கண்ணேறுடன் தொடர்புடைய சில பத்வாக்கள் இதோ! அவற்றைக் கொண்டு பயனளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
கண்ணேறு என்பதன் யதார்த்தம் யாது? அல்லாஹ்வின் திருமறையில் "பொறாமைக்காரனின் பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கிலிருந்து"என்று வந்துள்ளதன் விளக்கம் என்ன? இன்னும் நபியவர்கள் கூறிய “மண்ணறையில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கண்ணேறு ஏற்பட்டதால் மரணித்தவர்கள்” என்ற கருத்தை தரக்கூடிய ஹதீஸ் சஹீஹானதா? ஒருவர் கண்ணேறு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும் சொல்ல வேண்டும் கண்ணேறு உடையவர் கழுவிய நீரில் கண்ணூறுக்கு உட்பட்டவருக்கு நிவாரணம் உண்டா? அதை அவர் குடிக்க வேண்டுமா? அல்லது அதனால் குளிக்க வேண்டுமா? என மார்க்கத்தீர்ப்பு வழங்கும் நிரந்தரச் சபையின் அறிஞர்களிடம் கேட்கப்பட்டது.
அவர்கள் அதற்கு அளித்த பதில்.
ஒரு மனிதன் இன்னொருவரை தன் தீய பார்வை மூலம் பார்த்து தீங்கு விளைவித்தலே கண்ணேறு ஆகும்.
ஒருவர் ஒரு பொருளை விரும்பும் போது இது ஆரம்பிக்கிறது. தொடர்ந்து அவரது தீய எண்ணங்கள் அதை பொறாமை கண்ணோட்டத்துடன் பார்க்கச் செய்கிறது. அப்போது அப்பார்வையானது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறைவன் தனது தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு ஏவியுள்ளான்.
பொறாமைக்காரன் பொறாமை படும் போது ஏற்படும் தீங்கிலிருந்து (பாதுகாப்பு தேடுங்கள்)
அனைத்து கண் திருஷ்டி படக் கூடியவர்களும் பொறாமைக்காரர்கள் தான் ஆனால் பொறாமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டி படக்கூடியவர்கள் அல்ல. பொறாமைக்காரர் என்பது கண் திருஷ்டிபடுபவரையும் உள்ளடக்குவதால் பொறாமைக்காரரிடம் இருந்து பாதுகாப்பு தேடுவதானது கண் திருஷ்டி உடையவரிடம் இருந்தும் பாதுகாப்பு தேடுவதாக அமையும். கண்ணேறு என்பது பொறாமைக்காரன் அல்லது கண்படுபவரின் ஆன்மாவிலிருந்து பொறாமைக்குள்ளாகுபவர் கண்ணூறுக்குள்ளாகுபவரை நோக்கிச் செல்லும் அம்புகளாகும். சில நேரங்களில் இலக்கைத் தாக்கலாம் சிலவேளை குறி தப்பலாம். எவ்வித பாதுகாப்புமின்றி நிராயுதபாணியாக இருந்தால் அவரில் பாதிப்பை ஏற்படுத்தும். முன்னெச்சரிக்கையோடு அம்புகள் உட்புகமுடியாதளவு தற்பாதுகப்புடன் இருந்தால் அவரில் பாதிப்புச் செலுத்தாது. சில வேளை அதை எறிந்தவருக்கே மீண்டும் அது வந்து தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.
(ஸாதுல் மஆதிலிருந்து சிறு மாற்றங்களுடன்)
கண்ணேறு என்பது உண்மையே என்பது நபியவர்களின் ஹதீஸ்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் கண்ணேரிலிருந்து பாதுகாப்பு தேடும்படி நபி அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள் .
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் கண்ணேறு என்பது உண்மையாகும். இறை நிர்ணயத்தை முந்தி விடக் கூடிய ஒன்று இருக்கும் எனில் அதை கண்ணேறு முந்திவிடும் உங்களிடம் கழுவித் தருமாறு நீங்கள் கேட்கப்பட்டால் கழுவிக் கொடுங்கள்.
இதனை முஸ்லிம் அஹ்மத் திருமதி போன்றோர் அறிவிக்கிறார்கள் இமாம் அல்பானி அதை ஸில்ஸிலது ஸஹீஹில் ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.
