0 / 0
08/முகர்ரம்/1446 , 14/ஜூலை/2024

முஹம்மத் (ஸல்)

கேள்வி: 11575

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றிய சுருக்கத்தை தர முடியுமா?

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

பனூ இஸ்ரவேலர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு தங்களின் நம்பிக்கை மற்றும் மார்க்கத்தை மாற்றக்கூடியவர்களாக இருந்தனர். சத்தியத்தை அழித்து அசத்தியத்தை வெளிப்படையாக செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் பரப்பிக் கொண்டிருந்தார்கள். எனவே மனிதர்களுக்கு சத்தியத்தை கூறி பொய்யை அழிக்கக்கூடிய நேரான பாதையில் அவர்களை இட்டுச் செல்லக்கூடிய ஒரு மார்க்கம் தேவைப்பட்டது. எனவே இறைவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான் அல்குர்ஆன் கூறுகின்றது. [1] (ஸூரா நஹ்ல்:64)

இறைவன் அனைத்து நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களை இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதன் பால் மக்களுக்கு அழைப்புவிடுப்பதற்காகவும் இருளிலிருந்து ஒளியின் பால் மக்களை அழைத்து செல்வதற்காகவுமே அனுப்பி வைத்தான். அவர்களில் முதலாமவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் இறுதியானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பி இருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்ததவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் சைத்தான்களாகிய அனைத்து தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ( என்று கூறினார்கள்).

(ஸூரா நஹ்ல்:36)

நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களில் இறுதியானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார். அவருக்குப் பின் வேறு எந்த நபியும் வர முடியாது.

உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது தகப்பனாக இருக்கவில்லை எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்.

(ஸூரா அஹ்ஸாப்:40)

அனைத்து நபிமாரும் தமது சமூகத்தாருக்கு மாத்திரம் தூதராக அனுப்பப்பட்டனர்.இறைவன் தனது தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு தூதராக அனுப்பியுள்ளான்.

(மேலும்) நபியே உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி நாம் அனுப்பவில்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை)அறிந்து கொள்ள மாட்டார்கள்.

ஸூரா ஸபஉ:28

இறைவன் மனிதர்களை அவனது உதவியுடன் நேர்வழியின் பால் இட்டுச் செல்வதற்காகவும் இருளிலிருந்து வெளிச்சத்தின் பால் அவர்களை வெளியேறச் செய்யவும் தனது தூதர் மீது அல்குர்ஆனை இறக்கினான்.

(நபியே இது )வேதமாகும் .இதன் மூலம் மனிதர்களை அவர்களுடைய இரட்சகனின் அனுமதி கொண்டு இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் (சகலரையும்) மிகைத்தோன் புகழுக்குரியவனின் பாதையின் பால் நீர் வெளியேற்றுவதற்காக இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கி வைத்திருக்கிறோம்.

(ஸூரா இப்றாஹீம்:1)

இறைத்தூதரான முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னி அப்துல் முத்தலிப் அல்ஹாஷிமி அல்குரைஷி அவர்கள் கஃபாவை தகர்ப்பதற்காக வந்த கூட்டத்தை அல்லாஹ் நிர்மூலமாக்கிய வருடமான யானை ஆண்டில் மக்காவில் பிறந்தார்கள். அவர் தனது தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார்கள். அவருக்கு ஹலீமா அஸ்ஸஃதிய்யா எனும் பெண்மணியே பாலூட்டினார்கள். பின்னர் தனது தாயான ஆமினா பின்த் வஹ்ப் அவர்களுடன் தாயின் சகோதரர்களை மதீனாவில் சந்தித்தார்கள். பின்னர் மக்காவுக்கு திரும்பும் வழியில் அப்வா எனுமிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆறு வயதான நிலையில் அவரது தாயார் மரணித்தார்கள்.

பின்னர் அவரது பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவரை பொறுப்பேற்றார்கள் அவரும் நபியவர்களின் எட்டு வயதில் மரணித்தார்கள். பின்னர் அவரது சிறிய தந்தையான அபூ தாலிப் நபி அவர்களை பொறுப்பேற்று அவரை நல்ல முறையில் வளர்த்து அவரை 40 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வந்தார்கள். குறைஷிகள் தனது மூதாதையரின் மார்க்கத்தை விட்டு விட்டதாக குறை கூறுவார்கள் என்பதற்கு அஞ்சி நபியவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சிறுவயதில் மக்காவாசிகளின் ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள், பின்னர் கதீஜா பின்த் குவைலித் அவர்களின்  வியாபாரத்தை ஏற்று ஷாம் நாட்டிற்கு பிரயாணித்து சிறந்த லாபமீட்டி திரும்பினார்கள். நபியவர்களின் உண்மை நாணயம் போன்ற பண்புகளை கண்ணுற்று அவற்றால் கவரப்பட்ட கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது 40 வது வயதில் 25 வயதிலிருந்த நபியவர்களை திருமணம் செய்தார்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணிக்கும் வரை நபியவர்கள் வேறு எவரையும் திருமணம் செய்யவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் சிறந்த முறையில் பரிபாலித்து அவரது ஒழுக்கத்தை மிகச் சிறப்பானதாக ஆக்கி அவரை அவரது கூட்டத்தினரில் தோற்றத்திலும் பண்பிலும் மிக அழகானவராகவும் சிறந்த மனிதநேயம் மிக்கவராகவும் அமைதியில் மிக விசாலமானவராகவும் பேச்சில் மிக உண்மையாளராகவும் அவரது கூட்டத்தார்  நம்பிக்கையாளர் என அவரை அழைக்கும் அளவு நம்பிக்கை பேணும் தன்மை உள்ளவராக ஆகுமளவிற்கு இறைவன் அவருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவருக்கு இறைவன் தனிமையை விருப்பத்திற்குரியதாக ஆக்கினான். ஹிரா குகையில் தனிமையில் இறைவனை வணங்குவதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் இரவு பகலாக ஈடுபட்டார்கள்.

சிலை வணக்கம் மது அருந்துதல் ஒழுக்க கேடான நடத்தைகள் என்பவற்றை மிகவும் வெறுக்க கூடியவர்களாக இருந்தார்கள். தன் வாழ்நாளில் ஒருபோதும் அவற்றின் பால் அவர் நாட்டம் கொண்டதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 35 வது வயதில் வெள்ளத்தால் பாதிப்புற்றிருந்த கஃபாவை மீள கட்டுவதில் குறைஷிகளுடன் பங்கேற்றார்கள் அச்சமயத்தில் ஹஜருல் அஸ்வத் எனும் சிறப்பு மிகுந்த கல்லை அதனுடைய இடத்தில் திரும்ப வைக்கும் விடயம் தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்ட பொழுது நபியவர்கள் ஒரு விரிப்பை கொண்டு வரச் செய்து அதில் அக்கல்லை வைத்து அந்த விரிப்பை அனைத்து கோத்திரத் தலைவர்களையும் பிடித்து தூக்குமாறு கூறி, பின்னர் அதிலிருந்து நபி அவர்கள் அக்கல்லை எடுத்து அதன் இடத்தில் வைத்து  கோத்திரங்களிடையே ஏற்பட இருந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்தார்கள்.

