மக்களின் பிற வாழ்க்கைத் தேவைகளை விட மதத்திற்கான தேவை அளப்பரியதாகும். ஏனெனில் மனிதன் அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் இடங்கள், வெறுக்கும் இடங்கள் என்ன என்பதை அறிய வேண்டியுள்ளான். மேலும் அவனுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள், அவனை முன்னோக்கும் கெடுதியை விட்டும் பாதுகாக்கக் கூடிய செயற்பாடுகள் அவனுக்கு அவசியப்படுகின்றது. மார்க்கம் தான் அவனுக்கு நன்மை பயக்கும் அமசங்களையும், தீங்கு விளைவிக்கும் அம்சங்களையும் வேறுபடுத்தி தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. அதுவே அல்லாஹ் தனது படைப்பினங்களுக்குப் புரியும் நீதமும், தனது அடியார்களுக்கு மத்தியில் காணப்படும் அவனது ஒளியுமாகும். எனவே மனிதர்களுக்கு அவர்கள் எதனை செய்ய வேண்டும் எதனை விட்டு விட வேண்டும் என தெளிவுபடுத்தக் கூடிய ஒரு மார்க்கம் இன்றி அவர்களால் வாழ முடியாது.
ஒரு நபருக்கு சுயமாக விரும்பும் ஆற்றல் இருந்தால், அவர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்வது அவசியம், அது நன்மை பயக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதா? அது சீர்படுத்துமா? அல்லது கெடுக்குமா?
இதனை சிலர் இயல்பாகவே அறிந்து கொள்வர்;. இன்னும் சிலர் தங்களது புத்தியைப் பயன்படுத்தி அறிந்து கொள்வர். ஆனால் வேறு சிலரோ அவர்களுக்கு இறைத் தூதர்களை அனுப்பி, அவர்கள் தெளிவுபடுத்தி, வழிகாட்டினாலே தவிர அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. (பார்க்க : நூல் : அத்தத்முரிய்யஹ் : 213 - 214 (நூலாசிரியர் : இப்னு தைமிய்யா (ரஹ்), நூல் : மிப்தாஹு தாரிஸ் ஸஆதஹ் : 2ஃ383)
எனவே எவ்வளவு தான் சடவாத நாத்திகப் போக்குகள் உயர்ச்சியடைந்து, பிரகாசித்தாலும், எத்தனையோ சிந்தனைகள், கோட்பாடுகள் இருந்தாலும் தனிமனிதர்களுக்கும், சமூகத்துக்கும் சரியான மார்க்கத்தை விட்டும் தேவையற்று இருக்க முடியாது. மேலும் அவற்றால் ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டினதும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. மாறாக மனிதன் அவற்றை ஆழமாக கவனிக்கும் போதெல்லாம் அவை தமக்கு பாதுகாப்பை வழங்குவதுமில்லை; தனது தாகத்தைத் தீர்ப்பதுமில்லை; சரியான மார்க்கத்தைத் தவிர அவற்றிலிருந்து தப்பிக்க வேறு வழி கிடையாது என்பதை உறுதியாகவே அறிந்து கொள்வான்.
பிரான்ஸைச் சேர்ந்த எர்னஸ்ட் ரெனன் கூறுகையில் “ நாம் விரும்பும் அனைத்தும் அழிந்துபோவதும், பகுத்தறிவு, விஞ்ஞானம், தொழில் போன்றவற்றைப் பயன்படுத்தும் வாழ்க்கை அழிந்து போவதும் சாத்தியமே. ஆனால் மதச்சார்பு அழிந்து போவது சாத்தியமற்றது. மாறாக அது, மனிதனை இவ்வுலக வாழ்வில் தாழ்வான நெருக்கடிகளுக்குள் ஒடுக்கக்கூடிய சடவாதப் போக்கினை அழித்தொழிக்கும் ஒரு வாதமாக எப்போதும் தொடர்ந்திருக்கும்." என்றார். (பார்க்க : நூல் : அத்தீன் - பக்கம் : 87, நூலாசிரியர் : அப்துல்லாஹ் தர்ராஸ்)