1251
அஸ்மா பின்த் உமைஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைவனின் தூதரே ஜஃபருடைய குழந்தைகளுக்கு கண்ணேறு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நாம் ஓதிப் பார்க்கட்டுமா எனக் கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் ஆம் இறை நிர்ணயத்தை முந்தி விடக் கூடிய ஒன்று இருக்குமாயின் அதை கண்ணேறு முந்திவிடும் எனக் கூறியுள்ளார்கள் இமாம் அல்பானி அதை கூறியுள்ளார்கள் திர்மிதியில் ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்துள்ளார்கள் கண் திருஷ்டிபடுபவர் வுழூ செய்யுமாறு ஏவப்பட்டு பின்னர் அதிலிருந்து( அந்த நீரிலிருந்து) கழுவுமாறு கண் திருஷ்டிக்குள்ளானவர் ஏவப்படக்கூடியவராக இருந்தார். இதனை இமாம் அல்பானி ஸஹீஹ் அபூதாவூதில் ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.
இமாம் அஹ்மத் (15550) இன்னும் மாலிக் (1811) நஸாஈ, இப்னு ஹிப்பான் ஆகியோர் அறிவிக்கிறார்கள் அதனை இமாம் அல்பானி மிஷ்காதில் ஸஹீஹ் என்பதாக கூறியுள்ளார்கள்..
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே செல்லும்போது ஸஹல்பின் ஹனீஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை நோக்கி உடன் நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்தார்கள். மிக அழகிய உடல்கட்டும், வெண்மை நிறமுடைய ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் வனப்பைக் கண்ட பனீ ஆத்தி குழுவைச் சேர்ந்த ஆமிர் பின் ரபிஆ ரளியல்லாஹு அன்ஹு, ‘இன்றுபோல் என்றும் முடிப் பொதிந்த கட்டான தேகத்தைக் கண்டதில்லை’ என்று கூறியதுதான் தாமதம், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே மயக்கமுற்று விட்டார்கள்.
இவ்விஷயம் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹல் (ரளியல்லாஹு அன்ஹு) தலை தூக்க முடியாமல் அவதியுறுகிறார். அவர் விஷயத்தில் ஏதேனும் உபாயம் உண்டா?’ என (அங்குள்ளவர்கள்) கேட்டார்கள்.
‘இது சம்பந்தமாக யாரையேனும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ ‘ஆம்! ஆமிர் பின் ரபிஆ தான் அவரைப் பார்த்தார்’ எனக் கூறப்பட்டதும், ‘உங்களின் சகோதரரை யாரேனும் எதற்காக கொல்ல வேண்டும்? உங்களை ஆச்சரியத்தில் அழ்த்திடவல்ல ஏதாவதொன்றை காண நேர்ந்தால் ‘பாரகல்லாஹ்’ என மொழிந்தால் போதாதா?’ என ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சற்று கோபமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பின் ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ‘ஸஹ்லுக்காக குளித்திடவும்’ என கட்டளையிட்டு, (அதன்பின்) ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம், இரு கைகள், இரு முழங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய உறுப்புக்களையும் அவர்களது ஆடையின் உள்ளேயும் கழுவப்பட்ட நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அந்த நீரை ஸஹல் ரளியல்லாஹுஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்புறத்திலிருந்து ஒருவர் தலையிலும், முதுகிலும் கொட்டி (தண்ணீர் பிடித்த) அப்பாத்திரத்தையும் தலைகீழாகக் கவிழ்த்துப் போடச் செய்தார்கள்.
இப்படிச் செய்ததும் ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வித தீங்குமின்றி, தன் பயணத்தை மற்றவர்களுடன் தொடர்ந்தார்கள்’ என்ற நிகழ்ச்சியை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹிஆகியோர் ரிவாயத்துச் செய்கின்றனர்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலும் இன்னும் நடைமுறையை வைத்தும் கண்ணேறு உண்மையே என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். மண்ணறையில் இருப்பவரில் மூன்றில் ஒரு பகுதியினர் கண்ணேறுக்குட்பட்டவர்களே என்னும் ஹதீஸை பொறுத்தவரையில் அதன் நம்பகத்தன்மை பற்றி நாம் அறியமாட்டோம். எனினும் நைலுல் அவ்தார் நூலின் ஆசிரியர், ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நபியவர்கள் கூறியதாக ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசை மூலம் இமாம் பஸ்ஸார் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றார். ”அல்லாஹ்வின் இறை நிர்ணயத்திற்கு அடுத்ததாக எனது சமுதாயத்தில் அதிகமானோர் மரணித்தது கண்ணேறு மூலமே”.
