0 / 0
25/ரபி/1446 , 28/செப்டம்பர்/2024

சாதாரண மனிதர்களை விடவும் நபிகளாரது குடும்பத்தினருக்குள்ள சிறப்பு யாது? அவர்கள் மனிதர்களுக்காக மறுமை நாளில் சிபாரிசு (ஷபாஅத்) செய்வார்களா?

கேள்வி: 121948

சாதாரண மனிதர்களை விடவும் நபிகளாரது குடும்பத்தினருக்குள்ள சிறப்பு யாது? அவர்கள் மனிதர்களுக்காக மறுமை நாளில் சிபாரிசு (ஷபாஅத்) செய்வார்களா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது அம்சம் நாம் ஏற்கனவே 10055 ஆம் இலக்க கேள்விக்குப் பதிலளிக்கையில் நபிகளாரது குடும்பத்தினரைப் பற்றித் தெளிவுபடுத்தினோம். பதிலின் இறுதியிலே நபிகளாரது குடும்ப வட்டத்துக்குள் அவரது மனைவியர், சந்ததிகள், ஹாஷிம், அப்துல் முத்தலிப் கிளையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளடங்குவர் எனக் கூறினோம்.

இரண்டாவது அம்சம் அல்லாஹ் நபிகளாரது குடும்பத்தினருக்கு பலவிதமான சிறப்புக்களை, மேன்மைகளை அமைத்துள்ளான். அவர்களை நேசிப்பது, அவர்களது உரிமைகளைப் பேணி நடப்பது அனைவர் மீதும் கடமையாகும் என அஹ்லுஸ் ஸ{ன்னாக்கள்  ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகையில் “அவ்வாறே நபிகளாரது குடும்பத்தினர் விடயத்தில் (நாம்)  பேண வேண்டிய கடமைகள் உள்ளன. ஏனெனில் அல்லாஹ் அவர்களுக்கு யுத்தம் செய்து பெற்றுக் கொள்ளப்படும் கனீமத் பொருட்களிலும், யுத்தமின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்களிலும் ஒரு பங்கை வைத்துள்ளான். மேலும் நபிகளாருக்கு ஸலவாத் சொல்லும் போது அவர்களையும் இணைத்து

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد . وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد.

(பொருள் : இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தினர் மீது அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ (புகழப்பட்டவனும்) புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தினர் மீது பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை (பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.)

என்று ஸலவாத் சொல்லுமாறு ஏவியுள்ளான்.

(ஆதாரம் : மஜ்மூஉல் பதாவா : 3 : 407)

மூன்றாவது அம்சம் நபிகளாரது குடும்பத்தினருக்குள்ள சில சிறப்புக்கள் பின்வருமாறு :

01) அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு  கூறுகின்றான் :

“நபியுடைய மனைவியரே! நீங்கள் (இதர) பெண்களில் எந்தவொருவரையும் போன்றவர்களுமல்லர். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான்; மேலும் நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.

இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரயாதீர்கள்; மேலும் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும் தான்." (அல்அஹ்ஸாப் : 32 : 33)

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு நபிகளாரது மனைவியருக்கு மாத்திரமின்றி ஏனைய பெண்களுக்கும் உண்டு  என்பதைக் கீழ்க்காணும் நபிமொழி உணர்த்துகின்றது.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள் : 

ஒருநாள் காலைப்பொழுதில் நபிகளார் (ஸல்) அவர்கள் கறுப்பு நிற மயிர்களால் கோடுகளிடப்பட்ட ஒரு ஆடையை அணிந்தவர்களாக வெளிக்கிளம்பினார்கள். அப்போது ஹஸன் இப்னு அலி (ரழி) வருகை தரவே அவரை உள்நுழைவித்துக் கொண்டார்கள்; பின்பு ஹ{ஸைன் (ரழி) அவர்களும் வந்து நுழைந்தார்கள்; அவரைத் தொடர்ந்து பாதிமா (ரழி) அவரைத் தொடர்ந்து அலி (ரழி) ஆகியோரும் வருகை தர அவர்களையும் நுழைவித்துக் கொண்டார்கள். பின்னர் கூறினார்கள் : “அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதைத் தான்." (ஸஹீஹ் முஸ்லிம் : 2424)

02) அல்லாஹ் கூறுகின்றான் :  “விசுவாசிகளுக்கு அவர்களுடைய உயிர்களை விட இந்த நபி மிக முன்னுரிமைக்குரியவராவார்;. இன்னும் அவருடைய மனைவியர் அவர்களது தாய்மார்களாவார்கள். (அல்அஹ்ஸாப் : 06)

03) வாஸிலா இப்னுல் அஸ்கஃ (ரழி) அவர்கள், தான் நபிகளார் கூறியதைச் செவிமடுத்ததாக அறிவிக்கின்றார்கள். : “அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்;. குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான். (ஸஹீஹ் முஸ்லிம் : 2276)

04) ஸைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள “கும்மு" எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின் மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.

பிறகு, “(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விடயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகின்றேன். என்  குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று (மூன்று முறை) கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2408)

இந்த நபிகளாரது அறிவுரையை அபூபக்கர், உமர் (ரழி) போன்ற பெரும் நபித்தோழர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் பேணிவந்தார்கள். 

