அதை அவருக்கு நிறைவேற்ற முடியாமல் போனால். உதாரணமாக ஒரு மாத காலம் நோன்பு நோற்பேன் அல்லது உம்ரா ஹஜ் செய்வேன் என்று நேர்ச்சை வைத்து இருந்த ஒருவர் திடீரென நோய்வாய்படுகிறார் அவர் வைத்த நேர்ச்சையைச் செய்வதற்கான சக்தியும் இல்லாமல் போகிறது அல்லது சதக்கா கொடுப்பேன் என்பதாக நேர்ச்சை வைக்கிறார் திடீரென அவர் ஏழையாக மாறிவிடுகிறார் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சத்தியத்தை முறித்தால் கொடுக்கும் குற்ற பரிகாரம் கொடுப்பதற்கு அவர் தள்ளப்படுகிறார். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் யார் ஒருவர் தனக்கு இயலாத ஒன்றை தொடர்பு படுத்தி நேர்ச்சை வைக்கிறாரோ அவர் அதை செய்யாததற்காக சத்தியத்தை முறித்ததற்கான குற்றப் பரிகாரத்தை கொடுக்க வேண்டும்.
நூல் : அபூதாவூத்
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள் : ஒருவர் அல்லாஹ்வுக்காக வழிபடுகிறேன் என்று நேர்ச்சை வைத்தால் அவர் கட்டாயம் அதை நிறைவேற்றி விட வேண்டும். அவ்வாறு அவர் நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப் பரிகாரத்தைக் கொடுக்க வேண்டும் இதுவே பல முன்னைய அறிஞர்களிடத்தில் காணப்பட்டு வந்தது.
2- நிறைவேற்றுவது தடை செய்யப்பட்ட நேர்ச்சை, இவ்வாறான நேர்ச்சைகளுக்கும் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப் பரிகாரத்தை கொடுக்க வேண்டும். இது தொடர்பான நேர்ச்சையை பின்வரும் வகைகளாக நோக்கலாம்.
1- பாவச் செயல் புரிவதற்கான முயற்சி,
அதாவது அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வேண்டிய விதத்தில் வைக்கப்படும் முயற்சி. உதாரணத்திற்கு மையவாடிகளுக்கு எண்ணெய் மெழுகுவர்த்தி அல்லது ஏதாவது செலவினங்களை வழங்க வேண்டும் என்று நேர்ச்சை வைப்பது.
இவ்வாறான நேர்ச்சை ஒருவிதத்தில் சிலைகளுக்கு நேர்ச்சை செலுத்துவது போன்றுதான்.
அவ்வாறு ஏதாவது ஒரு பாவகரமான செயலை செய்வதற்கு நேர்ச்சை வைப்பது எந்த விதத்திலும் அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டதும் கூட. இவ்வாறு செய்ததற்காக அவர் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தை வழங்குவார். உதாரணமாக நான் விபச்சாரம் செய்தேன் மது அருந்துவேன் களவெடுப்பேன் அனாதைகளின் சொத்தை அபகரிப்பேன் பிறர் உரிமையை மறுப்பேன் குடும்ப உறவை பேண மாட்டேன் மார்க்க ரீதியான எந்த தடையும் இல்லாத சந்தர்ப்பத்தில் தன் சொந்தக்காரரின் வீட்டுக்கு நுழையவே மாட்டேன் போன்ற பாவகரமான செயலைச் செய்வேன் என்று நேர்ச்சை வைப்பது.
இவ்வாறான செயல்பாடுகளை நேர்ச்சை வைத்தாலும் நிறைவேற்றக்கூடாது என்பதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை அவதானிக்கலாம்.
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6202)
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சை இல்லை
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன்
நூல் : முஸ்லிம் (3099)
2- குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு நேர் மாற்றமாக வரக்கூடிய ஒன்றை நேர்ச்சை வைத்தல்.
