0 / 0
15/முகர்ரம்/1446 , 21/ஜூலை/2024

மறுமை நாளின் விசாரணையின் வகைகள்

கேள்வி: 182318

மண்ணறை மற்றும் மறுமை நாளின் விசாரணையின் விதம் , அதன்  வகைகள் பற்றிய ஒரு தெளிவை தாருங்கள்.  ஏனெனில் சில நபிமொழிகளில் எவரொருவர் ஆழமாக விசாரிக்கப்படுகிறோரோ அவர் வேதனையில் சிக்கிக்கொண்டார் என்றும்,   இன்னும் சில நபிமொழிகளில் இறைவிசுவாசமுடைய ஒரு முஃமின் மோலோட்டமான விசாரணையையே சந்திப்பார் என்றும் பல செய்திகள் வந்திருக்கின்றன. அதேநேரம் ஒவ்வொரு மனிதனும் தனது ஒவ்வொரு நல்ல, கெட்ட செயலையும் ,  அது  அணுவளவாயினும் சரியே அவற்றை மறுமை நாளில் கண்டுகொள்வார் என்ற குர்ஆனிய வசனங்களும் இருக்கின்றன. அதாவது ஒரு மிடர் தண்ணீராக இருந்தாலும் அதுவும் அல்லாஹுதஆலாவின் அருட்கொடையாகவே கருதப்பட்டு அதற்கும் விசாரணை உண்டு என்பதே அவற்றிலிருந்து விளங்குகிறது. இறைவிசுவாசியோ அல்லது இறைநிராகரிப்பாளரோ என்ற எந்த  வேறுபாடுமின்றி அனைவரும் விசாரிக்கப்படுவர் என்றெல்லாம் வந்துள்ளது. இதற்கான ஒரு சரியான விளக்கத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

மண்ணறையின் சுகமும் வேதனையும் குர்ஆன், ஹதீஸ் மூலமும் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின் அடிப்படையிலும் நிரூபனமாகியிருக்கின்றன. மண்ணறையின் சுகமும்  வேதனையும் மனிதனின் ஆத்மாவிற்கே கிடைக்கும் ஆனால் சில சமயம் உடலுக்கும் அதன் தாக்கங்கள் ஏற்படலாம்.‌ ஆனால் விசாரணையை பொருத்தவரை மண்ணறையில் எவ்வித விசாரணையும் கிடையாது ,மாறாக அங்கு மனிதனின் சில செயல்களுக்கான  தண்டனை அல்லது நல்லவனாக உலகத்தில் வாழந்திருந்தால் அதற்கான சில சுகங்களுமே அங்கு உண்டு . விசாரணை என்பது மறுமை நாளிலேயே நிகழும்.

மனிதர்கள் அனைவருமே மறுமை நாளில் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என்பது தான் அடிப்படை .எனினும் அல்லாஹுதஆலா தனது பெருந்தன்மையினால் சிலரை மாத்திரம் எவ்வித விசாரணையோ , வேதனையோ இன்றி சுவனம் நுழைவிப்பான்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : {பின்னர், அந்நாளில் (உலகில் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து) அருட்கொடைகளைப் பற்றியும் நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (102/8} என்ற இறைவசனம் இறங்கியபொழுது, அங்கிருந்த சில மனிதர்கள் (நபித்தோழர்கள்)  நபியவர்களிடம்  " அல்லாஹ்வின் தூதரே !  நாங்கள் எந்த அருட்கொடையைப்பற்றி விசாரிக்கப்படுவோம் , நம்மிடம் தான் இந்த ஈத்தம்பழத்தையும் தண்ணீரையும் தவிர பெரிதாக எந்த  அருட்கொடைகளும் கிடையாதே மட்டுமல்லாது எந்நேரமும் எதிரிகளை எதிர்பார்த்தவர்களாக தோளிலே வாட்களை சுமந்தவர்களாக இருக்கும் எங்களிடமுமா  இச்சாதாராண அருட்கொடைகளை பற்றி   விசாரிக்கப்படும்? என வினவினார்கள். அதற்கு நபியவர்கள் " ஆம் அதனை பற்றியும் தான் விசாரிக்கப்படும் என கூறினார்கள் ( திர்மிதீ 3357) ( இமாம் அல்பானி ஸஹீஹுத்திர்மிதீ எனும் நூலில், இந்த ஹதீஸ் ஹசன் என்று சொல்லியிருக்கிறார்கள்)

