0 / 0
20/ரபி/1446 , 23/செப்டம்பர்/2024

ஜின்களின் தொந்தரவுகளில் இருந்து எம்மை எவ்வாறு காத்துக்கொள்வது?

கேள்வி: 10513

நான் ஜின்களுடன் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றேன். எனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜின்கள் வெளிப்படுவதை நான் அவதானித்துள்ளேன். ஆனாலும், அண்மையில் தான் அது எனக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது. எமது புதிய குடியிருப்புக்கு நாங்கள் குடிபெயர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு ஜின்னை நான் கண்டேன். அது அடிக்கடி நிகழ்ந்தது. ஒரு ஜின்னோ அல்லது பலரோ வரும் போது ஏற்படும் சில மாற்றங்களையும் நான் கவனித்துள்ளேன். உதாரணமாக, கதவுகள் திறக்கப்படும், நான் அவர்களைக் காண்பேன், அவர்கள் பேசுவதைக் கேட்பேன்.

ஆனாலும் தற்போது நிலைமைகள் பாரியளவில் மாறிக்கொண்டு வருகின்றன போலுள்ளது. சில வேலைகள் தினமும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவை எனக்கு வீட்டில் நிம்மதியை இல்லாமலாக்கி விட்டன. இதற்குப் பிறகு இவ்வீட்டில் வாழ்வதற்கே எனக்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றது.

ஜின் கதவுகளைத் திறக்கிறது, என் பெயரை சப்தமிட்டு அழைக்கின்றது, உடனே நான் தூக்கத்திலிருந்து பயந்து எழும்புவேன். சில பொருட்களில் தட்டும், பூனையின் தோற்றத்தில் வரும், எனது கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியில் தட்டி விளையாடிக் கொண்டிருக்கும். அதன் நிழலை நான் காண்பேன். இவ்வாறு பல விடயங்கள். ஆச்சரியமாக இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று என்னால் புரியாமல் இருக்கின்றது! இவ்வீட்டைவிட்டு இடம்பெயர்வது இப்பிரச்சினையை முடித்து விடும் என்று எண்ணுகின்றேன். ஆனாலும், அண்மைக்காலமாக சூரத்துல் பகரா, பலக், நாஸ் ஆகிய ஸூராக்களை ஓத முயற்சித்தேன். அல்குர்ஆன் ஒலிநாடாக்களை என் வீட்டில் இயக்குவேன். அப்போது ஏற்கனவே கூறிய செயற்பாடு நின்றுவிடும். ஓதுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் வெளிப்படும். ஏதாவது ஒரு விதத்தில் தான் வந்துள்ளதை அது எனக்கு உணர்த்தும். சில நேரங்களில் ஒளிநாடாக்கள் நிறுத்தப்பட்டுவிடும். அல் குர்ஆன் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே கணினி மீள்இயக்கப்படும். இவ்வாறு பல தடவை நடந்துள்ளது. அதிகமாக என் கனவிலும் ஜின்கள் தோற்றமளிக்கின்றனர். இந்த நிலைமையை விட்டும் எவ்வாறு தப்புவது என எனக்குத் தெரியாது. இது தொடர்பாக உங்கள் பதிலும் உபதேசமும் எனக்கு கிடைக்கும் என்றால் பெறுமதியாக இருக்கும். அதுவும் வெகு சீக்கிரமாக இருந்தால் நன்று.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

1) கேள்வி கேட்டுள்ள சகோதரி ஜின்னைக் கண்டதாகக் கூறுவது தவறான கருத்தாகும். ஜின்கள் மனிதர்களை காண்பார்கள். ஆனால், மனிதர்களால் அவர்களைக் காண முடியாது.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நம்பிக்கையாளர்களில் யாராவது ஜின்னைக் கண்டதாகக் கூறினால் அவரது சாட்சியங்கள் நிராகரிக்கப்படும். அவர் நபியாக இருந்தாலே தவிர. ஏனென்றால் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் ‘நிச்சயமாக அவனும் அவனது கூட்டத்தாரும் நீங்கள் அவர்களைக் காணாத புறத்தில் உங்களை காண்கின்றனர்’ - ஸூரா அல்அஃராப்) (அஹ்காமுல் குர்ஆன் 2ஃ195,196)

