0 / 0
06/ரபி/1446 , 09/செப்டம்பர்/2024

மனிதர்களுக்கு தூதர்களின் தேவை

கேள்வி: 13957

மனிதர்களுக்கு ஏன் தூதர்களின் தேவை உள்ளது?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

நபிமார்கள் அடியார்களுக்கான அல்லாஹ்வின் தூதர்கள். அவனது கட்டளையை அவர்களிடம் எத்திவைப்பார்கள். அவனது கட்டளைக்கு அடிபணிந்தால் அவர்களுக்கு ஏற்படுத்தி வைத்துள்ள இன்பங்களைப் பற்றிய நற்செய்திகளையும் அவற்றுக்கு அவர்கள் மாறு செய்தால் இருக்கின்ற நிரந்தரமான வேதனை பற்றிய எச்சரிக்கையும் அவர்கள் வழங்குவார்கள் முன்சென்ற சமுதாயங்களின் சரித்திரங்களையும் தமது ரப்புடைய கட்டளைக்கு அவர்கள் மாறு செய்தமையால் அவர்களுக்கு இவ்வுலகில் இறங்கிய கடும் வேதனைகளையும் அவர்கள் விவரித்துக் கூறுவார்கள்.

இந்த ஏவல் விலக்கல்களை மனித பகுத்தறிவால் தனித்து நின்று அறிந்து கொள்ள முடியாது. அதனாலேயே அவர்களை கண்ணியப் படுத்தும் நோக்கிலும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களுக்கு மார்க்கத்தை வழங்கியுள்ளான், ஏவல் விலக்கல்களை விதித்துள்ளான். ஏனெனில் மக்கள் சிலவேளை அவர்களது மனோ இச்சைக்கு பின்னால் சென்று, தடுக்கப்பட்டவற்றை மீறுவார்கள், மக்கள் மீது அடந்தேறி அவர்களது உரிமைகளைப் பறித்துவிடுவார்கள். எனவே தான் அல்லாஹ்வின் கட்டளைகனை நினைவூட்டும், அவனுக்கு மாறு செய்தை எச்சரிக்கும,; உபதேசங்களை கூறிக் காட்டும், முன் சென்றவர்களின் சரித்திரங்களை படித்துக் காட்டும் தூதுவர்களை அவ்வப்போது அவர்களை நோக்கி அனுப்புவதென்பது அறிவார்ந்த விடயமாகும். ஏனெனில் ஆச்சரியமான சரித்திரங்கள் உள்ளங்களில் நுழைந்துவிட்டால், அபூர்வமான கருத்துக்கள் சிந்தனைகளைத் தட்டிவிட்டால் பகுத்தறிவு அதனை பயன்படுத்தி தன் அறிவை அதிகரித்துக் கொள்ளும். அதன் புரிதல் சீராகிவிடும். அதிகம் செவி சாய்ப்பவரே அதிக கருத்துக்கள் கொண்டவராக இருப்பார். அதிக கருத்துக்கள் கொண்டவரே அதிகம் சிந்திப்பவராக இருப்பார். அதிகம் சிந்திப்பவரே அதிகம் அறிவு கொண்டவராக இருப்பார். அதிக அறிவு கொண்டவரே அதிகம் அமல் செய்பவராக இருப்பார். எனவே தூதுவர்களை அனுப்புவதற்குப் பதிலாக வேறு மாற்றீடு எதுவும் கிடையாது. சத்தியத்தை அடைந்து கொள்ள அவர்களை விட வேறு பதிலீடு; எதுவும் கிடையாது. (இமாம் அல்மாவர்தீ, நூல் : அஃலாமுன் நுபுவ்வா)

பெறுமதிமிக்க பல நூல்களைத் தொகுத்த, மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராகிய ஷைகுல் இஸ்லாம் அஹ்மத் பின் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

“தூதுத்துவம் என்பது ஓர் அடியானின் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்வை சீர் செய்வதற்கு மிக அத்தியாவசியமானதாகும் அவனது மறுமை வெற்றிக்கு தூதுத்துவத்தைப் பின்பற்றுவது எவ்வாறு அவசியமோ அவ்வாறே இவ்வுலக வெற்றிக்கும் தூதுத்துவத்தைப் பின்பற்றுவது அவசியமாகும் மார்க்கம் என்பது ஒரு மனிதனுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவன் இருவிதமான இயக்கங்களுக்கு மத்தியிலுள்ளான். ஒன்று, அவனுக்குப் பயன்தருபவவற்றைக் கொண்டு வரும் இயக்கம். மற்றையது, அவனுக்குத் தீங்கிழைப்பவற்றைத் தடுக்கும் இயக்கம். மார்க்கம் தான் இவ்வுலகில் அல்லாஹ்வின் ஒளி. அவனது அடியார்களுக்கு மத்தியில் வழங்கப்படும் நீதி. அது ஒரு கோட்டை, யாரெல்லாம் அதனுள் நுழைழந்துவிடுகின்றார்களோ, அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்

