ஜுமுஆவுடைய நாள் ஒரு சிறப்பு மிக்க நாளாகும் . அதன் சிறப்பை கூறும் அதிகமான நபிமொழிகள் இருக்கின்றன. ஜுமுஆ தொழுகை , ஸூரதுல்கஹ்ப் ஓதுதல், நபியவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்து கூறுதல், அதிகம் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்றன அந்நாளில் செய்ய வேண்டிய சில சுன்னாக்களாகும்.
இனி அவற்றை சற்று விரிவாக பார்க்கலாம்:
- ஜுமுஆ தொழுகை:
{ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிவுடையோராக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக சிறந்ததாகும்.(62/9)} என அல்லாஹ் கூறுகிறான்.
இப்னுல் கய்யிம் இமாமவர்கள் தனது ஸாதுல் மஆத் எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: ," ஜுமுஆ தொழுகை இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான ஒரு கடமையாகும். முஸலிம்களின் ஒன்று கூடல்களில் மிக முக்கியமானதாகும். அரபா ஒன்று கூடலுக்கு அடுத்ததாக மிக முக்கியமான கடமையான ஒரு ஒன்று கூடலாகும். எவரொருவர் அதனை பொடுபோக்காக தவறவிடுகிறாரோ , அல்லாஹ் அவரின் உள்ளத்தை (நல்ல விடயங்கள் உட்செல்லாதவாறு) மூடிவிடுகிறான்.(ஸாதுல் மஆத்: 1/376)
அபுல் ஜஃது இப்னு அழ்ழம்மரி அவர்கள் நபியவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: (எவரொருவர் மூன்று ஜுமுஆக்களை பொடுபோக்காக தவறவிடுகிறாரோ , அல்லாஹ் அவரின் உள்ளத்தை (நல்ல விடயங்கள் உட்செல்லாதவாறு) மூடிவிடுகிறான்). (அபூதாவூத் 1052,). இமாம் அல்பானி இந்த ஸஹீஹ் என்று ஸஹீஹு அபூதாவூதிலே(928) சொல்லியிருக்கிறார்.)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் ஒருமுறை தூதர் மிம்பர் மேடையின் படிகள்மீது நின்றபடி " மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! இல்லாவிடின் நிச்சயமாக அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்" என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.(முஸ்லிம் 865).
2-அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்:
இந்த சிறப்பு மிக்க ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கிறது, ஒரு அடியானின் பிரார்த்தனை அந்நேரத்துக்கு நேர்ப்பட்டால் அதனை -அல்லாஹ் நாடினால்- அங்கீகரிக்கப்படும்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபியவர்கள் கூறினார்கள்:" அந்நாளில் (ஜுமுஆ நாள்,) ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் நின்று வணங்கியவராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கேட்பதை அல்லாஹ் கொடுத்தே தீருவான் , இதனை நபியவர்கள் சொல்லும் போது அது ஒரு சிறயளவு நேரமே என்பதை தனது கையால் சைகை செய்து காட்டினார்கள். (புஹாரி 893 , முஸ்லிம் 852)
3-ஸுரதுல் கஹ்ப் ஓதுதல்:
அபூ ஸஈத் அல்குத்ரீ அறிவிக்கிறார்கள், நபியவர்கள் கூறினார்கள் "எவரொருவர் ஜுமுஆ நாளில் ஸூரதுல் கஹ்பை ஓதுகிறாரோ அல்லாஹ் அவருடைய உள்ளத்தில் இரண்டு ஜுமுஆக்களுக்கு இடையில் ஒரு பிரகாசத்தை போட்டுவிடுகிறான்.( அல்ஹாகிம் : அல்பானி ஸஹீஹுத்தர்கீப் எனும் நூலில் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று சொல்லியிருக்கிறார் 836)
4-அதிகமாக நபியவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்.
அவ்ஸ் இப்னு அவ்ஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் கூறினார்கள்: உங்களுடைய கிழமை நாட்களில் மிகவும் சிறந்த நாள் ஜும்மாவுடைய நாள், அந்நாளில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டார்கள், அந்நாளில் தான் ஆதம் நபியுடைய உயிரும் கைப்பற்றப்பட்டது, அந்நாளில் தான் சூர் ஊதப்பட்டு அனைத்து மக்களும் மரணிக்கக்கூடிய அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழும், எனவே என் மீது அதிகம் சலவாத்து கூறுங்கள் உங்களுடைய சலவாத்துக்களை எனக்கு அல்லாஹுத்தஆலா எடுத்துக்காட்டுவான். அதற்கு நபித் தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே நீங்கள் மரணித்து உங்களுடைய உடம்பு உக்கிப்போய் இருக்கும் நிலைமையில் உங்களுக்கு எவ்வாறு எங்களுடைய சலவாத்துகள் எடுத்துக்காட்டப்படும்? என வினவினார்கள் . அதற்கு நபியவர்கள் அல்லாஹுதஆலா நபிமார்களின் உடலை உண்ணுவதை பூமிக்கு ஹராம் ஆக்கி இருக்கிறான்.(அபூதாவூத் 1047)இப்னுல் கய்யிம், இமாம் அல்பானி போன்றவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று சொல்லியிருக்கிறார்கள் .
