0 / 0
14/ரபி/1446 , 17/செப்டம்பர்/2024

ஜின்களின் உலகம்

கேள்வி: 2340

நான் ஜின்களைப் பற்றி அல்குர்ஆனில்  படித்துள்ளேன். ஆனால் அவர்கள் உண்மையில் யார் என்று எனக்குத் தெரியவில்லை. முடிந்தால் அவர்களைப் பற்றி கூடுதல் தகவல்களை எனக்குத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அல்குர்ஆன் வசனங்களும், நபிகளாரது பொன்மொழிகளும் ஜின்கள் என்று ஒரு சாரார் இருப்பதாகவும், அவர்கள் யாதொரு இணை, துணையுமற்ற அல்லாஹ்வை வணங்கி வழிபடும் நோக்கில் உலகில் படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் அருள்மறையில் பின்வருமாறு கூறுகின்றான் : “நான் மனு, ஜின் வர்க்கத்தினரை என்னை வணங்கி வழிபடுவதற்காகவேயன்றி படைக்கவில்லை." (அத்தியாயம் : அத்தாரியாத் - வசனம் : 56) “ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களே! உங்களுக்கு என் வசனங்களை ஓதிக் காட்டி நீங்கள் சந்திக்கப்போகும் இந்நாளின் விளைவு குறித்து எச்சரிக்கை செய்கின்ற தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” (அத்தியாயம் : அல்-அன்ஆம் - வசனம் : 130) ஜின்களின் உலகைப் பொருத்தவரையில் அது ஒரு தனியான உலகமாகும். அதற்கென்றுள்ள இயல்பினாலும், மனிதர்களுக்குப் புரியாத தனித்துவமான பண்புகளினாலும் அது மனித உலகத்திலிருந்து வேறுபடுகின்றது. என்றாலும் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் மத்தியிலுள்ள  பொதுவான அம்சங்களாக புத்திசுயாதீனம், உணர்வுத் திறன், நன்மை, தீமையின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் ஆகியன காணப்படுகின்றன. அவர்களுக்கு ஜின்கள் என்று பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம் அவர்கள் மனிதர்களின் கண்களை விட்டும் மறைந்திருப்பதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “நிச்சயமாக அவனும், அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு மறைவாக இருந்து கொண்டு உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." (அத்தியாயம் : அல்-அஃராப் - வசனம் : 27)

ஜின்களின் அடிப்படை :

அல்லாஹ் அருள்மறையில் ஜின்களது படைகோலத்தின் அடிப்படை பற்றி பின்வருமாறு கூறுகின்றான் : “இன்னும், நெருப்பின் சுவாலையினால் அவன் ஜின்னைப் படைத்தான்." (அத்தியாயம் : அர்ரஹ்மான் - வசனம் : 15) “அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்." (அத்தியாயம் : ஹிஜ்ர் - வசனம் : 27) மேலும் நபிகளார் நவின்றதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஆதம் (அலை) அவர்கள் உங்களுக்கு (ஏற்கனவே) கூறிக் காட்டப்பட்டதிலிருந்து (களிமண்ணிலிருந்து) படைக்கப்பட்டுள்ளார்." (ஆதாரம் : முஸ்லிம் - 5314)

ஜின்களின் வகைகள் :

அல்லாஹ் ஜின்களை பலவகையினராகப் படைத்துள்ளான். அவர்களில் சிலர் நாய், பாம்பு போன்ற வடிவங்களுக்கு உருமாறும் ஆற்றல் படைத்தவர்கள். வேறு சிலர் இறக்கைகளுடன் பறந்து திரிபவர்கள். இன்னும் சிலர் பயணம் செய்ய கூடிய - ஓரிடத்தில் தங்கி வாழ்பவர்கள். நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஸஃலபதுல் குஷனி (ரழி) அறிவிக்கின்றார்கள் : ஜின்களில் மூன்று வகை உண்டு அவை : இறக்கை கொண்டு காற்றில் பறக்கும் ஜின்கள், பாம்பு அல்லது நாய்கள் வடிவில் உள்ள ஜின்கள், பயணம் செய்ய கூடிய - ஓரிடத்தில் தங்கி வாழும் ஜின்கள்." (ஆதாரம் : தஹாவி (ரஹ்) அவர்களது முஷ்கிலுல் ஆஸார் - 4ஃ95, தபரானி (ரஹ்) அவர்களது அல்கபீர் - 22ஃ214. மேலும் அல்பானி (ரஹ்) அவர்கள் மிஷ்காத் எனும் நூலில் தஹாவி மற்றும் அபுஷ் ஷெய்க் (ரஹ்) ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் இதனை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க : மிஷ்காத் - 2ஃ1206)

