0 / 0
19/முகர்ரம்/1446 , 25/ஜூலை/2024

தாயத்துகள் மற்றும் அவற்றைக் கட்டுதல் போன்றவற்றின் சட்டங்கள்

கேள்வி: 10543

தாயத்து அணிதல்  கண்ணேறு மற்றும் பொறாமை என்பவற்றைத் தடுக்குமா?

Summary of answer

தாயத்து அணிதல் ஆகுமானதா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது தொடர்பாக தவ்ஹீத் நூலையும் பிலால் பிலிப்ஸ் எழுதிய சில நூல்களையும் வாசித்துள்ளேன். எனினும் முவத்தா ஹதீஸ் நூலில் சில தாயத்து வகைகளை ஆகும் எனக் கூறும் ஹதீஸ்களைப் படித்தேன். ஸலபுகளில் சிலர் அவற்றை அனுமதித்துள்ளதாக தவ்ஹீத் நூலில் உள்ளது. இந்த ஹதீஸ்கள் முவத்தா பாகம் ஐம்பதில் நான்கு, பதினொன்று மற்றும் பதிநான்காம் இலக்க ஹதீஸ்களில் வந்துள்ளது. இதற்கான பதிலையும் இந்த ஹதீஸ்களின் நம்பகத்தன்மை பற்றியும் இத்தலைப்பு தொடர்பான மேலதிக விடயங்களையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது:

வினாவை கேட்டவர் சஹீஹ் தன்மையை தெளிவுபடுத்த கோரியுள்ள ஹதீஸை நாம் அறியவில்லை. அவை முவத்தாவின் 50ஆவது பாகத்தில் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால் முவத்தா ஒரு பாகத்தை உடைய ஒரு நூலாகும். அதனால் இவ்விடயம் தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்களை கூறி அல்லாஹ் நாடினால் அவை பற்றிய அறிஞர்களின் தீர்ப்புக்களையும் விளக்கப்படுத்துகிறோம். அவற்றில் சில இது பற்றி வினவியவர் கேட்டவையாகவும் இருக்கலாம்.

1: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  அறிவிக்கிறார்கள். நபியவர்கள் பத்து விடயங்களை வெறுத்துள்ளார்கள்.குங்குமம் கலந்த   மஞ்சள் நிற வாசனைத் திரவியம் , நரைத்த முடியை சாயமிடல், சாரத்தை தரையில் படும்படி அணிதல், தங்க மோதிரம் அணிதல், தாயக்கட்டையினால் விளையாடுதல், அந்நிய ஆண்கள் முன் அலங்காரத்தை வெளிப்படுத்தல், முஅவ்விததைன் அல்லாதவற்றால் ஓதிப் பார்த்தல், தாயத்து அணிதல், பாலூட்டும் தாயுடன் உறவு கொள்வதன் மூலம் குழந்தைக்கு தீங்கிழைத்தல், நீரை அதனிடத்திலிருந்து வெளியேற்றுதல். நஸாஈ 50880 அபூதாவூத் 4222

நீரை அதனிடத்திலிருந்து வெளியேற்றுதல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து இருந்து மணியை வெளியேற்றுதல் என்பதாகும்.

குழந்தைக்குத் தீங்கிழைத்தல் என்றால் பாலூட்டும் தாயுடன் உடலுறவு கொள்ளும் பொழுது தாய் கருவுற்றால் குழந்தைக்கான தாய்ப்பாலூட்டல் தடைப்படும். அது குழந்தைக்கு தீங்காக அநீதியாக அமையும் என்பதாகும்.

இந்த ஹதீஸை ளஃஈபின் நஸாஇ 3075யில் இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் பலவீனமானது என கூறியுள்ளார்.

2: அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக சைனப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நிச்சயமாக மந்திரித்தல், தாயத்து அணிதல், வசியம் செய்தல் என்பன ஷிர்க்காகும் என நபியவர்கள் கூற நான் செவிமடுத்தேன்.

சைனப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். நான் அவர்களிடம் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கு கண்ணில் நீர் வடிந்து கொண்டிருந்தது. அதற்கு நான் யூதர் ஒருவரிடம் ஓதிப் பார்த்தேன். ஓதி பார்க்கும் பொழுது அது நின்று விடுகிறது எனக் கூறினேன்.