இமாம் அபூதாவூத் அவ்னுல் மஃபூத் எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: இங்கு ஜுமுஆவுடைய நாள் குறிப்பிட்டு கூறப்பட்டதற்கான காரணம் என்னவெனில் அது தான் நாட்களின் தலைவர் , எமது நபிகள் நாயகம் மனிதர்களின் தலைவர் , எனவே அந்நாளில் அவர் மீது ஸலவாத்து சொல்வது அடுத்த நாட்களில் சொல்லப்படுவதை விட சிறப்பானதாக கணிக்கப்படுகிறது.
அந்நாளுக்கு இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் அந்நாளின் இரவிலோ,பகலிலோ இஸ்லாம் சொல்லித்தராத எந்தவொரு நல்லமலையும் குறிப்பாக்கிக் கொள்வதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் தடுத்துள்ளார்கள்;
நபியவர்கள் நவின்றதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டாலே தவிர அத்தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள் !)(முஸ்லிம் 1144)
இமாம் ஸன்ஆனி,சுபுலுஸ்ஸலாம் எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: வெள்ளிக்கிழமை இரவில் மாத்திரம் குறிப்பாக எந்த வணக்கவழிபாடுகளிலும் ஈடுபடுதலோ , ஸூரதுல் கஹ்ப் ஓதுதல் போன்ற மாரக்கத்தில் கூறப்பட்ட ஓதல்களை தவிர்த்து குறிப்பான வேறேந்த ஓதல்களில் ஈடுபடுவதோ ஹராம் ஆகும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது. இமாம் நவவி சொல்கிறார்கள் :
இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை இரவில் குறிப்பாக விஷேடமான இரவு வணக்கங்களில் ஈடுபடுதல் அதன் பகல்களில் மாத்திரம் விஷேடமாக நோன்பு பிடிப்பதோ தடைசெய்யப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும் .
மேலும் இமாம் நவவி கூறுகிறார்கள் , அவ்வாறு அந்நாளில் மாத்திரம் விஷேடமாக நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டதன் நோக்கத்தை பற்றி சொல்லும் பொழுது அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: வெள்ளிக்கிழமை நாளில் அதிகமான திக்ருகள், துஆக்கள் மற்றும் சுன்னத்தான குளியல்,நேரகாலத்துடன் ஜுமுஆ தொழுகைக்கு சென்று இமாமை எதிர்பார்த்து இருத்தல் , முறையாக சன்மார்க்க உரையை செவிமடுத்தல் அதன் பிறகு அதிகமான திக்ருகளில் ஈடுபடுதல் என இன்னும் பல வணக்கங்களில் ஈடுபடவேண்டிய நாளாகும் .ஏனெனில் அல்லாஹுதஆலா அதனை தான் வலியுறுத்துகிறான். {ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.(62/10)}.
எனவே இவ்வாறான வணக்கங்களில் சோர்வின்றி உற்சாகமாக மனதிருப்தியுடன் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறு அந்நாளில் நோன்புநோற்காமலிருப்பது விரும்பத்தக்க சுன்னத்தாக இருக்கிறது. இதுவும் அரபா நாளில் ஹஜ்ஜாஜிகளுக்கு உள்ள சட்டம் போன்றுதான் , அவர்களுக்கு நோன்புநோற்காமலிருப்பது சுன்னத்தாக்கப்பட்டிருப்பதும் இந்த நோக்கத்திற்காக தான் . இது தான் வெள்ளிக்கிழமை நாளில் மாத்திரம் நோன்பு நோற்கவேண்டாம் என்பதற்கான சரியான காரணமாகும்.
இன்னும் சில அறிஞர்கள் : அந்நாளை எல்லைகடந்து கண்ணியப்படுத்தி முன்னைய ஒருசமுதாயம் சனிக்கிழமையால் சோதனைக்குட்படுத்தப்பட்டதை போன்று இந்த சமுதாயம் வெள்ளிக்கிழமையை கொண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமே இந்த தடைக்கான காரணம் என்கிறார்கள். இந்த காரணம் மிகவும் பலவீனமானதாகும் ஏனெனில் அல்லாஹ் இந்நாளில் ஜுமுஆவுடைய தொழுகை இன்னும் பல முக்கியமான செயல்களின் மூலம் கண்ணியப்படுத்தியிருக்கிறான்.
இன்னும் சில அறிஞர்கள்:அந்நாளில் நோன்பு நோற்பது கடமை என மக்கள் நம்பி விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பலவீனமான காரணமாகும். ஏனெனில் திங்கட்கிழமை , அரபாதினம் மற்றும் ஆஷூரா தினம் போன்ற நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாக்கப்படிருந்தும் யாரும் இப்படியொரு பொருத்தமற்ற கருத்தை சொல்லவில்லை. எனவே நாம் முதலாவதாக சொன்ன காரணமே மிகப்பொருத்தமானதாக இருக்கிறது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.