0 / 0
11/சபர்/1446 , 15/ஆகஸ்ட்/2024

விரிவான ஆதாரங்களுடன் சாப்பிடுவதன் ஒழுங்கு

கேள்வி: 13348

இஸ்லாத்தில் சாப்பிடுவதன் ஒழுங்கு என்ன?

Answer

இஸ்லாமிய ஷரீஆவில் சாப்பிடுவதற்கு பல ஒழுங்குகள் உள்ளன. அவற்றை பல வகைககளாக பிரித்து நோக்கலாம்.

முதலாவதாக: சாப்பிடுவதற்கு முன்னுள்ள ஒழுங்குகள்.

1.      சாப்பிடுவதற்கு முன் இரு கைகளையும் கழுவிக்கொள்ளல்.

சுத்தமான கைகளால் சாப்பிடுவதற்காக| இரு கைகளையும் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இல்லையெனில் கையில் இருக்கும் அழுக்குகளால் தீங்கு ஏற்படலாம்.

2.      உணவைப் பற்றிவிசாரிப்பது.

சாப்பிடுபவர் வேறு ஒருவரின் விருந்தாளியாக இருக்கும்போது அங்கு பரிமாறப்படும் உணவு அவருக்குப் புதிதாக இருந்தால், அந்த உணவை உண்பதற்கு மனது தயங்கலாம். எனவே அவ்வுணவைப் பற்றி விசாரித்துக் கொள்வது உணவின் ஒழுங்குகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் பரிமாறப்படும் உணவு என்ன என்று அறியும் வரை, அல்லது அது பற்றி சொல்லப்படும் வரை சாப்பிட மாட்டார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்த செய்தியில்: '(காலித் பின் வலீத்) அவர்கள் அல்லாஹ்வின் தூதருடன் மைமூனா (ரழி) அவர்களிடம் வந்தார்கள். மைமூனா(ரழி), அவரதும் இப்னு அப்பாஸினதும் சிற்றன்னையாக இருந்தார். அவர்களிடம் சுட்ட இடும்பு ஒன்றை நபியவர்கள் கண்டார்கள். மைமூனாவின் சகோதரியான ஹாரிஸின் மகளுடைய பேத்தி அதை நஜ்திலிருந்து கொண்டுவந்திருந்தார். அதை மைமூனா (ரழி) நபியவர்களுக்குப் பரிமாறினார்.

பரிமாறப்படும் உணவைப் பற்றி சொல்லப்படும்வரை அல்லது அதன் பெயர் கூறப்படும் வரை நபியவர்கள் தனது கையை அதில் வைப்பது மிகக் குறைவாகும். நபி (ஸல்) அவர்கள் அதன்பால் தனது கரத்தை கொண்டு சென்றபோது அங்கிருந்த பெண்மணிகளில் ஒருத்தி நீங்கள் பரிமாறியது இடும்பு இறைச்சி என்பதை நபியிடம் சொல்லுங்கள்" என்றாள். உடனே நபியவர்கள் இடும்பை விட்டும் தனது கையை உயர்த்திக் கொண்டார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! இடும்பு ஹராமானதா?" என்று காலித் பின் வலீத் கேட்டதற்கு 'இல்லை. என்றாலும் இதை சாப்பிடும் பழக்கம் எனது சமூகத்திடம் இருக்கவில்லை. எனவே அது எனக்கு அருவருப்பாக உள்ளது" என்றார். எனவே நான் அதை இழுத்தெடுத்து சாப்பிட்டேன். அல்லாஹ்வின் தூதர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (புகாரி: 5391, முஸ்லிம்: 1946)

