0 / 0
11/சபர்/1446 , 15/ஆகஸ்ட்/2024

ரமழானில் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கும் காரணிகள்

கேள்வி: 23296

எந்தெந்த காரணங்கள் ரமழான் மாதத்தில் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கின்றன?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் நோன்பு நோற்க சக்தியுற்றவர்களுக்கு மாத்திரம் நோன்பைக் கடமையாக்கியுள்ளதோடு, மார்க்கம் அனுமதித்த ஒரு காரணத்தினால் நோன்பு பிடிக்க சக்தியற்றவர்களுக்கு அதனை விடுவதற்கு அனுமதி வழங்கியும் உள்ளான். இது அவன் தன் அடியார்களுக்கு மார்க்கத்தை இலேசாக்கியிருக்கிறான் என்பதைக் காட்டுகின்றது. அவ்வாறு ரமழானில் நோன்பை விடுவதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கும் காரணிகள் பின்வருமாறு :

முதலாவது : நோய்

நோய் என்றால் ஒரு மனிதன் அவனது உடலில் உள்ள ஒரு குறைபாட்டின் விளைவாக ஆரோக்கியம் எனும் நிலையிலிருந்து வெளியேறுவதைக் குறிக்கும்.

இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “ பொதுவாகவே நோன்பை விடுவது நோயாளிக்கு அனுமதிக்கப்பட்டது என்று அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கு “ஆனால் உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும்." (அத்தியாயம் : அல்-பகறா, வசனம் : 184) எனும்  திருமறை வசனமே ஆதாரமாகும்."

ஸலமா இப்னுல் அக்வஃ (ரழி) அவர்கள் கூறினார்கள் : “இன்னும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் மீது (அவர்கள் நோன்பு நோற்காவிடின்) ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்." எனும் திருமறை வசனம் இறங்கிய போது  நோன்பை விடுவதற்கு விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுப்பவராக (ஏழைக்கு உணவளிப்பவராக) இருந்தார். மேற்கண்ட வசனத்துக்கு அடுத்த வசனம் இறங்கும் வரை இவ்வாறே நபித்தோழர்களது நிலை காணப்பட்டது. அதாவது   “ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும்." எனும் வசனம் இறங்கியதும் ஏற்கனவே இருந்த சட்டத்தை இந்த வசனம் மாற்றி விட்டது. எனவே நோன்பு நோற்பதன் மூலமாக தனது நோய் மேலும் மோசமாகும் அல்லது குணமடையத் தாமதிக்கும் அல்லது தனது உடலுறுப்பு பழுதடையலாம் என ஒரு நோயாளி அஞ்சுவாராயின் அவருக்கு நோன்பு பிடிக்காமல் விட்டு விட முடியும். மாறாக அவரைப் பொறுத்தவரையில் அவர்  நோன்பை விடுவதே சிறந்ததாகும்;. நோன்பு பிடிப்பது வெறுக்கத்தக்தாகும். ஏனெனில் அவர் இவ்வாறான நிலையில் நோன்பு நோற்பது அவரை அழிவின் பால் இட்டுச் செல்லும். எனவே அவர் இதனைத் தவிர்ந்திடுவது கட்டாயமாகும். அடுத்த விடயம் பொதுவாகவே கடும் நோயினால் நோயாளிக்கு நோன்பை விடலாம். ஆனால் ஒரு சுகதேகியான ஒருவர் தான் நோன்பு பிடிப்பதனால் கஷ்டம், சோர்வு ஏற்படும் எனப் பயந்தால் அதற்காக மாத்திரம் அவருக்கு நோன்பை விட்டு விட முடியாது.

இரண்டாவது : பயணம்

நோன்பை விடுவதற்கு முடியுமான பயணத்தில் பின்வரும் நிபந்தனைகள் காணப்பட வேண்டும்.

01) பயணம் தொழுகையை சுருக்கித் தொழ முடியுமான அளவு தூரம்  நீண்டதாக இருத்தல்.

02) பயணி தனது பயணத்தின் இடைநடுவில் குறித்ததொரு இடத்தில் தங்குவதற்கு முடிவெடுக்காமலிருத்தல்.

03) பாவகாரியத்திற்காக பயணம் அமையாதிருத்தல். மாறாக பெரும்பான்மையான அறிஞர்களிடத்தில் கூடுமான ஒரு நோக்கத்திற்காக பயணம்  அமைந்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் நோன்பு காலத்தில் நோன்பை விடுவது என்பது ஒரு சலுகையும், இலேசுமாகும். எனவே வழிப்பறிக் கொள்கை போன்ற பாவமான ஒரு செயலுக்காக பயணிப்பவருக்கு இச்சலுகை உரித்தாக முடியாது.

பயணிக்கு நோன்பை விட முடியுமான சலுகை இல்லாமல் போதல் :

இரண்டு விடயங்களினால் இச்சலுகை இல்லாமல் போகும் என்பது அறிஞர்களது ஏகோபித்த கருத்தாகும்.

முதலாவதாக : பயணி தனது ஊருக்குத் திரும்பி, அவர் வசிக்கும் இடத்திற்குள் நுழைந்தால்.

இரண்டாவதாக : பயணம் செய்பவர்  தங்குவதற்குப் பொருத்தமான ஒரு இடத்தில் பொதுவாகவோ அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியோ தங்குவதற்கு முடிவு செய்வாரானால் அவர் அங்கே தங்கியிருப்பவராக மாறிவிடுகின்றார். அவ்வேளையில் அவருக்கான பயணச் சலுகை நீங்கி விட்டதால் அவர் தொழுகையை பூரணமாகவே தொழுவார்; ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பார்; நோன்பை விடமாட்டார்.