ஜின்னும், மனிதனும்

ஆதமுடைய மக்களில் ஒவ்வொருவரும் ஜின்களிலிருந்து ஒரு கூட்டாளியின் மீது சாட்டப்பட்டுள்ளனர். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “உங்களில் எவருமே ஜின்னிலிருந்து ஒரு கூட்டாளியின் மீது சாட்டாப்படாமல் இல்லை." அப்போது நபித்தோழர்கள் “நீங்களுமா அல்லாஹ்வுடைய தூதரே?" என்று வினவ “ஆம், நானும் தான். என்றாலும்  அவனுக்கெதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்யவே அவன் எனக்குக் கட்டுப்பட்டு விட்டான். அதனால் நலவைத் தவிர அவன் எனக்கு எதையும் ஏவுவதில்லை." என்று கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் -  2814) இதனை விளக்குகையில் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் : “அவன் எனக்குக் கட்டுப்பட்டுவிட்டான்" என்ற நபிவார்த்தையின் வெளிப்படையான அர்த்தம், அவன் இறைவிசுவாசியாக, இறைநம்பிக்கையாளனாக மாறிவிட்டான் என்பதாகும். காழீ கூறுகின்றார் : “ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது உடல், உள்ளம், நாவு ஆகியவற்றில் i~த்தானிடமிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஏகோபித்துள்ளது. மேலும் இந்த நபிமொழி மனிதனின் மீது சாட்டப்பட்டுள்ள சைத்தானின் குழப்பங்கள், ஊசலாட்டங்கள், வழிகெடுத்தலிலிருந்து முடியுமான அளவு  தப்புவதன் பொருட்டு அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டுகின்றது." (ர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம் : 17ஃ175)

ஜின்களின் ஆற்றல்கள் :

அல்லாஹுத் தஆலா மனிதர்களுக்கு வழங்காத ஆற்றலை ஜின்களுக்கு வழங்கியுள்ளான். அவற்றில் சிலதைப் பற்றி அருள்மறையில் அவன் நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான். அவற்றில் வேகமாக செயற்பட, பயணிக்க முடியுமான ஆற்றல் முக்கியமானதாகும். இப்ரீத் எனும் ஜின் யமன் நாட்டு ராணியின் சிம்மாசனத்தை ஒரு மனிதன் தனது இருப்பிடத்திலிருந்து எழும்புவதற்கான நேரத்துக்குள் பைதுல் மக்திஸிற்கு கொண்டு வருவதாக ஸுலைமான் நபியிடம் உறுதியளித்துள்ளார். அல்லாஹ் இதனை அருள்மறையில் பின்வருமாறு கூறுகின்றான் : அதற்கு ஜின்களிலுள்ள இஃப்ரீத் (-என்ற மிகப்பலம் பெற்ற ஜின்) “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன், நிச்சயமாக நான் இதற்கு மிக்க சக்தியுடையவன், மிக்க நம்பிக்கையும் உடையவன்” என்று கூறியது. (எனினும்) இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும்....." என்று ஸ{லைமான் கூறினார்."

ஜின்களினது உணவு மற்றும் குடிபானம் :

ஜின்கள் உண்ணவும், குடிக்கவும் செய்கின்றார்கள். இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன்." பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள். ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்." என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள். அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும் என்று கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் - 450) மற்றொரு அறிவிப்பில் “என்னிடம் 'நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும், எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்” என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்." (ஸஹீஹ{ல் புகாரி - 3860) எனவே ஜின்களில் விசுவாசங் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட எலும்புகளே உணவாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை அவர்களுக்கு அனுமதிக்கவில்லை. அவ்வாறு பெயர் கூறப்படாத எலும்புகள் இறைநிராகரிப்பாளர்களான ஜின்களுக்குரியதாகும்.