அதற்கு அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக அது சைத்தானின் செயலாகும். அவன்தான் கண்ணில் குத்திக்கொண்டிருக்கின்றான், அவன் மந்திரிக்கும் போது தடுத்துக்கொள்கின்றான்.

மனிதர்களின் இறைவனே! நோயைப் போக்கிவிடுவாயாக! நீயே குணப்படுத்துபவன்! குணப்படுத்துவாயாக! உன்னைத் தவிர குணப்படுத்துபவன் வேறு யாருமில்லை. நோய் எதுவும் மீதமின்றி முற்று முழுதாக குணப்படுத்துவாயாக என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று நீரும் கூறுவதே உமக்கு போதுமானதாகும் என அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 3883) (இப்னு மாஜா 3530)

ஸில்ஸிலதுஸ் ஸஹீஹாவில் இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் இது ஸஹீஹ் என கூறியுள்ளார்கள். (331/2972)

3: உக்பா இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறத் தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள். எவர் தனது காரியம் நிறைவேறுவதற்காக தாயத்தை தொங்க விடுகின்றாரோ அவருடைய நோக்கத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுகத்தை கொடுக்க மாட்டான்.

ஆதாரம் அஹ்மத் 16951

ஜாமிஉல் ளஈபில் இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை பலவீனமானது என கூறியுள்ளார். 5703

4: உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹனீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் 10 பேரை கொண்ட ஒரு குழு வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் உறுதிப்பிரமாணம் வாங்கவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! 9 நபர்களிடத்தில் உறுதிப்பிரமாணம் வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அவர் மீது தாயத்து உள்ளது என கூறினார்கள். உடனே தாயத்து அணிந்தவர் தன் கையை ஆடைக்குள் விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் உறுதிப் பிரமாணம் செய்துவிட்டு எவர் தாயத்தை தொங்க விடுகிறாரோ அவர் இணைவைத்து விட்டார் எனக் கூறினார்கள்.   (அஹ்மத் 16969)

இந்த ஹதீஸை இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹில் ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.492

இரண்டாவது:

தாயத்து என்பது தீங்குகளை தடுப்பதற்காகவும் குறிப்பாக கண்ணேறிலிருந்து பாதுகாப்புப் பெறவும் குழந்தைகள் அல்லது பெரியவர்களின் கழுத்தில் தொங்கவிடப்படக்கூடிய அல்லது வீடுகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றில் வைக்கப்படக்கூடிய மாலையாகும்.

இது சில அறிஞர்களின் கருத்துகளும் தாயத்து தொடர்பான அவர்களது தீர்ப்புகளுமாகும். அவற்றில் பல பயன்களும் விளக்கங்களும் காணப்படுகின்றன.

1: அஷ்ஷெய்க் சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் கருத்து.

சஹாபாக்கள் தாபியீன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோரில் உள்ள அறிஞர்கள் குர்ஆன் மற்றும் இறைவனின் பெயர்கள், பண்புகள் என்பவற்றை தாயத்தாக தொங்கவிடுவது கூடுமா எனும் விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவும்.

அது ஆகுமானது என்பது ஒரு சாராரின் கருத்தாகும். இதுவே  அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் மற்றும் சிலரின் கருத்தாகும். அதுவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெறும் ஹதீஸின் வெளிப்படையான கருத்தாகும். அபூஜஃபர் பாகிர் மற்றும் இமாம் அஹ்மத் அவர்களின் ஒரு அறிவிப்பிலும் இக்கருத்தையே. தாயத்து கட்டுவது கூடாது என்ற ஹதீஸ்கள் இணைவைப்பை கலந்த தாயத்தை கட்டுவது கூடாது என்பதை குறிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். மாறாக குர்ஆன் மற்றும் இறைவனின் பெயர்களை கொண்டு ஓதிப் பார்த்தல் எவ்வாறு ஆகுமோ அதுபோன்றே அவற்றை தாயத்தாக அணிவதும் ஆகும் எனக் கூறுகிறார்கள். இமாம் இப்னுல் கையிம் அவர்களால் தேர்வு செய்யப்பட்டதன் வெளிப்படையான கருத்தும் அதுவே என நான் கூறுகிறேன்.