ஜாஹிலிய்யக் கால மக்களிடத்தில் வீரம், கொடை, வாக்குறுதியை நிறைவேற்றல் போன்ற போற்றத்தக்க பண்புகள் காணப்பட்டன. இன்னும் அவர்களிடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தில் காணப்பட்ட கஃபாவை கண்ணியப்படுத்துதல், அதனை தவாப் செய்தல், ஹஜ் செய்தல், உம்ரா செய்தல் போன்ற விடயங்களும் காணப்பட்டன. அதே சமயம் அவற்றுடன் விபச்சாரம், மது அருந்துதல், வட்டி, பெண் குழந்தைகளை கொலை செய்தல், அநியாயம் இழைத்தல், சிலை வணக்கம் போன்ற இழிவான பண்புகளும் சேர்ந்தே காணப்பட்டன.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தை மாற்றியமைத்து சிலை வணக்கத்தின்பால் அழைப்பு விடுத்த முதல் நபர் அம்ர் இப்னு லுஅய் அல்குஸாஈ. அவர் மக்கா மற்றும் இதர இடங்களுக்கு சிலைகளை கொண்டு வந்து மக்களை அவற்றை வணங்குமாறு அழைத்தார். வத், சுவாஃ, யகூஸ், யஊக் இன்னும் நஸ்ர்  என்பன அவ்வாறு கொண்டுவரப்பட்ட சிலைகளாகும்.

அதன் பின்னர் அரேபியர் கதீதில் மனாத் சிலையையும் தாஇபில் லாத் சிலையையும் வாதிஉன் நஹ்லாவில் உஸ்ஸா சிலையையும் கஃபாவின் உட்புறத்தில் ஹுபல் சிலையையும் மற்றும் கஃபாவை சுற்றியும் தங்களது வீடுகளிலும் சிலைகளை வணக்கத்திற்கு உரியதாக அமைத்துக் கொண்டனர். இன்னும் குறிகாரர்கள், சூனியக்காரர்கள், சோதிடர்கள் என்போரை மக்கள் தங்களுக்கு தீர்ப்பு கூறுவோராக ஆக்கிக் கொண்டனர்.

இவ்வாறாக குழப்பமும் இணைவைத்தலும் பரவிக் காணப்பட்ட சமயத்தில் தான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது 40 வது வயதில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறும் சிலை வணக்கத்தை விட்டு விடுமாறும் அழைப்பு  விடுக்குமாறு அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவர்களின் அந்த அழைப்பை குறைஷிகள் மறுத்தார்கள்.

(என்ன )இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்துவிட்டு) ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனாக ஆக்கிவிட்டாரா நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம் தான் (என்றும் கூறினர்)

(ஸூரா ஸாத்:5)

 இவ்வாறு சிலை வணக்கமானது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவத்தை கொண்டு அனுப்பப்படும் வரை தொடர்ந்தது.

அதன் பின்னர் நபியவர்களும் அவரது தோழர்களும் அவற்றை உடைத்து தகர்த்து சத்தியத்தை நிலைநாட்டி அசத்தியத்தை இல்லாதொழித்தனர்.

சத்தியம் வந்துவிட்டது அசத்தியம் அழிந்துவிட்டது .நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும் என்றும் கூறுவீராக.

(பனீஇஸ்ராயீல்:81)

நபி அவர்கள் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹிரா குகையிலேயே முதன் முதலில் வஹீ இறங்கியது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அவர்களிடத்தில் வந்து ஓதுமாறு ஏவ, நபி அவர்கள் தனக்கு ஓதத் தெரியாது எனக் கூற மூன்று தடவை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவ்வாறே ஓதுமாறு கூறிய பின் எதை ஓத என்று நபியவர்கள் கேட்க, கீழ் வரும் வசனங்களை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஓதி காட்டினார்கள்.

உம்முடைய இரட்சகனின் சங்கையான பெயரைக் கொண்டு நீர் ஓதுவீராக அவன் எத்தகையவன் என்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான் .மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்) இரத்தக் கட்டியிலிருந்து அவன் படைத்தான். நமது இரட்சகன் மிக்க சங்கையானவன்.

(ஸூரா அலக்:1,2,3)

அதன்பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உள்ளம் நடுங்கியவராக திரும்பி வந்து கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் எனக்கு ஏதும் ஏற்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்பதாக கூற அதற்கு கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரை அமைதிப்படுத்தி

அல்லாஹ் உம்மை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான். நீர் உறவுகளோடு சேர்ந்து நடக்கிறீர். பிறரின் கஷ்டங்களில் பங்கெடுக்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். இயலாதவர்களுக்கு உதவி செய்கிறீர், உண்மைக்காக கஷ்டப்படுகிறீர் என கூறினார்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா தனது சிறிய தந்தையின் மகனான வரகா இப்னு நவ்பலிடம் சென்றார்கள் அவர் அப்போது கிறிஸ்தவராக இருந்தார் அவரிடம் நபியவர்களுக்கு நடைபெற்ற சம்பவத்தை கூற அதற்கு அவர்கள் அது மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்றும் நபியவர்களை அவரது கூட்டத்தினர் நோவினை செய்வார்கள் இன்னும் ஊரை விட்டும் விரட்டுவார்கள் என்றும் கூறி அச்சமயத்தில் பொறுமையை கடைபிடிக்குமாறு உபதேசித்தார்கள். பின்னர் சிறிது காலம் வஹியின் வருகை நின்று போய் விடவே நபியவர்கள் கடும் கவலையுற்றார்கள். அவ்வாறு இருந்த சமயம் ஒரு நாள் நபியவர்கள் நடந்து போய்க்கொண்டிருக்கையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே வானவரை கண்ணுற்று உடனே வீடு திரும்பி போர்வையால் போர்த்திக் கொண்டார்கள் எனவே இறைவன் பின்வரும் வசனத்தை இறக்கி வைத்தான்.

(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே !நீர் எழுந்திருப்பிராக !பிறகு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை!

(ஸூரா அல்முத்தஸ்ஸிர்:1,2)

அதன் பின்னர் வஹீ நபியவர்கள் மீது தொடர்ச்சியாக இறங்கியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில் 13 வருடங்களாக அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு ரகசியமாக அழைப்பு விடுத்தார்கள் பின்னர் சத்தியத்தை பகிரங்கப்படுத்துமாறு அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதன் படி வெளிப்படையாக தஃவா செய்ய ஆரம்பித்தார்கள். எவ்வித போர்களும் இன்றி மென்மையாகவும் இரக்கமாகவும் தஃவத் செய்தார்கள். முதலில் அவரது நெருங்கிய உறவினர்களையும் பின்னர் தனது கூட்டத்தாரையும் பின்னர் அவர்களை சூழ உள்ளோரையும் பின்னர் அரேபியரையும் பின்னர் உலக மக்கள் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள்.