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள், ‘ஜின்கள் இருக்கின்றார்கள். அவர்களும் அல்லாஹ்வின் படைப்புகள் தாம். அவர்களிலும் ஈமான் கொண்டவர்கள், காபிர்கள் என உள்ளார்கள். அவர்கள் எம்மைக் காண்கின்றார்கள். நாம் அவர்களைக் காண மாட்டோம், சாப்பிடுகின்றார்கள், இனப்பெருக்கம் செய்கின்றார்கள், மரணிக்கிறார்கள். அல்லாஹ் கூறுகின்றான் ‘மனிதர்களே! ஜின்களே!’ மேலும் கூறுகின்றான், ‘நிச்சயமாக அவனும் அவனது கூட்டத்தாரும் நீங்கள் அவர்களைக் காணாத புறத்தில் உங்களை காண்கின்றனர்.’ மேலும் இவ்வாறும் கூறுகின்றான், ‘முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.’ ஜின்கள் கூறியதை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான், “இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.’  மேலும் கூறுகின்றான், ‘(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே’  ‘ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் (இப்லீஸ்) அவன் சந்ததியினரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறார்கள்;’ ‘எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்’ அல்முஹல்லா (1 / 34 / 35)

இதனால்தான் கேள்வி கேட்டுள்ள சகோதரி கண்டவை கற்பனை உருவங்களாக இருக்கலாம் அல்லது தான் படைக்கப்பட்ட படைகோலத்திலிருந்து வேறுபட்ட தோற்றம் எடுத்துக் கொண்ட ஜின்னாக இருக்கலாம்.

2) ஜின் மனிதனுக்கு தொந்தரவு செய்வது என்பது நிகழ்ந்துள்ளது. மற்றும் ஆதாரப்பூர்வமாகத் தரிபட்டுள்ளது. குர்ஆன் மற்றும் இஸ்லாமிய ஓதல்களைக் கொண்டு அதிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்,

நோவினைகள் மூலம் ஜின்கள் மனிதர்களில் தாக்கம் செலுத்துகின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. சில வேளை, அது கொலையாகக் கூட இருக்கலாம். இன்னும் சிலவேளை, கற்களை எரிந்து தொல்லை கொடுப்பார்கள். சிலபோது, மனிதனைப் பயத்திற்கு உள்ளாக்குவார்கள். இவ்வாறான பல விடயங்கள் ஸுன்னாவிலும் நடைமுறைச் சம்பவங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமாகத் தரிபட்டுள்ள ஒரு செய்தியில் இவ்வாறு வந்துள்ளது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு யுத்த நேரத்தில் (அகழி யுத்தம் என நினைக்கின்றேன்) ஒரு நபித் தோழருக்கு வீட்டிற்குச் செல்ல அனுமதி வழங்கினார்கள். அவர் புதிதாகத் திருமணம் செய்த வாலிபனாக இருந்தார்.

அவர் வீட்டைச் சென்றடைந்த போது, அவரது மனைவி வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அதனை அவ்வாலிபன் கண்டித்த போது அப்பெண் ‘உள்ளே நுழைந்து பாருங்கள்’ எனக் கூறினாள். அவரும் உள்ளே நுழைந்து பார்த்த போது படுக்கையில் ஒரு பாம்பு சுருண்டு கொண்டு இருந்தது. உடனே தனது அம்பை எடுத்து அதனைக் குத்திக் கொன்று விட்டார். அப்பாம்பு மரணித்த அதே நொடிப் பொழுதில் அந்த மனிதனும் மரணித்துவிட்டார். அம்மனிதரா? அல்லது பாம்பா? முதலில் மரணித்தது என்பதையே அறிய முடியாமல் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவ்விடயம் கேள்விப்பட்டபோது வீட்டில் இருக்கும் கட்டை வால் உடைய, முதுகில் இரு கோடுகள் உடைய பாம்புகளைத் தவிர வேறு எந்த சிறிய பாம்புகளையும் கொல்வதைத் தடுத்தார்கள்.