மற்றுமொரு சாரார் அது ஆகுமானதல்ல எனக் கூறுகின்றனர். இக்கருத்தையே இப்னு மஸ்ஊத் இன்னும் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரும் கூறுகின்றார்கள். இன்னும் ஹூதைபா, உக்பா இப்னு ஆமிர், இப்னு உகையிம் ஆகியோரின் கருத்தும் இதுவாகும். இப்னு மஸ்ஊதின் மாணவர்கள் உட்பட தாபிஈன்களில் ஒரு சாராரும் இதனையே கூறுகின்றனர். இமாம் அஹ்மத் அவர்கள் ஒரு அறிவிப்பிலும் இக்கருத்தே இடம்பெற்றுள்ளது. அவரது பல மாணவர்கள் அதனையே தெரிவ செய்துள்ளனர். பின்னால் வந்த பலர் அதனையே உறுதியாகக் கூறியுள்ளனர். அனைத்து தாயத்துகளும் ஹராம் என்பவர்கள் இந்த ஹதீஸையும் அதிலுள்ள கருத்தைத் தரும் வேறு நபிமொழிகளையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அந்த ஹதீஸ் பொதுவாகவே இடம்பெற்றுள்ளது. அதில் குர்ஆனில் உள்ளவை இல்லாதவை என வேறுபடுத்தப்படவில்லை. ஆனால் மந்திரிப்பதை குர்ஆனில் உள்ளவை இல்லாதவை என வெவ்வேறாகக் கூறப்பட்டுள்ளது. இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னர் கூறியது போன்று பொதுவாக எதையும் தாயத்தாக்க கூடாது என்பதையே இந்த ஹதீஸை அறிவித்த சஹாபாக்களும் விளங்கி வைத்துள்ளனர் என்பது அதனை உறுதிப்படுத்துகிறது.

ஈஸா இப்னு ஹம்ஸாவிடமிருந்து அபூதாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் அப்துல்லாஹ் இப்னு உகையிம் அவருக்கு சிவப்பு நோய் ஏற்பட்டிருந்த நிலையில் அவரிடம் வந்தேன். நீங்கள் தாயத்தை அணியவில்லையா என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அதிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாவல் தேடுவோம். யார் தாயத்தை அணிந்து கொண்டாரோ அவர் அதன் பொறுப்பில் விடப்படுவார் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாக அவர் கூறினார்.

இது அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் பெயர்களை தொங்கவிடும் விடயத்தில் கூட அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. அவ்வாறிருக்கும் போது அவர்களுக்குப் பின்னர் சைத்தான்கள் இன்னும் ஏனையவற்றின் பெயர்களைக் கொண்டு மந்திரித்தல், இன்னும் அவற்றை தாயத்தாக அணிதல், அவர்களை கொண்டு பாதுகாப்பு தேடுதல், அவர்களுக்காக பிராணிகளை அறுத்தல், அவர்களிடம் தீமையை தடுக்க கோரியும் நன்மையை வேண்டியும் பிரார்த்தித்தல் ஆகியவை தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? அது முழுமையான இணைவைப்பாகும். இறைவன் பாதுகாத்தவர்களை தவிர பெரும்பாலானவர்கள் அவற்றை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நபியவர்கள் கூறியவற்றையும் சஹாபாக்கள் தாபியீன்களின் நிலைப்பாட்டையும் அதன் பின் வந்த அறிஞர்கள் இப்பாடத்திலும் இந்நூலின் ஏனைய பாடங்களிலும் கூறியுள்ளவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். பிற்பட்ட காலங்களில் தோன்றிய விடயங்களையும் பாருங்கள். அது உங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கம் எந்தளவு அந்நியப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். அல்லாஹ்வே உதவப் போதுமானவன்.

தப்ஸீருல் அஸீஸ் அல்ஹமீத் பக்கம் (136/138)

இமாம் ஹாபிழ் ஹகமி அவர்கள் கூறுகிறார்கள்.