மூன்றாவது : கர்ப்பம் மற்றும் பாலூட்டல்

அறிஞர்கள் கர்ப்பிணியும், பாலூட்டக் கூடிய தாயும் தங்களுக்கு அல்லது தங்களது குழந்தைக்கு நோய் ஏற்படுவதை, அல்லது அதிகரிப்பதை அல்லது கெடுதி, அழிவு ஏற்படுவதை அஞ்சும் பட்சத்தில் அவ்விருவிருக்கும் நோன்பை விட முடியும் என ஏகோபித்துக் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரம் யாதெனில் “எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும்." எனும் திருமறை வசனமாகும். அதாவது நோய் என்றால் அதன் தோற்றமோ, வடிவமோ அல்ல. ஏனெனில் நோன்பு பிடிப்பதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது எனும் நிலையிலுள்ள ஒருவருக்கு அவர் நோயாளியாக இருந்தாலும் நோன்பை விட முடியாது. எனவே அல்லாஹ் இங்கே நோய் என்று குறிப்பிட்டாலும் மனிதனுக்கு  எந்த அம்சத்துடன்  நோன்பு பிடிப்பது தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்குமோ அதனைப் பற்றியே சைக்கினையாக சொல்லிக் காட்டுகின்றான். அதுவே நோயின் உள்அர்த்தமுமாகும். இந்நிலை கர்ப்பிணி மற்றும் பாலூட்டக் கூடிய தாயிடத்தில் காணப்படுவதால் அவர்களுக்கும் நோன்பை விடுவதற்கான சலுகை உள்ளது. இவ்விரு சாராருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதை பின்வரும் நபிமொழியும் பறைசாற்றுகின்றது. நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் இப்னு மாலிக் அல்கஃபி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நிச்சயமாக அல்லாஹ் பயணிக்கு நோன்பையும், தொழுகையின் அரைவாசியையும் தள்ளுபடி செய்துள்ளான். கர்ப்பம் தரித்த மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு நோன்பைத் தள்ளுபடி செய்துள்ளான்."

நான்காவது : முதுமை

முதுமை எனும் போது அதனுள் முற்றிலும் பலவீனமுற்று துவண்டு போயுள்ள வயோதிபர்களும், மரணிக்கும் வரை நாளுக்கு நாள் பலம் குன்றிச் செல்வோரும், இனிமேல் நோய் குணமாகுவதை எதிர்பார்க்க முடியாத நோயாளிகளும், வயோதிபத்தை அடைந்த பெண்களும் உள்ளடங்குவர். மேற்கூறப்பட்டவர்கள் நோன்பை விடலாம் என்பதற்கு ஆதாரமாக “இன்னும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் மீது (அவர்கள் நோன்பு நோற்காவிடின்) ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்." எனும் வசனத்தைக் குறிப்பிடலாம். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இவ்வசனம் பற்றிக் குறிப்பிடுகையில் “இந்த வசனத்தின் சட்டம் மாற்றப்படவில்லை. இது வயோதிபத்தை அடைந்து நோன்பு நோற்க சக்தியற்ற ஆண், பெண்கள் விடயத்திலுள்ளதாகும். அவர்கள் ஒவ்வொரு நாள் நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பர்." என்ற கூறினார்கள்.

ஐந்தாவது : கடும் பசி, தாகம்

உச்ச அளவிலான பசி, தாகத்தினால் சோர்வுற்றவர் நோன்பை முறித்து தனக்குத் தேவையான அளவு சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பிருப்பதோடு பிறிதொரு தினம் அதனை கழா செய்ய வேண்டும்.

அறிஞர்கள் இவர்களுடன் நோன்பு நோற்பதன் மூலம் எதிரிகளுடன் மோதுவதற்கு சக்தியில்லாமல் போகும் என்று பயப்படுவோரையும் இணைத்துக் கூறியுள்ளனர். இத்தகையவர்கள் எதிரிகளுடன் மோதுவது வெறும் எதிர்பார்ப்பாக இருக்கலாம். அல்லது எதிரிகளைச் சூழ்ந்திருப்பதனால் உறுதியாக் கூட இருக்கலாம். எப்படியோ  இவர்களுக்கும் நோன்பை விடலாம். எனவே யுத்தம் புரியக் கூடிய ஒருவர், அவர் எதிரிகளின் முன்னிலையில் இருப்பதன் காரணமாக உறுதியாக அல்லது பெரும்பாலும் யுத்தம் ஏற்படும் என அறிந்து, நோன்பு நோற்றுக் கொண்டு யுத்தம் புரிவது பலவீனத்தை ஏற்படுத்தும் என அவர் பயந்தால் அவர் பயணியாக இல்லாவிட்டால் கூட யுத்தம் ஆரம்பிக்க முன்பே நோன்பை விடலாம்.

ஆறாவது : பலவந்த நிலை

பலவந்தம் என்பது ஒரு மனிதன் இன்னொருவனை அவன் பொருந்தாத ஒரு செயலை செய்யுமாறு அல்லது விட்டுவிடுமாறு எச்சரிக்கையுடன் கட்டாயப்படுத்துவதாகும்.

மூலம்

பிக்ஹ் கலைக்களஞ்சியம் பாகம் 28 பக்கம் 73

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
ரமழானில் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கும் காரணிகள் - Islam Question & Answer