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள். பின்பு அந்நாளில் அல்லாஹ் உங்களுக்கு அளித்த ஆரோக்கியம் , அச்சமின்மை, ஆகாரம் மற்றும் ஏனைய  அருட்கொடைகளைக்கு நன்றி செலுத்தினீர்களா , அவனை வழிப்பட்டீர்களா என்பது பற்றி  கேட்கப்படுவீர்கள். (474/8)

நபியவர்கள் கூறியதாக , அபூபர்ஸா அல்அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் மறுமை நாளில் எந்தவொரு அடியானும் " அவன் தனது வயதை எந்தவிதத்தில் கழித்தான்? தனது கல்வியறிவினால் (சமூகத்திற்கு) என்ன செய்தான்? தனது சொத்தை எவ்வாறு சம்பாதித்தான் எந்த வழியில் செலவழித்தான், தனது (ஆரோக்கியமான) உடம்பை எதற்காக உபயோகித்தான்" என்ற கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு விடையளிக்காதவரை அவனது பாதத்தை அசைக்க முடியாது. (இந்த ஹதீஸை திர்மிதீ இமாம் அறிவித்து விட்டு அதனை ஸஹீஹ் என்றும் சொல்லியிருக்கிறார்கள், அதேநேரம் இமாம் அல்பானியும் ஸஹீஹ் என்று சொல்லியிருக்கிறார்)

 "இமாம் இப்னுல் கய்யிம்  சொன்னார்கள்:" இமாம் கதாதா கூறினார்கள் "அல்லாஹுதஆலா தான் அளித்த ஒவ்வொரு அருட்கொடை பற்றியும் ஒவ்வொரு அடியானிடமும் கேட்பான் "

அடியார்களிடம் இரண்டு வகையான அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படும் : ஒன்று முறையாக சம்பாதித்து , முறையாக செலவழித்தது அதற்கு நன்றி செலுத்தியது பற்றி கேட்கப்படும், மற்றையது அநியாயமாக (ஹராமாக) சம்பாதித்து, பிழையாக செலவழித்தது , அதனை எவ்வாறு பெற்றுக்கொண்டாய்? எவ்வாறு செலவழித்தாய் என்பது பற்றி வினவப்படும். ( இஃஙாஸதுல்லஹபான் (1/84). ஒவ்வொருவரும் உலகில் அவர்களுக்குக்கிடைத்த அருட்கொடைகளை ஹலாலான முறையிலா ஹராமான முறையிலா பெற்றுக்கொண்டார்கள் என விசாரிக்கப்படுவார்கள் . பிறகு அதற்கு நன்றி செலுத்தும் அடிப்படையில் அவற்றை அல்லாஹுதஆலாவை வழிப்படுவதற்கு பாவித்தனரா என்பது  பற்றி விசாரிக்கப்படுவர்.  முதலாவது அந்த அருட்கொடையை அடைந்த கொண்ட விதம் பற்றியதாகும் இரண்டாவது அதனை செலவழித்த விதம் பற்றியதாகும்.  ( உத்ததுஸ்ஸாபிரீன் (157))

மூன்றாவது

மறுமை நாளின் விசாரணை இரண்டு வகை:

முதலாவது :மேலோட்டமான விசாரணை.

 இது இறைவிசுவாசிகளுக்கு மாத்திரமே, அவனின் செயல்கள், கல்வி  இன்னும் அல்லாஹுதஆலா அவனுக்கு அருளிய ஏனைய அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவான். அவன் அவனது உள்ளத்தில் ஏற்படக்கூடிய பொருத்தமான பதிலை ஆதாராங்களுடன் கூறுவான்   அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவனின் மீது தொடரும் .