இப்னுத் தீன் என்பவர் கூறுகிறார்: 'அரபிகள் தங்களிடம் உணவுப் பற்றாக்குறை இருந்த காரணத்தினால் எதையும் அருவருக்கத்தக்கதாக பார்க்க மாட்டார்கள். ஆனால் நபி (ஸல்) சிலவற்றை அருவருப்பாக பார்ப்பார்கள். அதனால்தான் 'இது என்ன உணவு?" என்று கேட்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. சில பிராணிகளை மார்க்கம் தடை செய்துள்ள அதே வேளை சில பிராணிகளை ஆகுமாக்கியுள்ளது. ஆனால் அரபிகள் அதில் எதையும் ஹராமாக்கிக் கொள்ள மாட்டார்கள், அதே வேளை பிராணிகளை சமைக்கப்பட்டதாக அல்லது சுடப்பட்டதாக கொண்டு வருவார்கள், அதன்போது கேள்வி கேட்டாலே தவிர அது என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாது. இதன் காரணத்தாலும் இவ்வாறு கேள்வி கேட்டிருக்கலாம். (பத்ஹ{ல் பாரி: 9/534)

3.      விருந்துபசரிப்பவர் உணவைப் பரிமாறினால் அதை எவ்வித தயக்கமுமின்றி சாப்பிட வேண்டும்.

உணவை அவசரமாக முன்வைப்பது வீட்டுக்காரரின் தயாளத் தன்மையாகும், உடனடியாக உணவை ஏற்று அதை சாப்பிடுவது விருந்தாளியின் தயாளத் தன்மையாகும். பரிமாறப்படும் உணவை சாப்பிடுவதற்கு விருந்தாளி தயங்கினால் அதை ஒரு தீங்காக அரபிகள் பார்த்தனர். எனவே பரிமாறப்படும் உணவை விருந்தாளி உடனடியாக சாப்பிடுவதன் மூலம் விருந்தளிப்பவரின் மனதை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. அது அவரது மனதுக்கு ஆறுதலாக அமைகிறது.

4.      சாப்பிடுவதற்கு முன் பிஸ்மில் சொல்வது: 

சாப்பிடுவதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுவது கட்டாயமாகும். அதாவது பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ண ஆரம்பிக்க வேண்டும். ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக உம்மு குல்தூம் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்) கூறி சாப்பிடட்டும். ஆரம்பத்தில் பிஸ்மில் கூற மறந்துவிட்டால் 'பிஸ்மில்லாஹி அவ்வலஹ{ வஆகிறஹ{ (முதலாவதாகவும் இறுதியாகவும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு (சாப்பிடுகிறேன்)…" என்று கூறட்டும்." (திர்மிதி: 1858, அபூதாவுத்: 3767, இப்னு மாஜா: 3264, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸ{னன் அபூதாவுதில் ஸஹீஹ் என்று பதிவு செய்துள்ளார்: 3202)

உமர் பின் அபீ ஸலமா அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதருடைய மடியில் சிறுவனாக இருந்தபோது உணவுத் தட்டில் எனது கை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார்கள்:'குழந்தாய்! அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி வலது கரத்தால் உண்பாயாக! உனக்கு முன்னாலுள்ளதை சாப்பிடுவாயாக!" (புகாரி: 5376, முஸ்லிம்: 2022)

இரண்டாவதாக: சாப்பிடும்போது பேண வேண்டிய ஒழுங்குகள்.

1.      வலது கரத்தால் சாப்பிடுதல்.

ஒரு முஸ்லிம் வலக்கரத்தால் சாப்பிடுவது வாஜிபாகும். இடது கையால் ஒரு முஸ்லிம் சாப்பிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களில் எவரும் இடது கையால் சாப்பிடவோ, பருகவோ வேண்டாம், ஷைத்தானே இடது கரத்தால் சாப்பிடுவான், இடது கரத்தால் குடிப்பான்." (முஸ்லிம்: 2020)

வலது கையை சாப்பிடுவதற்கு பயன்படுத்த முடியாத ஒரு நிலை இருந்தாலே தவிர இடது கையை பயன்படுத்த முடியாது. ஆனால் நோய், காயம் போன்ற காரணத்தால் வலதால் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாத நிலை இருந்தால் அவர்களுக்கு இடது கையால் சாப்பிடுவதற்கு விதிவிலக்களிப்பபடும். 

மனிதன் ஷைத்தானிய செயல்களை ஒத்த செயல்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது.

2.      முன்னால் உள்ள உணவை சாப்பிடுதல்.