ஆகவே உமக்கு ஏவப்பட்டதை (தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு தெளிவாகக் கூறி விடுவீராக இணைத்து கொண்டிருப்பவரை புறக்கணித்தும் விடுவீராக.ஸூரா (அல்ஹிஜ்ர்:94)

செல்வந்தர்கள் தலைவர்கள், பலவீனர்கள் ,ஏழைகள், அடிமைகள் ,ஆண்கள், பெண்கள் என அனைவரிடம் ஒரு சிறு தொகையினரே தூதரே விசுவாசித்தார்கள் அவ்வாறு நபியை விசுவாசித்த அனைவரும் நோவினை செய்யப்பட்டார்கள். அவர்களில் சிலர் நோவினை செய்யப்பட சிலர் கொலை செய்யப்பட்டார்கள் இன்னும் சிலரோ குறைஷிகளின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்களுடன் நபியவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். அல்லாஹ் தனது மார்க்கத்தை வெற்றி பெறச் செய்யும் வரை நபியவர்கள் பொறுமை காத்தார்கள். நபியவர்கள் தனது 50 வது வயதை அடைந்த போது நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளாக குறைஷிகளின் துன்புறுத்தல்களில் இருந்து அவரைப் பாதுகாத்த அவரது சிறிய தந்தையான அபூதாலிப் அவர்கள் மரணித்தார்கள். அதனைத் தொடர்ந்து நபியவர்களுக்கு ஆறுதலாக இருந்த கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்தார்கள் அதன் பின்னர் அவரது கூட்டத்தாரின் துன்புறுத்தல்கள் கடுமையாகின. அவர் மீது அவர்கள் துணிவு பெற்று பல்வேறு வகையான துன்புறுத்தல்களையும் அளித்து வந்தார்கள். நபி அவர்களோ இறைவனிடமே கூலியை எதிர்பார்த்தவராக பொறுமை காத்தார்கள்.

சோதனைகள் கடுமையாக்கப்பட்டு அவர் மீது குரைஷிகள் துணிவுற்றிருந்த சமயத்தில் நபியவர்கள் தாயிபுக்கு சென்று அங்குள்ளவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அவர்களோ அவருடைய அழைப்பை ஏற்காது அவரது கால்களில் ரத்தம் சிந்தும் அளவு கல்லெறிந்து நோவினை செய்தார்கள். பின்னர் மீண்டும் மக்காவுக்கு திரும்பி வந்து ஹஜ்ஜிலும் மற்ற பொது இடங்களிலும் இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பின்னர் இறைவன் தனது தூதரை ஒரு இரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜித் அக்ஸாவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக புராக் வாகனத்தில் பயணிக்கச் செய்து, அங்கு இறங்கி ஏனைய நபிமார்கள் அனைவருக்கும் தொழுகை நடத்திவிட்டு, வானத்தை நோக்கி பயணிக்கச் செய்தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலுடன் கீழ்வானத்தை நோக்கிச் சென்றார்கள் அங்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டார்கள் தனது வலப்புறத்தில் தூய நல்ல ஆன்மாக்களையும் இடப்புறத்தில் கெட்ட தீய ஆன்மக்களையும் கண்டார்கள். பின்னர் இரண்டாவது வானத்திற்கு சென்று அங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் மூன்றாவது வானத்தில் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் நான்காவது வானத்தில் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஐந்தாவது வானத்தில் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஆறாவது வானத்தில் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஏழாவது வானத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் கண்டார்கள். பின்னர் சித்தரத்துல் முன்தஹாவிற்கு உயர்த்தப்பட்டார்கள் அங்கு தனது இறைவனுடன் உரையாடினார்கள் இறைவன் அவரை சங்கைப்படுத்தி அவரது சமுதாயத்தின் மீது ஒரு நாளில் இரவிலும் பகலிலும் ஆகுமாக 50 நேரத் தொழுகைகளை கடமையாக்கினான். பின்னர் அதனை ஐந்து நேர தொழுகைகளாக ஆகும் வரை குறைத்தான். எனினும் ஐந்து நேரத் தொழுகைகளும் கூலியில் 50 நேரத் தொழுகைகளுக்கு சமமானதாகும். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதயாத்தைக் கவுரவிக்கும் முகமாக இவ்வாறு செய்தான். பின்னர் அவர் காலையாக முன் மக்காவிற்கு திரும்பி வந்து நடந்தவற்றை கூறவே விசுவாசிகள் அதனை நம்பிக்கை கொண்டனர், காபிர்கள் அதனை பொய்ப்படுத்தினர்.

தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து பைதுல் முகத்தஸில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன். (மஸ்ஜிதுல் அக்சாவாகிய)  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்றவன் பார்க்கிறவன்.

(பனீஇஸ்ராயீல்:1)

பின்னர் இறைவன் தனது தூதருக்கு உதவி செய்யக் கூடியவர்களை ஏற்படுத்திக் கொடுத்தான். மதீனாவாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தை சேர்ந்த சில மனிதர்களை ஹஜ் உடைய காலத்தில் நபியவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைக் ஏற்றுக் கொண்டு மதீனா திரும்பினார்கள். அவர்கள் அங்கு சென்று இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அடுத்த வருடம் அவர்கள் இன்னும் சில மடங்காக அதிகரித்து இருந்தனர். அவர்களும் நபியவர்களை சந்தித்தார்கள். அவர்கள் திரும்பிச் செல்லும் போது  அவர்களுக்கு குர்ஆனை ஓதி காண்பிப்பதற்காகவும் இஸ்லாத்தை கற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களுடன்  முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் அனுப்பி வைத்தார்கள். அவரிடத்தில் பலர் இஸ்லாத்தை ஏற்றார்கள். அவ்ஸ் கோத்திரத் தலைவர்களான ஸஃத் இப்னு முஆத், உஸைத் இப்னு ஹுழைர் என்போர் அவரிடத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களே.

