0 / 0
27/முகர்ரம்/1446 , 02/ஆகஸ்ட்/2024

சுஜூத் ஸஹ்வின் காரணிகள்

கேள்வி: 12527

தொழுபவர் மறதிக்காக தனது தொழுகையில் எப்போது ஸஜ்தா செய்ய வேண்டும்?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

அடியார்களின் வணக்க வழிபாடுகளில் ஏற்படும் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்து, அதை பூர்த்தியான வணக்கங்களாக மாற்ற இஸ்லாம் சில வழிமுறைகளை வைத்திருப்பது அல்லாஹ் அடியார்கள் மீது கொண்ட இரக்கமும், இஸ்லாத்தின் சிறப்பம்சமுமாகும். எவரும் தவறுகள் ஏற்படுவதில் இருந்து விதிவிலக்கானவர்களும் அல்லர். இந்த தவறுகளை நிவர்த்தி செய்ய உபரியான வணக்கங்கள், அல்லது (இஸ்திஃபார்) பாவமன்னிப்பு பெற்றே நிவர்த்தி செய்ய முடியும்.

இந்த வகையில் தொழுகையில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய சுஜூது ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தா) வை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.

இது பற்றி இமாம் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சுஜூது

ஸஹ்வின் காரணிகள் பற்றி கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதிலளித்தார்கள்.

சுஜூது ஸஹ்வின் காரணிகள் மொத்தமாக மூன்றாகும்.

முதலாவது : தொழுகையில் மேலதிகமாக செய்த விடயத்திற்கு சுஜூது ஸஹ்வு செய்வது.

 இரண்டாவது :  தவறவிட்ட விடயத்திற்கு சுஜூது ஸஹ்வு செய்வது.

 மூன்றாவது :  சந்தேகத்திற்கு சுஜூது ஸஹ்வு செய்வது.

1. மேலதிகமாக செய்த விடயம் என்பது, உதாரணமாக ஒருவர் தொழுகையில் மேலதிகமாக ஒரு ருகூவையோ, சுஜூதையோ, அல்லது இருப்பையோ மேலதிகமாக செய்வதாகும்.

2. தவறவிட்ட விடயம் என்பது தொழுகையின் அடிப்படைகளில் ஒன்றை அல்லது கடமையான (வாஜிபை) தவறவிடலாகும்.

3. சந்தேகமான விடயம் என்பது தொழுகையின் ரக்அத்துகளில் மூன்று தொழுதோமா? அல்லது நான்கு தொழுவோமா? என சந்தேகம் ஏற்படுதல்.

1) மேலதிகமான விடயம்.

மேலதிகமாக ஒன்றை தெரிந்து வேண்டுமென செய்தால் அவரது தொழுகை முறிந்து விடும். ஏனெனில் மார்க்கத்தில்  கூறப்பட்ட திற்கு  மாற்றமாக செய்ததாகும். " மார்க்கத்தில் சொல்லப்பட்டதிற்கு மாறாக எவர் ஒரு செயலை செய்வாரோ அந்த செயல் மறுக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் 1718)

அதேபோல் மறதியால் மேலதிக விடயமொன்றை செய்தால் தொழுகை முறியாது, மாறாக அவர் மறதிக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்.

" ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸர் தொழுகையில் இரண்டு ரக்காத்துக்களின் பின் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்தார்கள். பின்பு சஹாபாக்கள் ஞாபகமூட்டிய போது மீதி இரண்டு ரக்அத்துகளையும் தொழுது ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸுஜூதுகளை மறதிக்காக செய்தார்கள்." ( புகாரி : 482, முஸ்லிம் : 573 )

இந்த ஹதீஸ் ஆதாரமாக இடம் பெற்றுள்ளது.

இன்னொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ழுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்துகள் தொழுவித்தார்கள். தொழுது முடித்த பின் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகமாக தொழுதீர்களே என்று ஸஹாபாக்கள் கூறினர். அது என்ன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, ஐந்து ரக்அத்துகள் தொழுதீர்கள் என்றனர். பின்பு கிப்லாவை முன்னோக்கி இரண்டு சுஜூதுகளை செய்தனர். ( முஸ்லிம் : 572 , புகாரி : 404 )

2) தவற விட்ட விடயம்.

 தொழுகையின் அடிப்படைகளில் ஒன்று தவறினால், இரண்டு சந்தர்ப்பங்கள் நிகழும்.

 முதலாவது :  தவறவிடப்பட்ட விடயம் அடுத்த ரக்காத்துக்கு குறித்து செயலை அடைய முன் ஞாபகம் ஏற்படல். இந்த சந்தர்ப்பத்தில் தவறிய குறித்து செயலை செய்துவிட்டு பின்பு ஏனையவைகளை தொடர்ந்து செய்தல்.

