இமாம் இப்னு உதைமின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். தொழுகையில் தேவையின்றி அசைவது வெறுக்கப்பட்ட தாகும். (மக்ரூஹ்) .
அவ்வாறு அசைவது ஐந்து வகைப்படும்.
1. வாஜிபான அசைவு.( கட்டாயமானது)
2. ஹராமான அசைவு (தடுக்கப்பட்டது) .
3. மக்ரூஹான அசைவு (வெறுக்கப்பட்டது).
4. முஸ்தஹப்பான
அசைவு (விருப்பப்பட்டது) .
5. முபாஹான அசைவு (ஆகுமானது) .
முதலாவது : வாஜிபான அசைவு. ( அவசியமானது)
வாஜிபான அசைவானது தொழுகை நிறைவேறுவதில் தங்கியூள்ளதாகும்.
உதாரணமாக ஒருவர் தலைப்பாகையில் அல்லது அது போன்றதில் ஒரு அழுக்கை அவதானித்து அதை நீக்குவதற்காக அசைவதை போலாகும். ஏனெனில் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பாதனையில் அழுக்குடன் தொழுவிப்பதை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து சுட்டிக்காட்டிய போது அதை நபியவர்கள் கழட்டி விட்டு தொழுதார்கள்.
( நூல் : அபூதாவூத் : 650)
(இர்வாஉல் ஙலீல் என்ற நூலில் இமாம் அல்பானி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
அதேபோன்று பிழையான கிப்லாத்திசையில் தொழும் ஒருவருக்கு சரியான கிப்லா திசை கூறப்பட்டு அவர் சரியான கிப்லாவிற்கு திரும்புவதும் வாஜிபான அசைவுகள் ஆகும்.
இரண்டாவது : ஹராமான அசைவு (தடுக்கப்பட்டது) .
அவசியம் இன்றி அதிகமாக தொடர்ந்து தொழுகையில் அசைவதாகும்.
இவ்வாறு அசைவது தொழுகையை முறிப்பதுடன் அல்லாஹ்வின் கடமையை (அத்தாட்சியை) கேலி செய்வதுமாகும்.
மூன்றாவது : முஸ்தஹப்பான அசைவு (விரும்பப்பட்டது) . தொழுகையில் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்திற்காக அசைவதாகும். உதாரணமாக ஸப்பை (வரிசையை) சீர் செய்ய அசைவதைப்போன்றாகும்.
இது தொழுகையை பூர்த்தியாக்கும் விடயமாகும்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இடது பக்கமாக நின்று தொழுத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்களை பின்னால் இழுத்து தனது வலப்பக்கத்தில் தொழ வைத்தார்கள்
(நூல் : புகாரி - முஸ்லிம்) இவ்வாறான அசைவு விரும்பப்பட்டதாகும்.
நான்காவது : முபாஹான அசைவு (ஆகுமானது) . தேவைக்காக சிறிது அசைவதாகும்.
அல்லது கூடுதலாக அவசியத்திற்காக அசைவதாகும்.
உதாரணமாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பேத்தியான உமாமா (ஜைனப் ரழி அவர்களின் மகள்) சுமந்து கொண்டும் சுஜூத் செய்தால் வைத்துவிட்டும் தொழுததைப் போலாகும்.
[நூல் : புகாரி 5996, முஸ்லிம் 543]
அவசியத்திற்காக கூடுதலாக அசைவதற்கு உதாரணம் : யுத்த நேரத்தில் தொழுவதை போன்றாகும்
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
(சூரா பகரா 238 239)
நடந்து கொண்டு தொழுவது அதிகமாக அசைவதாகும். இவ்வாறு அவசியத்திற்காக அசைவது தொழுகையை முறிக்காது.
ஐந்தாவது மக்ரூஹான அசைவு (வெறுக்கப்பட்டது) . மேற்குறிப்பிட்ட நான்கு அசைவுகள் அல்லாத ஏனைய எல்லா அசைவுகளும் வெறுக்கப்பட்டதாகும். அடிப்படையில் தொழுகையில் அசைவதும் வெறுக்கப்பட்டதாகும். இதன்படி இவ்வாறு அசைவது மக்ரூஹ் ஆகும்.
அதேபோன்று தொழுகையை குறையுள்ளதாக ஆக்கும்.
இவ்வாறு ஆடைகளை சீர் செய்வதும், நகங்களை சுத்தமாக்குவதும், தலைப்பாகையை சீர் செய்வதும், கைகடிகாரத்தை ஒழுங்கு செய்வதும், மூக்கின் அழுக்குகளை நீக்குவதும், தாடியை குடைவதும்,
போன்ற
செயல்கள் அதிகம் காணக்கூடிய மக்ரூஹான அசைவுகள் ஆகும்.
இவ்வாறான அசைவுகளை தொடர்ந்து அதிகமாக செய்தால் தொழுகை முறிவதுடன், அவ்வாறு செய்வது ஹராம் ஆகும். மேலும் இமாம் அவர்கள் கூறுகிறார்கள் தொழுகையை முறிக்கக் கூடிய அசைவுகளுக்கு குறித்த எண்ணிக்கை இல்லை. மாறாக தொழுகையின் செயல்கள் அல்லாத அனைத்து செயல்களும் தொழுகையை முறிக்கக் கூடியதாகும். இதனால் அறிஞர்கள் வழமையில் தொடர்ந்து அதிகமாக அசைவது தொழுகையை முறித்து விடும் என்பதாக கூறியுள்ளனர்.
