ஜனாஸா தொழுகையை தொழும் முறையானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் எமக்கு தெளிவுபடுத்திய முறையாகும்.
அதாவது
1. முதலாவது தக்பீர் கூறல். பின்னர் விரட்டப்பட்ட சைத்தானிடம் இருந்து பாதுகாவல் தேடி அதை தொடர்ந்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி சூரா பாத்திஹாவையும் இன்னுமொரு சிறிய சூராவை அல்லது சில வசனங்களையும் ஓத வேண்டும்.
2. மீண்டும் இரண்டாவது தக்பீர் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தொழுகையில் இறுதியில் ஸலவாத் கூறுவது போன்று ஸலவாத் கூற வேண்டும்.
3. மீண்டும் மூன்றாவது முறை தக்பீர் கூறி இறந்தவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அத்தகைய பிரார்த்தனைகளில் சிறந்தது.....
"இரட்சகனே! எங்களில் உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்களையும் எங்களோடு இருப்பவர்களையும் மறைவில் இருப்பவர்களையும் எங்கள் சிறியவர்களையும் பெரியவர்களையும் ஆண்களையும் பெண்களையும் மன்னித்து விடுவாயாக...
மேலும் இறைவனே யாரை நீ உயிரோடு வைத்திருக்கின்றாயோ அவரை இஸ்லாத்தில் வாழ வைப்பாயாக, மேலும் யாரை மரணிக்கச் செய்தாயோ அவரை நம்பிக்கையோடு மரணிக்கச் செய்திடுவாயாக..
யா அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்கு கருணை காட்டுவாயாக அவருக்கு ஆரோக்கியம் அளித்து அவரை மன்னிப்பாயாக, அவரது தங்குமிடத்தை சங்கை செய்திடுவாயாக, அவரது நுழைவிடத்தை விசாலப்படுத்திடுவாயாக, அவரை நீர், பனிக்கட்டி மற்றும் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுவாயாக, வெண்ணிற ஆடை அழுக்கிலிருந்து எவ்வாறு தூய்மையாக்கப்படுகிறது அதேபோல் அவரை பாவங்களிலிருந்து தூய்மையக்கிடுவாயாக,
இறைவனே அவருக்கு அவரது வீட்டை விட சிறந்த வீட்டையும் அவரது குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும் பகரமாக கொடுப்பாயாக, யா அல்லாஹ் அவரை கப்ருடைய வேதனை மற்றும் நரக வேதனைகளை விட்டும் பாதுகாத்து சுவர்க்கத்தில் நுழைவிப்பாயாக, அவருடைய கப்ரை விசாலப்படுத்தி அவருக்காக அதை ஒளிமயமாக்கிடுவாயாக, இறைவனே அவரது கூலியை எங்களுக்கு தடுத்து அவரின் பின்னால் எம்மை வழி தவற செய்து விடாதே!"
இவை அனைத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும்.
இதே போல் அவருக்காக வேறு பிரார்த்தனைகளைக் கொண்டு பிராத்தித்தாலும் அது தவறாகாது. உதாரணமாக; "இறைவனே! அவர் நன்மை செய்யக் கூடியவராக இருந்தால் அவரது நன்மைகளை அதிகப்படுத்திடுவாயாக அவர் தவறிழைத்தவராக இருந்தால் அவரது பாவங்களை விட்டு அவரை தூரமாக்கி விடுவாயாக, யா அல்லாஹ் அவரை மன்னித்து விடுவாயாக, உறுதியான வார்த்தையை கொண்டு அவரை உறுதிப்படுத்திடுவாயாக."
4. பின்னர் மீண்டும் நான்காவது முறையாக தக்பீர் கூறி சற்று நேரம் நிற்க வேண்டும் பின்னர் வலது பக்கமாக ஒரு சலாம் சொல்ல வேண்டும் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹூ)
இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் எமக்கு காட்டிய வழியாகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.