ஷரஃ என்பது புலன்கள் மூலம் நல்லவை கெட்டவைகளுக்கு இடையில் வேறு பிரித்து அறிந்துகொள்வதல்ல. அப்பண்பு மிருகங்களிடமும் உள்ளது. கழுதைகள் மற்றும் ஒட்டகங்கள் மண்ணுக்கும் கோதுமைக்கும் மத்தியில் வேறுபாட்டை அறியும். மாறாக, இம்மையிலும் மறுமையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் மற்றும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரும் செயல்கள் என்பவற்றிற்கு மத்தியில் வேறுபடுத்திக் காட்டுவதே சரீஆவின் நோக்கமாகும். இறை விசுவாசம், ஓரிறைக் கொள்கை, நீதம், நலவு செய்தல், அமானிதம், பேணிப்பு, வீரம், அறிவு, பொறுமை, நன்மையை ஏவி தீமையை தடுத்தல், உறவுகளே சேர்ந்து நடத்தல், பெற்றோருக்கு உபகாரம் புரிதல்; அயலவருக்கு நன்மை செய்தல், கடமைகளை நிறைவேற்றுதல், உளத்தூய்மையுடன் செயற்படல், அல்லாஹ்விடம் (தவக்குல் வைத்துப்) பொறுப்புச் சாட்டுதல், அவனிடம் உதவி தேடல், விதிகளைப் பொருந்திகொள்ளுதல், அல்லாஹ்வின் தீர்ப்புக்கு அடிபணிதல், அவனையும் அவனது தூதர்கள் அறிவித்த அனைத்தையும் உண்மைப்படுத்தல் போன்ற அடியானின் இவ்வுலக மறுவுலக சுபிட்சத்தற்குக் காரணமான அனைத்தையும் உதாரணம் கூறலாம். அவற்றுக்கு நேர்மாற்றமானவைகளிலேயே இவ்வுலக மற்றும் மறுவுலக துன்பமும் கவலையும் உள்ளது.

 தூதுத்துவம் மாத்திரம் இல்லையென்றால் வாழ்க்கையில் பயன்தரும் அல்லது தீங்கிழைக்கும் அம்சங்கள் பற்றிய விரிவான விளக்கத்தை பகுத்தறிவு பெற்றுக்கொண்டு இருக்கமாட்டாது. எனவே தான், அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள மிகப் பெறுமதியான ஓர் அருட்கொடை மற்றும் மிகக் கண்ணியமான ஓர் உபகாரம் அவர்களிடம் தூதர்களை அனுப்பியமையும் வேதங்களை இறக்கியமையுமாகும். அவ்வாறில்லை என்றால் மிருகங்கள் போன்று அல்லது அதை விடக் கேவலமாக இருந்திருப்பார்கள். யார் அல்லாஹ்வின் தூதை ஏற்றுக் கொண்டு அதில் உறுதியாக நிற்கிறாரோ அவர் சிறந்த மக்களில் உள்ளவர். யார் அதை ஏற்காமல் மீறிச் செல்கின்றாரோ அவர் கெட்ட மனிதர்களில் உள்ளவர் என்பது மாத்திரமல்லாமல் நாய் பன்றி என எந்த இழிவான பொருட்களையும் விட இழிவானவராகவும் இருப்பார். இவ்வுலகில் மக்கள் நிலைத்திருப்பது அவர்களிடம் உள்ள தூதுத்துவத்தின் விளைவு வெளிப்பாடுகள் காரணமாகவே! தூதர்களின் விளைவு வெளிப்பாடுகள் இவ்வுலகை விட்டும் மறைந்து விட்டால், அவர்களது நேர்வழியில் அடையாளக் கற்கள் அழிந்து விட்டால் அல்லாஹ் பூமியை அழித்துவிட்டு மறுமையை ஏற்படுத்தி விடுவான்.

