Table Of Contents
இறைநிராகரிப்பின் யதார்த்த நிலை மற்றும் அதன் வகைகள் பற்றிப் பேசுவதற்கு நீண்ட நேரம் அவசியப்படும். ஆதலால், அது குறித்து, கீழ்வரும் முக்கியமான அம்சங்களை வைத்து சுருக்கமாக நோக்குவோம்.
முதலாவது : இறைநிராகரிப்பைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்
அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் இரண்டு விடயங்கள் இல்லாமல் மனிதனது ஈமான் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறுகின்றன.
அவை “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை." என்று சாட்சி சொல்வதில் அடங்கியுள்ள இரு அர்த்தங்களாகும். அதாவது அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தி அவனுக்கு சரணடைதலும், அனைத்து வகையான இறைநிராகரிப்பு மற்றும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தலை மறுத்து அதிலிருந்து நீங்கிவிடுவதுமாகும்.
மனிதனைப் பொறுத்தவரை அவன் ஏதாவது ஒரு விடயத்தைப் புறக்கணித்து அது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாயின் குறித்த விடயம் தொடர்பில் அவன் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனவே இதனூடாக ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்காக ஏகத்துவத்தைப் பற்றியும், இறை நிராகரிப்பு, இணைவைப்பிலிருந்து தவிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க இறைநிராகரிப்பு, இணைவைப்பு என்பன பற்றியும் அறிந்திருப்பது எந்தளவு அவசியமானது என அறிந்து கொள்ள முடிகின்றது.
இரண்டாவது : இறைநிராகரிப்பின் வரைவிலக்கணம்
அரபு மொழியில் அல்குப்ர் எனும் பதமானது மறைத்தல், மூடுதல் என்று பொருள்படும்.
இஸ்லாமியப் பரிபாஷையில் குப்ர் என்றால் “சந்தேகத்தின் காரணமாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளாமிலிருத்தல் (அது அவர்களைப் பொய்ப்பித்ததனாலும் இருக்கலாம்; அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம்) அல்லது பொறாமை, ஆணவம், நபித்துவத்தை பின்பற்றுவதிலிருந்து மனிதனை திசைதிருப்பக் கூடிய மனோஇச்சைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றின் காரணத்தால் ஈமான் கொள்வதைப் புறக்கணித்தல் என்று அடையாளப்படுத்தலாம். எனவே அல்லாஹ் எந்தெந்த விடயங்களை கட்டாயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறானோ அவ்வாறானதொரு விடயம் தனக்கு எத்தியதன் பின்னாலும் யாராவது ஒருவன் அதனை மறுத்து விடுவானாயின் அவனுக்கு இறைநிராகரிப்பு எனும் பண்பு பொருந்தும். அவன் அதனை தனது நாவினால் மறுக்காமல் உள்ளத்தால் மாத்திரம் மறுத்தாலும் அல்லது உள்ளத்தால் மறுக்காமல் நாவினால் மாத்திரம் மறுத்தாலும் அல்லது இரண்டாலும் மறுத்தாலும் அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் இஸ்லாத்திலிருந்து வெளியேற்றக் கூடிய அம்சங்கள் என்று அடையாளப்படுத்தியவற்றிலிருந்து ஏதாவதொன்றை செய்தாலும் அவனுக்கு இப்பண்பு பொருந்தும். (பார்க்க : இப்னு தைமியா (ரஹ்) அவர்களது மஜ்மூஉல் பதாவா - 12ஃ335, இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களது அல்இஹ்காம் பீ உஸுலில் அஹ்காம் - 45ஃ1)
இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் தனது 'அல்பஸ்ல்” எனும் நூலில் குறிப்பிடுகையில் “ மாறாக ஏதாவதொரு அம்சத்தை, அதனை நம்பிக்கை கொள்ளாமல் மனிதனது ஈமான் சரியாக மாட்டாது என ஆதாரபூர்வமான சான்று உள்ள போது மறுப்பது இறைநிராகரிப்பாகும். அவ்வாறே ஏதாவதொரு வார்த்தையை, அதனை மொழிவது இறைநிராகரிப்பாகும் எனத் தெளிவான சான்று கூறுகின்ற போது மொழிவது இறைநிராகரிப்பாகும். மேலும் ஏதாவதொரு விடயத்தை, அதனை செய்வது இறைநிராகரிப்பாகும் எனத் தெளிவான சான்று உள்ள போது செய்வது இறைநிராகரிப்பாகும்." என்றார்கள்.
