0 / 0
08/முகர்ரம்/1446 , 14/ஜூலை/2024

(ஹைழிலிருந்து சுத்தமாகி விடுவதனை உறுதி செய்ய) இரத்தம் வெளியேறுவது முற்றாக நின்று இடம் காய்ந்து வெள்ளைபடும் வரை காத்திருக்க வேண்டுமா?

கேள்வி: 102926

வெள்ளைபடுதல் ஏற்படும் போது ஹைழுடைய காலம் முடிவடைந்து விடுமென்று முன்னர் நான் தெரிந்து வைத்திருந்தேன்.

ஆனால், கடந்த சில மாதங்களாக எட்டாவது நாள் இரவு வரை வெள்ளைபடுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  இரத்தப் பேறு நின்று இடம் காய்ந்து போனது ஆனாலும், வெள்ளைபடிதலைக் காணவில்லை.

எனவே வெள்ளைபடுதல் ஏற்படுமா என்று இன்னும் சில நாட்களுக்கு காத்துக்கொண்டிருக்காமல் தொழுகை வீணாகி விடுமோ என்ற பயத்தில் குளித்து தூய்மையாகி விட்டேன்.

ஆனால், சென்ற மாதம் எட்டாவது நாள் இரவு நடுநிசியின் பின்னர் வரை காத்திருந்த போது வெள்ளைபடுதல் ஏற்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

எனவே, கடந்த சில மாதங்களாக இடம்  காய்ந்ததை மாத்திரம் வைத்து ஹைழிலிருந்து சுத்தமாகி விட்டோம் என்று கணித்தது பிழைத்து விட்டதோ அல்லது அவசரப்பட்டு விட்டோமோ என்றெல்லாம் பலவாறு எண்ணிப் பயந்து போனேன்.

எனவே, தொழுகை தவறிவிடாமல் இருக்க வெள்ளைபடுதல் ஏற்படுகிறதா என்பதைப் பார்ப்பதற்கு பஜ்ரு விடியும் வரை அவசியம் விழித்துக் காத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

இது தொடர்பாக எனக்கு  தெளிவூட்டுங்கள்.

ஜஸாகுமுல்லாஹு ஹைரா.

Answer

Praise be to Allah, and blessings and peace be upon the Messenger of Allah.

முதலாவது :

ஹைழிலிருந்து சுத்தமாகி விட்டோம் என்பதை பின்வரும் இரண்டு அடையாளங்களில் ஏதேனும் ஒன்று வெளிப்படுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் :

01)

இரத்தம் வெளியேறுவது முற்றாக நின்று இடம் காய்ந்து விடுவது.

அதாவது, ஒரு பெண் பஞ்சி போன்றவற்றைச் செருகி அதனை வெளியே எடுக்கும் போது, அதில் இரத்தமோ மஞ்சள் நிறமோ  அல்லது பழுப்பு நிறமோ   இல்லாமல் சுத்தமாக வெளியே வரும்.

02)

வெள்ளைபடுதல்

சில பெண்களுக்கு இது ஏற்படுவதில்லை.

இது ஏற்படும் வரை காத்திருக்காமல் இடம் காய்ந்திருந்ததை வைத்து ஹைழிலிருந்து சுத்தமாகி விட்டோம் என்று நீங்கள் கணித்ததில் எதுவித பிழையுமில்லை. அது சரியான முறைதான்.

"இரத்தம் அல்லது மஞ்சள் நிற திரவம் அல்லது பழுப்பு நிற திரவம் போன்றவை வெளியேறுவது முற்றாக நின்று விடுவது தான் ஹைழிலிருந்து சுத்தமாகி விடுவதற்கான அடையாளம் அதன் பிறகு வெள்ளைபட வேண்டும் என்பது அவசியமில்லை" என்று இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அல்மஜ்மூஃ 2/562)

இரண்டாவது :

ஹைழ் வந்து, பின்னர் இரத்தம் வெளியேறுவது முற்றாக நின்று இடம் காய்ந்து விட்டால், தொழவும் நோன்பு நோற்கவும் முடியும். வெள்ளைபடும் வரை காத்திருக்கவோ அல்லது அதற்காக தொழுகைகளை தவறவிடவோ தேவையில்லை.

இடம் காயாத நிலையில் அங்கு மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திலான திரவத்தன்மை காணப்படுமானால் பூரணமான சுத்தம் ஏற்படும் வரை அல்லது வெள்ளைபடும்  வரை அவசரப்படக்கூடாது.

மஞ்சள் நிற திரவத்தன்மை படிந்த பஞ்சுத் துண்டுகளை ஆயிஷா ( றழி) அவர்களிடம் பெண்கள் அனுப்புவார்கள். அப்போது ஆயிஷா (றழி) அவர்கள் "நீங்கள் வெள்ளைபடுதலைக் காணும் வரை அவசரப்பட வேண்டாம் " என்று அவர்களுக்கு கூறுவார்கள். (புகாரி)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

குறிப்பு :

ஹைழ் (மாத விடாய்) நின்று விட்டதன் பிறகு பெண்ணுறுப்பில் தோன்றும் ஒரு வகையான தூய ஈரளிப்புத்தன்மையைத் தான் " வெள்ளைபடுதல் " என்ற பதம் இங்கு குறிக்கிறது.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
(ஹைழிலிருந்து சுத்தமாகி விடுவதனை உறுதி செய்ய) இரத்தம் வெளியேறுவது முற்றாக நின்று இடம் காய்ந்து வெள்ளைபடும் வரை காத்திருக்க வேண்டுமா? - Islam Question & Answer