அதற்கடுத்த வருடம் ஹஜ் உடைய சமயத்தில் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்களை சேர்ந்த எழுபதற்கும் மேற்பட்ட நபர்கள் நபி அவர்களைக் காண வருகை தந்திருந்தார்கள். மக்காவாசிகள் அவரைத் துன்புறுத்தி வெறுத்ததன் காரணமாக மதீனாவிற்கு நபி அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அவர்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் ஒரு நாளை குறிப்பிட்டு  கனவாயில் சந்திப்பதாக வாக்களித்தார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபியவர்களும் அவருடன் அவரது சிறிய தந்தையான அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வந்திருந்தார்கள். அவர் ஈமான் கொள்ளாத நிலையிலும் தனது சகோதரனின் மகனுடைய விடயத்திற்கு வர வேண்டும் என்னும் ஆசையால் வந்திருந்தார். அங்கு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வந்திருந்த கூட்டமும் அழகிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வருவதாகவும் அவர்கள் அவரை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு அதற்காக சுவனம் உண்டென்றும் சத்தியப் பிரமாணம் செய்து தருமாறு நபியவர்கள் கூற அவர்களும் அவ்வாறே ஒவ்வொருவராக செய்தார்கள். பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். இதனை அறிந்த குரைஷிகள் அவர்களைத் தேடி சென்றார்கள். எனினும் அல்லாஹ் அவர்களை அவர்களிடம் இருந்து பாதுகாத்து விட்டான். அதன் பின் நபியவர்கள் கீழ்வரும் வசனம் இறங்கும் வரை மக்காவில் தங்கியிருந்தார்கள்.

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன். யாவரையும் மிகைத்தவன்.

(ஸூரா அல்ஹஜ்:40)

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு ஏவினார்கள். இணைவைப்பவர்கள் பிடித்து வைத்துக் கொண்டவர்களை தவிர ஏனைய அனைவரும் ஹிஜ்ரத் செய்த பின் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு ,அலி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரை தவிர வேறு எவரும் மக்காவில் இருக்கவில்லை. இணைவைப்பாளர்கள் நபியவர்களின் தோழர்கள் ஹிஜ்ரத் செய்கிறார்கள் என்பதை அறிந்ததும் நபியவர்களும் அவர்களுடன் சென்று இணைந்து கொள்வார்கள் எனப் பயந்து நபி அவர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள். அவர்களின் திட்டத்தை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்கு அறிவித்தார்கள். எனவே நபியவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் தன்னிடமிருந்த அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறி அன்றைய இரவு தன்னுடைய விரிப்பில் தனக்குப் பதிலாக அவரை உறங்குமாறு கூறிவிட்டு அவரது வீட்டைச் சூழ அவரை கொலை செய்வதற்காக இணைவைப்பாளர்கள் முற்றுகை இட்டுக் காத்திருந்த சமயத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டை சென்றடைந்தார்கள். அவ்வாறாக இறைவன் அவர்களது சூழ்ச்சியிலிருந்து நபியை பாதுகாத்தான்.

மேலும் ( நபியே) நிராகரித்துக் கொண்டிருப்போர் உம்மை அவர்கள் சிறைப்படுத்தவோ அல்லது கொலை செய்யவோ அல்லது ஊரை விட்டு வெளியேற்றி விடவும் உமக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான் இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்கமேலானவன்.

 (ஸூரா அன்பால் :30)

பின்னர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதாக உறுதி கொண்டு நபி அவர்களும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இணைவைப்பாளரான அப்துல்லாஹ் இப்னு உரைகித்தை வழிகாட்டியாக அமர்த்தி ஸவ்ர் புகையை வந்தடைந்து அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். அவரிடம் தனது வாகனங்களை ஒப்படைத்துவிட்டார்கள். நடந்ததை அறிந்த குரைஷிகள் பீதியடைந்து அவர்கள் இருவரையும் அனைத்து இடங்களிலும் தேடினார்கள். எனினும் அல்லாஹ் தனது தூதரை பாதுகாத்தான். அவர்கள் இருவரையும் தேடும் படலம் குறைந்த சமயத்தில் அவர்கள் இருவரும் மதீனாவை நோக்கி சென்றார்கள். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் சலிப்படைந்த குறைஷிகள் அவ்விருவரையும் அல்லது இருவரில் ஒருவரை யார் பிடித்துத் தருகிறாரோ அவருக்கு 200 ஒட்டகங்கள் சன்மானமாகத் தரப்படும் என அறிவித்தார்கள். எனவே மக்கள் மதீனா செல்லும் பாதையெங்கும் அவ்விருவரையும் தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் செல்லும் வழியை அறிந்திருந்த சுராகா இப்னு மாலிக் என்பவன் அவர்களைப் பிடிப்பதற்காக நெருங்கியதும் நபியவர்கள் அவனுக்கு எதிராக பிரார்த்தனை செய்யவே அவனது குதிரையின் இரு கால்களும் பூமியில் புதை உண்டு விட்டன. நபி அவர்களை பிடிக்க தன்னால் முடியாது என்பதை உணர்ந்த சுராக்கா தனக்கு எவ்வித தீங்கும் நேராது பாதுகாக்கும்படி பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்டினான். அவ்வாறே நபியவர்களும் பிரார்த்தித்தார்கள் அதன்பின் சுராகா மக்காவிற்குத் திரும்பி வந்து ஏனைய மக்களையும் திசை திருப்பி விட்டார். பின்னர் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது இஸ்லாத்தை ஏற்றார்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை வந்தடைந்ததும் நபி அவர்களின் வருகையால் மகிழ்ச்சியுற்ற மக்கள் தக்பீர் கூறினார்கள். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். நபியவர்கள் முதலில் குபாவில் பத்து நாட்கள் தங்கி இருந்தார்கள். அதன் பின்னர் ஜும்ஆ தினத்தில் பயணத்தை ஆரம்பித்து பனூசாலிம் இப்னு அவ்ஃப் கூட்டத்தாரிடத்தில் ஜும்மாவை தொழுது விட்டு தனது ஒட்டகத்தில் ஏறி, மக்கள் புடைசூழ மதினாவினுள் நுழைந்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமது இடங்களில் வந்து தங்குமாறு வேண்டி அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார்கள்.

நபியவர்கள் அவர்களிடம் அதனை விட்டு விடுங்கள் அது எங்க தங்க வேண்டும் என ஏவப்பட்டுள்ளது எனக் கூறினார்கள். அதன் பின்னர் அது இன்றைய மஸ்ஜித் நபவி அமைந்துள்ள இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தது. பள்ளிக்கு அருகில் இருந்த தனது தாய் மாமன் இடத்தில் தங்குவதே அல்லாஹ்வின் ஏற்பாடாக இருந்தது. எனவே நபியவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் தங்கினார்கள். பின்னர் நபியவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி தனது மனைவிகள் பிள்ளைகள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் மதீனாவிற்கு அழைத்து வரச் செய்தார்கள். பின்னர் நபியவர்களும் அவரது தோழர்களும் நபி அவர்களின் ஒட்டகம் மண்டியிட்ட இடத்தில் பள்ளியை கட்ட ஆரம்பித்தார்கள்.பைத்துல் முகத்தஸை கிப்லாவாக கொண்டு தூண்களாக மர குற்றிகளையும் கூரையாக ஓலைகளையும் பயன்படுத்தினார்கள்.

பின்னர் மதீனாவிற்கு வந்து பத்து மாதங்களின் பின் கஃபதுல்லாஹ் கிப்லாவாக மாற்றப்பட்டது பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிரீன்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள்.

