முதலாவதாக:
மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்வதானால், அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) என்போர், ஈமான்தாரிகளும் இறையச்சமுடையோர்களுமாவர். அவர்கள் தங்களது சகல கருமங்களிலும் அல்லாஹ் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் காரியமாற்றுவர். அதன்படி அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து நடப்பர், அவனது தடையுத்தரவுகளை தவிர்ந்து நடப்பர்.
இது பற்றி அல்லாஹ் பேசும்போது: 'அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) அவர்களுக்கு எந்தவிதமான அச்சமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள்தான் நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்போராவர். இம்மை வாழ்விலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மாராயம் உண்டு, அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுவதற்கு எதுவும் இல்லை. அதுதான் மாபெரும் வெற்றியாகும்." (யூனுஸ்: 62-64)
ஹாபிழ் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் தப்ஸீருல் குர்ஆனில் அழீம் எனும் தனது நூலில் (4/278) கூறும்போது: 'தனது நேசர்கள், நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோராவர் என்பதாக அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான். அவர்களை அவர்களது இரட்சகன் அவ்வாறே வர்ணிக்கிறான். எனவே யாரெல்லாம் பயபக்தியுடையோராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இறை நேசர்களே! 'அவர்களுக்கு யாதொரு அச்சமுமில்லை" என்பது அவர்கள் எதிர்நோக்கும் மறுமையின் அமளிதுமளிகளின்போதாகும். 'அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்" என்பது உலகில் நடக்கப்போவது பற்றியதாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ் உள்ளடங்கலாக ஏராளமான முன்சென்ற நல்லறிஞர்கள் கூறும்போது: 'அல்லாஹ்வின் நேசர்களை பார்ப்பது, அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும். மர்பூஆன நபி மொழி ஒன்றில் இது பற்றி வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர், நபிமார்களும் ஷுஹதாக்களும் அவர்களது அந்தஸ்தை ஆசை வைக்குமளவு உயர்ந்த நிலையில் இருப்பர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! (தெரிந்தால்) அவர்களை நாமும் நேசிக்கலாமே என்று சொல்லப்பட்டது. சொத்துக்காகவோ குடும்ப அந்தஸ்துக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வுக்காகவே நேசம்பாராட்டியவர்கள், அவர்களது முகங்கள் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும், ஒளியிலான மேடையில் இருப்பார்கள், மக்கள் அஞ்சும்போது இவர்கள் அஞ்சாமல் இருப்பார்கள், மக்கள் கவலையடையும்போது இவர்கள் கவலைப்படாமல் இருப்பார்கள். பின்னர் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்: 'அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) அவர்களுக்கு எந்தவிதமான அச்சமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்." இமாம் அபூதாவுத் அவர்கள் ஜெய்யித் தரத்திலான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். இமாம் அல்பானி அவர்கள் ஸில்ஸிலா ஸஹீஹாவில் (7/1369) ஸஹீஹான செய்தி என்று பதிவு செய்துள்ளார். (சுருக்கமாகவும் சிறு மாற்றத்துடனும்)
இரண்டாவதாக:
ஒரு அடியானின் ஈமான் மற்றும் தக்வாவின் அளவுக்கேற்ப இறைநேசத்தின் தரம் கூடிக் குறையும். அந்தவகையில் அனைத்து முஃமின்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வின் நேசமும் நெருக்கமும் இருக்கிறது. ஆனால் அல்லாஹ்வை நெருங்குகின்ற உள, உடல் ரீதியான நல்லமல்களுக்கேற்ப இது கூடிக்குறைகிறது.
இந்த வகையில் விலாயத் எனும் இறைநேசத்தின் படித்தரத்தை மூன்று தரங்களாக பிரித்துப் பார்க்க முடியும்.
1. தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொள்ளும் நிலை.
பாவம் செய்யும் ஈமான்தாரிகள் இவ்வகையைச் சார்ந்தோராவர். தனது ஈமான் மற்றும் நல்லமல்களுக்கேற்ப இறைநேசத்தில் இவரது பங்கு இருக்கும்.
2. முக்தஸித் எனும் மத்திய நிலை.
அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்தும் விலக்கல்களை தவிர்ந்தும் வாழும் முஃமின். ஆனால் உபரியான வணக்கங்களில் ஆர்வம் காட்ட மாட்டார். இவர் முந்தையவரை விட தரம் கூடியவர்.
3. நல்லறங்களில் போட்டி போட்டு முந்தக்கூடியவர்.
இவர் கடமைகளை மேற்கொள்வதோடு உபரியான நல்லறங்களிலும் கரிசனை காட்டக்கூடியவர். உள ரீதியாக அல்லாஹ்வை வணங்குவதில் உயரிய நிலையை கொண்டவர். இவர்தான் இறைநேசத்தில் உயர்ந்த நிலையிலுள்ளவர்.
அத்துடன் நபித்துவம் என்பது அதி உயர்ந்த, உன்னதமான இறைநேச நிலையாகும்.
n~ய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மஜ்மூஉ பதாவாவில் (6ஃ10) கூறும்போது : 'மனிதர்கள் மூன்று நிலையில் இருக்கின்றனர்.