இரண்டாவது : அடுத்த ரக்அத்தின் குறித்த செயலை அடைந்த பின் ஞாபகம் ஏற்படல்.  இந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது ரக்அத் தவறிய முதலாவதாக ரக்அத்தாக சேரும். இரண்டாவது ரக்அத்துக்கு பதிலாக இன்னொரு  ரக்அத் தொழ வேண்டும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸலாம் கொடுத்த பின்பு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

முதலாவது சந்தர்ப்ப உதாரணம்  :

ஒருவர் முதலாவது ஸுஜூத் செய்து, நடு இருப்பு உட்காராமலும், இரண்டாவது ஸுஜூத் செய்யாமலும், அடுத்த ரக்அத்துக்கு எழும்பி ஓத ஆரம்பிக்கும் போது நடு இருப்பும், இரண்டாவது ஸுஜூதும் தவறவிட்டதை உணர்ந்தால் உடனே நடு இருப்புக்கு வந்து இருந்து விட்டு இரண்டாவது ஸுஜூது செய்துவிட்டு மீண்டும் தொழுகையை தொடர வேண்டும். பின்பு மறதிக்காக சலாம் கொடுத்த பின்பு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

இரண்டாவது சந்தர்ப்ப உதாரணம்.

ஒருவர் முதலாவது ரக்அத்தில் முதலாவது ஸுஜூத் செய்துவிட்டு நடு இருப்பு உட்காராமலும், இரண்டாவது ஸுஜூத் செய்யாமலும் எழுந்து இரண்டாவது ரக்அத்தில் நடு இருப்பில் வைத்து முதலாவது ரக்அத்தில் தவறவிட்டதை உணர்ந்தால், அவரது இரண்டாவது ரக்அத்தை முதலாவது ரக்அத்தாக கணிக்கப்படும். மேலதிகமாக ஒரு ரக்அத்தை தொழுது ஸலாம் கொடுத்த பின்பு மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு  செய்ய வேண்டும்.

 2) தொழுகையில் வாஜிப் (கடமைகள்) விடுபட்டால்,

 உதாரணம் :

ஒருவர் சுஜூதில் ஓதும் சுப்ஹான ரப்பீ அல் அஃலா என்ற திக்ரை கூற மறந்து, அடுத்து நிலைக்கு சென்று விட்டால் மீண்டும் அதை நிவர்த்தி செய்ய அதே இடத்திற்கு வர அவசியமில்லை. தொடர்ந்து தொழுதுவிட்டு ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.

 ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஒருமுறை முதலாவது தஷஹ்ஹுத் தவறிய போது அதை நிவர்த்தி செய்ய உடனே அந்த இடத்திற்கு செல்லவில்லை.

 மாறாக தொழுகையை தொடர்ந்து தொழுது விட்டு ஸலாம் கொடுக்க முன்னர் ஸஜ்தா ஸஹ்வு செய்தார்கள் .

3) சந்தேகத்திற்காகக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்தல்.

 தொழுகையில் ஒரு விடயத்தை அதிகமாக செய்தேனா அல்லது குறைவாக செய்தேனா என  சந்தேகம் ஏற்படல்.

 இந்த நிலையில் இரண்டு விதமான சந்தர்ப்பங்கள் நிகழும்.

 முதலாவது சந்தர்ப்பம் :

அதிகமாக செய்ததோ குறைவாக செய்ததோ உறுதியாக தெரியவரும் சந்தர்ப்பத்தில் அந்த முடிவை வைத்து தொழுகையை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு மறதிக்காக ஸலாம் கொடுத்த பின்னர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

 உதாரணமாக ஒருவருக்கு ழுஹர் தொழுகையில் மூன்றாவது ரக்அத் அல்லது நான்காவது ரக்அத் சந்தேகம் ஏற்படுகிறது. அப்போது அவர் மூன்றாவது ரக்அத்து தான் என உறுதியாக முடிவு செய்து இன்னொரு ரக்அத்தை, நான்காவது ரக்அத்தாக தொழுது விட்டு ஸலாம் கொடுத்தபின் ஸஜ்தா ஸஹ்வு செய்வார்.

 இரண்டாவது சந்தர்ப்பம் : 

குறைவாக செய்ததோ அதிகமாக செய்ததோ உறுதியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போது குறைவாக செய்ததை உறுதியாக முடிவெடுத்து தொழுகையை பூர்த்தி செய்து, ஸலாம் கொடுக்க முன் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

 உதாரணமாக ழுஹர் தொழுகையில் ஒருவருக்கு மூன்றாவது ரக்அத் அல்லது நான்காவது என சந்தேகம் எழுந்து உறுதியாக ஒரு முடிவு செய்ய முடியாமல் தடுமாற்றமாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் குறைவாக உள்ள மூன்று ரக்அத்துக்களை உறுதியாக முடிவெடுத்து தொழுகையை பூர்த்தி செய்து ஸலாம் கொடுக்க முன்னர் சந்தேகத்திற்காக ஸ்தா ஸஹ்வு  செய்ய வேண்டும்.

இதன்படி ஒரு வாஜிப் தவறவிடப்பட்டால் அல்லது சந்தேகம் ஏற்பட்டு உறுதியாக ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருந்தால், ஸஜ்தா ஸஹ்வு  ஸலாம் கொடுக்க முன்னர் செய்ய வேண்டும்.

 அதேபோன்று தொழுகையில் ஒரு அம்சத்தை அதிகமாக செய்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டு உறுதியாக ஒரு முடிவு எடுக்க முடியுமாக இருந்தால்,  ஸலாம் கொடுத்த பின்னர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

( மஜ்மூஃ பதாவா இப்னு தைமிய்யா – 16--14/14)

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
சுஜூத் ஸஹ்வின் காரணிகள் - Islam Question & Answer