0 / 0
20/முகர்ரம்/1446 , 26/ஜூலை/2024

அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனது பண்புகளையும் ஈமான் கொள்வதில் சரியான அணுகுமுறை

கேள்வி: 249293

அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் எனது அணுகுமுறை யாதெனில், அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனிலும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவினாலும் அறிவித்திருக்கும் அனைத்துமே சிந்தனைக்கு நெருக்கமானவை. அவையல்லாதவை அறிவுக்கு அப்பாற்பட்டவை. அதனை அல்லாஹ்  மட்டுமே அறிவான். இந்த விடயத்தில் நான் இயக்கங்கள், ஜமாத்கள், பிரிவுகள் சொல்வதைக் கண்டுகொள்ள மாட்டேன் என்பதாகும்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது :

அல்லாஹுத்தஆலா தனக்கிருப்பதாக அறிவித்துள்ள அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கு இருப்பதாக அறிவித்துள்ள பெயர்களையும் பண்புகளையும் எவ்வித ஒப்பீடோ, உவமிப்போ, மாற்றுக்கருத்தோ, திரிபுவிளக்கமோ, எப்படியானது என்ற விவரணமோ இன்றி ஈமான் கொள்வது கடமையாகும்.

இந்த நம்பிக்கைக்குள் தான் அல்லாஹ் கேட்கிறான், பார்க்கிறான், அறிகிறான், ஞானமிக்கவன் என்ற பண்புகளும் அடங்குகின்றன. அல்லாஹ்வின் பண்புகளான கேள்வி, பார்வை, அறிவு, ஞானம், மேலாகுதல், வருதல், சந்தோசம், சிரிப்பு, கோபம், திருப்தி என்பனவும் அவனது பண்புகள் பற்றிய நம்பிக்கையில் அடங்குபவையாகும். மேலும் அவனுக்கு ஒரு முகம் உண்டு, இரு கைகள் உண்டு எனவும் அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவித்திருப்பது போலவும் தவறிலிருந்து பாதுகாப்புப் பெற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருப்பது போலவும் பல திருநாமங்களும் உயரிய பண்புகளும் காணப்படுகின்றன.

இவற்றையெல்லாம் ஈமான் கொள்வதும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையான 'அல்-ஈமானு பில்லாஹ்' என்பதற்குள் அடங்குகின்றது. இதுதான் ஈமானின் கடமைகளில் அடிப்படையானதும் மிகப் பெரியதுமாகும்.

இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

« அல்லாஹ் மீதான நம்பிக்கையானது, அல்லாஹ் தன்னைப் பற்றி தனது திருமறையில் விபரித்த முறையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனைப் பற்றி விபரித்த விதத்திலும் எந்த வித மாற்று விளக்கமோ திரிபுரைகளோ, எப்படிப்பட்டது என்ற விவரணமோ, ஒப்பீடோ இன்றி ஏற்றுக் கொள்வதாகும்.

அதன்படி அல்லாஹ்வுக்கு ஒப்பானதாக எதுவும் கிடையாது ; அவன் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான் எனவும் ஈமான் கொள்ளவேண்டும்.

ஆகவே, அவன் தனக்கிருப்பதாக விபரித்தவற்றை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. அவ்வார்த்தைகளுக்கு மாற்றுக்கருத்தை அர்த்தமாகக் கொடுக்க முடியாது. அல்லாஹ்வின் பெயர்களிலும் அவனது வசனங்களிலும் எதையும் மறுக்க முடியாது. அவற்றுக்கு எப்படியானது என்ற வர்ணனை செய்யக் கூடாது. அவனது பண்புகளை படைப்பினங்களின் பண்புகளோடு ஒப்பீடு செய்யக் கூடாது. ஏனெனில் அவன் இவற்றிலிருந்து தூய்மையானவன். அவனுக்கு ஈடு இணை கிடையாது. அவனுக்கு ஒப்புவமை கிடையாது. அவனுக்கு எந்த நிகரும் கிடையாது. தூய அல்லாஹ் அவனது படைப்புக்களோடு ஒப்பிடப்பட முடியாதவன்.

