பொதுவாக மருத்துவம் செய்தல் மார்க்கத்தில் உள்ள ஒன்றாகும்.
அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கி வைத்துள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு. எனவே மருத்துவம் செய்யுங்கள். ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்:3376)
உஸாமா இப்னு ஷரீக் ரவி அல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: நாடோடி அரபிகள் நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மருத்துவம் பார்க்கலாமா? என கேட்டார்கள். நபியவர்கள், “நீங்கள் மருத்துவம் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒரே ஒரு நோயைத் தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணத்தை வைத்துள்ளான் எனக் கூறினார்கள். அது என்ன அல்லாஹ்வின் தூதரே என அவர்கள் வினவினார்கள். அதற்கு நபி அவர்கள் முதுமை என்றார்கள். இமாம் திர்மிதி இதை பதிவு செய்து இது ஹசன் ஸஹீஹ் தரமிக்கதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். 384/4,1961 இது ஸஹீஹ் ஜாமிஃஇலும் இடம்பெற்றுள்ளது. 2930
பெரும்பாலான அறிஞர்கள் (ஹனபி மற்றும் மாலிக் மத்ஹபினர்) மருத்துவம் செய்தல் ஆகுமானது என கூறுகிறார்கள். ஷாபி .,ஹன்பலி மத்ஹபை சேர்ந்த காழி இப்னு அகீல், இப்னுல் ஜவ்ஸி ஆகியோர் அதை விரும்பத் தகுந்தது என கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மருந்தையும் நோயையும் இறக்கியுள்ளான். அனைத்து நோய்களுக்கும் ஒரு மருந்தை வைத்துள்ளான், எனவே மருந்து செய்யுங்கள் ஹராமானவற்றை கொண்டு மருந்து செய்யாதீர்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றனர்.
இன்னும் இது அல்லாத சிகிச்சை செய்யுமாறு கட்டளை இடம்பெறும் வேறு சில ஹதீஸ்களும் இதற்கு சான்றாகும்.
நபியவர்கள் இரத்தம் குத்தி எடுத்தமை சிகிச்சை பெற்றுக்கொண்டமை அது மார்க்கத்தில் உள்ளது என்பதற்கு ஆதாரமாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஷாபி மத்ஹபில் மருத்துவம் செய்தல் விரும்பத்தக்கது என்பது மருந்து பயனளிக்கும் என்பது உறுதியற்ற நேரத்தில்தான். ஆனால் மருந்து மூலம் நோய் கட்டாயம் குணமடையும் (காயத்துக்கு மருந்திடல் போன்ற) பட்சத்தில் மருந்து செய்வது ஷாபி மத்ஹபில் (தற்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் இரத்தம் ஏற்றிக்கொள்ளல் போன்ற செயற்பாடுகள்)
பார்க்க :ஹாஷியது இப்னு ஆபிதீன் 5/215 ، 249
அல் ஹிதாயா தக்மிலது பத்ஹுல் கதீர். 8/134
அல் பவாகிஹூ அத்தவானி 2/440
ரவ்ழதுத்தாலிபீன் 2/96
கஷ்ஷாபுல் கினாஃ 2/76
அல்இன்ஸாப் 2/463
அல்ஆதாபுஷ் ஷர்இய்யா 2/359
ஹாஷியதுல் ஜமல் 2/134
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் மருந்து செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவதற்கு முரணாக அமையாது. பசி, தாகம், சூடு, குளிர் என்பவற்றை நீக்க அவற்றுக்கு எதிரானவற்றில் ஈடுபடுவது எவ்வாறு அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுவதற்கு முரணாக அமையாதோ அவ்வாறே நோய் ஏற்படும் பட்சத்தில் அதற்கு மருந்து செய்வதும் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவதற்கு முரணாக அமையாது.
மாறாக விதியிலும் மார்க்கத்திலும் அல்லாஹ் காரண காரியங்களாக ஏற்படுத்தி வைத்துள்ளவற்றில் ஈடுபடுவதன் மூலமே தவ்ஹீதின் யதார்த்தம் பரிபூரணமாகும். அவற்றைச் செய்யாமலிருப்பதே பொறுப்புச் சாட்டுவதைப் பாதித்துவிடும். கட்டளை மற்றும் ஞானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனைச் செய்யாதவன் காரண காரியங்களில் ஈடுபடாமையே உறுதியான பொறுப்புச் சாட்டுதல் என எண்ணிக்கொண்டிருந்தாலும் உண்மையில் பொறுப்புச் சாட்டுதலில் பலவீனத்தையே அது ஏற்படுத்தும். ஏனெனில் அது பொறுப்புச் சாட்டுதலுக்கு எதிரான இயலாமையாகும். அடியானுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பலனளிப்பவற்றைப் பெறுவதிலும் ஈருலகிலும் தீங்குதருபவற்றைத் தடுப்பதிலும் உள்ளத்தால் அல்லாஹ்வை நம்பியிருத்தலே தவக்குல் எனும் பொறுப்புச்சாட்டுதலாகும். இந்த நம்பிக்கையுடன் காரண காரியங்களில் ஈடுபடுவதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இறைஞானத்தையும் மார்க்கக் கட்டளையையும் பால்படுத்தியவனாகிவிடுவான். எனவே அடியான் இயலாமையை தவக்குலாகவோ தவக்குலை இயலாமையாகவோ ஆக்கிவிடமாட்டான். ஸாதுல் மஆத் 4/15 பிக்ஹ் கலைக்களஞ்சியம் 11/116
மேற்கூறப்பட்ட வினாக்கான விடையின் சுருக்கம் என்னவெனில் சிகிச்சை பெற்றுக்கொள்வது அறிஞர்களிடம் கட்டாயமானதல்ல. ஆனால் சிலர் மருந்துக்கான பலன் உறுதியாக கிடைக்கும் என்றிருந்தால் கட்டாயம் எனக் கூறுகின்றனர். இன்னும் வினாவில் கூறப்பட்டுள்ளவாறு மருந்துக்கு உறுதியாக பலன் கிடைக்காது என்பதனாலும் அதன் பக்க விளைவுகளால் நோயாளி மன உளைச்சலுக்கு உட்படுவதனாலும் மருந்து செய்வதை விடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.
நோயாளி இறைவன் மீது பொறுப்புச் சாட்டுவதையும் அவனைச் சார்ந்திருப்பதையும் மறந்துவிடக்கூடாது. நிச்சயமாக பிரார்த்தனைக்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் நோயாளி தன்னை தீங்குகளில் இருந்து பாதுகாக்க கூடிய (சூரா பாத்திஹா சூரா இஹ்லாஸ், சூரா பலக், சூரா நாஸ் போன்ற) குர்ஆனிய வசனங்களை ஓதி பாதுகாப்பு தேடுவது அவசியமாகும். இவை உள, உடல் ரீதியாக பயனளிப்பதுடன் அவற்றை ஓதியதற்கான இறைவனின் கூலியையும் பெற்றுத் தருகிறது. இறைவனே நிவாரணம் அளிப்பவன். அவனை தவிர வேறு நிவாரணம் அளிப்பவர் இல்லை.