ஜின்களின் கால்நடைகள் (வாகனங்கள்) :

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களது முன்சென்ற நபிமொழியில் ஜின்கள் நபிகளாரிடம் அவர்களது கட்டுச் சாதனம் குறித்து வினவிய போது “ஒவ்வொரு சாணமும் உங்களது கால்நடைகளுக்கு உணவாகும்." என்று நபிகளார் கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜின்களின் வதிவிடங்கள் :

நாங்கள் வாழக் கூடிய இந்தப் பூமியிலேயே ஜின்களும் வாழ்கின்றனர். எனினும் அவர்கள் அதிகமாக பாழான இடங்கள், அழுக்குகள் நிறைந்த மலசல கூடங்கள், குளியலறைகள், குப்பைத் தொட்டிகள் உள்ள பகுதிகள், மையவாடிகள் போன்ற இடங்களிலே இருக்கின்றனர். அதனால் தான் இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் போது நபிகளார் கற்றுத் தந்த திக்ர்களை ஓதி பாதுகாப்பு எடுத்துக் கொள்வது நபி வழிகாட்டலாகும். அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நபிகளார் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழைந்தால் “அல்லா{ஹம்ம இன்னீ அஊது பிக மினல் குபுஸி வல்கபாஇஸி" (பொருள் : இறைவா! ஆண், பெண் சைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி - 142, ஸஹீஹ் முஸ்லிம் - 375) கத்தாபி (ரஹ்) அவர்கள் கூறும் போது “நபிகள் (ஸல்) அவர்கள் இதன் மூலம்  ஆண், பெண் சைத்தான்களையே நாடுகின்றார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜின்களில் இறைவிசுவாசிகளும், இறை நிராகரிப்பாளர்களும் உள்ளனர்.

ஜின்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : “இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று)." (அத்தியாயம் - அல்-ஜின், வசனம் : 14,15) என்றாலும் அவர்களில் முஸ்லிம்களாக இருப்போரிடம் கூட  அல்லாஹ்வை வழிபடுகின்ற விடயத்திலும், நல்லவனாக வாழுகின்ற விடயத்திலும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. அல்லாஹ் அதே அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகின்றான் : “நிச்சயமாக நாம்-நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அதல்லாதோரும் நம்மில் (சிலர்) இருக்கின்றனர். நாம் பல்வேறு வழிகளையுடையோராகவும் இருந்தோம்." (அத்தியாயம் : அல்-ஜின், வசனம் : 11)

மேலும் இந்த சமுதாயத்தில் ஜின்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் கதை இப்னு அப்பாஸ் (ரழி)  அவர்களைத் தொட்டும் ஸஹீஹுல் புகாரி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் : “நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் 'உக்காழ்” எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன' என்று அந்த i~த்தான்கள் கூறினர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் 'திஹாமா” எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். 'உக்காழ்” சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, 'வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்' என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, 'எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணை வைக்கவே மட்டோம்” என்று கூறினர். உடனே அல்லாஹ் 'ஜின்” எனும் அத்தியாயத்தை இறக்கியருளினான். நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அத்தியாயத்தில் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல.) (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி - 731)

மறுமை நாளில் அவர்களுக்கான விசாரணை

ஜின்களும் மறுமை நாளில் அவர்களது செயற்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுவர். “ஜின்கள் நிச்சயமாக தாங்களும் அழைத்து வரப்படுபவர்கள் என்பதை திடனாக அறிந்து விட்டனர்." எனும் வசனத்தை விளக்கும் போது முஜாஹித் (ரஹ்) அவர்கள் 'விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்கள்” என்று விளக்கம் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

ஜின்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெறுதல்

ஜின்களுக்கு நம்மைக் காண முடியுமாக இருந்தாலும் நமக்கு அவர்களைக் காண முடியாததால் அவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகமான வழிமுறைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். உதாரணமாக : 'அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்” எனும் வார்த்தை, அத்தியாயம் அல்-பலக் மற்றும் அந்-நாஸினை ஓதுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடும் ஒரு வழிமுறையாகும். அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும், “என் இரட்சகனே! ஷைத்தான்களுடைய தூண்டுதல்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்றும் நபியே! நீர் கூறுவீராக!" (அத்தியாயம்: அல்முஃமினூன்-வசனம் : 97,98)