எகிப்திய எழுத்தாளரான முஹம்மத் பரீட் வஜ்தி குறிப்பிடுகையில் “ மார்க்கப்பற்று எனும் எண்ணம் மறைந்து போவது சாத்தியமற்றது. ஏனென்றால் அது ஆன்மாவின் உன்னதமான ஈர்ப்பும், அதன் கண்ணியமான உணர்ச்சியுமாகும். மனிதனின் அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு இந்த ஈர்ப்பு மாத்திரமே போதுமானது. இந்த ஈர்ப்பு மென்மேலும் அதிகரிக்கும். மனிதனிடம் அழகையும், அசிங்கத்தையும் சிந்தித்து உணர முடியுமான மனம் இருக்கும் வரையில் மார்க்கப்பற்று எனும் இயல்பு அவனைத் துயர்ந்து கொண்டிருக்கும். மேலும் இந்த இயல்புநிலை அவனது அறிவின் உயரத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்றவாறு அவனில் அதிகரிக்கும்." (முன்சென்ற மூலாதாரத்தைப் பார்க்கவும்)
மனிதன் தனது இரட்சகனை விட்டும் தூரமானால், அவனது அறிவு மட்டத்தின் உயர்ச்சிக்கும், அறிவு எல்லைகளின் விசாலத்திற்குமேற்ப தனது இரட்சகனைப் பற்றியும், அவனுக்கான கடமைகளை பற்றியும் தான் அறியாமலிருந்தது எவ்வளவு பெரிய மடத்தனம் எனப் புரிந்து கொள்வான். அவ்வாறே தன்னைப் பற்றியும், தன்னை சீர்படுத்தும், நாசப்படுத்தும் அம்சங்கள் மற்றும் தன்னை மகிழ்ச்சிப்படுத்தும், துன்பப்படுத்தும் அம்சங்கள் மேலும் கோள்கள், விண்மீன் திரள்கள், கணினி அறிவியல், தானியம் போன்றவற்றின் தனித்தனி விவரங்கள் பற்றிய அவனது அறியாமையையும் உணர்ந்து கொள்வான். அப்போது தான் அறிஞன், ஆணவம் எனும் நிலையிலிருந்து பணிவு, சரணடைதல் எனும் நிலைக்கு பின்வாங்குவதுடன் எல்லா அறிவியல்களுக்குப் பின்னாலும் நுட்பமான அறிவுடைய ஒருவன் இருக்கின்றான்; இயற்கையின் பின்னால் பேராற்றல் கொண்டதொரு படைப்பாளன் உள்ளான் என நம்பிக்கை கொள்வான். இந்த யதார்த்தம் மறைவானவற்றை நம்பிக்கை கொள்வதற்கும், நிலையான மார்க்கத்துக்குக் கட்டுப்படுவதற்கும், பித்ரா எனும் இயற்கை சுபாவத்திற்குப் பதிலளிப்பதற்கும் நீதமான ஓர் ஆராய்ச்சியாளனைப் பணிக்கும். இதனை மனிதன் விட்டுவிடுவானானால் அவனது பித்ரா எனும் இயற்கை சுபாவம் சீர்குழைந்து விலங்குகளின் மட்டத்தில் வீழ்ந்து விடுவான்.
இதன் மூலம் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்தி, அவன் மார்க்கமாக வழிகாட்டிய பிரகாரம் அவனை வணங்கி வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மார்க்கப்பற்றானது ஓர் அடியான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் அடிமையாக இருந்து இருஉலகிலும் சுபீட்சமாக வாழ்வதற்கும், அழிவுகள், க~;டங்களிலிருந்து தப்புவதற்காகவும் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு அடிப்படை அங்கமாகும் என நாம் முடிவாகக் கூறுகின்றோம். மேலும் மனிதனிடத்தில் சிந்தனா ஆற்றல் முழுமை பெறுவதற்கு மார்க்கப்பற்று அத்தியாவசியமானதாகும். அதன் மூலமாக மாத்திரமே மனித மனம் தனது ஏக்கத்தைத் தணிப்பதற்கான வழியைப் பெறுகின்றது. அது இல்லாமல், அதன் உயர்ந்த அபிலாi~களை அடைய முடியாது.
மேலும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கும், மனசாட்சியின் வலிமையைச் செம்மைப்படுத்துவதற்கும் இது அத்தியாவசியமான ஒரு அங்கமாகும். ஏனெனில் உன்னத உணர்வுகள் மார்க்கத்தில் ஒரு வளமான துறையையும், அவற்றின் நோக்கத்தை அடைய முடியுமான வற்றாத நீரூற்றையும் பெற்றுக் கொள்கின்றன.
மேலும் மனஉறுதி முழுமையானதாக இருப்பதற்கு இது அவசியமான ஒரு அங்கமாகும். ஏனெனில் மார்க்கமானது நோக்கங்களை அடைவதற்கான தூண்டல்களை வழங்குவதோடு விரக்தி, நிராசையை ஏற்படுத்தும் காரணிகளுடன் மோதுவதற்கான வழிவகைகளையும் வழங்குகின்றது.