இன்னும் யூதர்களை வரச் செய்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கையையும் மதீனாவை காப்பதற்கான உடன்படிக்கையையும் எழுதினார்கள். யூத அறிஞரான அப்துல்லாஹ் இப்னு சலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். மற்ற அனைத்து யூதர்களும் மறுப்பு தெரிவித்தனர்.

அந்த வருடத்தில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகியை மணமுடித்தார்கள். இரண்டாவது வருடத்தில் அதான் ஷரீஆவாக ஆக்கப்பட்டது. கஃபதுல்லாஹ் கிப்லாவாக ஆக்கப்பட்டதும் ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டதும் அவ்வருடத்தில்தான்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நிலைபெற்றுவிட்டபோது அல்லாஹ் அவரை அவனது உதவியை கொண்டு உறுதிப்படுத்தினான். முகாஜிரீன்களும் அன்சாரிகளும் அவரை சூழ இருந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவருக்கு கட்டுப்பட்டு இருந்தன. அச்சமயத்தில் இணைவைப்பாளர்களும் யூதர்களும் நயவஞ்சகர்களும் இணைந்து ஒரே அடியாக பல விதங்களில் இடைஞ்சல்களையும் துன்புறுத்தல்களையும் கொடுத்ததுடன் போருக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்கள். இறைவன் நபி அவர்களுக்கு அச்சூழல்களில் பொறுமையையும் மன்னிக்கும் மனப்பான்மையையும் சகிப்புத்தன்மையையும் கடைபிடிக்குமாறு ஏவினான். அவர்களது அநியாயங்கள் அதிகரித்து இன்னல்கள் எல்லை கடந்து போன சமயத்தில்தான் இறைவன் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதியளித்தான்.

(நிராகரிப்போரால்) போர் தொடுக்கப்பட்டோர்க்கு அவர்கள் அநீதமிழைக்கப்பட்ட காரணத்தால் (போர் தொடுத்தோரை எதிர்த்து) யுத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ்வோ இவர்களுக்கு உதவி செய்ய மிக்க ஆற்றல் உடையவன்.

(ஸூரா அல்ஹஜ்:39)

பின்னர் இறைவன் முஸ்லிம்களுக்கு அவர்களுடன் போருக்கு வருபவர்களுடன் போரிடுமாறு கூறினான்.

உங்களுடன் போர் புரிபவர்களோடு அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போரிடுங்கள், நீங்கள் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிக்கமாட்டான். ஸூரா அல்பகறா:190

பின்னர் பொதுவான அடிப்படையில் இணைவைப்பவர்கள் அனைவருடனும் போர் புரிவதைக் கடமையாக்கினான்.

இன்னும் இணைவைப்பவர்கள் ஒருங்கிணைந்து உங்களுடன் போர் செய்வதை போன்று நீங்களும் ஒருங்கிணைந்து அவர்களுடன் போர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ஸூரா தவ்பா:36

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவரது தோழர்களும் அல்லாஹ்வின் பால் மனிதர்களை அழைப்பதிலும் இறைவனின் பாதையில் போரிடுவதிலும் வரம்பு மீறுபவர்களின் சூழ்ச்சிக்குப் பதிலடி கொடுப்பதிலும் அநியாயம் இழைக்கப்படுவோரை அநியாயத்தில் இருந்து பாதுகாப்பதிலும் ஈடுபட்டார்கள். இறைவன் அவர்களை தனது உதவியின் மூலம் உறுதிப்படுத்தி வைத்தான்.

ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ரமலான் மாதம் பத்ர் களத்தில் இணைவைப்பாளர்கள் நபியவர்களுடன் போரிட்டார்கள். அவர்களுக்கு எதிராக இறைவன் முஸ்லிம்களுக்கு உதவி செய்து அவர்களது கூட்டத்தை பிரிந்து போகச்செய்தான்.

ஹிஜ்ரி மூன்றில் பனு கைனுகாஃ கோத்திரத்தார் உடன்படிக்கையை முறித்து முஸ்லிம்களில் ஒருவரைக் கொன்று விட்டனர். அதனால் அவர்களை நபியவர்கள் மதீனாவை விட்டும் ஷாம் தேசத்திற்கு நாடு கடத்தி விட்டார்கள்.

பின்னர் குறைஷிகள் பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக பலி வாங்குவதற்காக ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம் ஹத் களத்தில் முகாமிட்டார்கள். போர் நடைபெற்ற போது அம்பெரியும் வீரர்கள் நபி அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தமையால் முஸ்லிம்களுக்கு வெற்றி கிட்டவில்லை, எனினும் இணைவைப்பாளர்கள் மதீனாவில் நுழையாது மக்காவிற்கே திரும்பிச் சென்றனர்.

பின்னர் யூதர்களான பனு நழீர் கோத்திரத்தார் தங்களது உடன்படிக்கையை முறித்து நபியவர்களை கல்லை போட்டு கொலை செய்ய முயன்றனர். ஆனால் இறைவன் அவரை பாதுகாத்தான். பின்னர் ஹிஜ்ரி நான்கில் நபியவர்கள் அவர்களை முற்றுகை இட்டு ஹைபருக்கு நாடு கடத்தினார்.

ஹிஜ்ரி ஐந்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பனூ முஸ்தலக் கூட்டத்தாருக்கு எதிராக போர் தொடுத்தார்கள் அவர்களை வெற்றி கொண்டு செல்வங்களையும் கைதிகளையும் கனீமத் பொருளாக பெற்றார்கள். பின்னர் யூத தலைவர்கள் ஒன்றிணைந்து அஹ்ஸாப் போரில் முஸ்லிம்களை அவர்களிடத்திலேயே வைத்து அளிக்க சதித்திட்டம் தீட்டினர். இணைவைப்பாளர்கள் இன்னும் பல பிரிவினர்கள் கத்பான் கிளையினர் என அனைவரும் முஸ்லிம்களுக்கு எதிராக மதீனாவைச் சூழ ஒன்று கூடினர். அவர்களது சூழ்ச்சியை அல்லாஹ் அழித்து தனது தூதரையும் விசுவாசிகளையும் வெற்றி பெறச் செய்தான்.

மேலும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோரே அவர்களுடைய கடும் கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான். (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையையும் அடையவில்லை. (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு வெற்றி அளிக்க அல்லாஹ் போதுமானவனாக இருந்தான் .மேலும் அல்லாஹ் யாவரையும் விட மிக்க பலமிக்கவனாக யாவரையும் மிகைத்தவனாக இருக்கிறான். ஸூரா அஹ்ஸாப்:25

பின்னர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பனூ குறைழா கோத்திர யூதர்களின் மோசடியின் காரணமாகவும் அவர்கள் உடன்படிக்கையை முறித்ததன் காரணமாகவும் அவர்களை முற்றுகை இட்டார்கள். அல்லாஹ் அவருக்கு வெற்றியை வழங்கினான் .அவர்களில் ஆண்கள் கொலை செய்யப்பட்டு ஏனையவர்கள் கைதிகளாக்கப்பட்டு சொத்து செல்வங்கள் கனீமத் பொருட்களாக கைப்பற்றப்பட்டன.