தெளிவான குர்ஆன் வசனங்கள் இன்னும் ஸஹீஹான தெளிவான ஹதீஸ் களில் உள்ளவையாக இருந்தாலும் அவை தாயத்தாக அணியப்படலாமா என்பதில் முன்னைய கால சஹாபாக்கள் தாபியீன்கள் இன்னும் அவர்களை தொடர்ந்தவர்கள் அனைவரிடத்திலும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

அவர்களில் முன்னைய அறிஞர்களின் சிலர் அதனை ஆகுமானது என்கிறார்கள். ஆஇஷா ரலியல்லாஹு அன்ஹா அபூஜஃபர் முஹம்மத் இப்னு அலீ ஆகியோர் இன்னும் சில முன்னோர்கள் அதனை அறிவித்துள்ளார்கள். இன்னும் அவர்களில் சிலர் அதனை தடுத்து   வெறுப்புக்குரியதாக அதைக் கருதியவர்களும் உண்டு. அப்துல்லாஹ் இப்னு உகையிம், உக்பா இப்னு ஆமிர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஆகியோரும் அவரது மாணவர்களான அஸ்வத் ,அல்கமா ஆகியோரும் இன்னும் அவர்களுக்கு பின்னர் வந்தவர்களான இப்ராஹீம் அந்நகஈ ஆகியோரும் இன்னும் ஏனையவர்களும் அக்கருத்தையே கூறியுள்ளார்கள்.

எவ்வித ஐயமுமின்றி குறிப்பாக எமது காலத்தில் அதனைத் தடுப்பதே தவறான நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும் வழியை மூடுவதாக அமையும்.

தங்கள் மனதில் மலையை விட பெரியளவு ஈமான் உள்ள நிலையில் கூட அந்தத் தூய்மையான கண்ணியமான காலத்தில் அதிகமான சஹாபாக்களும் தாபியீன்களும் வெறுத்தார்கள் எனும் போது குழப்பங்களும் சோதனைகளும் சூழ்ந்த எமது இக்காலத்தில் அதனை வெறுப்பது முதன்மையானதும் மிக அவசியமானதுமாகும்.

இச்சலுகையைப் பயன்படுத்தி தெளிவாக தடுக்கப்பட்ட பலவற்றைச் செய்வதோடு இதனை அதற்கான தந்திரமாகவும் சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர் எனும் போது எவ்வாறு தடுக்காமலிருக்கலாம்?

பாதுகாப்புத் தேடி அணியப்படும் அந்தத் தகடுகள் தாயத்துகள் என்பவற்றில் ஒரு வசனத்தையோ அத்தியாயத்தையோ பிஸ்மில்லையோ அல்லது அது போன்ற ஏதோ ஒன்றை எழுதி, பின்னர் சைத்தானிய மந்திரங்களை எழுதி விடுவதும் அதில் சிலதாகும். அவர்களின் நூட்களைப் பற்றிய அறிவுள்ளவர்களைத் தவிர வேற யாரும் இதனை அறிந்துகொள்ள முடியாது. பொதுமக்களின் உள்ளங்கள் இறைவன் மீது சார்ந்திருப்பதை விட்டும் அவர்கள் எழுதியவற்றின் மீது நம்பிக்கை கொள்ளவைத்துவிடுவதும் அவற்றில் சிலதுதான். எந்த வித நோயும் இல்லாத பலரையும் அச்சத்திலாழ்த்திவிடுகின்றனர். தாயத்துத் தகடு தொழில் செய்வோரில் சிலர் ஒருவருடைய பணத்தை தந்திரமாக எடுக்க முற்படும்போது தன் மீது அவர் வைத்திருக்கும் பக்தியைப் பயன்படுத்தி அவரிடத்தில் வந்து உனது குடும்பத்தில் செல்வத்தில் அல்லது உமக்கு இவ்வாறு  ஏற்படும் அவ்வாறு ஏற்படும் என பலவற்றையும் கூறுவார். அல்லது உங்களுக்கு ஒரு ஜின் உள்ளது என்பது போன்றவற்றை கூறி அவருக்கு சைத்தானிய ஊசலாட்டங்களை வரவழைத்து, இவர் உண்மையாகவே மறைவானவற்றை அறிந்தவர் என நம்பவைத்து தன் மீது அதிக அன்புள்ளவராகவும் இவருக்கு நலம் நாடுபவராகவும் எண்ணச் செய்வார்.