ஒருவர் தனக்கு முன்னால் உள்ள உணவிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டுமே தவிர ஏனையோர்களது முன்னால் உள்ள உணவிற்கு கையை நீட்டுதல் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி வலது கரத்தால் உண்பாயாக! உனக்கு முன்னாலுள்ளதை சாப்பிடுவாயாக!" (புகாரி: 5376, முஸ்லிம்: 2022)

தன்னோடு சாப்பிடுவதற்கு அமர்ந்திருப்பவரின் இடத்திலிருந்து எடுத்து உண்பது மோசமான பழக்கமும் அநாகரீக நடத்தையுமாகும். அவரோடு இருப்பவர் இதனால் அருவருப்படையலாம், குறிப்பாக குழம்பு போன்ற நீராகாரங்களில் இது கூடுதல் அருவருப்பை ஏற்படுத்தலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'பரக்கத் எனும் அபிவிருத்தி| உணவின் மையப்பகுதியில் இறங்குகிறது. எனவே அதைச் சுற்றிலும் சாப்பிடுங்கள், நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள்." (திர்மிதி: 1805, இப்னுமாஜா: 3277, இமாம் அல்பானி 'ஸஹீஹுல் ஜாமிஉ வில் இதை ஸஹீஹ் எனப் பதிந்துள்ளார்: 829)  ஆனால் உணவு ஈத்தம் பழமாக இருந்தால் கைகள் உணவுத் தட்டில் பரந்து திரிவதில் தவறில்லை என்றும் கூறப்படுகிறது.

3.      உணவின் பின் கை கழுவுதல்.

வெறுமனே தண்ணீரால் கை கழுகுவதன் மூலம் ஸ{ன்னா நிறைவேறிவிடும். இப்னு ரஸ்லான் கூறுகிறார்: 'சவர்க்காரம் போன்றவற்றைப் பாவித்து கை கழுகுவது ஏற்றமானது." (துஹ்பதுல் அஹ்வதி: 5/485)

சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பாட்டுக்குப் பின்பும் கை கழுகுவது முஸ்தஹப்பாகும். அவர் வுழூவுடன் இருந்தாலும் சரியே!

4.      உணவின் பின்னர் வாய் கொப்பளித்தல்.

சாப்பிட்டு முடித்த பின்னர் வாய் கொப்பளிப்பது முஸ்தஹப்பாகும். ஸுவைத் பின் நு/மான் வழியாக பஷீர் பின் யஸார் அறிவிக்கிறார்: அவர்கள் நபியவர்களுடன் ஸஹ்பா எனுமிடத்தில் - கைபருக்கு அருகில் - இருந்த சமயம் தொழுகை நேரம் வந்தது. அப்போது உணவைக் கொண்டு வருமாறு பணித்தார்கள். குழைத்த மாவத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அதிலிருந்து ஓரிரு கவளம் சாப்பிட்டார்கள், நாமும் சாப்பிட்டோம். பின்னர் தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பின்னர் தொழுதார், நாமும் தொழுதோம். ஆனால் வுழூ செய்யவில்லை. (புகாரி: 5390)

5.      விருந்துபசரித்தவருக்காக பிரார்த்தித்தல்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸ/து பின் உபாதா விடம் வந்தார்கள். அவர் ரொட்டியும் எண்ணையும் கொண்டு வந்து வைத்தார். அதிலிருந்து நபியவர்கள் சாப்பிட்டார்கள். பின்னர் :

أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ ، وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلائِكَةُ

 'நோன்பாளிகள் உங்களிடம் நோன்பு திறந்தனர், உங்களது உணவை நல்லடியார்கள் சாப்பிட்டனர், உங்கள் மீது வானவர்கள் ஸலவாத்து கூறினர்"

என்று பிரார்த்தித்தார்கள்." (அபூதாவுத்: 3854, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸ{னன் அபூதாவுதில் ஸஹீஹ் தரத்தில் பதிந்துள்ளார்கள் : 3263.

6.      மூன்று விரல்களினால் சாப்பிடுதல்:

மூன்று விரல்களினால் சாப்பிடுவது ஸ{ன்னாவாகும்.