ஏனெனில், அவன்தான் தன்னையும் மற்றவர்களையும் நன்கறிந்தவனாவான். தனது படைப்புக்களை விடவும் மிகச் சரியாகவும் மிக அழகாகவும் பேசக்கூடியவனுமாவான். அதற்கடுத்ததாக, அல்லாஹ் பற்றி அறியாதவற்றைக் கூறுவோருக்கு மாற்றமாக  உண்மையாளர்களாகவும் உண்மைப்படுத்தக் கூடியோராகவும் அவனது தூதர்களே உள்ளனர். இதனால் தான் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். « அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன். (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக! புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது. » (37 :180-182)

இறைத்தூதர்களுக்கு முரண்படுவோர் தன்னைப் பற்றி வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தன்னைத் தூய்மைப் படுத்துகின்றான். அத்தோடு இறைத்தூதர்கள் சொல்வதில் எவ்விதக் குறையோ தப்போ இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக  ரஸூல்மார்களையும் இந்த வசனங்களில் கண்ணியப்படுத்துகின்றான்.

அல்லாஹுத்தஆலா தன்னைப் பற்றி வர்ணித்தவற்றிலும்  தனக்குத்தானே சூட்டிக்கொண்டுள்ள பெயர்களிலும் ஏற்பையும் மறுப்பையும் சேர்த்தே வைத்துள்ளான்.

எனவேதான் ‘அஹ்லுஸ்-ஸுன்னா’வினர் நபிமார்கள் கொண்டு வந்தவற்றுக்கு அப்பால் செல்வதில்லை. ஏனெனில், அதுதான் நேரான பாதையாகும். அதுதான் நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் என்போருக்கு அல்லாஹ் அருள்பாலித்த வழியாகும் ». (அல் அகீதா அல் வாஸித்திய்யா கலீல் ஹராஸ் விளக்கவுரையிலிருந்து. பக் :65)

இரண்டாவது :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தமத் தோழர்கள் இருந்த வழியைப் பின்பற்றுவதும் அது அல்லாத மனோ இச்சைக் காரர்களும் பித்அத் காரர்களும் இருக்கும் வழியை விட்டும் தவிர்ந்து கொள்வதும் தான் வெற்றிக்கான வழியாகும்.

இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

« எனது சமூகம் (கொள்கை அடிப்படையில்) எழுபத்து மூன்று குழுக்களாகப் பிளவுறும். அவற்றில் ஒன்றைத் தவிர » என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது, ஸஹாபாக்கள் : அக்குழு யாது எனக் கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், « நானும் எனது உத்தமத் தோழர்களும் இருக்கும் வழியில் இருப்போர் » என்று பதிலளித்தார்கள். இது திர்மிதியில் (2641) அப்துல்லாஹ் இப்னு அம்ர் அறிவிக்கும் ஹதீதில் இடம் பெற்றுள்ளது. இதனை இமாமவர்கள் ‘ஹஸன்’ என்கிறார்கள். அடுத்து இப்னுல் அறபீ அவர்கள் அஹ்காமுல் குர்ஆன் (3/432) நூலிலும் அல் இராக்கீ அவர்கள் தஹ்ரீஜுல் இஹ்யாஉ (3/284) எனும் நூலிலும் அல்பானீ அவர்கள் ஸஹீஹுத் திர்மிதி யிலும் ஹஸன் எனக் குறிப்பிடுகின்றனர்.

நீங்கள் வெற்றியை விரும்பினால் நபிகளாரின் உத்தமத் தோழர்களின் வழியில் பயணியுங்கள். அந்த வழியில் தான் ஸலஃப்களும் பயணித்தனர். அவர்கள் அல்லாஹ்வின் ‘அஸ்மாஉஸ்-ஸிபாத்’கள் அனைத்தையும் ஈமான் கொண்டனர். அவர்கள் அவற்றுக்கு ‘தஃவீல்’ எனும் மாற்று விளக்கமளிக்கவில்லை. ‘தஹ்ரீஃப்’ எனும் கருத்துக்களைத் திரிபுபடுத்தும் முயற்சிகளிலும்,  ‘தக்யீஃப்’ எனும் எப்படிப்பட்டது என்ற விரிப்பிலும், ‘தம்ஃதீல்’ எனும் உவமிப்பு முயற்சியிலும் ஈடுபடவில்லை.  