அதாவது ஒரு முஸ்லிம் ஒரு விடயத்தை செய்வேன் என்று நேர்ச்சை வைத்து பிறகு அவர் வைத்த அந்த நேர்ச்சை குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் (அதாவது அதில் தடை அல்லது ஏவல் இருக்கிறது என்பதாக வைத்துக் கொள்ளலாம்.) உடனடியாக அதை நிறைவேற்றாது நிறுத்திக் கொள்ள வேண்டும் அதற்காக சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை அவதானிக்கலாம்.
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) கூறுகிறார்கள் "ஒரு தடவை ஒரு மனிதர் மினாவின் பக்கம் செல்லும் இப்னு உமர் ரழி இடம் நான் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நோன்பு நோற்பேன் என்று நேர்ச்சை வைத்திருக்கிறேன் இந்த நாள் பெருநாள் தினத்தோடு வந்திருக்கிறது ஆக நீங்கள் எவ்வாறு இதை கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் ரழி அவர்கள் அல்லாஹ் நேர்ச்சையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டு இருக்கிறான் நபியவர்கள் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதை தடை செய்திருக்கிறார்கள் என்று கூறினார். பின்னர் அந்த நபர் இப்னு உமர் அவர்கள் நன்றாக செவிமடுக்க இல்லை என்று எண்ணி திரும்பவும் அவ்வாறே கேட்டார். இப்னு உமர் அவர்களும் திரும்ப அதே போன்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி (6212)
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் "நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் தினங்களில் சுன்னத்தான முறையிலோ நேர்ச்சையாகவோ நோன்பு வைப்பது தடை செய்யப்பட்டதாகும் என்று அறிஞர்களின் ஏகோபித்த முடிவு இருக்கிறது.
3- சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தை வழங்க வேண்டிய நேர்ச்சை.
அதாவது பல நேர்ச்சைகள் எந்த சட்டத்துடனும் சம்பந்தப்படாது சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தை வழங்குவதில் மாத்திரம் தொடர்புள்ளதாக இருக்கும். அதற்கு பொதுவான நேர்ச்சை என்பதாக சொல்லலாம் (குறித்த ஒரு செயலை குறிப்பிடாது பொதுவாக நேர்ச்சை வைப்பது) ஒரு முஸ்லிம் குறித்த எந்த ஒரு செயலையும் குறிப்பிடாது பொதுவாக நேர்ச்சை வைத்தால் உதாரணமாக அல்லாஹ் எனது நோயை குணப்படுத்தினால் நான் நேர்ச்சை வைத்து நிறைவேற்றுவேன் என்று கூறுவது, அதில் எந்த ஒரு விடயத்தையும் குறித்து சொல்லவுமில்லை இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் கட்டாயம் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தை வழங்க வேண்டும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை அவதானிக்கலாம்.
உக்பா பின் ஆமிர் (ரஹ்) அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்ச்சைக்கான குற்றப்பரிகாரம் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரமாகும்.
நூல் : முஸ்லிம்
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் " இமாம் மாலிக் மற்றும் அதிகமான அறிஞர்கள் இந்த ஹதீஸை பொதுவான நேர்ச்சைக்கு (நான் நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று பொதுவாக சொல்வது) ஆதாரமாக கருதுகிறார்கள்.
4- நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது அதை விட்டுவிட்டு சத்தியத்தை முறிப்பதற்கான குற்றப்பரிகாரத்தை கொடுப்பதற்கும் தேர்வு வழங்கப்பட்ட நேர்ச்சை.
சில நேர்ச்சைகள் அதை செய்வதற்கும் செய்யாது அதற்காக சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தை வழங்குவதற்கும் தேர்வு வழங்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பின்வருமாறு.