ஹிஜ்ரி ஏழாவது வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவை தரிசித்து அதனை தவாஃப் செய்ய எண்ணினார்கள் ஆனால் அதனை இணை வைப்பாளர்கள் தடுத்து விட்டனர் எனவே அவர்களுடன் ஹுதைபியாவில் பத்து வருடங்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்பாக வாழந்ததோடு தான் விரும்பிய மதத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைப் பெற்றார்கள். எனவே மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தார்கள்.

ஹிஜ்ரி 7 இல் முஸ்லிம்களை துன்புறுத்திய யூத தலைவர்களை ஒழிப்பதற்காக கைபரை நபியவர்கள் முற்றுகையிட்டார்கள். அல்லாஹ் அவருக்கு அங்கும் வெற்றியை வழங்கி சொத்து செல்வங்களையும் நிலங்களையும் ஙனீமத்தாகக் கொடுத்தான். நபியவர்கள் பலநாட்டு அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள்.

ஹிஜ்ரி எட்டில் வரம்பு மீறுபவர்களைக் கண்டிப்பதற்காக சைத் இப்னு ஹாரிஸாவின் தலைமையில் ஒரு படையை நபியவர்கள் அனுப்பினார்கள். ஆனால் ரோமர்கள் பெரும் படையை திரட்டி வந்து முஸ்லிம் தளபதிகளை கொன்றார்கள். எஞ்சியவர்களை இறைவன் பாதுகாத்தான்.

பின்னர் மக்கா காபிர்கள் முஸ்லிம்களுடன் உடன்படிக்கையை முறித்து மோசடி செய்தார்கள் எனவே அவர்களுக்கு எதிராக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரியதொரு படையுடன் வந்து மக்காவை வெற்றி கொண்டார்கள். சிலைகளை அகற்றி அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்தும் அதனைத் தூய்மைப்படுத்தினார்கள்.

பின்னர் ஹிஜ்ரி எட்டில் ஷவ்வால் மாதத்தில் ஸகீஃப் மற்றும் ஹவாஸின் கோத்திரங்களின் வரம்புமீறல்களைத் தடுக்க ஹுனைன் போர் நடைபெற்றது. அவர்களை இறைவன் தோல்வியடையச் செய்து முஸ்லிம்களுக்கு அதிக அளவு கனீமத் பொருள்களை வழங்கினான். பின்னர் நபியவர்கள் முன்னேறிச் சென்று தாயிபை முற்றுகை இட்டார்கள். எனினும் அங்கு வெற்றி கிட்டவில்லை. அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்த பின்னர் நபியவர்கள் திரும்பினார்கள். பின்னர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். பின்னர் நபியவர்கள் மக்காவிற்கு திரும்பி வந்து பொருட்களை பங்கிட்டார்கள். பின்னர் நபியவர்களும் அவரது தோழர்களும் உம்ரா செய்தபின் மதீனாவிற்கு திரும்பினார்கள்.

 பின்னர் ஹிஜ்ரி ஒன்பதில் மிகக் கடுமையான கஷ்டமும் உஷ்ணமுமான ஒரு காலகட்டத்தில் தபூக் போர் நடைபெற்றது. நபி அவர்கள் ரோமர்களின் சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ரோமுக்கு படை நடத்திச் சென்று அங்கு முகாமிட்டார்கள். அங்கு எவ்வித சண்டைகளும் நடைபெறவில்லை. அங்கு சில குழுக்களுடன் நபியவர்கள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு சில கனீமத் பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். நபியவர்கள் மரணிக்கும் முன் அவர் பங்கேற்ற இறுதிப்போர் இதுவாகும்.

அவ்வருடத்தில் இஸ்லாத்தில் நுழைவதற்காக தமீம், தய்யி,  அப்துல் கைஸ், பனீஹனீபா போன்ற தூதுக்குழுக்கள் வருகை தந்தன. அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்களுடன் அந்த வருடம் ஹஜ் செய்யுமாறு ஏவினார்கள். அவர்களோடு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சூரா தவ்பாவை மக்களுக்கு ஓதிக் காண்பிக்குமாறு  அனுப்பி வைத்தார்கள். குர்பானி கொடுக்கும் தினமான ஹஜ் பெருநாளன்று மக்களிடம் பின்வரும் விடயத்தைப் பிரகடனம் செய்யுமாறு ஏவினார்கள்.

“மக்களே எந்த ஒரு நிராகரிப்பாளனும் சுவனம் நுழைய மாட்டான், இவ்வருடத்தின் பின்னர் எந்த ஒரு இணைவைப்பாளரும் ஹஜ் செய்ய முடியாது, நிர்வாணமாக வலம் வரக்கூடாது, யாருக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடன்படிக்கை உண்டோ  அது அதன் காலம் முடிவடையும் வரை செல்லுபடியாகும்.

ஹிஜ்ரி பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்வதாக முடிவு எடுத்து மக்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அவருடன் மதீனாவில் இருந்தும் வேறு பகுதிகளில் இருந்தும் பெரும் தொகையான மக்கள் ஹஜ் செய்தனர். நபி அவர்கள் துல்ஹூலைபா எனுமிடத்தில் உம்ராவுக்கான நிய்யத் வைத்து இஹ்ராம் ஆடையை அணிந்துகொண்டார்கள். துல்ஹஜ் மாதத்தில் மக்காவுக்கு வந்தடைந்து தவாவையும் ஸஃயையும் செய்து ஹஜ் கிரியைகளை மக்களுக்குக் கற்றுகொடுத்தார்கள். அரபா மைதானத்தில் மகத்தான ஒரு பேருரையை நபியவர்கள் நிகழ்த்தினார்கள். அதில் நீதமிகு இஸ்லாமிய சட்டங்களை எடுத்துரைத்தார்கள். ”மக்களே நான் கூறுவதை மிகக் கவனமாக கேளுங்கள். இந்த வருடத்தின் பின் நான் உங்களை சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது.