இதில் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இன்னும் சில அறிஞர்கள் மூன்று அசைவுகள் அசைவது தொழுகையை முறிக்கும் என்பதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு எண்ணிக்கையை மட்டிட மார்க்கத்தில் சரியான ஆதாரம் அவசியமாகும். அவ்வாறு இல்லையானால் அல்லாஹ்வின் மார்க்க சட்டத்தை கடமையாக்குவராக ஆகிவிடுவார்.
(மஜ்மூஃ பதாவா இப்னு தைமிய்யா 311 - 13 /309)
தொழுகையில் அதிகமாக அசையும் ஒரு நபரின் தொழுகையை பற்றி இமாம் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டது .
அவரது தொழுகை முறியுமா? இவ்வாறு அசைவதிலிருந்து மீட்சி பெற என்ன வழி?
பதில் : ஒரு முஃமின் தொழுகைக்கு உடலாலும் உள்ளத்தாலும் பயபக்தியுடன் வருவது சுன்னத்தாகும். பர்ழான தொழுகையாக இருந்தாலும் சரி, நபிலான தொழுகையாக இருந்தாலும் சரியே. அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும் பொழுது தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் மூஃமின்கள் வெற்றியடைந்து விட்டனர்.
( சூரா முஃமினூன் 1 -2)
இதன்படி ஒரு முஃமின் தொழுகையில் உள்ளசத்துடன் அமைதியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பது தொழுகையின் அடிப்படையாகும்.
ஒரு முறை
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியின்றி தனது தொழுகையில் அலட்சியமாகத் தொழுத ஒருவருக்கு நீங்கள் மீண்டும் தொழுங்கள் நீங்கள் சரியாக தொழவில்லை என்று மூன்று முறை கூறிய பொழுது, அம்மனிதர் யாரசூலல்லாஹ் உண்மையைக் கொண்டு உம்மை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த அளவு தான் என்னால் சரியாக தொழமுடியும். நீங்கள் எனக்கு கற்றுத் தாருங்கள் யா ரசூல் அல்லாஹ் என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு கூறினார்கள் , நீ தொழ நாடினால் வுழுவை பூர்த்தியாக செய்து கொள். பின்பு கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கட்டிக் கொள். தொடர்ந்து குர்ஆனில் நீ தெரிந்ததை ஓதிக்கொள். பின்பு ருகூஉ( குனிந்து)
செய்து அமைதியாக இரு.
பின் தலையை உயர்த்தி நடுநிலைக்கு வாருங்கள். பின்பு சுஜூத் செய்து அதில் அமைதியாக இரு. பின்பு நடு இருப்பிற்கு வந்து அதில் அமைதியாக இரு.
பின் சுஜூத் செய்து அதில் அமைதியாக இரு.
பின்பு நிமிர்ந்து எழுந்து நின்று இவ்வாறு உனது தொழுகையை தொழுவீராக.. என்றார்கள்.[ புகாரி ,முஸ்லிம் ]
இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் அறிவிப்பில் பின்பு குர்ஆனின் தாயாகிய சூரா பாத்திஹாவையும் வேறு நீ விரும்பிய சூராவையும் ஓதுவீராக என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் (செய்தி) உள்ளச்சத்துடன் அமைதியாக இருப்பது தொழுகையின் அடிப்படை என்றும் பெரிய கடமை என்றும் உணர்த்துகிறது.
இது இன்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது.
யார் பறவைகள் கொத்துவதைப் போன்று தொழுவாரோ அவருடைய தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. உள்ளச்சம் தொழுகையின் உயிர் நாடியாகும். எனவே ஒரு முஃமின் உள்ளச்சத்துடன் அமைதியாக தொழுவதில் கவனம் செலுத்துவதுடன் ஆர்வமாகவும் இருக்க வேண்டும். உள்ளச்சமின்றியும் அமைதியின்றியும் மூன்று அசைவுகள் தொழுகையை முறிக்கும் என்று மட்டிடுவதற்கு எந்த நபி மொழியும் ஆதாரமாக இல்லை.
அது அறிஞர்களின் கூற்று மாத்திரமே. தொழுகையில் அலட்சியமாக தாடியை, மூக்கை குடைவதும், ஆடைகளை சரி செய்வதும் மக்ரூஹ் ஆகும்.
இவை தொடர்ந்து அதிகரித்தால் தொழுகை முறித்து விடும்.
அவ்வாறு இல்லாமல் இந்த அசைவுகளை குறைவாக செய்வதோ அல்லது தொடர்ந்து செய்யாமல் இருந்தால் தொழுகை முறியாது.
ஆனாலும் ஒரு மூஃமின் தனது தொழுகையின் கூலி பூரணமாக கிடைக்க இவ்வாறான அசைவுகளை தவிர்ந்து உள்ளச்சத்துடன் அமைதியாகச் தொழுவது அவசியமாகும்.
தொடர்ச்சியாக இல்லாமலும் குறைவான அசைவுகள் தொழுகையை முறிக்க மாட்டாது என்பதற்கான ஆதாரமாக ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்த பொழுது கதவை திறந்து விட்டார்கள்.[ நூல் அபுதாவூத் 922, திர்மிதி 601]
திர்மதியில் இடம்பெற்ற ஹதீஸை இமாம் அல்பானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பேத்தியான உமாம (ரழி) யை [ஜைனப் (ரழி)யின் மகள் சுமந்து கொண்டு தொழுதார்கள். சுஜூத் செய்தால் கீழே வைப்பார்கள் என்ற ஹதீஸை அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.[ பதாவா உலமா பலதில் ஹராம் : 162 164 ].