ஜின்கள் சிலவேளை மனிதர்களுக்கு தீங்கிழைக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகும் நடைமுறை சம்பவங்களும் இதற்கு ஆதாரமாகும். பல சம்பவங்கள் கேள்விப்படுகின்றோம். ஒரு மனிதன் ஒரு பாழடைந்த இடத்தில் நுழைவான். அங்கு அவனுக்கு கல் எறியப்படும், ஆனாலும் எந்த மனிதனையும் அவன் அங்கு காணமாட்டான். சிலவேளை மரங்களின் சலசலப்பு போன்ற சத்தத்தைக் கேட்பான். இதுபோன்று, மனிதனுக்கு பயத்தையும் நோவினையையும் ஏற்படுத்தும் பல அம்சங்கள் உண்டு. இவ்வாறே சில வேளை ஒரு ஜின் காதலின் காரணமாகவோ, அல்லது நோவிக்கும் நோக்கிலோ, அல்லது வேறு காரணங்களுக்கோ மனித உடலில் நுழையும். பின்வரும் வசனம் அதனை சுட்டிக் காட்டுகின்றது, ‘யார் வட்டி (வாங்கித்) உண்ணுகின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்’ (ஸூரா அல்பகரா)

இவ்வாறான ஜின்கள் சிலபோது மனித உடலுக்குள் இருந்தும் பேசும். அதன் முன்னிலையில் குர்ஆன் வசனங்களை ஓதுபவர்களுடன் கதைக்கும். சிலவேளை மீண்டும் வரக்கூடாது என அவர் உறுதிமொழி வாங்குவார். இப்படியான பல சம்பவங்கள் மக்களுக்கு மத்தியில் பிரபலமாகவும் பரவலாகவும் பேசப்பட்டு வருகின்றன.

எனவே ஜின்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற சுன்னா காட்டித்தந்துள்ள ஆயத்துல் குர்ஸி போன்றவற்றை ஓத வேண்டும். ஏனெனில் ஆயத்துல் குர்ஸியை ஓரிரவில் ஒரு மனிதன் ஓதினால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பாதுகாவலன் அவனோடு இருந்து கொண்டே இருப்பான். காலையே அடையும் வரை ஷைத்தான் அவனை நெருங்க மாட்டான். அல்லாஹ்வே பாதுகாவலன். (இப்னு உஸைமீனின் மார்க்கத் தீர்ப்புக்களின் தொகுப்பு 1ஃ287இ288)

ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுத்தரும் சில ஓதல்கள் சுன்னாவில் வந்துள்ளன

1. ஜின்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல். அல்லாஹ் கூறுகின்றான் :

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.’ (ஸூரா அல்அஃராப்)

உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.(ஸூரா புஸ்ஸிலத்)

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ‘இரு மனிதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முன்னிலையில் தர்க்கித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவரது முகம் சிவந்துவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள், ‘நான் ஒரு வார்த்தையை அறிவேன். இவர் அதைக் கூறினால் அவரது கோபம் தணிந்துவிடும் அதுதான் أعوذ بالله من الشيطان الرجيم (புகாரி 3108, முஸ்லிம் 2610)

2. ஸூரத்துல் ஃபலக், ஸூரதுந் நாஸ் (அல்முஅவ்விததான்) ஆகிய சூராக்களை ஓதுதல். அபூஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்கள் மற்றும் மனிதகண் திருஷ்டி ஆகியவற்றை விட்டும் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள் எனினும் ஸூரத்துல் ஃபலக், ஸூரதுந் நாஸ் (அல்முஅவ்விததான்) இறங்கிய பின்னர் அவ்விரண்டையும் மாத்திரம் எடுத்துக் கொண்டார்கள். ஏனையவற்றை விட்டுவிட்டார்கள். (திர்மிதி 2058, நஸாஈ 5497, இப்னு மாஜா 3511) இமாம் அல்பானி தனது ஸஹீஹுல் ஜாமிஃ எனும் நூலில் (4902) இது ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்கள்.