மக்களே இந்த (துல்ஹஜ் )மாதத்தையும் இந்த நாளும் இந்த மாதமும் இம்மக்கமா நகரும் எவ்வளவு புனிதமானவையோ உங்களின் உயிரும் பொருளும் மானமும் புனிதமானவையாகும். அறிந்து கொள்ளுங்கள் அறியாமை காலத்தில் அனைத்து செயல்களையும் நான் என் கால்களுக்கு கீழ் புதைத்து அழித்துவிட்டேன். அறியாமை கால கொலைகளுக்கு பலி வாங்குவதை விட்டு விட வேண்டும் .முதலாவதாக எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபிஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காக பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன். பனூ ஸஃத் கூட்டத்தினரிடம் பால்குடித்து வளர்ந்த அவரை ஹுதைல் கோத்திரத்தினர் கொன்றுவிட்டனர். அறியாமை காலவட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியில் இருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்புக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன். பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது வார்த்தையைக் கொண்டே அவர்களை ஹலாலாக அனுபவிக்கின்றீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் உடையும் அளிப்பது நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும். நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும் மறுமையில் என்னை பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்று கூடியிருந்தவரை கேட்டார்கள். அதற்கு கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள்; நிறைவேற்றினீர்கள்; விசுவாசமாக நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்றார்கள். நபியவர்கள் தங்கள் ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி பின்பு மக்களை நோக்கித் திருப்பி "அல்லாஹ்வே இதற்கு நீயே சாட்சி" என்று மூன்று முறை கூறினார்கள்.

இம் மார்க்கத்தை அல்லாஹ் பரிபூரணமாக்கி அதன் அடிப்படைகள் நிருவப்பட்ட போது  நபியவர்கள் அரபாவில் இருந்த சமயம் கீழ்வரும் வசனத்தை இறக்கினான்.

இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கி விட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.  (ஸூரா மாஇதா:3)

இந்த ஹஜ் ஹஜ்ஜத்துல் விதாஃ எனப்படுகிறது. ஏனெனில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு பிரியாவிடை கொடுத்தார்கள். அதன் பின்னர் ஹஜ் செய்யவில்லை. பின்னர் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மதீனாவிற்கு திரும்பி சென்றார்கள்.

ஹிஜ்ரி பதினொன்றில் சஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவருக்கு நோயின் வேதனை கடுமையான பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்களுக்கு தொழுகை நடத்துமாறு ஏவினார்கள். ரபீஉல் அவ்வல் மாதத்தில் நோய் அதிகரித்து ஹிஜ்ரி 11 திங்கட்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 12 முற்பகல் வேளையில் நபியவர்கள் மரணித்தார்கள். இதனால் முஸ்லிம்கள் மிகவும் கவலை அடைந்து பின்னர் செவ்வாய்க்கிழமை பகல் பொழுதில் குளிப்பாட்டப்பட்டு புதன் இரவு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள். நபியவர்கள் மரணித்தாலும் மார்க்கமோ மறுமை நாள் வரை இருக்கும்.

பின்னர் முஸ்லிம்கள் நபியவர்களுடன் அவரது குகை தோழராகவும் ஹிஜ்ரத்தில் உடன் சென்ற நண்பராகவும் இருந்த அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தங்களுக்கான கலீபாவாக தேர்ந்தெடுத்தார்கள். அவருக்குப் பின் உமர் அதனைத் தொடர்ந்து உஸ்மான் அடுத்து அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலீபாவாகினர். இவர்கள் நேர்வழி நடந்த குலமாஉர் ராஷிதூன்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளட்டும்.

இறைவன் தனது தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பல அருள்களை கொண்டு அருள் புரிந்தான் இன்னும் நற்குணங்களையும் அவருக்கு உபதேசித்தான்.

உம்மை அவன் அநாதையாகக் கண்டு கொள்ளவில்லையா ஆகவே (அரவணைப்பு பெற்று நீர் ஆறுதல் பெற)அவன் இடம் அளித்தான்.

 மேலும் (வேதம் என்ன மார்க்கம் என்ன என்பதை பற்றி) தெரியாதவராக உம்மை அவன் கண்டான். ஆகவே (அதற்கு )அவன் (உமக்கு) வழி காட்டினான் .

மேலும் தேவையுடையவராக அவன் உம்மைக் கண்டான் .(ஆகவே உமது தேவையை நிறைவேற்றி உம்மை) தேவையற்றவராக ஆக்கிவிட்டான்.

ஆகவே நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். இன்னும்( தர்மம்) கேட்பவரை விரட்டாதீர். மேலும் உம்மீது புரிந்துள்ள உமதிரட்சகனின் அருட்கொடையை பற்றி (அவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

ஸூரா ழுஹா:6-11

இறைவன் தனது தூதரை மகத்தான நற்குணங்களை உடையவர் என ஏனை எவரையும் புகழாத அளவுக்கு தனது வசனத்தின் மூலம் புகழ்ந்து கூறுகிறான்.

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர். ஸூரா அல்கலம்:4

உயர்வான சிறந்த நற்குணங்களின் மூலமே நபி அவர்களுக்கு பல உள்ளங்களையும் தன் பால் ஈர்த்து இறைவனை உதவியால் ஒன்று சேர்க்க முடிந்தது.

(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். மேலும் சொல்லின் கடுகடுப்பானவராக இறக்கமற்ற இதயம் உள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிப்பை கோருவீராக! மேலும்( யுத்தம் சமாதான முதலிய மற்ற) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக( யாதொரு காரியத்தை )நீர் முடிவு செய்தால் அல்லாஹ்வின் மீது (உம்முடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக )நம்பிக்கை வைப்பிராக (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தம் காரியங்களை அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான்.

ஸூரா ஆலுஇம்ரான்:159

இறைவன் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழு மனித சமுதாயத்திற்கும் பொதுவான தூதராக அனுப்பி அவர் மீது குர்ஆனை இறக்கி அருளி அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்குமாறு ஏவினான்.

இன்னும் அல்லாஹ்வின் பால் அவனின் அனுமதி கொண்டு (மக்களை) நீர் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்)

ஸூரா அஹ்ஸாப்:46

அல்லாஹ் தன் தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏனையவர்களை விட ஆறு விடயங்களை கொண்டு சிறப்பித்து வைத்துள்ளான்.

நான் ஏனைய நபிமார்களை விட ஆறு விடயங்களில் சிறப்பாக்கப்பட்டுள்ளேன் எனக்கு சொற்றொழுக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிறரின் உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தை கொண்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். எனக்கு கனீமத் பொருட்கள் ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு பூமியானது சுத்தமானதாகவும் மஸ்ஜிதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. நான் மக்கள் அனைவருக்கும் பொதுவானவனாக அனுப்பப்பட்டுள்ளேன். என்னைக் கொண்டு நபிமார்கள் முடிவடைகிறார்கள்.

(முஸ்லிம்)

அனைத்து மனிதர்களும் தங்களது இறைவனின் சுவனத்தில் நுழைவதற்காக நபி அவர்களை விசுவாசிப்பதும் அவரது மார்க்கத்தை பின்பற்றுவதும் கட்டாயமாகும்.

இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர் (இவ்விஷயங்களில்)அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவரை சுவனப் பதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக (தங்கி) இருப்பவர்கள் மேலும் இது மகத்தான வெற்றியாகும்.