இயாழ் (ரஹ்) கூறுகிறார்: 'சாப்பிடுவதற்கு மூன்று விரல்களை விட கூடுதலாகப் பாவிப்பது நாகரீகமின்மையையும் உணவின்மீதான அதீத ஆசையையும் காட்டுகிறது. ஏனெனில் உணவை ஒன்று சேர்த்து அதன் மூன்று பக்கங்களால் பிடிப்பதற்கு மேலதிக விரல்களை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை. மூன்று விரல்களால் சேர்த்துப் பிடிக்க முடியாத வகையில் உணவு இருந்தால் நான்காவது விரலையும் அல்லது இன்னும் தேவைப்படுமிடத்து ஐந்தாவது விரலையும் பயன்படுத்திக் கொள்வது தவறில்லை". (பத்ஹ{ல் பாரி: 9/ 578)

தனது கரத்தினால் சாப்பிட்டால் இந்த ஒழுங்கைப் பேண வேண்டும். கரண்டி போன்றவற்றினால் சாப்பிடுவதிலும் தவறில்லை.

7.      விழுந்த உணவை பொறுக்கி எடுத்து சாப்பிடுதல்.

உணவுத் துண்டு அல்லது உணவில் ஏதாவது ஒரு பகுதி விழுந்துவிட்டால் அதை எடுத்து அதில் ஏதாவது அழுக்கு பட்டிருந்தால் அதை நீக்கி சுத்தப்படுத்திவிட்டு சாப்பிட வேண்டும். அதை ஷைத்தானுக்கு இரையாக விட்டுவிடக் கூடாது. ஏனென்றால் ஒருவர் தனது உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் உள்ளது என்பதை அறியமாட்டார். சில வேளை கீழே விழுந்த உணவில் அது இருக்கலாம்.

எனவே விழுந்த உணவை விட்டுவிடுவது உணவின் பரக்கத்தை இழக்கச் செய்யலாம். அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இதை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒரு உணவை சாப்பிட்டால் அவரது மூன்று விரல்களையும் சூப்புவார்கள். பின்னர்: 'உங்களது உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால் அதில் பட்டிருக்கும் அழுக்கை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள். அதை ஷைத்தானுக்கு இரையாக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அத்துடன் உணவுப் பாத்திரத்தை வழித்து சாப்பிடுமாறும் எங்களை ஏவினார்கள், மேலும் கூறும்போது: 'உங்களது உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்றார்கள். (முஸ்லிம்: 2034)

8.      சாய்ந்துகொண்டு சாப்பிடக் கூடாது.

நபி (ஸல்) கூறினார்கள்: 'சாய்ந்து கொண்டு நான் சாப்பிட மாட்டேன்". (புகாரி: 5399)

எப்படி சாய்வதை நபியவர்கள் தடுத்தார்கள் என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. இமாம் இப்னு ஹஜர் கூறும்போது: 'எப்படி சாய்வதை நபியவர்கள் தடுத்தார்கள் என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. அவை வருமாறு:

      சாப்பிடுவதற்கு உட்காரும்போது மிக வசதியாக அமர்ந்துகொள்வது.

      வலப்பக்கம் அல்லது இடப்பக்கம் சாய்ந்துகொள்வது.

      இடது கையை நிலத்தில் அழுத்தி சாய்ந்துகொள்வது….

பலவீனமான அறிவிப்பாளர் வரிசையுடன் இப்னு அதிய் பதிவு செய்திருக்கும் ஒரு செய்தியில்: 'இடது கையில் சாய்ந்து கொண்டு சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் சாய்ந்து கொள்வதன் ஒரு வகைதான் என்று மாலிக் கூறுகிறார்.