இதன் பிரகாரம் “ மனிதன் இயல்பிலேயே சமூகமயமானவன்." என்று யாராவது சொன்னால் “மனிதன் இயற்கை சுபாவத்திலேயே மதப்பற்றுடையவன்." என்று நாம் சொல்ல வேண்டும். (முன்சென்ற மூலாதாரத்தில் 84, 98 பக்கங்களைப் பார்வையிடவும்) ஏனெனில் மனிதனிடத்தில் இருவிதமான ஆற்றல்கள் காணப்படுகின்றன. ஒன்று சிந்தனை சார்ந்த அறிவாற்றல். மற்றையது சுயமாக விரும்பிச் செய்யும் ஆற்றல். மேலும் அவனது முழுமையான மகிழ்ச்சியானது அவனது அறிவாற்றல் மற்றும் விருப்பாற்றலை நிறைவு செய்வதில் தங்கியுள்ளது. அத்தோடு பின்வருவனவற்றை அறிவதன் மூலமே தவிர அவனால் அறிவாற்றலை பூரணமாக அடைய முடியாது.
01) மனிதனை ஒன்றுமில்லாத நிலையில் இருந்து படைத்து அவனுக்கு அருள்களைப் பூரணமாக வழங்கிய படைத்தவனும், வாழ்வாதாரம் அளிப்பவனுமாகிய இறைவனை அறிதல்.
02) அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும், அவனுக்குக் கட்டாயமான அம்சங்களையும், அல்லாஹ்வின்; அப்பெயர்கள் அடியார்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிதல்.
03) அல்லாஹ்வை (அவனது நெருக்கத்தை) அடைவதற்கான பாதையை அறிதல்.
04) மனிதன் இறைவனை அறிவதற்கும், அதன் மூலம் அளப்பரிய இன்பங்களை அடைவதற்கான பாதையை அறிந்து கொள்வதற்குமான தடைகளையும், ஆபத்துக்களையும் அறிதல்.
05) உனது ஆத்மாவைப் பற்றி, அதற்கு அவசியமான விடயங்கள், அதனை சீர்படுத்தும், நாசப்படுத்தும் அம்சங்கள், அதில் காணப்படுகின்ற தனித்துவங்கள், குறைகளைப் பற்றி உண்மையாக அறிதல்.
இந்த ஐந்து அம்சங்களையும் அறிவதன் மூலமே மனிதனது அறிவாற்றல் பூரணமாகின்றது.
மேலும் அறிவாற்றல் மற்றும் சுயவிருப்பாற்றல் ஆகியன பூரணத்துவம் அடைய வேண்டுமாயின் அடியான் அல்லாஹ்வுக்குப் புரிய வேண்டிய கடமைகளை உண்மையாகவும், உளப்பூர்வமாகவும், தனக்கு அவன் வழங்கிய அருளுக்குச் சாட்சியாக அமையும் விதமாகவும் தொடர்ச்சியாகப் பேணி நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஆனால் இவ்விரு ஆற்றல்களையும் பூரணப்படுத்துவதற்கு அல்லாஹ்வின் உதவியின்றி வேறு வழி கிடையாது. எனவே அடியான் அல்லாஹ் தனது நேசர்களுக்கு (வலிமார்களுக்கு) வழிகாட்டிய பிரகாரம் தனக்கும் வழிகாட்ட வேண்டிய அத்தியாவசியத்தில் உள்ளான். (பார்க்க : நூல் : அல்பவாஇத் - பக்கம் 18ஃ19)
எனவே சரியான மார்க்கம் என்பது மனிதனது பலவகையான ஆற்றல்களுக்கான தெய்வீக உதவி என்று நம் அறிந்ததன் பிற்பாடு மார்க்கம் தான் ஒரு சமுதாயத்தின் பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறது என்பதையும் நாம் புரிய வேண்டும். ஏனெனில் மனித வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அது மனிதர்களின் கூட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு சீராக அமைய மனிதர்களின் தொடர்புகளைப் பேணி, அவர்களுக்குரிய கடமைகளை வரையறுத்து, அவர்களது உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு சட்ட ஒழுங்கு அவசியமாகின்றது. மேலும் அந்த சட்ட ஒழுங்கு ஆன்மாவின் மீது அத்துமீறுவதைத் தடுக்கும், அதைப் பாதுகாக்க ஊக்குவிக்கும் மற்றும் பிற மனிதர்களிடத்தில் அதன் மரியாதைக்கு உத்தரவாதமளித்து, அதன் கண்ணியங்கள் மீறப்படுவதை விட்டும் தடுக்கக் கூடிய ஒரு உறுதியான சட்ட ஒழுங்காக இருத்தல் அவசியமாகும். அப்படியாயின் அந்த அதிகாரமிக்க சட்ட ஒழுங்கு எதுவாக இருக்க முடியும்? நான் சொல்கின்றேன் : ஒழுங்குமுறை பேணப்படுவதை உறுதி செய்வதிலும், சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அதன் ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதிலும், அதில் ஆறுதல், மனஅமைதிக்கான வழிவகைகள் ஒன்றுசேர அமைவதிலும் மார்க்கத்தின் சக்திக்கு, அதிகாரத்திற்கு நிகரான அல்லது நெருக்கமான சக்தி, அதிகாரம் இந்த பூமியிலேயே இல்லை.