அறியாமையுள்ளோரின் உள்ளம் தமக்கு வர்ணிக்கப்பட்டவற்றால் அஞ்சி நடுங்கும் போது தனது இறைவனைப் புறக்கணித்து விட்டு அந்த மகா பொய்யன் பால் சென்று, இறைவனை தவிர்த்து அவன் பால் சாய்ந்து அவனையே நம்பி அவனே நன்மை தீமைகளை தருபவன் போன்று, அவனிடமே நீங்கள் கூறியவற்றிலிருந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு தடுத்துக் கொள்வது? என்றெல்லாம் அவர்களிடமே கேட்கின்றார்கள்.

சமயம் பார்த்திருந்து அவன் தனது எதிர்பார்ப்பு, பேராசை என்பவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நீ இன்னின்னவற்றை எனக்கு கொடுத்தால் தீங்குகளை தடுக்கும் இவ்வளவு நீளமான இவ்வளவு அகலமான தாயத்தை நான் எழுதிக் கொடுப்பேன். அதை செய்வேன் இதை செய்வேன் எனக் கூறி அவனை அவனது கூற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வான். இந்த தாயத்து இன்னின்ன நோய்களிலிருந்து பாதுகாக்கும் என அலங்காரவார்த்தைகளால் வர்ணிப்பான்.

இவ்வளவுக்குப் பிறகும் இதனை எவ்வாறு சிறிய இணைவைப்பாகக் கருதலாம்? இல்லை மாறாக அது இறைவன் அல்லாததை இறைவனாக்குவதும் அவன் அல்லாதவற்றின் மீது பொறுப்புச்சாட்டி அவனையன்றி வேறொருவர் பால் ஒதுங்குவதாகும். இன்னும் படைக்கப்பட்டவர்களின் செயல்களுக்கு அடிபணிவதும் மார்க்கத்தைப் பறிகொடுப்பதுமாகும்.

மனித சைத்தான்களின் உதவி இன்றி தீய ஷைத்தான்கள் இதனை செய்வதற்கு சக்தி பெறுவார்களா? அருளாளனை விட்டும் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? இல்லை அவர்கள் தமது இறைவனை ஞாபகம் செய்வதை விட்டும் புறக்கணிப்போராக உள்ளனர்.  அன்பியா:42

மேலும் குர்ஆனிய வசனங்கள் சிலவற்றையும் அவனது சைத்தானிய மந்திர வார்த்தைகளுடன் சேர்த்து எழுதி சுத்தமின்றி அதை தொங்க விடுகிறான். பெருந்தொடக்கு, சிறுதொடக்கு ஏற்பட்டாலும் அவனுடன் அது எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும். எந்தவொன்றை விட்டும் அதனைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்வதுமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக இறைவனின் வேதத்தை இஸ்லாமியப் பெயர்தாங்கிகளான இவர்கள் இழிவுபடுத்தும் அளவுக்கு அதன் எதிரிகள் கூட இழிவுபடுத்தவில்லை.

நிச்சயமாக அல்லாஹ் குர்ஆனை ஓதுவதற்காகவும், அதன்படி அமல் செய்து அதன் ஏவல்களுக்கு அடிபணிந்து அது தடுத்தவற்றை தவிர்ந்து கொள்வதற்காகவும், அதனை உண்மைப்படுத்தி அது கூறும் வரையறைகள் பிரகாரம் நடந்து கொள்ளவும், அதனது எடுத்துக்காட்டல்கள் மூலம் படிப்பினை பெற்று கதைகள் மூலம் உபதேசம் பெறவும்  இன்னும் அதனைக் கொண்டு விசுவாசிக்கவுமே இறக்கியுள்ளான்.

(அனைத்தும் எமது இரட்சகனிடமிருந்தே வந்துள்ளது).

ஆனால் இவர்கள் அவை அனைத்தையும் வீணாக்கிவிட்டு, அவற்றைத் தங்களுக்கு பின்புறமாக போட்டு விட்டு, அதன் வார்த்தைகளை மாத்திரம் பேணிப்பாதுகாக்கின்றனர். அதுவும் அதனை வைத்து உண்ணுவதற்கும் ஹராமான வழிகளில் சம்பாதிப்பதற்கும்தான்.