'சாப்பிடுபவர் சாய்ந்து கொள்வதாக அமையும் அனைத்து அமைப்புக்களும் மார்க்கத்தில் விரும்பத்தகாததாகும், தவிர சாய்ந்து கொள்வதற்கு இதுதான் என்று குறிப்பிடும்படியான அமைப்பு இல்லை என்பதுவே இங்கு இமாம் மாலிக் சுட்டிக்காட்டுவதாகும்." என்பதுவே எமது நிலைப்பாடாகும். (பத்ஹ{ல் பாரி: 9/541)

9.      அவசியத் தேவையின்போதே தவிர சாப்பிடும்போது துப்புவது, மூக்குச் சிந்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

10.    மேலும் ஒழுங்குகளில் உள்ளதுதான்…

      கூட்டாகச் சேர்ந்து சாப்பிடுவது.

      தடுக்கப்படாத பேச்சுக்களைப் பேசுவது.

      குழந்தைகளுடன், மனைவிமாருடன் சேர்ந்து சாப்பிடுவது.

      மருந்து போன்ற காரணிகளாக இல்லாமல் தனக்கு மாத்திரம் பிரத்தியே உணவுகளை எடுத்துக் கொள்ளாமலிருப்பது.

      அவர்களுக்கு சிறந்த, உயர்ந்த உணவை முற்படுத்துவது. உதாரணமாக மிருதுவான, சிறந்த இறைச்சி மற்றும் ரொட்டி.

      விருந்தாளி உண்பதை முடித்துக் கொள்ள எத்தனிக்கும்போது, அவருக்கு போதும் என்பது உறுதியாகும் வரை, சாப்பிடுங்கள்… சாப்பிடுங்கள்… என்று பலமுறை கூறி உபசரிப்பது.

      வாய் அலம்புவது.

      பல் சுத்தம் செய்யும்போது வெளிவரும் உணவுத் துண்டுகளை விழுங்காமல் துப்பிவிடுவது.

மூன்றாவதாக: சாப்பிட்டு முடித்த பின்னர் பேண வேண்டிய ஒழுங்குகள்.

சாப்பிட்ட பின்னர் ஓத வேண்டிய துஆக்களை ஓதுவதும் அல்லாஹ்வைப் புகழ்வதும் நபிவழியாகும். சாப்பிட்ட பின்னர், உணவுத் தட்டு எடுக்கப்பட்டுவிட்டால் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்.

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلا مُوَدَّعٍ وَلا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

தூய்மையான , நிரப்பமான, அதிகமான, போதுமாக்கப்படாத, முடித்துக் கொள்ளப்படாத, எமக்கு என்றும் தேவையுள்ள அல்லாஹ்வைப் புகழும் துதிகள் அவனுக்கே சொந்தமானது!

(புகாரி: 5458)

பால் தவிர்ந்த வேறு உணவுகளை நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டால் :

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ ، وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

'யா அல்லாஹ்! இதில் எமக்கு பரக்கத் செய்வாயாக! அதை விட சிறந்ததை எமக்கு உணவளிப்பாயாக!"

என்று பிரார்த்திப்பார்கள்,

பால் பருகினால்:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ ، وَزِدْنَا مِنْهُ

'யா அல்லாஹ்! இதில் எமக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் அதில் அதிகரிப்பை ஏற்படுத்துவாயாக!"

என்று பிரார்த்திப்பார்கள்.

(திர்மிதி: 3377, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ{ல் ஜாமி/ - 381 கிரந்தத்தில் ஹஸன் தரத்தில் இதைப் பதிவு செய்துள்ளார்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாருக்கு அல்லாஹ் ஏதாவது உணவொன்றை அளிக்கிறானோ அவர் பன்வருமாறு பிரார்த்திக்கட்டும்:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

மேலும் யாருக்கு அல்லாஹ் பால் பருக வைக்கிறானோ அவர் பின்வருமாறு பிரார்த்திக்கட்டும்:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ

(திர்மிதி: 3455, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் ஸுனன் திர்மிதி - 2749 கிரந்தத்தில் ஹஸன் தரத்தில் இதைப் பதிவு செய்துள்ளார்)

நான்காவதாக: உணவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொதுவான ஒழுங்குகள்.

01.    உணவைக் குறை கூறாமலிருப்பது.

அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் உணவைக் குறை கூறியதில்லை, விரும்பினால் சாப்பிடுவார்கள், வெறுத்தால் வைத்துவிடுவார்கள்". (புகாரி: 3370, முஸ்லிம்: 2046)

இங்கு நாடப்படுவது ஹலாலான உணவுகளாகும். ஆனால் ஹறாமான உணவுகளாக இருந்தால் அதை வெறுத்துப் பேசுவார்கள், தடை செய்வார்கள்.

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'உணவின் உறுதியான ஒழுங்குகளில் குறை கூறாமல் இருப்பது முக்கியமாகும். 'உப்பாக இருக்கிறது என்று சொல்வது, புளிப்பாக இருக்கிறது என்று சொல்வது, உப்பு போதாது என்று சொல்வது, கடினமாக உள்ளது என்று சொல்வது, மென்மையாக உள்ளது என்று சொல்வது, வேகவில்லை அல்லது பழுக்கவில்லை என்று சொல்வது" போன்றவையாகும்.

இப்னு பத்தால் கூறுகிறார்: 'இது அழகான ஒழுங்குகளில் உள்ளதாகும். ஏனெனில் மனிதன் சிலவற்றை விரும்பாதிருக்கலாம், சிலவற்றை ஆசை வைக்கலாம். சாப்பிடுவதற்கு மார்க்கம் அனுமதித்தவைகளில் எந்தக் குறையும் இருக்காது." ஷரஹ் முஸ்லிம்: (14/26)

02.    அளவாக சாப்பிடுவது,

வயிற்றை உணவால் நிரப்பாமலிருப்பது முக்கியமாகும். இதைக் கடைப்பிடிப்பதற்கு அதிகம் உதவியாக இருப்பது, வயிற்றை மூன்று பிரிவாக வகுத்துக் கொள்வதாகும்.

ஒன்று உணவுக்காக, இரண்டு தண்ணீருக்கு, மூன்று மூச்சு விடுவதற்கு என்று வைத்துக் கொள்வதாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மனிதன் வயிற்றைத் தவிர மோசமான ஒன்றை நிரப்புவதில்லை. தனது முதுகிலும்பை நேராக வைத்துக் கொள்வதற்கு சாப்பிட்டால் அது போதுமானதாகும். அவசியம் ஏற்பட்டால் உணவுக்கு வயிற்றின் மூன்றில் ஒரு பங்கும், தண்ணீருக்கு மூன்றில் ஒரு பங்கும், மூச்சு விடுவதற்கு மூன்றில் ஒரு பங்கும் என்று வைத்துக் கொள்ளலாம். (திர்மிதி: 2380, இப்னுமாஜா: 3349, இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ{த் திர்மிதியில் இதை ஸஹீஹ் என்று பதிந்துள்ளார் : 1939)

இதனால்| உடலை நேராக வைத்துக் கொள்ள முடிவதோடு உடல் எடையை பேணிக் கொள்ளவும் முடியும். ஏனெனில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அதனல் வேலைகள் மற்றும் இபாதத்துக்களில் ஈடுபடுவதற்கு சோம்பல் நிலை ஏற்படுகிறது. வயிற்றை நிரப்பாமல் மூன்றில் ஒன்றோடு குறைத்துக் கொள்வது இதன் மூலம் நாடப்படுகிறது. (அல் மவ்ஸ_ஆ: 25/332)

03.    தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அது ஹராமாக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பட்டுப் புடவையை அணியாதீர்கள், தங்கள், வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள், அதன் தட்டுக்களில் சாப்பிடாதீர்கள். அது அவர்களுக்கு உலகத்திலும் உங்களுக்கு மறுமையிலும் உரியதாகும்.

 (புகாரி: 5426, முஸ்லிம்: 2067)

04.    சாப்பிட்டு முடித்த பின்னர் அல்லாஹ்வைப் புகழ்வது.

இதற்கு அதிக சிறப்புக்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அடியான் உணவை சாப்பிட்டு அதற்காக அல்லாஹ்வை புகழ்வதையும், பானத்தைப் பருகிய பின் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்." (முஸ்லிம்: 2734)

அல்லாஹ்வைப் புகழ்வதற்வதற்கான வாசக அமைப்புக்கள் பல நபி (ஸல்) அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.       الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا  

தூய்மையான , நிரப்பமான, அதிகமான, போதுமாக்கப்படாத, முடித்துக் கொள்ளப்படாத, எமக்கு என்றும் தேவையுள்ள அல்லாஹ்வைப் புகழும் துதிகள் அவனுக்கே சொந்தமானது!