1) தனக்குத்தானே அநியாயம் செய்து கொள்பவர்.
2) மத்திய நிலையில் இருப்பவர்.
3) நன்மையான விடயங்களில் போட்டி போட்டு முந்திக் கொள்பவர்.
தனக்குத்தானே அநியாயம் செய்துகொள்பவர்: கடமைகளை விடுவதன் மூலமோ அல்லது தடைகளை செய்வதன் மூலமோ பாவம் புரிபவராவார்.
முக்தஸித்: கடமைகளை நிறைவேற்றுவதுடன் பாவங்களை தவிர்ப்பவர்.
நல்லறங்களில் முந்திக் கொள்பவர்: வாஜிபான, முஸ்தஹப்பான அமல்களில் அவருக்கு முடியுமானவற்றைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குபவர். மற்றும் ஹராமான வெறுக்கத்தக்க காரியங்களை தவிர்ப்பவர்.
மத்திய நிலையில் உள்ளவரும், நல்லறங்களில் முந்திக்கொள்பவரும் சிலவேளை பாவங்களுக்கு உட்படலாம். ஆனால் தவ்பா மூலமோ பாவங்களை போக்கும் நல்லறங்கள் மூலமோ பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் சோதனைகள் மூலமோ வேறு காரணிகளாலோ அவை மன்னிக்கப்படும். நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தப்படுத்திக் கொள்பவர்களையும் நேசிக்கிறான். இவ்விரு தரப்பாரும் அல்லாஹ் தனது வேதத்தில் குறித்துப் பேசிய அவ்லியாக்களில் உள்ளவர்களாவர். 'அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) அவர்களுக்கு எந்தவிதமான அச்சமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் எத்தகையோரெனில் ஈமான் கொண்டவர்கள், மேலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்போராவர்."
எனவே அவ்லியாக்கள் என்பதற்கான அளவுகோல் 'விசுவாசிகளும் பயபக்தியுடையோரும்" என்பதாகும்.
இது இரண்டாகப்பிரித்துப் பார்க்கப்படும்.
1) பொதுவானது: மத்திய நிலையில் உள்ளோர்.
2) குறிப்பானது: நல்லறங்களில் முந்திக்கொள்வோர்.
நல்லறங்களில் முந்திக்கொள்வோர், நபி மார்கள் மற்றும் ஸித்தீகீன்கள் போன்று உயர்ந்த நிலையில் உள்ளோராவர்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புகாரி அவர்கள் தனது ஸஹீஹில் பதிவு செய்து வைத்துள்ள ஹதீஸில் (ஹதீஸுல் குத்ஸி) இவ்விரு சாராரையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 'அல்லாஹ் கூறுகிறான்: எனது நேசர் ஒருவரை யார் எதிர்க்கிறாரோ அவர் என்னை போருக்கு அழைக்கிறார். நான் கடமையாக்கிய ஒன்றை நிறைவேற்றுவது கொண்டே தவிர எனது அடியான் வேறு எதன் மூலமும் என்னை நெருங்குவதில்லை. எனது அடியான் நான் அவனை நேசிக்கும் வரைக்கும் உபரியான நல்லறங்கள் மூலம் என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் காதாக, பார்க்கும் பார்வையாக, பிடிக்கும் கரமாக, நடக்கும் காலாக, நான் ஆகிவிடுவேன். என் மூலமே அவன் பார்ப்பான், கேட்பான். என் மூலமே அவன் பிடிப்பான், நடப்பான். அவன் என்னிடம் கேட்டால், நிச்சயமாக அவனுக்கு அதை நான் கொடுப்பேன். என்னைக் கொண்டு பாதுகாவல் தேடினால் நிச்சயமாக நான் அவனுக்கு பாதுகாவல் அளிப்பேன். எனது முஃமினான அடியானின் உயிரை கைப்பற்றுவதைத் தவிர, நான் செய்வதாக முடிவெடுத்த ஒன்றில் நான் தயக்கம் காட்டுவதில்லை. அவன் மரணிப்பதை வெறுத்தால் அவனுக்கு தீங்கிழைக்க நான் வெறுக்கிறேன். அவசியம் அவனுக்கு அவன் விரும்பியது உண்டு."
ஈமான்தாரிகளில் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டவருக்கு அவரது ஈமான் மற்றும் இறையச்சத்திற்கு ஏற்ப இறைநேசம் கிடைக்கும். அதே போல் அவரது பாவகாரியங்களுக்கு ஏற்ப இறைநேசத்திலிருந்து அவர் தூரமாகுவார். அதாவது ஒரு தனி நபரில், நற்கூலியை கொண்டு வரும் நல்லறங்களும், தண்டனையைக் கொண்டுவரும் தீவினைகளும் சில வேளை ஒன்றாக சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரே நபர் கூலி கொடுக்கப்படவும் தண்டனை வழங்கப்படவும் முடியுமாகிறது. இறைத் தூதரின் அனைத்துத் தோழர்களும் இஸ்லாத்தின் நல்லறிஞர்களான இமாம்களும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரும் இதே கருத்தில்தான் உள்ளனர். உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள எவரும் நரகில் நிரந்தரமாக தங்க மாட்டார் எனும் அடிப்படை விதியை அனைவரும் ஏற்றுள்ளனர்.
n~ய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறும்போது: 'யார் ஈமான் கொண்டவராகவும் இறையச்சம் உள்ளவராகவும் இருக்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு நேசராக இருக்கிறார். அவ்வாறில்லாதவர் அல்லாஹ்வுக்கு நேசராக இருக்க முடியாது. அவரிடம் சிறிதளவு ஈமானும் இறையச்சமும்இருந்தால் அவரிடம் இறைநேசத்திலும் சிறிதளவு இருக்கும்." பதாவா முஹிம்மா: பக்:83.