ஒரு அரசனோ அல்லது தலைவரோ இதை இப்படி செய் இதை விட்டுவிடு உன்னுடன் இருப்பவர்களுக்கு இவற்றை ஏவு இவற்றை விட்டும் அவர்களை தடுத்து விடு என ஒரு நூலை எழுதி தனது பொறுப்பின் கீழ் இருப்பவர்களிடம் கொடுக்க அவனும் அதை எடுத்து அதை வாசிக்கவோ அல்லது ஏவல் விலக்கல் பற்றி ஆராயவோ அதை எழுதியவர் அதை யாருக்கு எத்தி வைக்குமாறு கூறினாரோ அதை உரியவர்களிடம் எத்தி வைக்கவோ இல்லாமல் அதை எடுத்து தனது கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அது பற்றி வேறு எதையும் திரும்பி பார்க்காது இருந்தால் அதற்காக அவன் அவ்வரசனின் கடுமையான தண்டனையை சந்திக்க வேண்டி வரும் அதுபோலத்தான் இதுவும் ஒன்றாகும்.

அவ்வாறென்றால், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்வான பண்புகளையுடைய வானங்கள் மற்றும் பூமியினை அடக்கியாள்பவனிடமிருந்து இறங்கிய குர்ஆன் எவ்வாறு மகத்தானதாக இருக்கும்? ஆரம்பத்திலும் இறுதியிலும் அவனுக்கே புகழனைத்தும். அவன்பாலே அனைத்து காரியங்களும் திருப்பப்படும். அவனையே வணங்குங்கள். அவன் மீதே பொறுப்புச் சாட்டுங்கள் .அவனே போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை .அவன் மீதே நான் பொறுப்புச் சாட்டுகிறேன். அவன் மகத்தான அர்ஷின் அதிபதியாவான்.

இரண்டு வஹீகளிலும் இல்லாததாக இருப்பின் அது இணைவைப்புதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது மட்டுமன்றி முஸ்லிம்களின் அடையாளங்களை விட்டும் தூரமாகுவதில் அம்புகளால் குறிபார்ப்பதற்கு ஒப்பானதாகும்.

இரண்டு வஹீகளிலும் இல்லாத யூதர்களினதோ கோள்களை வணங்குபவர்களதோ நட்சத்திரங்களை மற்றும் மலக்குமார்களை வணங்குபவர்களதோ அல்லது ஜின் வைத்தியம் செய்வோரினதோ மந்திரத்திருந்து அல்லது மாலைகள், நூல், இரும்பாலான வளையங்களாகவோ செய்து அணிந்து கொள்வதாக இருந்தால் சந்தேகமின்றி அது இணைவைப்பாகும். ஏனெனில் அது அனுமதிக்கப்பட்ட காரணிகளுமல்ல அறியப்பட்ட மருந்துகளுமல்ல. மாறாக சிலை வணங்கிகள் எவ்வாறு சிலைகள் அவர்களை பாதுகாப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனரோ அது போன்று இவர்களும் இத்தாயத்து அதற்கிருக்கும் தனித்துவமான பண்பினால் நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். அது மாத்திரமின்றி அறியாமைக் காலத்தில் அறியாமையிலிருந்த சிலை வணங்கிகளின் செயல்களுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அவர்கள் ஒரு விடயத்தை செய்ய நாடினால் மூன்று விடயங்கள் எழுதப்பட்ட அம்புகளை எடுப்பார்கள். அதில் ஒன்றில் செய் எனவும் இரண்டாவதில் செய்யாதே எனவும் மூன்றாவதில் எதுவும் எழுதப்படாததாகவும் இருக்கும். அவர்களின் கைக்கு செய் என்ற அம்பு கிடைத்தால் செய்ய நாடியதைச் செய்வார்கள். செய்யாதே என எழுதப்பட்ட அம்பு கிடைத்தால் அந்த காரியத்தை விட்டு விடுவார்கள். எதுவும் எழுதப்படாதது வந்தால் மீண்டும் அந்த அம்புகளைப் பிரித்து குறி பார்ப்பார்கள்.

ஆனால் அல்லாஹ் எங்களுக்கு அதற்குப் பதிலாக (அவனுக்கே புகழ் அனைத்தும்) அதனை விட சிறந்த இஸ்திஹாரா தொழுகையையும் அதன் துஆவையும் தந்துள்ளான்.