நபி (ஸல்) அவர்கள் உண்டு முடித்து, தனது உணவுத் தட்டு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் இந்த பிரார்த்தனையை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.                                        (அபூ உமாமா (ரழி) அறிவிப்பதாக புகாரியில் (5458)பதியப்பட்டுள்ளது.)

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: 'கைர மக்பிய்யின்" என்பது தனது அடியார்கள் எவரிடத்திலும் எந்தத் தேவையும் இல்லாத… என்று அர்த்தப்படும். ஏனெனில் அவனே தனது அடியார்களுக்கு உணவளித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுகிறான். 'வலா முவத்தஇன்" என்பது, கைவிடப்படாத… என்று அர்த்தப்படும்.

2.      الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حولٍ مني ولا قوة 

'என்னிடமிருந்து எவ்வித ஆற்றலுமின்றி இதை எனக்கு உணவளித்த, ரிஸ்க்களித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்".

யார் இவ்வாறு ஓதுகிறாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

முஆத் பின் அனஸ் அவர்கள் தனது தந்தை அறிவித்ததாக சொன்ன இச்செய்தி திர்மிதி (3458) இப்னு மாஜா (3285) கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. இமாம் அல்பானி அவர்கள் தனது ஸஹீஹ் திர்மிதீயில் (3348) ஹஸன் என்ற தரத்தில் பதிவு செய்துள்ளார்.

3.       الحمد لله الذي أطعم وسقى وسوغه وجعل له مخرجاً 

'உணவளித்து, பருகச் செய்து, ஜீரணிக்க வைத்து, அது வெளியேறுவதற்கு இடம் அமைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்".

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டால் அல்லது பருகினால் இந்த துஆவை ஓதக் கூடியவராக இருந்தார் என்று அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவுத்: 3851) இமாம் அல்பானி அவர்கள் இதை ஸஹீஹ் என்று பதிவு செய்துள்ளார்கள்.

4.      உணவு பரிமாறப்பட்டால்…

بسم الله

சாப்பிட்டு முடித்துவிட்டால்…

اللهم أطعمت وأسقيت وهديت وأحييت ، فلك الحمد على ما أعطيت

நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வருடங்கள் பணிவிடை செய்த ஒரு மனிதர் அப்துர் ரஹ்மான் பின் ஜுபைருக்கு 'நபியவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போதும், சாப்பிட்டு முடித்த பின்னரும் இவ்வாறு சொல்ல நான் கேட்டேன்" என்று அறிவிக்கிறார். அஹ்மத்: 16159, இமாம் அல்பானி தனது ஸில்ஸிலா ஸஹீஹாவில் (1/111) ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவு செய்துள்ளார். 

குறிப்பு: சாப்பிட்டு முடித்த பின்னர் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள அல்லாஹ்வைப் புகழும் அனைத்து வாசக அமைப்பையும் கூறிக்கொள்வது முஸ்தஹப்பாகும். இதை ஒரு முறை, அதை ஒரு முறை என்று ஸ{ன்னாவின் அனைத்துப் பகுதியையும் செயற்படுத்தும் வகையில் கூறிக் கொள்வது சிறப்பானது. இப்பிரார்த்தனையின் பரக்கத்தை அவர் பெற்றுக் கொள்வார். ஒரே ஒரு துஆவை தொடர்ந்து ஓதுவதை விட பல துஆக்களை மாறி மாறி ஓதும் போது அதன் கருத்துக்களை மனதில் கொண்டு உள ஈடுபாட்டுடன் பிரார்த்திக்க முடியும். (ஆதாப் : ஷல்ஹ_ப். பக் -100)

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
விரிவான ஆதாரங்களுடன் சாப்பிடுவதன் ஒழுங்கு - Islam Question & Answer