அடுத்து,  « இதுதான் சிந்தனைக்கு நெருக்கமானது, மற்றவற்றை அல்லாஹ்வே அறிவான் அவனை அவர்கள் தம் அறிவால் முழுதாக அறிய முடியாது » என்ற உங்களின் கூற்றைப் பொருத்தவரைக்கும், நாங்கள் இந்தப் பண்புகளினதும் அதன் விபரிப்புக்களினதும் யதார்த்தத்தை அறியமாட்டோம், அத்தோடு எமது அறிவால் அவற்றை முழுமையாக அறிந்து கொள்ளவும் முடியாது எனக் கருத விரும்புவீர்களாயின் அது சரிதான். என்றாலும், அல்லாஹ் கேட்பவனும் பார்ப்பவனுமாவான் என்பதை நாம் அறிவோம். ‘கேட்டல்’ என்பது கேட்கப்பட வேண்டியவை சென்றடையக்கூடியதாகும். ‘பார்வை’ என்பது பார்க்கப்பட வேண்டியவை வந்தடைவதாகும். எனினும், இந்த மகத்துவமிக்க செவியேற்பு எப்படிப்பட்டது என்பதை நாம் அறியமாட்டோம். அதனை எமது அறிவால் அடைந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா அனைத்து சத்தங்களையும் அவை பல்வேறுபட்டவையாக இருந்தாலும் பல் மொழிகளாகவும் பல் நடையாக இருந்தாலும் அவையனைத்தையும் ஒரே கணப் பொழுதில் செவியேற்கிறான். அதேபோல, உலகிலுள்ள அனைத்தையும் உயர்ந்ததாக இருந்தாலும் தாழ்ந்ததாக இருந்தாலும் அல்லாஹ் ஒரே கணப் பொழுதில் பார்க்கிறான். ஆனாலும், அது எப்படியானது என்பதை நாம் அறிய மாட்டோம் என்று எல்லாப் பண்புகளிலும் கூறுங்கள்.

இதன்படி, இந்த ‘ஸிபாத்’களை ஒரு வகையில் நாம் அறிந்து கொள்கிறோம். இன்னொரு வகையில் அவற்றை அறியவும் மாட்டோம். அதாவது, அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அதன் அர்த்தத்தை அறியும் வகையிலும் நாம் அறிகின்றோம். எப்படியானது என்ற விபரிப்பையும் அவற்றின் யதார்த்தத்தையும்  நாம் அறிய மாட்டோம்.

இது அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் மாத்திரம் உள்ளதல்ல. மாறாக, நாம் நேரடியாகக் காணாத மறைவான விடயங்கள் அனைத்திலும் இந்நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, சுவனத்தின் இன்பங்களைக் குறிப்பிடலாம். சுவனத்தில் மதுவும் தேனும் இருப்பதாக நாம் அறிவோம். இதற்கான அர்த்தத்தை நாம் கண்டதை வைத்து அறிந்து கொள்கின்றோம். எனினும், சுவனத்து மதுவும் தேனும் நமது மதுவும் தேனும் போன்றதல்ல என்பதை நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்-வாஸிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