ஒவ்வொரு முஸ்லிமும் மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கக்கூடிய தீய ஷைத்தானின் தீங்குகளை விட்டும் இறைவன் மீதான உறுதியான ஈமானின் மூலமும் இன்னும் அவனையே சார்ந்து இருக்க அவனிடமே பொறுப்புச் சாட்டுதல் இன்னும் அவன்பாலே ஒதுங்குதல் என்பவற்றின் மூலமும் மற்றும் நபி அவர்கள் பாதுகாப்பு தேடுவதற்காக காட்டித் தந்த துஆக்கள் மூலமும் முஅவ்விதத்தைன் (ஸூரா நாஸ் ,பலக்) இன்னும் சூரா இக்லாஸ் ஃபாத்திஹா ஆயத்துல் குர்ஸி ஆகியவைகளை அதிகமாக ஓதுவதன் மூலமும் தனக்கு பாதுகாப்பை தேடிக் கொள்வது அவசியமாகும்.
பாதுகாப்பு தேடுவதற்கான துஆக்கள்.
اعوذ بكلمات الله التامات من شر ما خلق
கருத்து: இறைவனின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்
اعوذ بكلمات الله التامه من غضبه وعقابه ومن شر عباده ومن همزات الشياطين وان يحضرون.
கருத்து: இறைவனின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவனது கோபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் அவனது அடியார்களின் தீங்கிலிருந்தும் ஷைத்தானின் ஊசலாட்டங்களில் இருந்தும் அவை என்னிடம் வருவதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم
கருத்து:
அல்லாஹ்வே போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் மீதே பொறுப்புச் சாட்டுகிறேன் இன்னும் அவனே மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான்
இதுபோன்ற மார்க்கம் காட்டித் தந்த துஆக்கள் வழிகாட்டுதல்கள் மூலம் நாம் பாதுகாப்புத் தேட வேண்டும்.
இதுவே பதிலின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்களின் கூற்றின் கருத்துமாகும்.
ஒரு மனிதருக்கு இன்னொருவரால் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதைத் உறுதியாகத் தெரிந்தாலோ இன்னாரால் கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்தாலோ கண் திருஷ்டிபட்டவர் பாதிப்புற்றவருக்காக கழுவிக் கொடுக்க வேண்டும். அவருக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து அவரது இரு மணிக்கட்டுகளையும் உள்ளேவிட்டு, வாயைக் கொப்பளித்து பாத்திரத்தில் துப்பவேண்டும். அதே பாத்திரத்திலேயே முகத்தையும் கழுவிவிட வேண்டும். பின்னர் இடது கையினால் நீர எடுத்து வலது முழங்காலை பாத்திரத்தில் கழுவி விட வேண்டும். பின்னர் வலது கையினால் நீரை எடுத்து இடது முழங்காலை பாத்திரத்தில் கழுவிவிட வேண்டும். பின்னர் தனது ஆடையினுள் நீரூற்றி கழுவ வேண்டும். பின்னர் அந்நீரை கண்ணேறுக்குட்பட்டவரின் தலையின் மீது பின்புறமாக ஒரே ஊற்றாக ஊற்ற வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு குணமடையலாம்..
ஆய்வுகள் மற்றும் பத்வாவுக்கான அறிஞர்கள் குழுவின் தீர்ப்பு (186/1)
மனிதனை கண் திருஷ்டி அதாவது கண்ணேறு பீடிக்குமா? அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது? அதிலிருந்து பாதுகாப்பு தேட முற்படுவது இறைவன் மீது பொறுப்புச் சாட்டுவதற்கு முரணாகுமா என முஹம்மத் ஸாலிஹ் அல்உஸைமீனிடம் வினவப்பட்டது.