ஸூரா நிஸா:13

இறைவன் வேதத்தை உடையோர்களில் நபி அவர்களை விசுவாசித்தவர்களை பாராட்டுகிறான் இன்னும் அவர்களுக்கு இரண்டு முறை கூலி வழங்கப்படும் என நன்மாராயம் கூறுகிறான்.

(ஆகவே குர்ஆனாகிய) இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் ( நம்முடைய) வேதத்தை கொடுத்து இருக்கிறோமோ அத்தகையோர் அவர்களே இதனை விசுவாசிக்கிறார்கள்

இன்னும் அவர்கள் மீது ( இவ்வேதம்) ஓதி காண்பிக்கப்பட்டால் அவர்கள் இதனைக் கொண்டு விசுவாசம் கொண்டோம் நிச்சயமாக இதுவும் எங்கள் இரட்சகன் இடமிருந்து வந்த உண்மையான வேதம்தான் இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகவே இருந்தோம் என்று கூறுகிறார்கள்.

அத்தகையோர் அவர்கள் பொறுமையாக இருந்ததன் காரணத்தால் இரண்டு தடவை அவர்களது கூலியை கொடுக்கப்படுவார்கள் இவர்கள் நன்மையைக் கொண்டே தீமையை தடுத்துக் கொள்வார்கள் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அவர்கள் (தர்மமாக) செலவும் செய்வார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்கள் இரண்டு முறை கூலி வழங்கப்படுவார்கள் அவர்களில் ஒருவர் வேதத்தை உடையோரில் தனது நபியையும் விசுவாசித்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தை அடைந்து அவரையும் விசுவாசித்து அவரை உண்மை படுத்தி பின்பற்றிய மனிதர் ஆவார் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விசுவாசிக்கவில்லையோ அவர் காஃபிர் ஆவார் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

அல்லாஹ்வை மற்றும் அவன் தூதரை விசுவாசம் கொள்ளவில்லையோ அவர் ( நிராகரிப்பவர் தான் )ஆகவே அத்தகைய நிராகரிப்போருக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.

 ஸூரா அல்பத்ஹ்:13

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக யூத கிறிஸ்தவர்களில் என்னைப் பற்றி ஒருவர் செவிமடுத்து பின்னர் என்னை ஈமான் கொள்ளாது மரணித்து விட்டால் அவர் நரகவாசிகளில் உள்ளவர் ஆவார்.

(முஸ்லிம்:154)

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் ஆவார் இறைவன் அவருக்கு சொல்லித்தந்தவற்றைத் தவிர மறைவான விடயங்களில் வேறு எதையும் அவர் அறிய மாட்டார் தனக்கோ ஏனையவருக்கோ நன்மையோ தீமையோ செய்யும் சக்தி அவருக்கில்லை.

நபியே நேர்கோடுவீராக அல்லாஹ் நாடியதை தவிர எனக்கே எவ்வித நன்மையை செய்வதற்கும் தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெற மாட்டேன் மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன் தீமை என்னை தொட்டு இருக்காது நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் விசுவாசம் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயம் கூறுபவனுமே அன்றி வேறில்லை.

ஸூரா அஃராப்:188

தனது மார்க்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே இஸ்லாத்தை கொண்டு இறைவன் அவரை அனுப்பி வைத்தான்.

அவன் எத்தகையவன் என்றால் தன்னுடைய தூதரை நேர்வழியை கொண்டும் சத்திய மார்க்கத்தை கொண்டும் அனுப்பி வைத்தான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்க செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்) இன்னும் (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.

ஸூரா அல்பத்ஹ்:28

தூதுவரின் பணி அவர் எதைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டாரோ அதை எத்தி வைப்பதாகும். நேர்வழி பெறுவது இறைவனிடத்தில் உள்ளதாகும்.

ஆகவே நபியே அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர் ஏனென்றால்) அவர்களைப் பாதுகாவலராக நாம் உம்மை அனுப்பவில்லை, நம் தூதை எத்தி வைப்பதை தவிர வேறு எதுவும் உம்மீது இல்லை.

ஸூரா ஷூரா:48

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு இந்த மார்க்கத்தின் பால் அழைப்பு விடுப்பதன் மூலம் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களை வெளியேற்றியதன் மூலமும் ஒரு அருட்கொடையாக அமைகிறார்கள் அல்லாஹ் அவரது முன்பின் பாவங்களை மன்னித்து விட்டான் அவர் மீது அதிகமாக ஸலவாத் கூறும்படி எங்களை ஏவியுள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்(அருள் பிரார்த்தனை) செய்கிறார்கள். ஆகவே விசுவாசிகளே நீங்கள் அவர் மீது ஸலவாத்து சொல்லுங்கள். சலாமும் கூறுங்கள்.

ஸூரா அஹ்ஸாப்:56

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவருடன் அவரது தோழர்களும் இந்த மார்க்கத்தை பரப்பும் பணியை கடும் முயற்சி செய்துள்ளார்கள் அவரையும் அவரது வழிமுறைகளையும் அவரது வாழ்க்கையையும் பின்பற்றுவது எம்மீது கடமையாகும்.

(உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூறுபவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரின் திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது.

ஸூரா அஹ்ஸாப்:21

இஸ்லாமிய மார்க்கம் ஆனது இயற்கையானதும் நீதியானதுமான மார்க்கமாகும் இன்னும் அனைத்து மக்களுக்காகவும் இறைவன் பொருந்திக் கொண்ட மார்க்கமாகும் இன்னும் இஸ்லாம் அனைத்து அடிப்படைகளையும் பல பிரிவுகளையும் ஒழுக்கங்களையும் நற்குணங்களையும் வணக்க வழிபாடுகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் உள்ளடக்கிய மார்க்கமாகும் இந்த சமுதாயமானது அதனை பின்பற்றுவதன் மூலமும் அதன்படி செயல்படுவதன் மூலமுமே சுபீட்சம் அடைய முடியும் இந்த மார்க்கத்தை தவிர இறைவன் மனிதர்களிடம் வேறு எந்த மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால் அப்பொழுது அவரிடம் இருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது மேலும் மறுமையில் அவர் நஷ்டம் அடைந்தோரில் இருப்பார்.

ஸூரா அலுஇம்ரான்:85

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஏதும் அவரது குடும்பத்தினர் மீதும் அருள் புரிந்தது போன்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் கீர்த்தியானவனும் ஆவாய்.

^1 இன்னும் நபியே அவர்கள் எவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதனை நீர் தெளிவாக்குவதற்காகவும் விசுவாசமுடைய கூட்டத்தினருக்கு (இது) நேர் வழியாகவும், ஓர் அருளாகவும் இருப்பதற்கே தவிர இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு இப்ராஹீம் துவைஜிரியின் உஸூலுத்தீனில் இஸ்லாமிய்யி எனும் நூலிலிருந்து

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
முஹம்மத் (ஸல்) - Islam Question & Answer