இங்கு கூறவருவது யாதெனில், குர்ஆன் சுன்னாவில் இல்லாதவற்றை கொண்டு தாயத்து அணிவது அம்புகளால் குறி பார்ப்பதற்கு இணையானதாகும். ஏனெனில் இரண்டும் தவறான நம்பிக்கையும் முஸ்லிம்களுக்குப் பொருத்தமற்ற மார்க்கத்திற்கு முரணான விடயங்களுமாகும்.

நிச்சயமாக தூய ஏகத்துவவாதிகள் இவற்றை விட்டும் மிக தூரமாகவே இருப்பார்கள். இது போன்ற விடயங்கள் அவர்களது உள்ளங்களில் நுழைவதற்கு இடமில்லாத அளவுக்கு அவர்களது ஈமான் மகத்தானதாகும். அல்லாஹ் அல்லாதவற்றின் மீது பொறுப்புச்சாட்டுவதிலிருந்தும் அவர்களை நம்புவதை விட்டும் தடுக்குமளவு அவர்கள் உயர்வானவர்களாகவும் உறுதியான ஈமானை உடையவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வே உதவி செய்ய போதுமானவன். (மஃஆரிஜுல் காபூல்:510-512/2)

தாயத்து குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டது என்ற கருத்தையே எமது அறிஞர்கள் கொண்டுள்ளனர்.

மூன்றாவது:

அறிஞர்கள் சம்மேளனம் கூறும் கருத்து:

குர்ஆன் அல்லாதவற்றைத் தாயத்தாக அணிவது ஹராம் என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தை கொண்டுள்ளார்கள். குர்ஆனில் உள்ளவற்றை தாயத்தாக அணிவது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். அதனை தடுப்பவர்களும் உண்டு. அனுமதிப்போரும் உண்டு. ஹதீஸ்களில் வேறுபாடின்றி பொதுவாக தாயத்து என பொதுவாக இடம்பெற்றிருப்பதனாலும் தவறானவற்றுக்கு இட்டுச் செல்லும் அனுமதிக்கப்பட்டவற்றைத் தடைசெய்ய முடியும் என்ற அடிப்படையிலும் குர்ஆனைக் கொண்டு தாயத்து அணிவதும் தடுக்கப்பட்டது என்ற கருத்தே மிக ஏற்றமான மற்றும் உறுதியான கருத்தாகும்.

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு பாஸ் , அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு கத்யான், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு குஊத்

(பதாவா லஜ்க்னதுத் தாஇமா:1/212)

நான்காவது:

அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹூமுல்லாஹ் கூறுகின்றார்கள்.

இந்த வழிகேடு நாடோடிகள், விவசாயிகள் மற்றும் சில நகர்ப்புறவாசிகளிடமும் இன்றும் பரவலாகக் காணப்படுகின்றது. அதேபோன்று சில சாரதிகள் வாகனங்களில் தங்களுக்கு முன்னால் கண்ணாடிகளில் இவற்றை தொங்க விடுகிறார்கள். சிலர் வாகனங்களின் முன்னாலோ பின்னாலோ பழைய பாதணிகளை தொங்க விடுகிறார்கள். சிலர் வீடு கடை வாயில்களில் குதிரையின் குழம்புகளை தொங்க விடுகிறார்கள். இவை அனைத்தும் கண் திருஷ்டியை தடுக்கும் என அவர்கள் எண்ணுகிறார்கள்.

ஏகத்துவம் பற்றியும் ரசூல்மார்கள் அனுப்பப்பட்டு வேதங்கள் இறக்கப்பட்டு எதை ஒழிக்குமாறு கூறப்பட்டதோ அத்தகைய இணைவைப்பு மற்றும் சிலை வணக்கங்கள் போன்ற ஏகத்துவத்திற்கு முரணானவற்றைப் பற்றியும் அறிவின்மை காரணமாகவே இவை பரவி அதிகரித்து காணப்படுகின்றன.

இன்றைய முஸ்லிம்களின் அறியாமையையும் மார்க்கத்திலிருந்து அவர்கள் தூர விலகியிருப்பதையும் இறைவனிடமே முறையிடுகின்றோம்.

ஸில்ஸிலதுல் அஹாதீஸுஸ் ஸஹீஹா(890/1)(492)

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
தாயத்துகள் மற்றும் அவற்றைக் கட்டுதல் போன்றவற்றின் சட்டங்கள் - Islam Question & Answer