அவனது பாவங்கள் அவனுக்கு எடுத்துக்காட்டப்படும் அவன் அதனை ஏற்றுக்கொள்வான், அல்லாஹுதஆலா அவற்றை மறைத்து , மன்னித்து விடுவான். இவ்வாறானவர் (முஃமின்) கடுமையாக துருவித்துருவி விசாரிக்கப்பட மாட்டார், அவர் தமது ஏட்டை வலது கரத்தில் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக சுவர்க்கத்தில் தனது நண்பர்களை நோக்கி செல்வார், ஏனெனில் அவர் வேதனைகளில் இருந்து தப்பிவிட்டார், உயர்ந்த வெற்றியை அடைந்து கொண்டார்.

 ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் " நபியவர்கள் சொன்னார்கள் " யார் ஆழமாக விசாரிக்கப்படுகிறாரோ அவர் வேதனையில் சிக்கிக்கொண்டார் " அதற்கு நான் " அல்லாஹுதஆலா குர்ஆனில்  (வலது கரத்தில் பட்டோலை கொடுக்கப்பட்டவர்களின் விசாரணை பற்றி சொல்லம்பொழுது)  {அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்}(84/8) என்று கூறவில்லையா என கேட்டேன். அதற்கு நபியவர்கள் அது தான் (முஃமின்களுக்கான) மேலோட்டமான விசாரணையாகும் என்றார்கள் . ( புஹாரி 6536 , முஸ்லிம் 2876)

இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் சொல்கிறார் : இமாம் குர்துபி அவர்கள் சொன்னார்கள்   நபியவர்களின் " அது மேலோட்டமான விசாரணை " என்ற வசனத்திற்கு விளக்கம் என்னவென்றால், அந்த குர்ஆன் வசனத்தில் சொல்லப்பட்ட விசாரணை ,   இறைவிசுவாசியின் பாவங்களை உலகில்  மறைத்து மறுமையில் மன்னிக்கும் அல்லாஹுதஆலாவின் அருட்கொடையை அவர் அறிந்து கொள்வதற்காக அவருக்கு அவரின் செயல்கள் அனைத்தும் எடுத்துக்காட்டப்படுவதையே குறிக்கிறது .

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் " நான் நபியவர்களிடம் இலகுவான விசாரணையை பற்றி "இலகுவான விசாரணை என்றால் என்ன ? என்று வினவினேன் அதற்கு நபியவர்கள் அதுதான் ஒரு (முஃமினான)மனிதருக்கு அவருடைய பாவங்கள் எடுத்துக்காட்டப்பட்டு பின்பு அவை மன்னிக்கப்படும் ( யார் ஆழமாக விசாரிக்கப்படுகிறாரோ அவர் அழிந்தே போவார் ) என்று கூறினார்கள் .( அஹ்மத் 24988) இமாம் அல்பானி தனது ழிலாலுல் ஜன்னா என்ற நூலில் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என கூறியிருக்கிறார்)

 இமாம் இப்னுல் உஸைமீன் அவர்கள் கூறுகிறார்கள் " முஃமின்களும் மறுமையில் விசாரிக்கப்படத்தான் போகிறார்கள்‌. ஆனால் அது  ஆழமான விசாரணையாக இருக்காது ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள் "ஆழமாக விசாரிக்கப்படுபவர் அழிந்து விட்டார் அல்லது வேதனையில் சிக்கிக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்கள் " மாறாக இவர்கள் விசாரணை (அவர்களின் பாவங்களை) எடுத்துக்காட்டுவதாக மாத்திரமே அமையும். ( அல்லிகாஉஷ்ஷஹ்ரி (378/1)