இதில் உள்ள இரகசியம் என்னவென்றால், மனிதன் மற்ற எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகிறான். அதாவது அவனுடைய தன்னார்வ இயக்கங்கள் மற்றும் செயல்களை செவிப்புலனினாலோ, பார்வையினாலோ அறிய முடியாத ஒரு விடயம் வழிநடத்திச் செல்கின்றது. அதுவே ஆன்மாவைச் செம்மைப்படுத்தி, உடலவயங்களைத் தூய்மைப்படுத்தும் நம்பிக்கையாகும். எனவே மனிதன் எப்போதுமே சரியானதோ, பிழையானதோ ஏதோவொரு நம்பிக்கையினால் வழிநடத்தப்படுகின்றான். அவனது நம்பிக்கை சரியாக அமைந்துவிடின் அவனில் அனைத்து விடயங்களும் சீராக அமைந்து விடும்; அது கெட்டுவிட்டால் அனைத்துமே கெட்டு விடும்.
நம்பிக்கையும், விசுவாசமும் தான் ஒரு மனிதனில் காணப்படும் சுய கண்காணிப்புக்களாகும். பொதுவாக - மனித சமுதாயத்தில் அவதானிக்க முடிவதைப் போல - அது இருவகைப்படுகின்றது.
ஒன்று : நல்லொழுக்கத்தின் பெறுமதி, மனிதகுலத்தின் கண்ணியம் மற்றும் அதுபோன்ற எவற்றின் காரணிகளுக்கு மாறு செய்வதற்கு உயர்வான மனித உள்ளங்கள் வெட்கப்படுமோ (அவற்றுக்கு மாறு செய்வதனால் ஏற்படும் மோசமான வெளிப்புற விளைவுகள் பற்றிக் கருத்தில் கொள்ளப்படாவிடினும் சரியே.) அப்படியாப்பட்ட பொது அர்த்தங்களை நம்பிக்கை கொள்வது.
மற்றையது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், அவன் இரகசியங்களைக் கண்காணிப்பவன், அவன் இரகசியத்தையும். மறைவானதையும் அறிகின்றான் என நம்பிக்கை கொள்வதுமாகும். பொதுவாக இஸ்லாமிய சட்டவாக்கமே அவனது ஏவல், விலக்கிலிருந்தே அதன் அதிகாரத்தைப் பெறுகின்றது. அவன் மீதுள்ள அன்பின் காரணமாகவோ அல்லது பயத்தினாலோ அல்லது இரண்டும் இணைந்து மனஉணர்வுகள் அவனிடமிருந்து வெட்கத்தினால் தூண்டப்படுகின்றன. மனித ஆன்மாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் இவ்விரண்டு வகையான சக்திகளில் இவ்வகை நம்பிக்கையே மிகவும் வலுவானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனோஇச்சையின் தூண்டல்கள் மற்றும் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்களை எதிர்ப்பதற்கு இதுவே அவ்விரண்டில் மிகவும் பலம் பொருந்தியது. மேலும் பொதுமக்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் இதயங்களில் வேகமாக ஊடுருவிச் செல்லக் கூடியதுமாகும்.
இதனால் தான் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் நீதி, நியாயத்தைப் பேணி நடந்து கொள்வதற்கான சிறந்த உத்தரவாதமாக மார்க்கம் திகழ்கின்றது. ஆக இது ஒரு சமூகத் தேவையாகும். எனவே உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே சமுதாயத்துக்கு மார்க்கம் முக்கியம் என்பதில் ஆச்சரியமில்லை. (பார்க்க : அத்தீன் : பக்கம் 98 - 102)
பொதுவாகவே மார்க்கம் இவ்வாறான ஒரு நிலையில் இருக்கும் போது இன்று உலகில் பல மதங்களைக் காண முடிகின்றது. மேலும் ஒவ்வொரு மக்களும் தங்களது மதத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைவதையும் அதைக் கடைப்பிடிப்பதையும் நீங்கள் காண்கிறீர்கள், அப்படியாயின் மனித மனம் எதனை அடைய விரும்புகின்றதோ அதனை நிறைவு செய்யக் கூடிய சரியான மார்க்கம் எதுவாக இருக்கும்? மேலும் சத்திய மார்க்கத்தின் விதிகள் யாவை?