3. ஆயத்துல் குர்ஸி ஓதுதல்

 அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் தர்மப் பொருட்களை (ஸதகத்துல் ஃபித்ர்) பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள். அப்போது ஒருவன் (இரவில்) வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன்......அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடும்! உமக்கு அல்லாஹ் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன்” என்றான். அதற்கு நான், ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்று தொடங்கும் ‘ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; உம்மை ஷைத்தான் நெருங்கமாட்டான்” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.

விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன்.

நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக்கொண்டு செயல்படுத்துவதில் பேராவல் கொண்டவர்களாக இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசிவருகிறீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘தெரியாது” என்றேன். ‘‘அவன்தான் ஷைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி 3101)

4. சூரத்துல் பகரா ஓதுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், ‘உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான்.”  (முஸ்லிம் 780

5. சூரத்துல் பகராவின் இறுதி இரண்டு வசனங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘சூரத்துல் பகராவின் இறுதி இரு வசனங்களையும் ஓரிரவில் யார் ஓதுகின்றாரோ அவரை அவை பாதுகாத்து விடும்” (புகாரி 4723, முஸ்லிம் 807)

நபி ஸல் அவர்கள் கூறியதாக நான் நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள், “வானம் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் ஒரு வேதத்தை எழுதினான்.

அவற்றிலிருந்து இரு வசனங்களை இறக்கி சூரத்துல் பகராவை நிறைவு செய்துள்ளான். அவ்விரு வசனங்களும் ஒரு வீட்டில் மூன்று இரவுகள் ஓதப்பட்டால் அவ்வீட்டில் ஷைத்தான் இருக்க மாட்டான். (திர்மிதி 2882)

இமாம் அல்பானி தனது ஸஹீஹுல் ஜாமிஃ எனும் நூலில் (1799) இது ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்கள்.

6. நூறு தடவைகள் لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ என்று கூறுவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணை(துணை) கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(ன நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரைவிட்டு (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாது காக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற் செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 3293)

7. அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல்ஹாரிஸ் அல்அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “அல்லாஹுத்தஆலா யஹ்யா (அலை) அவர்களுக்கு ஐந்து வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்து, அவற்றைக் கொண்டு அமல் செய்யுமாறும், பனூ இஸ்ரவேலர்களை அவற்றை கொண்டு அமல் செய்ய ஏவுமாறும் கூறினான்……. (அதன் தொடரில்) அல்லாஹ்வை நினைவு கூறுமாறு நான் உங்களுக்கு ஏவுகின்றேன். அதற்கான உதாரணம் ஒரு மனிதனைப் போல, அவனுக்கு பின்னால் வேகமாக எதிரிகள் துரத்திக் கொண்டிருந்தனர். அப்போது அவன் பாதுகாப்பான ஒரு கோட்டையில் நுழைந்து, அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டான். அவ்வாறு தான் ஒரு அடியான் தன்னை சைத்தானிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது அல்லாஹ்வை நினைவு கூறுவது கொண்டே!” (திர்மிதி 2863) இமாம் அல்பானி தனது ஸஹீஹுல் ஜாமிஃ எனும் நூலில் (1724) இது ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்கள்.

8. அதான் (பாங்கு)

சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) என் தந்தை (அபூஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். என்னுடன் எங்களுடைய அடிமை ஒருவரும் அல்லது எங்களுடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர் அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்கமாட்டேன். எனினும், (இது போன்ற) சப்தத்தை நீ கேட்டால் தொழுகை அறிவிப்பை நீ சப்தமாகக் கூறு. ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் (முஸ்லிம் 389)

9. அல்குர்ஆனை அதிகம் ஓதுவது ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான், “நீங்கள் அல்குர்ஆனை ஓதினால் உங்களுக்கும் மறுமை ஈமான் கொள்ளாதவர்களுக்குமிடையில் மறைமுகமான ஒரு திரையை நாம் ஏற்படுத்திவிடுவோம்.” (ஸூரா அல்இஸ்ரா)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
ஜின்களின் தொந்தரவுகளில் இருந்து எம்மை எவ்வாறு காத்துக்கொள்வது? - Islam Question & Answer