« அல்லாஹ்வின் பண்புகள் பொதுவானதாகவும் நம்பிக்கையினடிப்படையிலும் தெரிந்தவையே. ஆனாலும் எப்படியானது என்ற வரையறை ரீதீயாக அவை தெரியாதவையாகும். எனவே, ஒரு முஃமினைப் பொறுத்தவரைக்கும் இந்த விடயத்தில் ஒருபக்கம் பார்வை உள்ளவனாகவும் இன்னொரு பக்கம் குருடனாகவும் இருக்க வேண்டும். அதாவது, இருப்பதாக உறுதிப்படுத்தும் நோக்கில் பார்வையுள்ளவனாகவும் எப்படியானது என்ற விபரிப்புப் பக்கத்தில் குருடனாகவும் இருக்க வேண்டும். இதன்படி அல்லாஹ் தன்னைப் பற்றி விபரித்தவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் அவற்றுக்கு மாற்று விளக்கமளித்தல் மற்றும் ஒப்பிடுதல் விடயத்தை மறுதலிப்பதற்கும் இடையே ஒரு ஒன்றிப்பு நிலை உருவாகின்றது.  இதுதான் அல்லாஹ் அவனை நாம் அறிந்து கொள்வதற்காகத் தனது பண்புகளை நமக்காக வெளிப்படுத்தியிருப்பதன் நோக்கமாகும். ஆகவே, அதன் யதார்த்தங்களை ஈமான் கொள்வோம். ஒப்பீட்டை மறுதலிப்போம். » (அந்-நஸீஹா பீ ஸிபாதிர்-ரப் ஜல்ல வ அலா- பக் :41-42)

அடுத்து, இந்தப் பண்புகளுக்கு யதார்த்தம் ஏதும் இல்லை ; அது கற்பனை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படும் தகவல்களாகும் என நீங்கள் கருதினால், அது தவறானது. இது தத்துவவியலாளர்களின் கருத்தாகும். இவற்றின் மூலம் பொதுமக்கள் ஏதாவதொரு கடவுளை நம்ப வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட கற்பனையாகும் அவற்றிற்கு யதார்த்த நிலை கிடையாது என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

இமாம் அஸ்-ஸபாரீனீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

« சத்திய வழியை விட்டும் தடம்புரண்டோர் மூன்று வகையினர். கற்பிதக் கோட்பாட்டாளர்கள், மாற்றுவிளக்கக்காரர்கள், தெரியாக் கோட்பாட்டாளர்கள்  ஆகியோராவர்.

கற்பிதக் கோட்பாட்டாளர்கள் என்போர், அவர்கள் தத்துவவியலாளர்களும் அவர்களின் வழியில் பயணித்த ‘ஸூபி’க்களும் தத்துவம் பேசுவோருமாவர். இது பற்றி அவர்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமான் பற்றியும் மறுமை நாள் பற்றியும் கூறிய விடயங்களானது யதார்த்தமானவை தொடர்பான கற்பனைகளாகும். அதன் மூலம் பாமர மக்கள் பயனடையவதற்காகச் சொல்லப்பட்டவையாகும். அதில் எந்தத் தெளிவும் கிடையாது. படைப்புக்களுக்கு அதனால் எவ்வித வழிகாட்டலோ உண்மை பற்றிய எந்த விளக்கமோ கிடையாது எனக் கூறுவர். உண்மையில், இதை விடப் ‘பெரிய குப்ர்’ வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

மாற்றுவிளக்கக்காரர்கள் (அஹ்லுத் தஃவீல்)  எனப்படுவோர், பின்வரும் கருத்தைக் கொண்டுள்ளனர். ஸிபாத் விடயத்தில் வந்திருக்கும் அல்-குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் தொடர்பாக மக்கள் பிழையாக நம்பிக்கை கொள்ள வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருதவில்லை. மாறாக அவற்றின் மூலம் அக்கருத்தியலையே நபியவர்கள் நாடினார்கள். அதனால்தான், அவற்றை மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தவுமில்லை. அது பற்றி மேலதிகமாக விளக்கவும் இல்லை. என்றாலும் மக்கள் ஆய்வு செய்து, தமது பகுத்தறிவினால் உண்மையைக் கண்டறிய வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். பின்பு அவர்கள் அதன் அர்த்தத்திலிருந்து அவ்வசனங்களை மாற்றிப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் நபியவர்கள் விரும்பியதாகக் கூறுகின்றனர்.