மூன்றாவது : மனிதனை மார்க்கத்திலிருந்து வெளியேற்றக் கூடிய பெரிய இறைநிராகரிப்பின் வகைகள்
அறிஞர்கள் இறைநிராகரிப்பை பல பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவைகளுக்குக் கீழால் இணைவைப்பு முறைகள், வகைகள் பலதும் உள்ளடங்குகின்றன. அவைகள் பின்வருமாறு :
01) மறுத்தல், பொய்ப்பித்தலின் காரணமாக ஏற்படும் இறைநிராகரிப்பு
இவ்வகை இறைநிராகரிப்பானது சிலவேளை உள்ளத்தால் பொய்ப்பித்ததன் விளைவாக அமைந்து விடக் கூடும். ஆனால் இது அறிஞர் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளதைப் போல காபிர்களிடத்தில் குறைவாகும். இன்னும் சில வேளை சத்தியத்தை உள்ரங்கத்தில் தெளிவாக அறிந்திருந்தும் வெளிப்படையாக அதற்குக் கீழ்ப்படியாமல், அதனை உள்ளத்துக்குள் மறைத்து வைத்து நாவினாலும், உடல் அவயங்களினாலும் பொய்ப்பித்ததன் விளைவாக அமைந்து விடவும் முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக யஹ{திகள் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்ததைக் குறிப்பிடலாம். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : “ பின்னர் அவர்கள் நன்கறிந்திருந்த இவ்வேதமானது அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்" (அத்தியாயம் : பகறா - வசனம் : 89) “ இன்னும் அவர்களிலொரு பிரிவினர், நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்." (அத்தியாயம் : பகறா - வசனம் : 146) ஏனென்றால் சத்தியத்தை அறிந்ததன் பின்னர் அதனை மறுத்தவரே பொய்ப்பித்தவரலாகலாம். இதனால் தான் காபிர்கள் இறைத்தூதர்களை பொய்ப்பித்தமையானது உளப்பூர்வமானதாக, உண்மையானதாக அமைந்திருந்தது என்பதை அல்லாஹ் மறுக்கின்றான். ஏனெனில் நிச்சியமாக அவர்கள் நாவளவிலேயே பொய்ப்பித்தனர். அல்லாஹ் அவர்களைப் பற்றி அருள்மறையில் “அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்." (அத்தியாயம் : அல்-அன்ஆம் - வசனம் : 33) மேலும் ஃபிர்அவ்னையும், அவனது கூட்டத்தினரையும் பற்றி “ அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள்." (அத்தியாயம் : அந்நம்ல் - வசனம் : 14) என்றும் எடுத்துரைக்கின்றான்.
இவ்வகை நிராகரிப்புடனே இறைவன் தடுத்த ஒன்றை ஆகுமானதாக எடுத்துக் கொண்டதன் விளைவாக உண்டாகும் நிராகரிப்பும் சேர்க்கப்படும். எனவே யாராவது ஒருவர் இஸ்லாத்தில் ஹராம் (தடுக்கப்பட்டது) என அறியப்பட்ட ஒரு அம்சத்தை ஹலால் (ஆகுமானது) என்று கருதினால் அல்லது ஹலால் என்று அறியப்பட்ட ஒன்றை ஹராம் என்று கருதினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சன்மார்க்கத்தை பொய்ப்பித்துவிட்டார்.
02) ஆணவம், புறக்கணிப்பின் விளைவாக ஏற்படும் இறைநிராகரிப்பு
இதற்கு உதாரணமாக இப்லீஸ் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நிராகரித்ததைக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : “ இப்லீஸைத் தவிர. அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்." (அத்தியாயம் : அல்-பகறா - வசனம் : 34) மேலும் கூறுகின்றான் : “ (நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல." (அத்தியாயம் : அந்நூர் - வசனம் : 47) அல்லாஹ் இந்த வசனங்களில் வாயளவில் மொழிந்திருந்தும் அதனை செயற்படுத்தாமல் பின்வாங்குபவர்களிடம் ஈமான் இல்லை என்றே கூறுகின்றான். எனவே இதன் மூலமாக சத்தியத்தை அறியாது அல்லது அறிந்திருந்து அதனை சொல், செயல், நம்பிக்கை ரீதியாக செயற்படுத்தாமல் விட்டுவிடுவதனால் புறக்கணிப்பின் விளைவாக உண்டாகும் இறைநிராகரிப்பு ஏற்படும் எனத் தெளிவாகின்றது. அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்றான் : “ ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள். " (அத்தியாயம் : அல்-அஹ்காப் - வசனம் : 03) எனவே யார் நபிகளார் கொண்டு வந்த மார்க்கத்தில் ஏதாவதொரு அம்சத்தை சொல் ரீதியாக புறக்கணிக்கிறாரோ அவர் “ நான் நபிகளாரைப் பின்பற்றமாட்டேன். " என்று கூறியவரைப் போலாவார். மேலும் யார் செயல் ரீதியாக புறக்கணிக்கின்றாரோ அவர் நபிகளார் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை தன் காதுகளால் செவியேற்காமல் புறமுதுகி ஓடியவன் அல்லது அதனைச் செவியேற்காமலிருப்பதற்காக காதுகளில் விரல்களை வைத்தவன் அல்லது தன் காதுகளால் செவியேற்றும் உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமலும், உடல் அவயங்களால் செயலாற்றமலும் இருப்பவனைப் போலாவார். இத்தகையவர் புறக்கணித்ததன் காரணமாக அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார்.
