முதலாவது :
42321 இலக்க கேள்விக்கான பதிலில் கருச்சிதைவு /கருக்கலைப்பு பற்றிய சட்டம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை வாசிப்பது முக்கியம்.
இரண்டாவது :
கருக்கலைப்பு /கருச்சிதைவு தொடர்பான முறைப்படுத்தப்பட்ட சட்ட விதிகளைப் பொறுத்தவரைக்கும், கருக்கலையும் காலம் மற்றும் கருவின் வளர்ச்சிக் கட்டம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு நான்கு வகை சட்டங்கள் காணப்படுகின்றன.
முதலாவது சட்டம் : முதல் இரு வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள கரு கலைந்தால், அதாவது, இரு விந்துகளும் கலந்த திரவ நிலைக் கருவான முதல் நாற்பது நாட்கள் திரவ நிலையில் கருவறையில் தங்கியிருக்கும் கருவும், கருவறையில் ஒட்டிக் கொண்ட இரண்டாம் கட்ட நாற்பது நாட்கள் கடந்து எண்பது நாள் வரையான வயதைக் கொண்ட இரத்தக் கட்டி வடிவமான கருவும் கலைந்தால் இந்த நிலைக் கருச்சிதைவுக்கு விந்து நிலைக்கருவாகவோ அல்லது இரத்தக் கட்டி நிலைக் கருவாகவோ எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் எதுவும் கிடையாது என்பதில் கருத்து வேறுபாடே கிடையாது. அந்தப் பெண் தனது நோன்பு மற்றும் தொழுகைகளை எந்தவொன்றும் நிகழாதது போல் தொடர முடியும். அவளுக்கு மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கு இருக்குமானால், அவள் ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்குரிய நேரத்தில் உழூ செய்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது சட்டம் : மூன்றாம் கட்ட வளர்ச்சியில் உள்ள கரு கலைந்தால் அதாவது சதைப்பிண்டக் கட்டமான கருவானால், அதாவது, அதன் உறுப்புக்கள், உருவமைப்பு மற்றும் தோற்றம் உள்ள மூன்றாம் கட்ட வளர்ச்சியை அடைந்த எண்பத்தொராவது (81) நாளிலிருந்து நூற்றி இருபது (120) நாள் பூரணமாகும் வரையான காலத்தையுடைய கருவாக இருப்பின் அதற்கு இரண்டு நிலைகள் உள்ளன :
- அந்த சதைக்கட்டி தெளிவாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உருவமைப்பை அடையாதிருப்பின், அத்தோடு மனிதனின் ஆரம்பப் படிநிலைக்கான ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றுகள் எதுவும் இல்லாதிருக்குமாயின் இந்த சதைப்பிண்டக் கருவின் சிதைவுக்கான சட்டமானது முதல் இரு வளர்ச்சிக் கட்ட கருக்கான சட்டவிதியாகவே அமையும். அதற்கென முறைப்படுத்தப்பட்ட எந்தவொரு சட்டமும் கிடையாது.
- அந்த சதைக்கட்டி மனித உருவமைப்பைப் பெற்றதாகவும் அதில் மனிதப் படைப்புக்கான கை, கால் போன்ற வெளிப்படையான தோற்றமோ, மறைமுகமான தோற்றமோ தெரியுமாயின், அல்லது மனிதனுக்கான ஆரம்ப நிலை உருவாகி இருப்பதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் இருக்குமாயின், அந்த சதைக்கட்டிக்கான சட்டமானது, அந்தப் பெண்ணுக்கு ‘நிபாஸ்’ எனும் பிரசவதுரு சட்டம் அமுலாகி, குறிப்பிட்ட காலத்தை அந்த சட்டத்தின் கீழ் கழிக்க வேண்டும்.
மூன்றாவது சட்டம் : நான்காம் வளர்ச்சிக் கட்டத்திலுள்ள கருச்சிதைவானது, உயிர் கொடுக்கப்பட்ட பின்னர் நிகழுமாயின், அதாவது ஐந்தாம் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து (121) நூற்றி இருபத்தோராவது நாள் முடியும் வரையான கருவாகவோ அல்லது அதற்கும் பிந்திய காலத்தையுடைய கருவாகவோ இருக்குமாயின் அதற்கு இரண்டு நிலைகள் உள்ளன. அவையாவன :
- பிறக்கும் போது சத்தமிட்டு வீறிட்டு அழாமல் இருந்தால், அதற்கு ஏலவே சுட்டிக் காட்டியுள்ள சதைக்கட்டி தொடர்பான இரண்டாவது சட்டமே பொருந்தும். ஆனாலும், மேலதிகமாக அதனைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து, (அடக்கம் செய்வதோடு), பெயர் வைத்து அதற்காக அகீகா கொடுக்கவும் வேண்டும்.
- பிறக்கும் போது சத்தமிட்டு வீறிட்டு அழுதிருந்தால், அதற்குப் பூரணமாகப் பிறந்த குழந்தைக்கான சட்டங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும். முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள சட்டங்களோடு சேர்த்து மேலதிகமாக ‘வஸிய்யத்’தின் மூலமாகவும் ‘வராஸத்’தின் மூலமாகவும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் அவருக்கு சொந்தமாக்கப்படல் வேண்டும். அத்தோடு, அவரது சொத்து ‘வராஸத்’தின் அடிப்படையில் பகிரப்படவும் வேண்டும்.
பத்தாவா லஜ்னத்துத் தாஇமா (21/434-438)