அதற்கவர் விடையளிக்கும் போது: கண்ணேறு மார்க்க ரீதியாகவும் புலன்ரீதியாகவும் உண்மையானது என நாம் கருதுகிறோம்
(முஹம்மதே) அந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வையால் வீழ்த்தப் பார்க்கின்றனர். ‘இவர் பைத்தியக்காரர்’ என்றும் கூறுகின்றனர். (அல்கலம் : 51)
இதற்கான விளக்கத்தில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது பார்வைகள் மூலம் உமக்கு கண்ணூறை ஏற்படுத்தப்பார்க்கின்றனர் எனக் அறிவிக்கிறார்கள்.
இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் கண்ணேறு என்பது உண்மையே, இறை நிர்ணயத்தை முந்தக்கூடிய ஒன்று இருக்குமாயின் அதை கண்ணேறு முந்திவிடும். உங்களிடம் கழுவிக் கொடுக்குமாறு கேட்கப்பட்டால் கழுவிக் கொடுங்கள். (ஆதாரம் :முஸ்லிம்)
அதையே இமாம் நசாஈ, இப்னுமாஜா போன்றோர் அறிவித்துள்ள சஹ்ல் இப்னு ஹுனைப் அவர்களின் சம்பவமும் தெளிவுபடுத்துகிறது.
மறுக்க முடியாதளவுக்கு நடைமுறையும் கூட அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
கண் திருஷ்டி ஏற்படும் போது மார்க்கம் காட்டித் தந்த சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும்.
அவையாவன:
1: ஓதுதல்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள் ஓதிப் பார்த்தல் என்பது கண் திருஷ்டிக்கும் காய்ச்சலுக்குமே ஆகும். (திர்மிதி:2057) (அபூதாவூத்:38 84)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்,
باسم الله أرقيك ، من كل شيء يؤذيك ، من شر كل نفس أو عين حاسد ، الله يشفيك ، باسم الله أرقيك
என ஓதி ஊதுவார்கள்.
பொருள் அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு நோவினை தரும் அனைத்திலிருந்தும் குணமளிப்பானாக!
அனைத்து ஆன்மாவின் தீங்கிலிருந்தும், பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும், கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!). ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39.
2: கழுவித்தருமாறு வேண்டுதல். மேலுள்ள ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமீர் இப்னு ரபீஆவுக்கு ஏவியது போல். பின்னர் பாதிக்கப்பட்டவர் மீது ஊற்றப்படவேண்டும்.
கண்பட்டவரின் மலம்சலம் போன்ற கழிவுகளையோ தடயங்களையோ எடுப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. மாறாக கண் திருஷ்டி பட்டவரின் உடம்பு உறுப்புகள் மற்றும் கீழாடையின் உற்பகுதி ஆகியவற்றைக் கழுவுமாறே இடம்பெற்றுள்ளது. தலைப்பாகை தொப்பி மேலாடை போன்றவற்றின் உட்பகுதியும் இதில் உள்ளடங்கலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
கண்திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற முன்னெச்சரிக்கையாக இருப்பது தவறல்ல. இறைவன் மீது பொறுப்புச் சாட்டுவதற்கு முரணானதல்ல. மாறாக அதுதான் பொறுப்புச் சாட்டுதலாகும். ஏனெனில் தவக்குல் என்பது இறைவன் ஆகுமாக்கிய அல்லது ஏவிய விடயங்களைச் செய்வதனுடன் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருத்தலே ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹசன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் தேடி வந்தார்கள்.
أُعِيذُكُما بِكَلِماتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطانٍ وَهامَّةِ، وَمِنْ كُلّ عَيْنٍ لامَّة
அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டும் ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் தேடுகிறேன். திர்மிதீ:2060 அபூதாவூத்:4737
இன்னும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கும் இவ்வாறே பாதுகாப்புத் தேடினார்கள்.
ஆதாரம்:புஹாரி;3371
அஷ்ஷைஹ் இப்னு உஸைமீனின் பத்வாக்கள், ( 2 / 117-118)
அல்லாஹ்வே அறிந்தவன்.