இவ்வளவு மக்களுக்கு தூதரின் தேவை என்பது சூரியன், சந்திரன், காற்று, மழை என்பவற்றின் தேவை போன்றோ, மனிதனுக்கு அவனது வாழ்க்கையின் தேவை போன்றோ, கண்ணுக்கு வெளிச்சத்தின் தேவை போன்றோ, உடம்புக்கு உணவுப் பண்டங்களின் தேவை போனறோ அல்ல. மாறாக, அவற்றிற்கெல்லாம் மேலாக, கற்பனைக்கும் எட்டாத அளவு அதிக தேவை தூதரிடம் எமக்கு இருக்கின்றது.

ரஸ_ல்மார்கள் அல்லாஹ்வின் ஏவல் விளக்கங்கள் விடயத்தில் அவனுக்கும் அவனது அடியார்களுக்கும் மத்தியிலிருந்து செயற்படுபவர்கள். அவர்கள் அவனுக்கும் அவனது அடியார்களுக்கும் மத்தியில் உள்ள தூதுவர்கள். நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது தலைவரும், அவர்களிலேயே தமது ரப்பிடத்தில் அதிக கண்ணியமானவரும் ஆவார். அல்லாஹ் அவரை அகிலத்தாருக்கு அருட்கொடையாக, இறை பாதையில் நுழைவோருக்கும் ஒட்டுமொத்த படைப்புகளுக்கும் ஓர் ஆதாரமாகவும் அனுப்பி உள்ளான். அவருக்குக் கட்டுப்படுமாறும், அவரை நேசிக்குமாறும,; கண்ணியப்படுத்துமாறும், அவருக்கு பக்கபலமாக இருக்குமாறும், அவரது கடமைகளை நிறைவேற்றி வைக்குமாறும் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான், அவரை விசுவாசம் கொள்ளுமாறும், பின்பற்றுமாறும் அனைத்து நபிமார்களிடமும் ரசூல்மார்களிடமும் உறுதிமொழி வாங்கியுள்ளான். தம்மைப் பின்பற்றும் முஃமின்களிடமும் அவ்வுறுதிமொழியை வாங்கிக் கொள்ளுமாறு அல்லாஹ் அவர்களை பணித்தான். மறுமையைப் பற்றி எச்சரிக்கை செய்பவராகவும், நன்மாராயம் சொல்பவராகவும் அவரை அனுப்பியுள்ளதோடு அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அவனின் பால் அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் அவர்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அவரைக் கொண்டு அல்லாஹ் தூதுத்துவத்தை நிறைவு செய்தான். வழிகேட்டிலிருந்து நேர்வழி காட்டினான். அறியாமையிலிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். அவர்களுடைய தூதின் மூலம், குருடாக இருந்த பல கண்களையும் செவிடான காதுகளையும், அடைக்கப்பட்டிருந்த உள்ளங்களையும் திறந்துவிட்டான். இருள் மையமாக இருந்த பூமி அவரது தூதின் மூலம் ஒளி பெற்றது. பிரிந்திருந்த உள்ளங்கள் ஒன்றிணைந்தன. வளைந்து போயிருந்த மார்க்கம் நபியின் மூலமே அல்லாஹ் சீர்செய்தான். அவரின் மூலமாகவே அல்லாஹ் சரியான பாதையைத் தெளிவுபடுத்தினான்.  அதற்காக அவரது உள்ளத்தை விரிவுபடுத்திக் கொடுத்தான். அவரை விட்டும் குற்றங்களை நீக்கினான். அவரது புகழை உயர்த்தினான். அவரது கட்டளைக்கு மாறுசெய்தவர்களுக்கு இழிவை வழங்கினான். தூதர்கள் வராமலிருந்த, வேதங்கள் தூர்ந்து போயிருந்த, இறைவார்த்தைகள் திரிபுபடுத்தப் பட்டிருந்த, மார்க்கங்கள் மாற்றப்பட்டிருந்த ஒவ்வொரு கூட்டமும் அநியாயமாக அவர்களது சிந்தனைகளிலேயே தங்கியிருந்த, தங்கள் தவறான கருத்துக்களாலும் மனோ இச்சைiயாலும் அல்லாஹ் மீதும், அடியார்கள் மீதும் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் அல்லாஹ் அவரை அனுப்பினான். அவர்கள் மூலமாகவே அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டினான். பாதைகளைத் தெளிவுபடுத்தினான். அவர்கள் மூலமாக மக்களை இருளிலிருந்து பிரகாசத்தை நோக்கி வெளியேற்றினான். நபியவர்களை கொண்டே பாவிகளுக்கும் வெற்றியாளர்களுக்குமிடையில் வேறுபாட்டைக் காட்டினான். அவரது வழிகாட்டலை யார் ஏற்று நடக்கின்றாரோ அவர் நேர்வழி பெற்றுவிடுவார். அவரது பாதையை விட்டும் யார் திரும்பி விடுகின்றாரோ அவர் வழிகெட்டு எல்லை கடந்து விடுவார். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஏனைய ரசூல் மார்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் சொல்வானாக. (மஜ்மூஉல் பதாவா, லவாமிஉல் அன்வாரில் பஹிய்யா)