நபியவர்களின் நோக்கம் என்னவெனில், மக்களை சோதித்து, அவர்கள் மீது கடமைகளை விதிப்பதோடு மக்களின் அறிவையும் சிந்தனையையும் அவ்வசனங்களைத் தேவையான அர்த்தத்திற்கு மாற்றிக் கொள்வதில் ஈடுபடுத்துவதும் அவற்றிலல்லாமல் வேறு வழிகளில் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகவுமே இருந்தது. இது முஃதஸிலா, ஜஹ்மிய்யா, தத்துவவியலாளர்கள் ஆகியோரினதும் அவர்கள் வழியில் சென்றோரினதும் கருத்தாகும். இவர்களது இக்கருத்தின் உள்ளடக்கத்தில் வழிகெடுப்பதும் உபதேசிப்பற்ற நிலையுமே காணப்படுகின்றது. அத்தோடு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்ததற்கு முரண்படுவதும் அல்லாஹ் தொடர்பாக அவன் தனக்குத் தானே வர்ணித்த ‘அன்பு’, ‘அருள்’ பற்றிய விடயங்களை மறுப்பதும்தான் அடங்கியுள்ளது என்பதும் வெள்ளிடைமலை. இவர்கள் ஸுன்னாவுக்கு சார்பானோர் எனத் தம்மை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இவர்கள் இஸ்லாத்துக்கு சார்பானோர் கிடையாது. தத்துவத்தைப் புறக்கணிப்போரும் கிடையாது. மாறாக, அவர்கள் நாஸ்திகத்திற்கான வாயிலைத் திறந்து விட்டோராவர். திருமறை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நாஸ்த்திகத்தைப் புகுத்தி குழப்பத்தை உண்டுபண்ணிய வழிகெட்ட பிரிவினரான பாத்தினிய்ய கராமித்தாக்களின் வலையில் வீழ்ந்தவர்களாவர்.

தெரியாக்கோட்பாட்டாளர்கள் (அஹலுத்-தஜ்ஹீல்) எனப்படுவோர் சொல்கின்றனர் : அல்லாஹ் இறக்கி வைத்த ஸிபாத் பற்றிய வனங்களின் கருத்துக்களை நபியவர்களும் அறியமாட்டார்கள், அதே போல ஜிப்ரீல் அலைஹிஸ்-ஸலாம் அவர்களும் அறியமாட்டார்கள். ‘அஸ்-ஸாபிக்கூனல்-அவ்வலூன்’ எனப்படுகின்ற முன்னோரும் அறியமாட்டார்கள். மேலும் ‘ஸிபாத்’ பற்றிய ஹதீஸ்கள் தொடர்பாகவும் இதே கருத்தையே முன்வைத்துள்ளனர். நபியவர்கள் தனக்கு அர்த்தம் புரியாதவற்றையே பேசினார்கள். அதேபோல ஸுன்னாவையும் ஸலப்களையும் சார்ந்தோர் எனத் தம்மை அடையாளப்படுத்தும் பலரும் இந்தக் கருத்தையே கூறுகின்றனர். ‘ஸிபாத்’ பற்றிய திருமறை வசனங்கள் பற்றியும் ஹதீஸ்கள் பற்றியும் பின்வருமாறு கூறுகின்றனர். : « அவற்றின் விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே நன்கறிவான் » என்ற அல்குர்ஆன் வசனத்தின் படி அவற்றின் அர்த்தத்தை அல்லாஹ் மாத்திரமே அறிவான் ; அத்தோடு, இந்த வசனத்தின் வெளிப்படையான கருத்தும் இதையே காட்டுகிறது. அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அவற்றின் அர்த்தத்தை அறியமாட்டார்கள் என்பதன் ஊடாக அவற்றுக்கான அர்த்தம் இருக்கின்றது எனக் கூறுகின்றனர். » (லவாமிஉல்-அன்வாரில்-பஹிய்யா :1/116)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனது பண்புகளையும் ஈமான் கொள்வதில் சரியான அணுகுமுறை - Islam Question & Answer