அதே போன்று வீட்டில் நுழைவதற்கு முன்னரும், உண்ணல், குடித்தல். மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னரும் அல்லாஹ்வின் பெயர் கூறுவது (பிஸ்மில்லாஹ் சொல்வது) ஷைத்தான்கள் நம்முடன் இராக் கழிப்பதை விட்டும், உண்ணல், குடித்தல்,  மனைவியுடன் உடலுறவு கொள்ளல் போன்ற விடயங்களில் பங்குகொள்வதை விட்டும் தடுத்து விடும். அதே போன்று கழிப்பிடம் செல்லும் போது, ஆடைகளைக் களையும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறிக் கொள்வது ஷைத்தான்கள் நம்முடைய மறைவிடங்களை பார்ப்பது, தீங்கு விளைவிப்பதை விட்டும் தடையாக அமைந்து விடும். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களது கண்களுக்கும், மனிதர்களின் மறைவிடங்களுக்கு மத்தியிலும் திரையாக அமைவது அவர்களில் ஒருவர் கழிப்பிடத்திற்கு நுழையும் போது 'பிஸ்மில்லாஹ்” என்று கூறுவதாகும். (ஆதாரம் : திர்மிதீ - 551, ஸஹீஹுல் ஜாமிஃ - 3611)

பொதுவாக மனிதனிடத்தில் பலமான ஈமானும், மார்க்கப்பற்றும் இருக்குமாயின் அது ஜின்களின் தீங்குகளை விட்டும் பாதுகாத்து விடும். எந்தளவுக்கெனில், ஒருவேளை அவ்விருவரும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தால் கூட ஈமான்தாரியான மனிதன் வெற்றி பெற்று விடுவான். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் ஒரு ஜின்னைச் சந்திக்கவே இருவரும் மோதிக் கொண்டனர். இறுதியில் ஜின்னை மனிதன் வீழ்த்தி விட்டான். பின்னர் அந்த மனிதன் ஜின்னைப் பாரத்து கூறினான் : “நிச்சியமாக நான் உன்னை பலவீனமானவனாக, மெலிந்தவனாகக் காண்கின்றேன். உனது பிச்சளம் நாயின் பிச்சளத்தைப் போல இருக்கின்றது. உங்களில் ஜின்கள் அனைவரும் அப்படியா? அல்லது நீ அவர்களில் ஒருவனா?" அதற்கு ஜின் “இல்லை, நான் அவர்களில் பலமானவன் தான். எனவே என்னுடன் இரண்டாவது தடவையாகவும் மோதுவதற்கு வாரும். நீர் என்னை வீழ்த்தினால் உனக்குப் பயனளிக்கும் ஒரு விடயத்தைக் கற்றுத் தருகின்றேன்" என்று கூறவே அந்த மனிதன் “ஆம்" என்று கூறினான். பின்னர் ஜின் அந்த மனிதனைப் பார்த்து “நீர் 'அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்” (என ஆரம்பிக்கும்) ஆயதுல் குர்ஸியை ஓதுகின்றீரா? என்று வினவவே அந்த மனிதரும் “ஆம்" என்றார். அப்போது ஜின் கூறிற்று : “நிச்சயமாக நீ அதனை ஏதாவது வீடொன்றில் ஓதுவாயானால் ஷைத்தான் கழுதையைப் போன்று காற்று விட்டவனாக அங்கிருந்து வெளியேறி விடுகின்றான். பின்னர் காலை வெளுக்கும் வரைக்கும் அந்த வீட்டுக்குள் நுழைய மாட்டான்." (ஆதாரம் : அத்தாரமி - 3247)

இது தான் ஜின்கள், அவர்களது படைகோலம், இயற்கை சுபாவம் பற்றிய ஒரு சிறு குறிப்பாகும். பாதுகாப்பவர்களில் அல்லாஹ் சிறந்தவன். இரக்கம் காட்டுபவர்களில் அவனே மிகவும் இரக்கம் காட்டுபவன்.

மேலதிகப் பார்வைக்கு அறிஞர் உமர் ஸுலைமான் அல்அஷ்கர் அவர்கள் எழுதிய 'ஆலமுல் ஜின்னி வஷ்ஷயாதீன்” எனும் நூலைப் பார்வையிடவும்.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
ஜின்களின் உலகம் - Islam Question & Answer