மனிதனின் தூதுத்துவத்திற்கான தேவையை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம் :

  1. மனிதன் படைக்கப்பட்டவன். எனவே அவன் தன்னைப் படைத்தவனிடம் அறிமுகமாகுவதும் அவன் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்பதையும் ஏன் தன்னைப் படைத்தான் என்பதையும் அறிவதும் கட்டாயமாகும். அதனை மனிதனால் தனித்து அறிந்துகொள்ள முடியாது. நபிமார்களையும் ரசூலுமார்களையும் அறிவதன் மூலமும், அவர்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய நேர்வழி மற்றும் ஒளியை அறிந்து கொள்வதன் மூலமாகவும் மாத்திரமே அது சாத்தியமாகும்.
  2. உடலாலும் உயிராலும் அமையப்பெற்று இருப்பவன் மனிதன். உடலின் பசியை அவனிடமுள்ள உணவும் பானமும் போக்கும். ஆனால் உயிருக்கு அவசியமான உணவை அதனைப் படைத்தவனே தீர்மானித்துவிட்டான். அதுதான் சரியான மார்க்கமும் சீரான அமல்களும் ஆகும். நபிமார்கள் ரசூல்மார்கள் சரியான மார்க்கத்தை கொண்டு வந்தனர் சீரான அமல்களுக்கு வழிகாட்டினார்,
  3. மனிதன் இயல்பிலேயே மதத்தேவை உள்ளவன். எனவே அவன் பற்றிக்கொள்ள மார்க்கமொன்று அவசியமாகின்றது. அந்த மார்க்கம் சரியானதாக இருப்பதும் அவசியம், அப்படியான சரியான மார்க்கத்தை அடைவதற்கான ஒரே வழி நபிமார்கள், ரசூல்மார்களையும் அவர்கள் கொண்டு வந்துள்ளதையும் ஈமான் கொள்வதாகும்,
  4. இவ்வுலகில் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையில் சுவன இன்பங்களையும் பெற்று தரும் ஒரு பாதை மனிதனுக்கு அவசியமாகும், இவ்வாறான பாதைகளுக்கு வழிகாட்ட நபிமார்களாலும் ரசூல்மார்களாலும் மாத்திரமே முடியும்,
  5. மனிதன் இயல்பிலேயே பலவீனமானவன், அவனை தடுக்க முயற்சிக்கும் i~த்தான், பாவங்களை அழகுபடுத்திக் காட்டும் நண்பர்கள், பாவத்தையே ஏவிக்கொண்டிருக்கும் மனோஇச்சை என பல எதிரிகள் அவனை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, தன்னை தன் எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் தேவை அவனுக்கு உள்ளது, நபிமார்கள் ரசூல்மார்கள் அதற்கு வழிகாட்டி, மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
  6. மனிதன் ஒரு சமூகப் பிராணி, மக்களோடு ஒன்றிணைந்து அவன் வாழ்வதற்கு நீதி நிலைநாட்டும் ஒரு மார்க்கம் அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களது வாழ்க்கை காட்டு வாழ்க்கை போலவே இருக்கும். அம்மார்க்கம் ஒவ்வொருவருடைய உரிமைகளையும் கூட்டல் குறைத்தல் இன்றி வழங்க வேண்டும். (இவ்வாறான) முழுமையான மார்க்கத்ததை நபிமார்களாலும், ரஸூல்மார்களாலும் மாத்திரமே கொண்டுவரமுடியும்.

7.            மன அமைதி, உளப் பாதுகாப்பு என்பவற்றை பெற்றுத்தரக்கூடிய, உண்மையான சுபீட்சத்தின் வழிவகைகளை காட்டித் தரக்கூடிய ஒன்றின் தேவை மனிதனுக்கு எப்போதும் உண்டு, நபிமார்களும் ரசூல்மார்களும் இதற்குத்தான் வழிகாட்டுகிறார்கள்,

மூலம்

நூல்: இஸ்லாத்தின் அடிப்படைகள். ஆசிரியர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அஸ்ஸுஹைம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மனிதர்களுக்கு தூதர்களின் தேவை - Islam Question & Answer