- ஆத்திரம் மற்றும் கோபத்தின் காரணமாக வைக்கப்படும் நேர்ச்சை. அதாவது கோபம் காரணமாக வழிபாட்டை நோக்கமாக கொள்ளாமல் சத்தியம் பண்ணிக் கொள்ளும் இடத்தையும் தாண்டி நேர்ச்சை வைப்பது. உதாரணமாக நான் இதை செய்தால் நிச்சயம் ஹஜ் அல்லது ஒரு மாத கால நோன்பு என் மீது கடமை என்று நேர்ச்சை வைப்பதை போல. அல்லது நான் இன்னாருடன் பேசினால் இந்த அடிமையை உரிமை இடுவது என் மீது கடமை அல்லது மனைவியை விவாகரத்து செய்வது என் மீது கடமை போன்ற நேர்ச்சை வைப்பது. பின்னர் அவர் உணராமலேயே சொன்னவற்றை செய்து விடுகிறார் இருந்தாலும் அவரது நோக்கம் இதை இதற்குப் பிறகு செய்யவே கூடாது என்பதுதான் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை செய்வதற்கும் செய்யாது பரிகாரம் வழங்குவதற்கும் தேர்வு வழங்கப்படுகிறார்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஏற்படும் நேர்ச்சை அதாவது குறித்த ஒரு செயலை செய்வதாகவும் அல்லது விடுவதாகவும் நேர்ச்சை வைப்பது. இந்த சந்தர்ப்பத்தை சத்தியம் செய்வதோடு நோக்கப்படுகிறது. இது பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள் : சத்தியத்தை செய்யும் விதத்தில் ஒருவர் நேர்ச்சை குறித்த செயலுடன் தொடர்பு படுத்தினால் உதாரணமாக உங்களுடன் நான் பிரயாணம் செய்தால் என் மீது ஹஜ் கடமை அல்லது என் சொத்து தர்மம் ஆகிவிடும் அல்லது ஒரு அடிமையை உரிமை இடுவது என் மீது கடமையாகிவிடும் என்பதாகக் கூறுவது. இந்த நடைமுறையைப் பொறுத்தவரையில் சஹாபாக்களிடத்திலும் பெரும்பாலான அறிஞர்களிடத்திலும் நேர்ச்சை சத்தியம் என்பதாக கருதப்படுகிறது அவர் அடிப்படையில் நேர்ச்சை வைத்தவராகவும் கருதப்படுவதில்லை. அவர் சொன்ன ஒன்றை செய்யவில்லை என்றால் சத்தியத்தை முறித்ததற்கான குற்றப்பரிகாரத்தைக் கொடுக்க வேண்டும். மற்றுமொரு இடத்தில் கூறுகிறார்கள் கோபத்தின் காரணமாக ஒருவர் நேர்ச்சை வைத்தால் எங்களிடம் இரண்டு விடயங்களை அவர் செய்வதில் தேர்வு வழங்கப்படுகிறார் ஒன்று அதற்கான குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும் அல்லது அவர் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் ஏனெனில் அவர் தன் மீது கடமையாக்கிக் கொண்ட செயலைச் செய்யாத பொழுது உடனடியாக அதற்கான பரிகாரத்தை அவர் கடமையாக்கிக் கொள்கிறார்.
- ஆகுமான நேர்ச்சை அதாவது பாவமான காரியங்களில் ஏதாவது ஒன்றை செய்வதாக நேர்ச்சை வைத்தல். உதாரணமாக இந்த குறித்த ஆடையை நான் அணிவேன் அல்லது குறித்த உணவை நான் உண்ணுவேன் அல்லது இந்த குறித்த வாகனத்தில் நான் பயணிப்பேன் அல்லது நான் இந்த குறித்த வீட்டில் நுழைவேன் என்பதாகக் கூறுவது.
சாபித் பின் லஹ்ஹாக் ரழி கூறுகிறார்கள் :
புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா? எனக் கேட்டார்கள். இல்லை என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள். நூல் அபுதாவூத் (2881)
அந்த குறித்த நபர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக புவானா என்ற இடத்தில் ஒட்டகையை அறுத்து பணியிட நேர்ச்சை செய்தார் அதாவது தனக்கு ஒரு ஆண் குழந்தையை அல்லாஹ் கொடுத்ததால்.
நபியவர்களும் அந்த நேர்ச்சையை குறித்த இடத்தில் நிறைவேற்றும் படி அனுமதி வழங்கினார்கள்.
அல்லாஹுதஆலா அவன் விரும்பக்கூடிய விடயங்களில் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக. நபி மீது ஸலவாத்தும் சொல்லுவானாக.