03) நயவஞ்சகத்தின் விளைவாக ஏற்படும் இறைநிராகரிப்பு
அதாவது மக்களுக்குக் காண்பிப்பதற்காக வெளிப்படையில் சத்தியத்துக்கு கீழ்ப்படிபவர் போல் இருந்தாலும் உள்ளத்தால் உண்மைப்படுத்தி செயலாற்றாத போது இவ்வகை இறைநிராகரிப்பு ஏற்படும். இப்னு ஸலூல் மற்றும் அவனைப் போன்ற நயவஞ்சகர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : “ (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. " (அத்தியாயம் : அல்-பகறா - வசனம் : 8,9)
04) சந்தேகத்தின் காரணமாக ஏற்படும் இறைநிராகரிப்பு
இது சத்தியத்தைப் பின்பற்றுவதில் தடுமாற்றம் அல்லது நபிகளார் கொண்டு வந்த மார்க்கம் சத்தியமானதா என்பதில் தடுமாற்றம் ஏற்படுவதன் விளைவாக உண்டாகும் நிராகரிப்பாகும். இந்தத் தயக்க நிலை ஏன் இறைநிராகரிப்பை ஏற்படுத்துகின்றதென்றால் ஒவ்வொரு மனிதனும் நபிகளார் கொண்டு வந்த சன்மார்க்கத்தை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாக நம்புமாறே ஏவப்பட்டுள்ளான்.
எனவே யாராவது நபிகளார் கொண்டு வந்த மார்க்கம் சத்திய மார்க்கமாக இல்லாமலிருக்கவும் முடியும் என்று கருதுவானானால் அவன் இவ்வகை நிராகரிப்புக்குள் விழுந்து விடுகின்றான். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் : “ பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய அக மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டு “இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை" (என்றும்) “மறுமை ஏற்படும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருவேளை (மறுமை ஏற்பட்டு) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதை விட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்" என்றும் கூறினான். அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி “உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான். " ( அத்தியாயம் : அல்-கஹ்ப் - வசனம் : 35 முதல் 38 வரை)
சுருங்கக் கூறின், இறைநம்பிக்கைக்கு நேரெதிரான இறைநிராகரிப்பானது உள்ளத்தால் பொய்ப்பித்ததனாலும் ஏற்படலாம். அப்போது அது உள்ளத்தின் கூற்றுக்கு முரணாக அமைந்து விடுகிறது. இன்னும் சிலவேளை இறைநிராகரிப்பானது அல்லாஹ், அவனது வசனங்கள் மற்றும் அவனது தூதரை வெறுத்தல் போன்ற உள்ளம் சார்ந்த செயற்பாடாகக் கூட அமைந்து விடலாம். அப்போது அது உள்ளத்தின் செயற்பாடுகளில் மிக முக்கியமானதாகிய ஈமானியப் பாசத்துக்கு முரணாக அமைந்து விடுகிறது. அதேவேளை அல்லாஹ்வைத் தூற்றல் போன்ற வெளிப்படையான வார்த்தைகளாலும், சிலைக்கு சிரம்பணிதல், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடல் போன்ற வெளிப்படையான செயல்களினாலும் இறைநிராகரிப்பு ஏற்படும். எனவே எவ்வாறு இறைநம்பிக்கையானது உள்ளம், நாவு, உடலுறுப்புக்கள் ஆகிய மூன்றினாலும் அமைந்து விடுகின்றதோ அதேபோன்று இறைநிராகரிப்பும் உள்ளம், நாவு, உடலுறுப்புக்கள் ஆகிய மூன்றினாலும் அமைந்து விடுகின்றது.
நாம் அல்லாஹ்விடம் இறைநிராகரிப்பு மற்றும் அதன் கிளைகளிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டுவதோடு, நம்மை ஈமானினால் அலங்கரித்து, நேர்வழியில் பயணிப்பவர்களாக ஆக்கிவிடுமாறும் வேண்டுகிறோம். ஆமீன்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மேலதிக பார்வைக்கு :
- அஃலாமுஸ் ஸுன்னதில் மன்ஸூரா : 177
- அறிஞர் அப்துல் அஸீஸ் ஆலு அப்தில் லதீப் எழுதிய நவாகிழுல் ஈமான் அல்கவ்லிய்யஹ் வல்அமலிய்யஹ் : 36 - 46
- அறிஞர் அப்துல்லாஹ் அல்கர்னி எழுதிய ழவாபிதுத் தக்பீர் : 183 – 196