மூன்றாவதாக:
இறைநேசம் என்பது எவரதும் தனிப்பட்ட சொத்தல்ல. குறிப்பிட்ட ஒரு சாராரின் பிரத்தியேக அடையாளமுமல்ல. அனந்தரமாகவோ சின்னமாகவோ பெறவும் முடியாது. மாறாக அது ஒரு தெய்வீக அந்தஸ்தாகும். உள்ளத்தில் அல்லாஹ்வை நேசிப்பதனூடாகவும் அவனை பெருமைப்படுத்துவதன் ஊடாகவும் ஆரம்பித்து நடைமுறை செயல்பாடுகள் மூலமாக நிரூபணமாகிறது. இதன் மூலம் தனிநபர் அல்லாஹ்வின் அன்பையும் நேசத்தையும் பெறுகிறார்.
நான்காவதாக:
இறைநேசம் அதற்குரியவருக்கு ஹராமானவற்றை செய்வதற்கோ, வாஜிபானவற்றை விடுவதற்கோ அனுமதி வழங்காது. மாறாக அவ்வாறு அவர் செய்தால் அவரது இறைநேசத்தில் குறை உள்ளது என்பதற்கு அது ஆதாராமாகிவிடும். அதேபோல் அவ்லியாக்கள் என்று சொல்லப்படுபவர்களை நாடிச் சென்று அவர்களை நபிமார்களின் அந்தஸ்திற்கு உயர்த்துவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் அல்லாஹ் தடுத்த எல்லை மீறும் செயல்களாகவும் மக்கள் இணைவைப்பில் விழுவதற்குரிய பெரும் காரணியாகவும் இருக்கிறது.
சில மனிதர்கள் இந்த எல்லையை தாண்டிச் சென்று பெரிய இணைவைப்பில் விழுந்துவிடுகிறார்கள். இறைநேசம் என்பதையும், அவ்லியாக்களின் அந்தஸ்தையும் பிழையாக விளங்கியதன் விளைவே அதுவாகும். எனவேதான் அல்லாஹ்வை விட்டுவிட்டு அவ்லியாக்கள் என்போரை அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள். அவர்களுக்காக அறுத்துப் பலியிட்டு குர்பான்களை முன்வைக்கிறார்கள். மேலும் அவர்களது அடக்கஸ்தலங்களை தவாப் செய்கிறார்கள்.
ஐந்தாவதாக:
அவ்லியா என்பதற்கு 'அஸ்ஹாபுல்லாஹ்" என்று பிரயோகிப்பதைப் பொறுத்தவரை, அவ்வாறான பிரயோகம் சரி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.
இறைநேசர்களில் மிக மேலானவர்களும் அதி உன்னதமானவர்களும் ரஸ_ல்மார்களும் நபிமார்களுமாவர். பின்னர் நபித்தோழர்களும் பின்னர் அவர்களை அடுத்து வருபவர்களும் (தாபிஈன்கள்) அதன் பின்னர் அவர்களை அடுத்து வருபவர்களும் (தபஉத் தாபிஈன்கள்) ஆவர். இவர்களில் எவருக்கும் 'அஸ்ஹாபுல்லாஹ்" என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாக எமக்குத் தெரியவில்லை.
ஆனால் குர்ஆன்வாதிகளுக்கு (குர்ஆனை பின்பற்றக்கூடியவர்கள்) 'அஹ்லுல்லாஹ் - அல்லாஹ்வைச் சார்ந்தோர்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டமை நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்தியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களில் அல்லாஹ்வுக்கு நேசர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கப்பட்டது. அவர்கள்தான் அஹ்லுல் குர்ஆன் (குர்ஆனை பின்பற்றி நடப்போர்), அல்லாஹ்வை சார்ந்தோரும் அவனுக்குரியோரும். அஹ்மத்: 11879, இப்னுமாஜா: 215. ஸஹீஹ் இப்னு மாஜாவில் இமாம் அல்பானி இதை ஸஹீஹ் என்று பதிவு செய்துள்ளார்.
அஹ்லீன் : அஹ்ல் (சார்ந்தவர்) என்பதன் பன்மை.
அஹ்லுல் குர்ஆன்: அல்குர்ஆனை மனனமிட்டோர், ஓதுவோர், அதைக் கொண்டு அமல் செய்வோர்.
அஹ்லுல்லாஹ்: அல்லாஹ்வுக்கேயுரிய பிரத்தியேக அல்லாஹ்வின் நேசர்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.