  இப்னு உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தாம் செவிமடுத்ததாக   அறிவிக்கிறார்கள் : உங்களில் ஒருவர் தம்முடைய இறைவனை நெருங்குவார். இறைவன் தனது திரையை அவர்மீது போட்டு (அவரை மறைத்து)விடுவான். பின்னர் (அவரிடம்) இறைவன், “நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?” என்று கேட்பான்.  அவர் ‘ஆம்’ என்று கூறி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டு தனது கதை இத்துடன் முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டிருப்பான் அப்பொழுது இறைவன்  “நான் (உன் குற்றங்களை) உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகின்றேன்” என்று சொல்வான் பிறகு அவனது நன்மையின் பட்டோலை அவன் கையில் கொடுக்கப்படும் , இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் காட்டி, "இவர்கள்தான் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்கள் அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் "

என்று படைப்பினங்களுக்கிடையே அறிவிக்கப்படும். ( புஹாரி 2441) முஸ்லிம் 2768)

இரண்டாவது வகை;ஆழமான விசாரணை

 இது‌ அல்லாஹுதஆலா‌‌ இறைநிராகரிப்பாளர்களுக்காகவும் , இன்னும் ஏகத்துவவாதிகளில் அவன் நாடிய சில பாவிகளுக்கும்  ஏற்பாடு செய்திருப்பது, அவர்கள் மிக நீண்ட நேரம் விசாரிக்கப்படுவார்கள் .அவர்களின் பாவங்களின் அளவு விசாரணை கடினமாக அமையும். அல்லாஹுதஆலாவை ஏற்றுக்கொண்ட பாவம் செய்தவர்களில் அல்லாஹுதஆலா அவன் நாடிய சிலரை சில காலம் நரகத்தில் வைத்து விட்டு பிறகு நிரந்தரமாக சுவர்க்கத்தில் நுழைவிப்பான்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமைநாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேக மூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள்.மக்கள், "இல்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை" என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.இறைவன் அடியானைச் சந்தித்து, "இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி,உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்க வில்லையா?" என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். இறைவன், "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான்.

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், "இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த்தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "ஆம், என் இறைவா!" என்பான். இறைவன், "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?"என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான்.பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், "என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன்.தானதர்மம் செய்தேன்" என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.அப்போது இறைவன், "நீ இங்கேயே நில்" என்று கூறுவான். பிறகு அவனிடம், "இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்" என்று கூறுவான். அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து "பேசுங்கள்" என்று சொல்லப்படும்.அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான். (முஸ்லிம் 2968).

இமாம் இப்னு உஸைமீன் கூறுகிறார்கள்: மேற்கூறப்பட்ட " அந்நாளில் அருட்கொடைகளை பற்றி கேட்கப்படுவீர்கள் " என்ற வசனத்தின் மூலம் நாடப்படுவது முஃமின்கள் மாத்திரமா அல்லது முஃமின்கள், காபிர்கள் அனைவருமா என்பதில் அறிஞர்கள் கருத்துமுரண்பட்டிருக்கிறார்கள்.  இரண்டில் சரியான கருத்து முஃமின்கள் காபிர்கள் என அனைவரும் தான் , ஆனால் காபிர் இழிவுபடுத்தப்படுவதற்காக கேட்கப்படுவான். ஆனால் முஃமின்களிடம் நினைவூட்டுவதற்காகவே கேட்கப்படும் , அதாவது முஃமின் அல்லாஹுதஆலா அவனுக்கு அருளிய அருட்கொடைகளை நினைவூட்டுவதற்காக கேட்கப்படுவான். அதனால் அந்த முஃமின் உலகில் தனக்கு பல அருட்கொடைகளை வழங்கிய இறைவன் மறுமையிலும் தன்னை தனது அருட்கொடைகள் மூலம் கண்ணியப்படுத்தியிருக்கிறான் என்பதை அறிந்து சந்தோஷப்படுவான். ஆனால் இறைநிராகரிப்பாளனோ அவனை எச்சரிப்பதற்காகவும் இழிவடையச்செய்ய வேண்டும் என்பதற்காகவே விசாரணை செய்யப்படுவான் . (நூல்: லிகாஉல் பாபில் மப்தூஹ் 9/98).

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மறுமை நாளின் விசாரணையின் வகைகள் - Islam Question & Answer