இமாம் புகாரி, முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது கிரந்தங்களில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்கள் : அபூபக்கர் (ரழி) அவர்கள் (ஒரு தடவை) அலி (ரழி) அவர்களிடம் “நபிகளாருடைய குடும்பத்தினரைச் சேர்ந்து நடப்பது என் குடும்பத்தினரைச் சேர்ந்து நடப்பதை விடவும் எனக்கு மிகவும் விருப்பமானது." என்று கூறினார்கள்.  (ஸஹீஹ{ல் புகாரி : 3508, ஸஹீஹ் முஸ்லிம் : 1759)

மேலும் புகாரி (ரஹ்) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்கள் (மக்களை நோக்கி) “நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அவர்களது குடும்பத்தினர் விடயத்தில் கவனித்துக் கொள்ளுங்கள்." என்று கூறியதாகவும் தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீ{ஹல் புகாரி: 3509)

மேற்கண்ட அபூபக்கர் (ரழி) அவர்களது கூற்றை இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் விளக்கும் போது “அபூபக்கர் (ரழி) அவர்கள் மக்களை நோக்கி நபிகளாரது குடும்பத்தினருக்கு நோவினை, கெடுதி செய்யாமல் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என உபதேசித்தார்கள் எனக் குறிப்பிடுகின்றார்கள். (பத்ஹுல் பாரி 07:79)

உமர் (ரழி) அவர்கள் கூட நபிகளாரது குடும்பத்தினரை சங்கைப்படுத்தியது  பல அம்சங்களில் நமக்குப் புலனாகின்றது. திறைசேரியிலிருந்து மக்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்குகையில் பிற மனிதர்களை விடவும், ஏன் தன்னை விடவும் நபிகளாரது குடும்பத்தினரை முற்படுத்தியமை அவற்றில் ஒன்றாகும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : “மேலும் உமர் (ரழி) அவர்கள் திறைசேரிக் கொடுப்பனவுகளுக்கான ஏடுகளை  ஒழுங்குபடுத்திய போது மக்க(ளது பெயர்க)ளை அவர்களது குடும்ப பரம்பரை நிலைகளுக்கு ஏற்ப எழுதினார்கள். ஆகவே நபிகளாருக்கு உறவு முறையில் மிகவும் நெருக்கமானவர்களை முதலாக எழுதினார்கள். அரபிகளின் பட்டியல் முடிந்த போது அஜமிகளின் பெயர்களை எழுதினார்கள். நேர்வழிபெற்ற கலீபாக்கள், பனூ உமையாக்கள் மற்றும் அப்பாஸ் (ரழி) அவர்களின் வழித்தோன்றல்களில் தோன்றிய ஏனைய கலீபாக்களது ஆட்சிக்காலத்தில் (ஒன்றுதிரட்டப்பட்ட) ஏடுகள் இவ்வாறு தான் காணப்பட்டன. (என்றாலும்) பின்னர் அது மாற்றமடைந்து விட்டது. 

(நூல் : இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் : 150,160 பக்கங்கள்)

நான்காவது அம்சம் யாதெனில், நபிகளாரது குடும்பத்தினருக்கென்று விசேடமான எந்தவொரு ஷபாஅத்தும் (சிபாரிசு செய்யும் வாய்ப்பும்) கிடையாது.  ஷபாஅத் என்பது நபிகளாரது குடும்பத்தினரைச் சார்ந்த, சாராத நல்லடியார்கள், உயிர்த்தியாகிகள்,  அறிஞர்கள் என அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் அனைவருக்கும் பொதுவானதாகும்.

ஏற்கனவே நாம் 21672 ஆம் இலக்க வினாவுக்குப் பதிலளிக்கையில் “பாவிகள், குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவது நபிகளாருக்கு மாத்திரம் குறிப்பானதன்று. மாறாக அதிலே நபிமார்கள், உயிர்த்தியாகிகள், அறிஞர்கள், நல்லடியார்கள், வானவர்களும் உள்ளடங்குவர். மேலும் சிலவேளை ஒரு மனிதனுக்காக அவனது நல்லமல் கூட பரிந்து பேசும். என்றாலும் அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசும் விடயத்தில் நபிகளாருக்கே பெரும் பங்குண்டு." எனக் குறிப்பிட்டோம்.

இதன் மூலமே மார்க்கத்தில் வரம்பு மீறிச் சென்று நபிகளாரது குடும்பத்திற்கென்று விசேடமான ஒரு ஷபாஅத்தை (சிபாரிசு செய்யும் வாய்ப்பை) வாதிடும் ராபிழாக்களுக்கு வழங்கப்படும் மறுப்பை அறிய முடிகின்றது. எந்தளவுக்கெனில் அவர்களது புத்தகங்களில் மனிதர்களை சுவர்க்கம், நரகத்தில் நுழைவிப்பவர்களும் நபிகளாரது குடும்பத்தினரே எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராபிழாக்கள் அறியாமை மற்றும் அல்குர்ஆன், அஸ்ஸ{ன்னாவின் ஆதாரங்களை விட்டும் தூரமாகியமை போன்ற மூலகாரணிகளினால்  மார்க்கத்தில் அத்துமீறிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

நாங்கள் அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் இப்னு ஹமத் அல்அப்பாத் அவர்கள் எழுதிய “அஹ்லுஸ் ஸுன்னாக்களிடத்தில் நபிகளாரது குடும்பத்தினரின் சிறப்பும், உயர் அந்தஸ்த்தும்" எனும் தலைப்பிலான ஆக்கத்தை வாசிக்குமாறு உபதேசிக்கிறோம். அதிலிருந்து நாமும் பயனடைந்தோம். அது அளவில் சிறியதாக இருப்பினும் பல தகவல்களையும் உள்ளடக்கிய மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
சாதாரண மனிதர்களை விடவும் நபிகளாரது குடும்பத்தினருக்குள்ள சிறப்பு யாது? அவர்கள் மனிதர்களுக்காக மறுமை நாளில் சிபாரிசு (ஷபாஅத்) செய்வார்களா? - Islam Question & Answer